சிறுகதை
ஹேமலதா
புத்தாண்டு நாளில் தொடங்கிய மழை அடுத்து வந்த நாட்களிலும் விடாமல் தொடர்ந்த போதுதான் நான்கு பக்கமும் சூழ்ந்திருந்த ஆழ்நீலக் கடல் கொஞ்சம் கொஞ்சமாக தன் இருப்பிடம் விட்டு தீவிற்குள் நுழையத் துவங்கியது.
பறவைப் பார்வையில் யாரோ ஒருவர் இணையத்தில் பதிவேற்றியிருந்த சிங்கப்பூரின் படத்தில், பச்சை மரங்களும் கான்க்ரீட் கட்டடங்களும் முளைத்த நிலத்தின் கரை தொட்டு அதுவரை தளும்பியபடியிருந்த கடல்தான் அது.
அப்படத்தில்கூட அது ஊருக்குள் நுழைய பரபரத்துக் காத்திருந்தது போலவே காட்சியளித்ததாய்தான் அவனுக்குத் தோன்றியது.
அந்தச் சமயம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்த புத்தகத்தில் இச்சகத்தைச் சீரழிக்கும் மானுடர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தான்.
பூமி வெப்பமயமாவதைப் பற்றிய கவலை அவனைப் பற்றிக்கொண்ட சமயம் அது.
எங்கோ அண்டார்டிக்காவில் இருந்து மிதந்து வந்த வெண்பன்றிக்குட்டிகளை ஒத்த பனிக்கட்டிகள் கரைந்து கடல்மட்டம் ஏறுவதைக் கற்பனையில் அவன் பார்க்கத் தொடங்கியிருந்தான்.
இதை யீஷுனில் ஒரு கோப்பிக்கடையில் போதையின் லேசான பிடியில் இருந்தபோது பரணியிடம் சொன்னான்.
இவனைவிட அதிபோதையில் இருந்த அவன் சத்தமாகச் சிரித்துவிட்டு, நீ குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கடலுக்கு மேல கட்டினது தாண்டா என்றான். அப்போதிலிருந்து அலையின் மேல் ஒரு கப்பல் போல தன் புளோக் மிதப்பதான மனப்படம் அவனுள் உருவாகத் துவங்கியிருந்தது.
கடலின் பெரிய அலைகளையெல்லாம் தனது செம்பவாங் வட்டார புளோக் தனக்குக் கீழ் புதைத்துக்கொண்டு நீர்ச் சிலும்பல்களைக் கடலுக்குள் விட்டுவிட்டதாக அவன் நினைத்தான்.
அவன் குடித்த மட்டரக மதுபானம் அவனைக் கீழே சாய்த்த போதெல்லாம், கடல்நீர் புளோக்குகளின் அடித்தளத்தை அரித்துத் தாங்கள் முன்பிருந்த இடத்தை மீட்கச்செய்த முயற்சியில் புளோக் தள்ளாடுவதாய் அவனுக்குத் தோன்றியது.
மெல்ல மெல்லக் கடல் மட்டம் உயர்ந்த நாட்களில் பூமிவாசிகள் யாரும் தேவையான அளவிற்குக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒவ்வொருவரும் பிறரைக் காரணம் காட்டி தப்பித்துத் தனது தனிப்பட்ட உலகிற்குள் பதுங்கிக் கொள்ளவே முயன்றார்கள்.
இது அவனுக்குள் மேலும் பயத்தை உண்டாக்கியது.
உலகில் எல்லோருக்கும் ஏற்படும் ஒன்று தனக்கும் ஏற்படுகிறதென்றால் பயம் தோன்றுவதில்லை போல.
வேறு யாராவது அதிகம் கவலைப்பட்டு அந்தத் துன்பத்தைத் தீர்த்துவிடுவார்கள் என்றே அனைவரும் பொறுப்பின்றி இருப்பதாக அவன் நினைத்தான்.
