இரா சத்திக்கண்ணன்
அன்று வெள்ளிக்கிழமை. மழை கொட்டித்தீர்க்கிறது. குளிர் எங்கும் பரவுகிறது. வெகுநாட்களுக்குப் பிறகு அப்படியொரு குளிர்மழை. நிச்சயம் வானவில் வரும். நடுத்தெருவில் அழகிய உயிர் நீரோடை அமைதியாய் ஓடத் தொடங்குகிறது.
சில மஞ்சள் நிறப்பூக்களும், இலைகளும் நீரோடையில் மிதந்து செல்கின்றன. எந்தக் குழந்தையோ செய்து நீரோடையில் விட்ட காகிதக்கப்பல் அற்புதமாய் இருக்கிறது. நீரோடை அதீதக் கனவுகளோடு நகர்கிறது.
தெருமுனையில் இருக்கும் டெலிபோன் பூத்தில் அதிக கூட்டமில்லை மழையால். மாற்றுத் திறன் தொழிலாளியான முருகன் அமர்ந்திருந்தார் மழையை விரித்துப்பார்த்தபடி. தினசரி ஒரு நூறு ரூபாய் வருமானம் கிடைக்கும். அவரின் புன்னகை விலைமதிப்பற்றது. அவரின் சிவப்புநிற டிஷர்ட் கண்ணைப் பறிக்கிறது.
சிவப்புநிற டிஷர்ட்டை அவருக்குக் கொடுத்த அந்த எழுபத்தைந்து வயது நிறைந்த அம்மாளுப் பாட்டி தளர்ந்த நடையுடன், கையில் குடையோடு டெலிபோன் பூத்துக்கு வந்தார்.
அம்மாளுப் பாட்டியை கண்டவுடன் முருகனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. பாட்டி தான் செய்த ஒரு மைசூர் பாக்கை முருகனுக்கு கொடுத்தார். 'என்ன பாட்டி?' எப்படி இருக்கீங்க! என வினவினார்.
பாட்டி சிரித்த முகத்தோடு நல்லா இருக்கேன். 'நீங்க எப்படி இருக்கீங்க? என்று பாட்டியும் முருகனிடம் கேட்டார். ஆயினும் அம்மாளுப் பாட்டியின் முகத்தில் எப்போதுமிருக்கும் மகிழ்ச்சியில்லை என்பதை நன்கு உணர்ந்தார் முருகன்.
'யாருகிட்ட பேசணும் பாட்டி? நம்பரைக்கொடுங்க! என்றார் முருகன். பாட்டி நம்பரைக் கொடுத்தார்.
முருகன் நம்பரைச் சுழற்றத் தொடங்கினார். 'கீரிங் கீரிங்' என்ற பழைய மணியொலியைக் கேட்டபடி பாட்டியின் கண்களில் ஏக்கம்.
'யாரு யாரு' என்று பாட்டியின் குரல் மறுமுனையில். 'நான்தான் அம்மா பேசறேன்!' என்கிறார் அம்மாளுப் பாட்டி.
சொன்னதுதான் தாமதம். "ஏம்மா நடுராத்திரில கூப்பிடற. அமெரிக்கால இப்போ ராத்திரி இரண்டு மணி. அப்படியென்ன அவசரம்? அதான் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகள்ல தான் உன்னோட பேசறேனே," எனப் பொரிந்து தள்ளினார் அம்மாளுப்பாட்டியின் செல்ல மகன் கணேஷ்.
அம்மாளுப் பாட்டி ஒன்றும் சொல்லாமல் டெலிபோனை கட் செய்து முருகனைப்பார்த்து புன்னகைத்தார் கண்ணீர் குளத்தை மறைத்தபடி.
முருகன் 'என்னமா ஆச்சு? ஒண்ணுமே பேசலையே!' என்றார். அம்மாளுப் பாட்டி ஒன்றும் சொல்லாமல் டெலிபோன் பூத்தைவிட்டுக் கிளம்பினார்.
மழை மெல்ல விரிக்கிறது. அம்மாளுப்பாட்டியின் கண்களுக்கு வானவில் தெரியவில்லை.
மெல்ல மெல்ல நடந்து தன் வீட்டை அடைந்தார் அம்மாளுப்பாட்டி. கணவனை இழந்த பின்பு தனியாக வாழ்கிறார் அம்மாளுப்பாட்டி.
மெல்ல நகர்கிறது பகல். அம்மாளுப் பாட்டி இரவு உணவு உண்ணாமல் வெறும் தண்ணீரைக்குடித்துவிட்டு உறங்கச் சென்றார்.
இன்று ஞாயிற்றுகிழமை. காலை எட்டுமணியிருக்கும். 'கிரீங் கிரீங்' என்று டெலிபோன் பூத் போனில் சத்தம்.
'சார், நான் அமெரிக்காவிலிருந்து கணேஷ் பேசறேன்! அம்மாளுப் பாட்டியைக் கூப்பிடமுடியுமா!
என்ற குரல்
முருகன் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, ஏன் சார் இப்படி பண்ணிடீங்க? உங்க அம்மா அம்மாளுப்பாட்டி உங்களோடு பேச வந்தார் வெள்ளிக்கிழமை. நீங்க என்ன சொன்னீங்க சார்? மனசு சரியில்லாம வீட்டுக்குப் போனவங்க, அப்படியே மொத்தமா தூங்கிட்டாங்க!
நாங்க அவங்களை பத்திரமா கடவுளோடு சேர்த்துவிட்டோம். கவலைப்படாதீங்க, உங்க வீட்டுச் சாவி பத்திரமா இருக்கு. அட்ரஸ் சொல்லுங்க. கொரியர்ல அனுப்பிடறேன். மொத்த மழையும் விரித்தது. கணேஷ் மனசில் அடர்ந்த கருமேகங்கள் சூழ்ந்தன.

