துதிப்போர்க்கு வல்வினை போக்கும் என்னும் வழிபாட்டுப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க கண்களை விழித்தார் நாராயணன். இந்த வயதிலும் வெள்ளன எழுந்து, வேலைகளை மேற்கொள்வது மனைவி முத்துலட்சுமியின் வழக்கம்.
அதிகாலைப் பொழுதில் முருகன் பாடலும் சாம்பிராணி வாசனையும் தன் மனைவிக்கு இணையான பொறுப்புணர்வை நாராயணனுக்கு நினைவூட்டியது.
துரித கதியில் எழுந்தவர் படுக்கையைச் சரி செய்தார். இது அவரது வாடிக்கையான வேலைகளில் முதலிடம் பெற்றது. அப்போது அவருக்கு முன்னே எழுந்துவிட்ட பேத்தி அகல்யா நாச்சம்மை ஓடிவந்து காலை கட்டிக்கொண்டாள்.
பேத்தியின் முகத்தில் விழித்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது அவருக்கு. ஐயா, குட்மார்னிங் என்றாள். ஐந்து வயது இருக்கும் அகல்யாவுக்கு. குலதெய்வத்தின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொன்னதால் சேர்ந்ததுதான் அகல்யாவுக்கு பின் வந்த நாச்சம்மை. வட்டார வழக்கில் அப்பாவின் அப்பாவை ஐயா என்று அழைப்பார்கள். பேத்தி தன்னை ஐயா என்று அழைப்பது அவருக்கு மிக பிடித்தமானதாக இருந்தது. அதுவும் அந்த மழலை உதிர்க்கையில் திருவள்ளுவர் ஒரு தீர்க்க
தரிசி என்று உணர்வார்.
என்ன பாப்பா என்றார்.
வாங்கய்யா விளையாடலாம் என்றாள்.
விளையாடுறதுக்கெல்லாம் இது நேரம் இல்லையே பாப்பா. வேண்ணா ஒன்னு செய்யலாம், பல்லு விளக்கி எல்லாம் முடிச்ச பிறகு ஐயா வாக்கிங் போவனாம், அப்ப பாப்பா கூட வருமாம் என்றார். வெளில போறதுன்னு சொன்னதும் அகல்யாவின் முகம் முழுநிலவாய் மிளிர்ந்தது. ஓட்டமும் நடையுமாக வெளியே கிளம்ப தயாரானாள்.
அவர் தயாராகி வருவதற்குள் தனது காலணிகளுடன் காத்திருந்தாள் அகல்யா. நேரமாகுதுய்யா வாங்க, என்ற அவசரம் அவளது ஆர்வத்தின் வெளிப்பாடாய் வந்தது.
வீட்டை விட்டு எங்கு போனாலும் கையில் காசு இல்லாமல் கிளம்பமாட்டார் நாராயணன். கைத்தொலைபேசி, பணம், சாவி இவற்றுடன் மூக்கு கண்ணாடியையும் மறக்காமல் எடுத்துக்கொண்டார்.
வாக்கிங் போறதுக்கு எதுக்குய்யா கண்ணாடி என்று பேத்தி கேட்க, எதையாவது பாக்கணும்னு வச்சுக்க அப்ப தடுமாறி போயிருவேன் என்று தான் பட்ட சிரமங்களின் ஞாபகமாக பதில் சொன்னார். முடிஞ்ச வரைக்கும் அடுத்தவர்களைத் தொந்தரவு பண்ணுவதை தவிர்க்க நினைப்பார். அதற்காக பலமுறை யோசித்து செயல்படுவது அவரது வழக்கம்.
ஐயா கையைப் பிடித்துக் கொண்டு அப்பத்தாவிடம் (அப்பாவின் அம்மா) சொல்லிவிட்டு கிளம்பினாள். வெளிய வந்ததுமே, கதை சொல்லுங்கய்யா என்றாள்.