அவனது அச்சத்தை மெய்ப்பித்துத் தண்ணீர் தெருவிற்குள் நுழைந்த நாளன்று நகரத்தில் பரபரப்பு உண்டானது.
*
தண்ணீர் உள்நுழைந்த மரினா பே உள்ளிட்ட ஸ்கைலைன் பகுதிகளைத் தொலைக்காட்சியில் திருப்பித் திருப்பிக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
செய்தித்தாள்களில் கரை தாண்டிய கடல் தலைப்புச் செய்தியாக நுழைந்திருந்தது.
பள்ளிக்கூடங்களுக்கு அவசர விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் இணைய வகுப்பில் இணையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பணியிடங்கள் அன்று வழக்கம் போல இயங்கின. நகரெங்கும் நீர்மட்டம் உயர்ந்ததைப் பற்றியே பேச்சாக இருந்தது.
எண்ணூறு வருடங்களுக்கு முன்னர் சங் நீல உத்தமா இங்கு வருவதற்கு முன்பாக இப்படி ஒருமுறை ஆனதாகவும் அப்போது இந்தத் தீவு அழிந்துபோனதாலேயே அகழ்வாராய்ச்சியில் அந்த நூற்றாண்டுகளைப் பற்றிய சான்றுகள் அதிகம் கிடைக்கவில்லை என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிப்பதாகவும் அது போன்றதொரு அழிவை நோக்கி தீவு இப்போது சென்று கொண்டிருப்பதாகவும் வாட்சப் செய்திகள் பரவின.
அவற்றை நம்பவேண்டாம் என்று வதந்தி பரப்புபவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இவன் வாட்சப் குழுக்கள் அனைத்திலிருந்தும் வெளியேறினான். இவன் சில நாட்களுக்கு முன்பு பார்த்த வேலையை விட்டுவிட்டு தற்போது வேறுவேலை தேடிக்கொண்டிருந்தான்.
அதனால், தனது ஐந்தாம் மாடி வீட்டின் சமையலறைச் சன்னல் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறிக்கொண்டிருந்த கடலின் மட்டத்தை அளப்பதே இவனுடைய முழுநாள் பணியானது.
வீடு கடலுக்குள் மூழ்கிவிட்டால் அதற்குப் பதிலாக வேறு வீடு கொடுக்கப்படுமா என்ற கேள்வி இவனுக்குள் எழுந்தது.
துரித நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அடுத்த ஒரு வாரத்தில் நகரைச் சுற்றி கடல் நீர் அரிக்க முடியா கற்களைக் கொண்டு பத்தடி உயரத் தடுப்புச் சுவர் ஒன்று எழுந்தது.
தரைத் தளத்திலிருந்த மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்ட நாளின் நள்ளிரவில் கடல்நீர் தடுப்புச் சுவரின் மீதேறி முதற்தள வீடுகளுக்குள் நுழைந்தது. அன்று விடியலில் தீவு முழுவதும் அபாயச் சங்கு ஒலித்தது.
தரைத்தளத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அன்று யாரும் பணிக்குச் செல்லவில்லை.
முதல் தள வீடுகளின் படுக்கைகள், மரச்சாமான்கள் இவையெல்லாம் வெளியேறி மிதக்கத் துவங்கின. இரண்டாம் மாடிக்கு மேலிருந்தவர்கள் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல தங்கள் வேலைகளைத் தொடர்ந்தார்கள். சிலர் மிதந்து சென்ற பொருட்களைக் கொக்கி போட்டு தன் வீட்டிற்குள் இழுத்து வைத்துக் கொண்டார்கள்.
விரைவில் தங்கள் மாடி மூழ்கவிருக்கும் சாத்தியத்தை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஊருக்குள் நுழைந்துவிட்டிருந்த கடல் நீரை அப்புறப்படுத்தும் யோசனைகள் வரவேற்கப்பட்டன.
