நாற்பதாண்டுக்கு முன்
நடந்த ஒரு நிகழ்வு
நெஞ்சைவிட்டு
நகரமறுக்கும் நிகழ்வு
சுவர் ஒன்றெழுப்ப
வானம் வெட்டி
ஆறப்போட்டேன்
வாடிக்கை நாயொன்று
வானத்தில் இறங்கி
குட்டிகளை ஈன்றது
அன்று இரவு
இடியோடு அடமழை
இடிந்து விழுந்த மண்
வானத்தை மூடியது
அம்மவோ!
அந்தக் குட்டிகள்
தாயோடு சேர்ந்து
புதைந்திருக்குமோ?
நினைக்கும்போதே
என் படுக்கை
பற்றி எரிகிறது
பொழுது விடிந்தது
கொல்லைப்புறக் கொட்டகையில்
அந்த நாயின் குடும்பம்......
குட்டிகள் மடிசப்ப
சுகமான உறக்கத்தில்
தாய் நாய்
அந்தப் பள்ளத்திலிருந்து
அந்த அடமழையில்
கண்திறக்கா குட்டிகளை
கவ்வித் தூக்கிவந்து
காப்பாற்றியது
சத்தியமாக
சாத்தியமே இல்லை
நம்பமுடியாத அதிசயம்
நடத்தியிருக்கிறது
'தாய்மை' என்கிற
மாபெரும் சக்தி
அச்சாகத் தாய்மை
சுழல்கிறது பூமி.
அத்தனை உயிர்களுக்கும்
அன்னையர் தின வாழ்த்துகள்
அமீதாம்மாள்