என்ன பாப்பா, கதை கேக்குற? தூங்குறப்பதானே கதை கேப்ப, இப்ப என்ன என்றார். அகல்யாவுக்கு கதை சொல்வதற்காகவே பல சம்பவங்களையும், கதைகளையும் தேடித்தேடி படிக்க ஆரம்பித்திருந்தார். இப்ப என்ன சொல்றதுன்னு அவர் யோசித்தற்காகத் தான் இப்படி கேட்டார். கதை கேக்குறதுக்குன்னு நேரம் இருக்கா? எப்ப வேண்ணாலும் கேக்கலாம்ல, சொல்லுங்கய்யா என கேட்டாள். இந்த வயசுல இப்படியெல்லாம் கேள்வி கேட்குற அகல்யாவை பத்தி பெருமையா இருந்தாலும், அதை வெளிய காமிச்சுக்காம, கதை சொல்லும்போது வேற வேலை எதுவும் பாக்கக் கூடாது என்று சொல்லி சமாளித்தார். போரடிக்குமேயா, என்றாள். நம்ம பேசிட்டே போகலாம் பாப்பா என்றார். பேச ஆரம்பித்தால், கேள்வியை கேப்பாளே, அதுவும் சிக்கலாச்சே என்று வேற யோசித்தார்.
அப்ப சரி பேசிட்டே போகலாம் என்று சமாதானம் அடைந்தாள். அடுத்த நிமிடமே கேள்விகள் வந்து விழுந்தன. அந்த சமயம் அவர்கள் 'தோ பாயோ' பேருந்து நிலையம் அருகில் இருந்தார்கள். இந்த பஸ்ஸெல்லாம் யாரு செய்வா? எங்க வாங்குவாங்க என்று முதல் கேள்வி வந்தது. தமிழ்ல அதுக்கு பேரு, பேருந்து என்றார்.
இப்படி ஒவ்வொரு முறையும் பேத்தி சொல்கிற வார்த்தைகளை தமிழ்ப்படுத்தி விளக்குவது அவரது வாடிக்கை. இந்த சமயத்துல சொன்னா கப்புன்னு புடிச்சுக்குவாங்குறது அவரது நினைப்பு. வீட்டுல எல்லாரும் கிண்டல் பண்ணினாலும் விடாமல் சொல்லிக்கொண்டிருப்பார். இவர் சொல்றதுக்காக அடுத்த தடவை பேருந்துன்னு சொல்லுவான்னு அவர் எதிர்பார்க்கலை. மாறாக அந்த வார்த்தை தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்பினார்.
திரும்பவும் கேட்டாள், ஐயா எங்க செய்வாங்க? என்றாள்.
அதுவா, வெளிநாடுகள்ல, இத்தாலி, ஜெர்மனி இங்கயெல்லாம் செஞ்சு சிங்கப்பூருக்கு அனுப்புவாங்க என்றார். இங்க அந்த வசதி கிடையாது என்றார்.
ஆச்சரியத்துடன் கேட்ட அவள் எதுல வரும் என்றாள்.
கப்பல்லதான் வரும் பாப்பா.
'கப்பல்'னா?
ஷிப்.
பெரிய ஷிப் இருக்காய்யா?
இருக்கு பாப்பா. பத்து பதினஞ்சு ஏரோபிளேன் வைக்கிற அளவுக்கு எல்லாம் கப்பல் இருக்கு.
சரியா, நம்ம ஊர்ல எல்லாம் 'பஸ்'ல டிரைவரை தவிர இன்னொருத்தர் இருப்பாரே டிக்கெட் கொடுக்க, விசில் ஊத. இங்க மட்டும் 'பஸ்'ல டிரைவர் மட்டும் தான் இருக்காரு. டிக்கட் யாரு குடுப்பா. யாரு விசில் ஊதுவா? என்றாள். இதுல நிறைய விஷயம் இருக்குப்பா. இங்க எல்லாம் மிஷின் இருக்கு. ஊர்ல எல்லாம் அந்த அளவு வசதி இல்லை. ரெண்டு பேர் இருந்தா இன்னும் கொஞ்ச பேர வேலைக்கு வைக்கலாம் அப்படின்னார். இப்படியாக கேள்விகள் வந்து விழுந்துகொண்டே இருந்தன.