சிறந்த யோசனைக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
அவன் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து தனக்குத் தோன்றிய யோசனைகளை எண்வரிசையிட்டு எழுதத் துவங்கினான்.
வருடாவருடம் காட்டையெரித்து புகையைத் தங்கள் பக்கம் திருப்பும் நாடுகளின் திசையில் தண்ணீரை மோட்டார் வைத்து இறைத்து விடுவது அதில் முதலாவதாக இருந்தது.
முதல்தள வீடுகள் முற்றிலும் மூழ்கி இரண்டாம் தள வீடுகளுக்குள் நீர் புகுந்தபோதுதான் ஒரு பொது பயம் உண்டாகத் தொடங்கியது.
மக்கள் அதுவரை சேமித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பது என்று விவாதித்தார்கள். தனது சேமிப்பில் இருந்த முந்நூற்று நாற்பத்தாறு வெள்ளிப் பணம் பற்றி இவன் அதிகம் கவலை கொள்ளவில்லை. அதைவிட அதிகமான பணமும் பொருளும் வரும் நாட்களில் உதவியாகக் கிடைக்கும் என்று அவன் அறிந்திருந்தான்.
கடல் மெல்ல மெல்ல இவனது பாதம் நோக்கி உயர்ந்தபடி இருந்தது. இவன் பதினோராவது யோசனையை எழுதிய நாளில் தான், மாறிவரும் சூழலுக்கேற்ப மனிதஉடல் தன்னைத் தகவமைத்துக் கொண்ட அந்த அதிசயம் கவனிக்கப்பட்டது.
*
தண்ணீர் மட்டம் உயர உயர அந்த நிலையில் வசித்த மக்களுக்குச் சுவாசிக்க ஏதுவாக காதுகளுக்கு அருகில் செவுள்கள் முளைத்தன.
கைகால்கள் உதிர்ந்து அதற்குப் பதிலாகத் துடுப்புகளும் வாலும் முளைத்தன.
இந்த மாற்றத்தை நீரில் வசித்தவர்கள் சாதாரணமாய் எடுத்துக் கொண்டார்கள்.
தண்ணீரிலிருந்த உயிர்க்காற்றை வாய்வழியாக உள்ளிழுத்து செவுள் வழியாக வெளியேற்றினார்கள்.
அதுவரை நீச்சல் கற்றறியாதவர்களும்கூட தன்னியல்பாய் நீந்தத் துவங்கினார்கள்.
தமது வால்களை நீந்துவதற்கேற்றார்ப்போல அழகாகச் சீவி விட்டுக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட புதிய மாற்றங்களை ரசித்ததாகவே தோன்றியது.
கடல் விடுவிடுவென உயர்ந்து நான்காம் மாடி மூழ்கிய தினத்தன்று இவனது பொதுத் தாழ்வாரத்திலிருந்து கால் நீட்டினால் தொட்டுவிடும் தூரத்தில் நீர் இருந்தது.
அதைத் தொட்டால் தானும் மெர்லயனைப் போல மாறிவிடுவோம் என்ற அச்சத்தில் அவன் வீட்டிற்கு வெளியே கால்வைக்கவில்லை.
அன்றிரவு தூங்கியெழுந்தால் தனக்குத் துடுப்பு முளைத்திருக்கும் என்று அவன் நம்பினான்.
தனது உடற்பாகங்களை ரசிக்கக் கிடைத்த இறுதி தினத்தைத் தவறவிட மனமின்றி அன்று முழுவதும் கண்ணாடி முன் நின்றிருந்தான்.
கைகளினோரம் ஏதாவது புதிய வளர்ச்சி தட்டுப்படுகிறதா என்று தடவிப் பார்த்தபடியிருந்தான்.
முன்தினம் இணையத்தின் வழி தான் புதிதாய் அறிந்துகொண்ட ஒரு விஷயத்தை யாரிடமாவது சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகி இயல்புநிலை மீண்டுவிடும் என்று ஏனோ அவனுக்குத் தோன்றியது.
