சிறுகதை
சித்ரா தணிகைவேல்
"என்னது? மூணு நிமிஷத்தில 100 கணக்கு போடணுமா!?" கேட்கும்போதே தலை சுற்றியது பானுவுக்கு!
"ஆமாங்க, இன்பா 100 கூட்டல் கணக்குப் போட்டுடுவா. ஒண்ணும் கஷ்டமில்லை. கையெழுத்து ஒழுங்கா இருக்கணுமேன்னுதான் நான் கவலைப்படறேன்!" என்றாள் நந்தினி.
முகக்கவசம் அணிய மறந்து வெளியே வருபவர்களைப் பார்ப்பதுபோல் நந்தினியை அதிசயமாய்ப் பார்த்த பானு, "அந்தக் குழந்தைக்கு இப்போதான் ஆறு வயசு தொடங்கியிருக்கு. ஓடியாடி மகிழ்ச்சியா இருக்கவேண்டிய வயசுடி! நீயும் உன் புருஷனும் இப்படிப் படுத்துறீங்களே!"
"அவளை யாரும் படுத்தலை. எல்லாம் அவளோட எதிர்காலத்துக்குத்தான் இவ்வளவு மெனக்கெடறோம். அவளுக்கு பிடிச்சமானதையும் செய்துட்டுதான் இருக்கோம். நாங்க ஒரு வருஷமா இந்தப் போட்டிக்காக அவளைத் தயார் பண்ணிட்டு இருக்கோம். இன்பாவை ராத்திரித் தூக்கத்தில எழுப்பி ரெண்டு, மூன்று இலக்க எண்களைக் குடுத்துக் கூட்டச் சொன்னா கொஞ்சம்கூட யோசிக்காம உடனே பதில் சொல்லுவா. அந்த அளவுக்குத் தயாரா இருக்கா!"
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முயன்ற பானு பலிகடா தலையை உதறுவதுபோல் தலையை ஆட்டிவிட்டு, "ஆனாலும் இது அதிகம்தாண்டி! அவளைப் பாரு! அந்த முகத்தில இருந்த குழந்தைத்தனமே போச்சு! ஏதோ மந்திரிச்சு விட்டதுபோல் இருக்கா!"
"அக்கா, சும்மா ஏதாவது உளறாதீங்கக்கா! அவ நல்லாதான் இருக்கா. துளசியையும் இன்பா கூடவே எல்லாத் துணைப்பாட வகுப்புகளுக்கும் அனுப்புங்கன்னு எவ்ளோ காலமா நானும் சொல்லிட்டுத்தான் இருக்கேன். ஏதாவது ஒரு வகுப்புக்காவது அனுப்பியிருந்தா அவளும் இன்னைக்கு நல்லா வந்திருப்பா இல்லையா?"
"இப்போ துளசிக்கு என்ன கொறைச்சல்? நல்லாத்தானே இருக்கா? அவளுடைய வயசுக்குரிய வளர்ச்சியோட சந்தோஷமா சுத்தித் திரிஞ்சிட்டு இருக்கா. அவ வயசுக்கு அவளால என்ன செய்யமுடியுமோ அதை செஞ்சாலே போதும். பிஞ்சுக் குழந்தையைப் போய்த் துணைப்பாட வகுப்புக்கு அனுப்பணுமாம்! வேலையைப் பாருடி!" என இரைந்தாள்.
"வேலையைப் பாருன்னதும்தான் ஞாபகம் வருதுக்கா. நான் போய் துர்க்கைக்கு விளக்குப் போடணும்! அடுத்த வாரம் மலேசியாவுல தேசிய அளவுலயும் உலக அளவுலயும் நடக்குற கணக்குப் போட்டியில எப்படியாவது இன்பாவுக்கு முதல் பரிசு கிடைக்கணும்! நான் கிளம்பறேன்க்கா!" என்று அவசர அவசரமாக விலகியவளைக் கண்டு உள்ளம் நொந்தவள் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தாள்.
பேருந்தில் செல்லும்போது இடையிடையே தென்பட்ட துணைப்பாடப் பயிற்சி நிலையங்கள் எரியும் விளக்கில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டிருந்தன.
