குட்டிக்கதை
இரா சத்திக்கண்ணன்
அன்று ஞாயிற்றுக்கிழமை. சூரியன் சற்று சுணக்கமாக வெளியே வந்தான். மெல்ல மெல்ல விடிகிறது. நிலவும் இன்னும் ஆகாயத்தில் இருக்கிறது. லிட்டில் இந்தியாவின் டன்லப் தெரு ஆள்நடமாட்டமின்றி எந்தவிதப் பரபரப்புமின்றி அமைதியாக உள்ளது. அவ்வளவு கார்களும் இல்லை. திருவாரூர் தேரை இழுத்துச்செல்லும் அளவிற்கு வெறிச்சோடிக் கிடக்கிறது டன்லப் தெரு. வாரநாட்களில் கூட்டம் நிரம்பிவழியும் பலசரக்கு மற்றும் காய்கறி கடை இன்னும் திறக்கவில்லை.
அதிகாலைமுதலே காய்கறி வந்திறங்கும் மினிவேன்களுமில்லை. மஞ்சள் சாயம் சுமந்த கதவும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தன. மஞ்சள் பலசரக்குக் கடை என்றே சொல்லலாம். கடைக்குமுன்னர் சில காய்ந்த இலைகள் கிடக்கின்றன.வெள்ளை அரைக்கை சட்டையும் கட்டம்போட்ட சிங்கப்பூர் சில்க் லுங்கியும் அணிந்தபடி பாரதி மஞ்சள் கடையின் நடைமேடையில் அமர்ந்திருந்தார்.
அவருடைய கண்கள் உறக்கமின்றி சிவந்திருந்தன. கைகளைக் கட்டிக்கொண்டு அங்குமிங்கும் பார்த்தபடி இருக்கிறார். ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவாறு விரல்களை ஆட்டி காற்றில் ஏதோ வரைகிறார். அவர் நிச்சயம் சாமியாரில்லை. கையடக்கத் தொலைபேசியை அவ்வப்போது காண்கிறார். ஏதாவது செய்தி வந்ததாவென தடவித் தடவிப்பார்க்கிறார். சென்றவாரம் சூயஸ் கால்வாயில் நிகழ்ந்த சரக்குக்கப்பல் அடைப்பையோ, அதனால் உலக வர்த்தகம் நிலைகுத்தியதையோ அல்லது தமிழகத்தின் ஐந்துமுனைப் போட்டி சட்டமன்றத் தேர்தல் பற்றியோ அல்லது உலக நாடுகளின் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் பற்றியோ அவர் சிந்திப்பதாய் தெரியவில்லை. அவர் மனச்சோர்வில் கட்டுண்டு கிடப்பதைப்போல்தான் அவரின் நடவடிக்கை இருந்தது.
லிட்டில் இந்தியாவில் ஓர் உணவகத்தில் அதிகாலை ஏழு மணிக்கு காப்பி குடிப்பதற்காக சென்றிருந்த எனக்கு பாரதியை நன்கு தெரியும். அவன் ஒருமுறை என் வீட்டு தண்ணீர்க் குழாய் உடைந்தபோது சரிசெய்ய வந்திருந்தார். அப்போதுமுதல் பழக்கம்.
பாரதியின் அருகே சென்றேன். "எப்படி இருக்கீங்க" என்றார். "நல்லா இருக்கேன். ஆமா, நீங்க எப்படி இருக்கீங்க?" என்றேன். "நல்லா இருக்கேன்.., ஆனா..." என்று இழுத்தார்.
"என்ன பாரதி, சொல்லுங்க," என்றேன்.
"அது ஒன்னும் இல்ல... ஊர்ல அம்மாவை ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க, அதான் யோசிக்கிறேன்," என்றார். "இத்தனை வருஷமா நானும் என் மனைவியும், என் குழந்தைகளும் அம்மாவை பார்த்துக்கிட்டுருந்தோம். கூழோ கஞ்சியோ சேர்ந்து குடிச்சோம். என்னை நல்லா வளர்த்தாங்க. என்னையும் என் பிள்ளைகளையும் அன்பையும் அறத்தையும் ஊட்டி வளர்த்தாங்க. எப்போதும் நற்பண்புகளோடு உலகம் மெச்ச வாழவேண்டும்," என்று சொல்லி முன்மாதிரியாக வாழ்ந்தார்கள். இப்ப ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருக்காங்க. இன்னும் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோதான் இருப்பாங்கன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. என்னை பார்க்கணும்னு புலம்பிக்கிட்டே இருக்காங்களாம். இப்ப இருக்குற கொரோனா சூழ்நிலையிலே போவமுடியலை. அதான் அம்மாவைப் பார்க்க வீடியோ காலுக்கு வெய்ட் பண்ணிட்டுருக்கேன்," என்றார் பாரதி!
அப்போதுதான் எனக்கு உரைத்தது அவருக்கு மனச்சோர்வு இல்லை! அவர் உயர்ந்த மனிதன் என்று.
என்னால் எட்ட முடியாத உயரத்தில் பாரதி உயர்ந்து நிற்கிறார்.
அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்ட நான் கீழே கீழே தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்குத்தான் அதிக மனச்சோர்வு இருக்கவேண்டும்!