யீஷூன் புளோக் 124ன் மூன்றாவது மாடியிலிருந்த பரணியுடன் தொலைபேசியில் பேசுவதற்கு தொடர்ந்து முயன்றபடி இருந்தான். ஆனால், தொடர்பு முற்றிலும் விடுபட்டுப் போயிருந்தது.
கடல்நீர் நான்காம் மாடிக்கு மேல் உயர பிரயத்தனம் செய்யவில்லை. மக்கள் புதிய வாழ்க்கைக்குப் பழகத் துவங்கியிருந்தார்கள்.
பேருந்து மற்றும் விரைவு ரயில் செயல்பாடுகள் நின்று போயிருந்தன. போக்குவரத்துக்குப் படகுகளும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
பெருவணிகர்கள் தமக்கென தனி ஹெலிகாப்டர்களைக் கொண்டு இணையத்தில் தருவித்த பொருட்களைச் சங்கிலியில் கூடை கட்டி வீடுகளுக்கு விநியோகித்தார்கள்.
சிறு வியாபாரிகள் படகின் மூலம் தங்கள் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்தார்கள். கடலுக்கு மேலிருந்த தளங்கள் கம்பியில்லா மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டன.
கீழிருந்தவர்களுக்கு மின்சாரம் இருக்கவில்லை. அவர்கள் அதைப் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.
ஆர்வமிகுதியால் யாரும் கடலுக்குள் குதித்து உருமாற்றம் கொண்டு விடாமல் இருக்க, மேலிருப்பவர்களுக்குத் தண்ணீருக்குள் குதிக்கத் தடை விதிக்கப்பட்டது.
சீனர்கள், இந்தியர்கள், மலாய்காரர்கள், வெளிநாட்டினர், குடிமக்கள், இந்தப் பிரிவினையெல்லாம் மறைந்து நாடு, கடல் மட்டத்திற்கு மேலிருப்பவர்கள், கீழிருப்பவர்கள் என்ற இரண்டு பிரிவாய் ஆனது.
மேலிருப்பவர்கள் கீழிருப்பவர்களின் பிள்ளைகளுடன் தங்கள் பிள்ளைகள் பேசுவதைத் தடுத்தார்கள். அவர்களுடன் விளையாடினால் தங்கள் பிள்ளைகளுக்கும் உருவ மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று பயந்தார்கள்.
குறிப்பிட்ட அளவுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை இவனது வீட்டிற்கு ஹெலிகாப்டரின் மூலம் விநியோகிக்கப்பட்டது.
தண்ணீரைத் தீவிற்குள்ளிருந்து வெளியேற்ற உதவும் எழுபத்தெட்டாவது யோசனையை அவன் எழுதத் தொடங்கிய நாளில் உப்புநீரால் முழுதும் அரிக்கப்பட்ட கட்டிடங்களின் அடித்தளங்கள் பூமியிருந்து தம்மை விடுவித்துக்கொண்டன.
புவியீர்ப்பு விசை எவ்விதத்திலோ சமன்பட்டு புளோக்குகள் மிதக்கத் துவங்கின. புளோக்குகள் நீரோட்டம் சென்ற திசையில் நகர்ந்தன.
ஊரைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த சுவர் இருந்ததால் அவை கடலுக்குள் செல்லவில்லை. அவற்றின் ஒன்றையொன்று முட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு அவசரக்கால உள்ளூர் கடற்போக்குவரத்துக் காவல்துறையொன்று உருவானது.
சிவப்புச் சீருடையணிந்த அதன் பணியாளர்கள் படகுகளில் தீவை வலம் வந்தார்கள்.
முட்டிக்கொண்ட புளோக்குகளை பளுதூக்கிகள் உதவியுடன் இரும்புத் தூண்களைக் கொண்டு நகர்த்தி விட்டார்கள்.