வீட்டினுள் நுழைந்ததும் தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவில் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீடு திரும்பியிருந்த பகீரதன், நாற்காலியை இழுத்து அவளருகே போட்டு உட்கார்ந்தான்.
"ஏன் பானு ஒரு மாதிரி இருக்கே? ஏதோ ரொம்பக் குழப்பமா இருக்க மாதிரி இருக்கே?"
"ஏங்க, நம்ம துளசியை நாம சரியாத்தான் வளர்க்கிறோமா? அவ வயசுக்கு அவள் படிக்கிறது சரிதானா?"
"என்ன உளர்றே? நீ என்ன சொல்ல வர்றேங்கறதே எனக்குப் புரியலை!"
"இல்லைங்க, கோவிலுக்குப் போற வழியில நந்தினியைப் பார்த்தேன்."
"நந்தினியா? யாரது?"
"அதாங்க, உங்ககூட விளம்பரப் பிரிவுல வேலை செய்யறாரே ரகுநாதன்; அவர் மனைவி."
"ஓ, அவனா? அவன் ஒரு தலைவலி! ஊர்ல ஒலகத்துல எங்கே போட்டி நடந்தாலும் அவன் பொண்ணை அனுப்பிடுவான். ஏன் துளசியை அனுப்பக் கூடாதான்னு கேட்டுக் கேட்டு என்னையும் வறுத்தெடுத்துடுவான். அவன் மேல இருந்து குதிச்சா, நாமளும் குதிக்கணும்னு தலையெழுத்தா என்ன? அது சரி, நந்தினி என்ன சொன்னா?"
"அவ பொண்ணை உலக அளவுல நடக்குற கணக்குப் போட்டிக்கு அனுப்பப் போறாளாம்."
"அடப்பாவி, உள்ளூர்ப் போட்டியெல்லாம் முடிச்சிட்டு இப்போ உலக அளவுல நடக்குற போட்டிக்கு அனுப்பறானா? சரி அனுப்பட்டும்; அது அவங்க பொண்ணு, அவங்க விருப்பம், அதுக்காக நீ ஏன் மூஞ்சிய சோகமா வச்சிட்டு இருக்கே?"
"மூணு நிமிஷத்தில 100 கூட்டல் கணக்கு போடணுமாம்!?"
"100 கணக்கு இல்லை, ரகு அவன் பொண்ணை 1,000 கணக்கு கூடப் போடவைப்பான். அவன் பிள்ளையைப் பிள்ளையா வளர்க்கலை. அவன் விருப்பப்படி நடக்கற எந்திரப் பொம்மையாப் பார்க்கறான். நீ இன்னும் உன் சோகத்துக்குக் காரணம் சொல்லலையே!"
"துளசிக்கும் இன்பா மாதிரியே ஆறு வயசாகுது. ஆனா அவ இப்போதான் ஒண்ணுல இருந்து 100 வரைக்கும் எழுதவே ஆரம்பிச்சிருக்கா. ஆனா இன்பா மூன்று இலக்கக் கூட்டல் அசாத்தியமாப் பண்றாளாம். அதுவும் ஒரே வருஷப் பயிற்சியில."
"சர்க்கஸ்ல உள்ள சிங்கத்துக்குக்கூட முறையான பயிற்சி குடுத்தா அது என்னென்னவோ வித்தையெல்லாம் செய்யுமே, பாத்திருக்கியா? அந்த வித்தையெல்லாம் அதோட இயல்பா? இல்லையே! எது இயல்போ அந்த இயல்போட ஒத்துப்போகணும். இப்போ நம்ம துளசி அவள் வகுப்பில சொல்லிக்குடுக்கற பாடங்களை அவளேதானே செய்யறா?"
"...ம்ம்ம்"
"ஒண்ணுல இருந்து 100 வரைக்கும் சரியா எழுதறா இல்லியா?"
"சரியாத்தான் எழுதறா."
"ஆங்கிலம், தமிழ் இதிலெல்லாம் குடுக்குற வேலைகளை அவளாத்தானே செய்யறா?"