கொஞ்ச தூரம் வந்ததும், ஐயா அங்க பாருங்கய்யா என்றாள்.
என்ன பாப்பா?
அங்க பாருங்க பெரிய குச்சியை ரோட்டுல நட்டு வச்சுருக்காங்க என்றாள்.
பெரிய குச்சியா எது பாப்பா?
அங்க பாருங்கய்யா, கண்ணாடியைப் போட்டுக்கிட்டு பாருங்க என்றாள்.
அவள் காண்பித்த இடத்தில், இரண்டு மரங்கள் மொத்தமாக வெட்டப்பட்டு இருந்தன. எந்த அளவு என்றால், மொட்டை அடிக்கப்பட்ட தலை போல் சுத்தமா இருந்தது. அதுவா பாப்பா, அது குச்சி இல்ல, மரம் என்றார்.
மரமா, காமெடி பண்ணாதீங்கய்யா அப்படின்னு பதில் வந்தது. வடிவேலு படம் ரொம்ப பாப்பா போல,
'மரம்'னா இலையெல்லாம் இருக்குமே, 'பிரான்ச்' இருக்குமே என்றாள்.
அதை வெட்டிட்டாங்கப்பா, அதான் இப்படி மொட்டையா இருக்கு என்றார்.
வெட்டிட்டாங்களா? அப்ப எதுக்கு மரம் வளக்குறாங்க என்றாள்?
அது, பிரான்ச் எல்லாம் ரோட்டுக்கு வந்தா போற வர வண்டிக்கெல்லாம் இடைஞ்சலா இருக்கும். அதனால வெட்டிட்டாங்க என்றார்.
நீங்க கத சொல்லும்போது, அந்தக் காலத்துல அரசரெல்லாம் ரோட்டுல மரம் வளத்தாங்கன்னு சொல்லுவீங்க, இப்ப அந்த அரசரெல்லாம் இல்லையா? இப்ப இருக்க அரசருக்கு மரம் புடிக்காதா? இது அறிவார்ந்த கேள்வியாக வந்தது.
இன்றைய காலத்தின் அவசியத்தையும், மக்களின் தேவையையும் அவளுக்குப் புரிய வைக்க முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும்.
இருந்தாலும் அவளைச் சமாதானப்படுத்துகிற அளவுக்கு பதில் சொல்ல வேண்டுமே?
இப்ப இருக்குறதெல்லாம் அரசரில்லை, அரசாங்கம். அதாவது கவர்ன்மெண்ட். அவங்க போக்குவரத்துக்கு, அதாவது 'டிராபிக்'குக்கு இடைஞ்சலா இருக்கதை எல்லாம் அகற்றுவாங்க, அதனால தானே மரத்த வெட்டியிருக்குக்காங்க என்றார். அருகிலே குடியிருக்குறவங்க புகார் பண்ணி இருந்தா அதனாலயும் வெட்டுவாங்க என்றார்.
சரி, பிரான்ச் வெட்டுறது இருக்கட்டும். இலைய எதுக்கு வெட்டுறாங்க என்றாள்.
அதுக்கு பேரு கிளை. கிளை எல்லாம் வெட்டும்போது இலையும் போயிரும்ல, அதான் என்றார்.
வெட்டுறப்ப மரத்துக்கு வலிக்காதாய்யா, அது அழுதிருக்கும்ல என்றாள். அந்த கேள்வியில் ஆயிரம் வலி இருந்தது.
இதுக்குப் பதில் சொல்ல முடியாமல் சாலையோர மரத்தைப்போல திகைத்து நின்றார் நாராயணன்.