கீழிருப்பவர்கள் மீன்களைப் போல அனைத்துத் திசைகளிலும் நீந்திவர, மேலிருந்தவர்களால் நீரோட்டத்தின் திசையில் மட்டுமே செல்ல முடிந்தது.
சட்டம் போடப்பட்டதாலேயே ஆர்வம் கொண்டுவிட்ட சிலர் ஓர் இரவில் கடற்காவலர்கள் இல்லாத பக்கமாய்ப் பார்த்து தண்ணீருக்குள் குதித்தார்கள் அவர்களுக்குச் செவுளோ, துடுப்போ முளைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நீச்சல் அறிந்தவர்கள் கடலுக்குள் செல்லத் துவங்கினார்கள். சென்று வந்தவர்கள் நீரின் கீழிருந்த தளங்களை எட்டிப் பார்த்துவிட்டு வந்து கதை கதையாகச் சொன்னார்கள்.
அவர்கள் வீடுகளில், அழகான சிப்பி அலங்கார வேலைப்பாடு செய்த பெரிய கடற்பஞ்சுப் படுக்கையில் அவர்கள் உறங்குவதாகவும், அதனால்தான் மிதந்து சென்ற பொருட்களைப் பற்றி கவலைப்படவே இல்லையென்றும் அவர்கள் சொன்னார்கள்.
கடல்நாகங்கள் கக்கிச்சென்ற மாணிக்கக் கற்கள் கடல் படுக்கை முழுவதும் இறைந்து கிடந்தும் அதன் மீது பற்று கொள்ளாத அளவிற்கு அங்கிருந்தவர்கள் துறவு நிலையை எய்துவிட்டார்கள் என்ற பேச்சு உலவியது.
அங்கிருந்த பிள்ளைகள் பவளங்களையும் முத்துக்களையும் வீசியெறிந்து விளையாடுவதாகவும் செய்திகள் பரவின.
செஜாரா மலாயுவின் ராஜாசூரன் நீருக்குள் மூழ்கியபோது அங்கிருந்த உலகம் இதுவாக இருக்கலாம் என்றார்கள்.
இப்படித்தான் பல்லாயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பூமி தன்னை சுருக்கியும் விரித்தும் அமைதிப்படுத்திக்கொள்ளும் என்றார்கள்.
நீருக்குப் பாவங்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்ற செய்திகள் பரவ, கடல் நீரை அள்ளித் தெளித்து தங்களைப் புனிதமாக்கிக்கொள்ள முயன்றார்கள்.
நீர்மூழ்கிச் சாதனங்களின் விலை வேகமாக உயர்ந்தது. நீருக்குள் செல்ல விரும்புபவர்கள் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டும் என்ற புது விதி அமலுக்கு வந்தது.
நீச்சல் தெரியாதவர்களுக்கென்று சிறு நீர்மூழ்கிப் படகுகள் அறிமுகமாயின.
கடலின் நீலம் கரைந்து நீருக்கடியில் இருந்தவர்களின் உடலில் ஒரு மென்நீலம் பரவத் தொடங்கியிருந்தது.
சபையர் கற்களைப் போல மினுக்கிய உடலைப்பெற்ற அவர்கள் அழகானவர்களாகக் கருதப்பட்டார்கள்.
செதில் முளைத்த பெண்கள் கவர்ச்சியானவர்கள் என்ற கருத்து உருவானது.
மேலிருந்தவர்கள் தங்களிடமிருந்த பொருட்களையெல்லாம் கொடுத்தாகினும் அவர்களுக்கிருந்ததைப் போன்ற நீண்ட வால்களைப் பெற முயன்றார்கள்.
அவர்களால் போலியான வால்களை வாங்கி ஒட்டிக்கொள்ள மட்டுமே முடிந்தது. ஆண்கள் இறால்களைப் போல மீசைகளை வைத்துக் கொள்ள விருப்பப்பட்டார்கள்.