"ஆமாங்க"
"துளசிக்கு 100 வரைக்கும் எழுதத் தெரியுதேன்னு சந்தோஷப் படறதை விட்டுட்டு கவலைப்படறியே."
"அதில்லைங்க. இன்பா மட்டுமில்லை. நம்ம துளசிகூடப் படிக்கிற பிள்ளைங்க எல்லாம் 'போஃனிக்ஸ்', 'ஸ்பீச் அண்ட் டிராமா', 'சாக்கர்', 'பேட்மிண்டன்', 'நீச்சல்' ன்னு என்னென்னவோ வகுப்புக்கெல்லாம் போறாங்க. துளசியையும் சேர்த்துவிடச் சொல்லி அப்பப்போ சொல்லுவாங்க. தொடக்கநிலை போனா ரொம்ப உதவியா இருக்குமாம். நான்தான் அதெல்லாம் வேணாம், பள்ளிக்கூடத்தில படிக்கறதே போதும்னு சொல்லுவேன். ஆனால், இப்போ என்னவோ மனசு கெடந்து அலைபாயுது."
அவள் பேசட்டும் என்று அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான் பகிரதன்.
"இப்பக்கூட நந்தினியைத் திட்டிட்டுதான் வந்தேன். ஆனா யோசிச்சிப் பார்த்தா நான்தான் தப்புப் பண்ணிட்டேனோன்னு தோணுது. ஒருவேளை நானும் துளசியை அந்தக் குழந்தைகள் போகும் வகுப்புகளில் சேர்த்துவிட்டிருந்தா இந்நேரம் அவளும் அந்தப் பிள்ளைகளைப்போல சில படிகள் மேலே இருந்திருப்பாளோன்னு தோணுது."
"அது சரி, துளசி ஏழு வயசுக்குள்ள முனைவர் பட்டம் வாங்கிடுவான்னு சொல்லு!"
"கிண்டலா?"
"பின்ன என்ன பானு? ஒரு லிட்டர் குடுவையில ஒரு லிட்டர் தண்ணிதான் ஊத்தமுடியும். அதுக்கு மேல ஊத்துனா நிரம்பித்தான் வழியும். பல வீடுகளில குழந்தைகளுக்கு நடக்குற கொடுமை இது. நம்ம குழந்தை அதோட இயல்பிலதான் வளரும். இதில எந்த மாற்றமும் கிடையாது."
"இப்போ என்னதான் பண்ணணும்னு சொல்றீங்க?"
"அவளை நீச்சல், யோகா, பூப்பந்து அப்படின்னு விளையாட்டுகளுக்கு அனுப்பலாம்; அதுவும் அவளுடைய தினசரி வேலைகளுக்குப் போக மீதி நேரமிருந்தால் அனுப்பலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவமேல எதையும் திணிக்கக்கூடாது. அவளே விருப்பப்பட்டுக் கேட்டா செய்யலாம். ஆனால் எப்பவும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது."
இந்தப் பதிலில் பானுவுக்குப் பெரிதாகத் திருப்தியில்லை.
"ராத்திரிக்கு தோசை சுட்டுச் சட்னி அரைச்சுத் தரவா?" எனப் பேச்சைத் திசை மாற்றினாள்.
புரிந்துகொண்ட பகீரதன், "அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ சோகமா இருக்கும்போது சமைச்சா, சமையல் சுமாராத்தான் இருக்கும். தேக்காவுக்குப் போய்ச் சாப்பிட்டு வரலாம். நாளைக்கு விடுமுறைதானே! கொஞ்சம் பொறுமையாவே வரலாம்," என்றான்.
"தேக்கான்னதும்தான் ஞாபகம் வருது. கறிகாய் எல்லாம் முடிஞ்சிடிச்சி. இந்த வாரத்துக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வரணும்ங்க," என்றாள்.
"சரி நீ போய் துளசியைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைச்சிட்டு வந்திடு, நான் குளிச்சிட்டுக் கிளம்பி இருக்கேன். நீங்க ரெண்டுபேரும் வந்ததும் கிளம்பிடுவோம்," எனக் கூறியபடியே குளியலறையை நோக்கி நடந்தான் பகீரதன்.