இப்போது மேல் மாடிகளில் இருப்பவர்கள் அனைவரும் கீழ் மாடிகளில் இருப்பவர்களுடன் தொடர்பிலிருக்க பெரிதும் ஆர்வம் காட்டினார்கள்.
புளோக் 131ன் கீழ்த்தள வீடு ஒன்றில் குடியிருந்த ஒருவரின் மகன் என் மகளுடன் கிண்டர்கார்டனில் படித்தான் என்பதைப் பெருமையாகச் சொன்னார்கள்.
தங்கள் வீட்டை விலை அதிகம் கொடுத்து வாங்கி சிப்பிகளால் அலங்கரித்தார்கள்.
*
இவன் தனது நண்பன் பரணியை ஒருமுறை பார்த்து தான் இணையத்தில் கண்டறிந்த அவ்விஷயத்தைச் சொல்லிவிட விரும்பினான். அதற்கான அனுமதியையும் பெற்றுவிட்டான்.
*
காலைக் கதிரவனின் இளங் கதிர்கள் நீரின் மேல்மட்டத்தை ஊடுருவியதில் கடல் தங்க நிறத்தில் பரவியிருந்தது.
வெதுவெதுப்பாயிருந்த நீருக்குள் பாய்ந்தபொழுதில் உடல் சற்று கிறுகிறுத்தது.
கீழே செல்லச்செல்ல ஒருவித போதை அவனுக்குள் படர்ந்தது.
அவனது உடல் மெல்ல அவனிலிருந்து கழன்று ஆன்மா மட்டும் நீந்துவதைப் போன்ற இலகுவான உணர்வு உண்டானது.
உடல் அவன் கட்டுப்பாட்டில் இருந்து முழுவதும் விலக, தென்திசையை நோக்கிச்சென்ற சிறுமீன்களின் கூட்டத்துடன் இயைந்து மிதந்தான்.
விரலெட்டும் தொலைவில் நீந்திய அம்மீன்களைப் பொரித்து உண்ணும் உந்துதல் அவனுக்கு எழுந்தது.
உடலை ரப்பர் போல வளைத்து நீந்திய ஆண்களும் பெண்களும் அவனின் இருப்பை மதிக்காது கடந்தார்கள்.
பரணி இருந்த புளோக் 124-ஐத் தேடினான். அது மிதந்து நகர்ந்து கான்பரா வட்டாரத்தின் புளோக் 123க்கு பக்கத்திற்குச் சென்றிருந்தது. அதுவும் போதையில் இடம் புரியாமல் தத்தளிக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.
இவன் காண்டோ பக்கமாகச் சென்ற கால்வாயைத் தாண்டும்போது தடுமாறியபடி எதிரில் வந்தவன் இவனை இடித்துவிட்டு முறைத்தான்.
முறைத்தவனின் பக்கம் திரும்பிய இவன், "ப்ரோ பூமியைப் பத்திரமா பார்த்துக்கோங்க," என்றான்.
பின்னர், "ப்ரோ ஒன் மினிட், உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் குடியிருக்கும் புளோக் கடலுக்கு மேல இல்லை, பரணியைப் பார்த்து இதைச் சொல்லத்தான் போய்க்கிட்டிருக்கேன்," என்றான்.
அந்த நொடி சுற்றிலும் இருந்த கடல் சிலீரெனப் பாய்ந்து அவனது உடலுக்குள் புகுந்தது.
முன்பு தென்திசையை நோக்கிச் சென்ற அதே மீன்கள் இப்போது இவனது மூளையை நோக்கிப் பயணித்தன.
அவற்றுடன் நீந்தி எப்படியாவது தனது வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என்ற அவசர உந்துதல் அவனுக்கு முட்டிக்கொண்டு வந்தது.
*
(சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2021 முத்தமிழ் விழாவை ஒட்டி நடத்திய பொதுப்பிரிவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை)