துளசியின் பள்ளி நோக்கி தளர்வாக நடந்தாள் பானு.
பள்ளியின் அருகே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றைப் பிடித்து வசதியாக உட்கார்ந்திருந்த நந்தினி, காதில் கைப்பேசியை வைத்தவாறே 'அவளைப் போன்ற' யாரோ ஒரு பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தாள்.
"ம்ம்.. ஆமாம். இன்னும் நாலு நாள்தான் இருக்கு. கையும் ஓடலை. காலும் ஓடலை. உங்க பொண்ணு எப்படிப் பண்றா?"
அடுத்த முனையில் வந்த பதிலுக்கு பதில் சொல்வதற்குள் பள்ளி மணி அடித்துவிட,
"சரி வைக்கறேன். பள்ளி முடிஞ்சிடுச்சு. அவளை அழைச்சிக்கிட்டு கொஞ்சமா எதாவது சாப்பிடக் குடுத்து நீச்சல் அனுப்பிட்டு, அப்புறம் துணைப்பாட வகுப்புக்குக் கூட்டிட்டுப் போகணும். இன்னைக்கு அவள் ராத்திரி தூங்கப்போக எப்படியும் 11 மணியாய்டும். நான் அப்புறம் பேசறேன்," எனத் தொடர்பைத் துண்டித்தாள்.
கேட்டுக்கொண்டிருந்த பானுவுக்குப் பழையபடி தலை சுற்றியது.
பள்ளியிலிருந்து வெளியே வந்த இன்பா சொல்லிக்கொடுத்ததுபோல் எல்லாவற்றையும் ஒப்பிக்க ஆரம்பித்தாள். "இன்னைக்கு ஆங்கிலம் 'சொல்வது எழுதுதலில்' நான் அஞ்சுக்கு அஞ்சு வாங்கிட்டேன் மா!"
"கணக்குப் பாடத்தில சின்ன எண்ணிலிருந்து பெரிய எண் வரைக்கும் வரிசைப்படுத்தச் சொன்னாங்க. நான் சீக்கிரமே முடிச்சிட்டேன். முடிச்ச பிறகு என்ன செய்யறதுன்னு தெரியலைமா. அதனால நான் போட்டிக்குப் பயிற்சி பண்ணிட்டு இருந்தேன்மா," மிகுந்த சோர்வுடன் இருந்தாள் இன்பா!
"அப்படியா சரி, நல்லது," என்று கூறியபடியே கைபேசியில் ஏதோ ஒரு பாடத்தை ஒலிக்கவிட்டாள்.
"அப்பா இப்போதான் இந்தப் பாடத்தை அனுப்பினாங்க. இதைக் கேட்டுட்டே சாப்பிடு இன்பா." சாப்பிட்டு முடிச்சதும் நீ கத்துக்கிட்டதை அம்மாகிட்டச் சொல்லணும் சரியா?" என்றாள் நந்தினி.
இன்பா சாவி கொடுத்த பொம்மைபோல உணவை மென்றுகொண்டே அந்தப் பாடத்தைக் கேட்டுப் பயிற்சி செய்துகொண்டிருந்தாள்.
பானுவைப் பார்த்தபடி ஓடிவந்த துளசி அவளைப் பார்த்து, "அம்மா டீச்சர் குடுத்த வேலை எல்லாம் முடிச்சிட்டேன். டீச்சர் எனக்கு ஸ்டிக்கர் குடுத்தாங்க," எனப் பெருமை பொங்கக் கூறினாள்.
"அப்படியா? சமர்த்து!" எனக்கூறியபடி அவளுக்கு முத்தமிட்டாள்.
"அம்மா சாமிக்கு எத்தனை வயசு?" எனக் கேட்டாள்.
"உனக்கு எத்தனை வயசோ அதுதான் சாமியோட வயசு!" சமாளிப்பதற்காக, தோன்றிய பதிலைச் சொன்னாள் பானு.
"அப்போ உங்களை எல்லாம் யார் படைச்சது?" என அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டாள்.
"எங்களோட அப்பா அம்மா!"
"அப்போ அவங்களையெல்லாம்?"
"அவங்களோட அப்பா அம்மா"
"அப்போ சாமி என்னை மாதிரி ரொம்பச் சின்னப் பிள்ளையா?"
பதில் சொல்ல முடியாமல் மௌனமாய்ச் சிரிக்க, அவளின் மௌனத்தைக் கலைக்க அடுத்த கேள்விக்கணையினைத் தொடுத்தாள்.
"நாம கோவில்ல பாத்தோமே, ஒரு சாமி, புடவைகூட கட்டியிருந்தாங்களே, அந்த சாமிக்கு எத்தனை வயசு?"
"இப்போ எதுக்கும்மா இந்த ஆராய்ச்சி எல்லாம்?"
"சாமிதான் எல்லாரையும் உருவாக்கினாங்க அப்படீன்னு சஞ்சனா சொன்னா. அதான் சாமிக்கு எவ்வளவு வயசிருக்கும் அப்படீன்னு நாங்க ரெண்டு பேரும் பேசிட்டிருந்தோம். மணியடிச்சிட்டாங்களா, அதான் உங்க கிட்ட கேட்டேன் அம்மா."
"எத்தனை பெரிய கேள்வியைக் கேட்டிருக்கிறது இந்தப் பிஞ்சு!" மனசுக்குள் மகிழ்ந்தவளாக அவள் பையை வாங்கிக்கொண்டு அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில் சிறிது நேரம் விளையாட வைத்தாள். துளசி விளையாடுவதைப் பார்த்த இன்பா, "அம்மா நானும் கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு வர்றேன்மா?" எனக் கேட்க, "இல்லை இன்பா, நீச்சல் போய்ட்டு கணக்கு துணைப்பாட வகுப்பு போகணும். நேரமில்லை கிளம்பலாம்; அந்த வகுப்பெல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்குப் போய் ஆங்கிலத்திலும் கணக்குலயும் ரெண்டு வினாத்தாள் வேற செய்யணும். அப்புறம் கணக்குப் போட்டிக்கு இன்னொரு தடவை பயிற்சி பண்ணணும்; நீ முதல் பரிசு வாங்கணுமா இல்லையா?"
"ம்ம்ம்... ம்ம்ம்.." என்று கூறியவாறே ஏக்கத்தோடு துளசியைப் பார்த்துக்கொண்டே கையாட்டியபடி சென்றாள் இன்பா.
"இன்பா, நாளைக்குப் பாக்கலாம், பை!" துளசி.
பானுவின் மனம் கல்லெறிந்த குட்டை போல் மீண்டும் குழம்பியது.
"சரி துளசி கிளம்பலாமா? தேக்கா போகணும்."
உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளும் விளையாட்டு மைதானத்தைவிட்டு வருவதற்கு முன் பொதுவாகச் சொல்லும் வார்த்தையான, "இன்னும் அஞ்சு நிமிஷம்," எனக் கூறிவிட்டு 'ஷான்' உடன் விளையாட எத்தனித்தாள்.
"கிளம்பலாம் துளசி. அப்பா காத்திட்டு இருக்காங்க!"
'அப்பா' என்ற சொல் மகள்களுக்கு மட்டும் மிகப்பெரிய மந்திரச் சாவி. 'ஷானுக்குக்' கையாட்டிவிட்டுத் துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் துளசி.
வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு அப்பாவும் மகளும் சிறிது நேரம் கொஞ்சி முடித்துக் கதை பேசிவிட்டுத் தேக்காவிற்குக் கிளம்பினார்கள்.
வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாள்; கேட்டுக்கொண்டே பெருமிதத்துடன் நடந்தான் பகீரதன்.
"அப்பா எனக்கு 'கோன்' தோசை வேணும்."
'கோன்' தோசை வந்தது.
"அப்பா மலை மாதிரி இருக்கு பாருங்களேன்."
"ம்ம்ம் ஆமாண்டா, மலை மாதிரிதான் இருக்கு"
"மலையை யார் செஞ்சாங்க?"
"நீ இப்படியெல்லாம் கேட்டா நான் பதிலுக்கு எங்கே போவேன் துளசி?" சிரித்தான் பகீரதன்.
சாப்பிட்டு முடித்ததும் மளிகைக்கடையை நோக்கி, நடந்து செல்லும்போது, "துளசி, நீச்சல், பூப்பந்து இந்த மாதிரி ஏதாவது விளையாட்டுகளில் உன்னைச் சேர்த்துவிடலாம்னு அப்பா சொல்றாங்க. உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்?" எனக் கேட்டாள் பானு. அதற்குப் பதில் சொல்லாத துளசி, "அப்பா என்னைத் தூக்குங்கப்பா," என்றாள்.
அவளைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்ட பகீரதனிடம், "எனக்கு இந்த விளையாட்டுதான் பிடிக்கும் என்றவாறே அவன் கழுத்துப் பக்கம் இருந்த முடியைப் பிடித்துக்கொண்டு நாக்கை மடித்தி மேல் அண்ணத்தைத் தொட்டு, 'டொக் டொக்' எனக் குதிரை ஒலி எழுப்புவது போல் ஒலியெழுப்பினாள்.
மளிகைக்கடையில் வார இறுதிக்கான கூட்டம் களைகட்டத் தொடங்கியிருந்தது.
கடையில் காய்கறிகளை வாங்கிய பானு தேவையான பழங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூடையில் வைத்தாள். மாம்பழங்களைப் பார்த்ததும் அப்பாவும் பெண்ணும் ரகசியமாகச் சிரித்துக்கொண்டார்கள்.
அப்பா '2' என விரல் காட்ட மகளோ '6' என விரல் காட்ட, இருவரும் ஒரு முடிவுக்கு வந்தவர்கள் போல நெகிழிப் பையில் ஆறு மாம்பழங்களை அடுக்கத் தொடங்கினார்கள்.
"ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்?"
"ஆரஞ்சு நிறத்தில் உள்ள மாம்பழம் ருசியா இருக்கும்னு சொல்லுவியே பானு. பாரு, இந்தப் பழமெல்லாம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கு. உனக்கு மாம்பழம் பிடிக்கும்தானே. அதான் நிறைய வாங்கிட்டு இருக்கோம்," எனச் சொல்லியவாறே துளசியைப் பார்த்துக் கண் சிமிட்டினான். துளசி குறும்பாய்ச் சிரித்தாள்.
"மாம்பழம் சீசன் முடிஞ்சு ஒரு மாசம் ஆகுது! சீசன் முடிஞ்சு வர்ற பழங்கள் அவ்வளவு ருசியா இருக்காது."
"ஆனா இதெல்லாம் நல்லாப் பழுத்துத்தானே இருக்கு? நல்லாத்தான் இருக்கும்!" எனப் பழங்களை எடுத்துக்கொண்டே எதிர்வாதம் செய்தான் பகீரதன்.
"வெளியே பார்க்கப் பழம் நல்லாத்தான் இருக்கு. இந்த நிறம் வர்றதுக்காக மாங்காய புகைபோட்டுப் பழுக்க வச்சிருக்காங்க. வெட்டிச் சாப்பிட்டுப் பாத்தீங்கன்னா கன்னிப்போன பழங்களோட ருசிதான் இருக்கும்."
"இப்போ என்ன சொல்ல வர்றே? வாங்கலாமா வேணாமா?"
"பழம் கனிய அதுக்குப் போதுமான காலம் இருந்தாத்தான் அந்த பழம் சுவையா இருக்கும். தானாக் கனிஞ்ச பழங்களில் உள்ள ருசி, இந்த மாதிரி அவசர அவசரமாப் பழுக்கவச்ச பழங்களில் இருக்காது. அதனால இந்த மாம்பழம் வேணாம்."
"ஒரு பழம் கனியவே பல நாட்கள் தேவைப்படுதே, இந்தப் பிள்ளைக் கனிகள் கனிய கால அவகாசம் வேண்டாமா பானு?"
காந்தாரியின் கண்களில் கட்டப்பட்ட துணி விலகி மீண்டும் உலகைக் கண்டதுபோல் உணர்ந்தாள் பானு!

