"காலையிலேர்ந்து 22 வெள்ளிக்கு மலேசியா ஓடுனதுதான்... பிறகு யாவாரம் ஒண்ணும் இல்ல.. நிஜாம்.."
ஜூரோங் எம்ஆர்டி ரயில் நிலையத்தில் க்ரீச் என சத்தத்தோடு ரயில் நின்றது. கண்ணாடிக் கூண்டுக்குள் உள்பக்கமாக நின்று கொண்டு ஈரத்துணியால் துடைத்ததில் தோள் இரண்டிலும் அப்பாஸுக்கு வலி. கவுண்டர் திறந்ததும் நாகூர் தர்கா உண்டியலில் வழமையாய் போடும் காணிக்கை இரண்டு வெள்ளி. பின்பு யாசீன் சூரா. இரு பக்கவாட்டில் கேஷ் மெஷின்களுக்கு நடுவே இருக்கும் செவ்வக ஊதா நிறப்பெட்டியில் மலேசிய வெள்ளி, அமெரிக்க பச்சை, இந்தோனீசியா நிக்காஹ், பிரிட்டிஷ் வெள்ளை என நாணயம் வாரியாக பிரிக்கப்பட்டு ரப்பர்பாண்டில் இறுக்கி கட்டப்பட்டிருந்தது.
கவுண்டர் திறந்ததும் வங்கிகளை தொலைபேசியில் அழைத்து நாணய விலையைக் குறித்துக்கொண்டு, ஆர்கேட் பிளாசாவில் மொத்த விற்பனையாளர்களிடம் விலைகேட்பது, இரண்டையும் ஒப்பீடு செய்து, லாபத்தோடு விலைநிர்ணயம் செய்து போர்டில் பதிவு செய்வது போன்றவை அப்பாஸின் தினசரி அலுவல்கள்.
சம்பளப் பட்டுவாடா நாட்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். சுற்றுவட்டார மணிசேஞ்சர்களில் விலையை தாளில் குறித்துக்கொண்டு விலைபடிய பேரம் பேசும் சீன அங்கிள்கள், சுற்றுப் பயணிகள், வார இறுதியில் ஜோகூர் போய் மளிகை, இறைச்சி வாங்க காத்திருப்போர், நேரத்தோடு ஜோகூர் திரும்பி குடும்பத்தோடு சம்பளநாளை கொண்டாட காத்திருக்கும் மலேசிய தொழிலாளர்கள் என வரிசை நீண்டு தரைத்தளம் கோப்பித்தியாம் வரை முட்டிநிற்கும்.
அதெல்லாம் ஒருகாலம். எல்லாவற்றிலும் கொரோனா மண்ண அள்ளிபோட்டு விட்டது. விமானப் போக்குவரத்து - ஜோகூர் எல்லை மூடல் என நாணய வியாபாரம் முடங்கிக் கிடக்கிறது. கோலோச்சிய முதலாளிகள் எல்லாம் வேறு தொழில் தொடங்கலாமா என யோசனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
"மலேசிய டிடி மாத்துனதுல மஜீத் கடை பற்று 7,000 வெள்ளி ரொம்பநாள் பென்டிங்கா கிடக்குதே," என்றான் நிஜாம்.
நிஜாமிற்கும் அப்பாஸிற்கும் பெரிதாக வயது வித்தியாசமோ இல்லை. அப்பாஸிற்கு ஒருகாலத்தில் சென்னையின் பர்மா பஜார் வியாபாரம், குருவி- டிவி, என வியாபாரம் பெரிதாய் வளர்ந்தபோது இங்கே அறிமுகம் ஆனது.
தக்கசமயத்தில் சரக்குகளை இறக்கி பஜாரில் சேட்டிடம் கைமாற்றி விட்டு கொள்ளை லாபம்பார்த்துக்கொண்டிருந்தான். சேட்டிற்கு பிரச்சினை இல்லாமல் சரக்கு கிடைத்தது. அவரும் இவனை வைத்துக் கல்லாகட்டினார்.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் வட்டிக்குப் பணம் வாங்குவதும், சரக்கு வாங்கி ஊருக்கு இறக்குவதுமாய் இருந்தான். ஏதோ ஒரு பொல்லாநாள். மேல் அதிகாரி இன்ஸ்பெக்ஷன் வர, கஸ்டம்ஸ் கெடுபிடியில் ஒரேநாளில் பதினைந்து குருவிகளோடு சரக்குகள் மாட்டிக்கொண்டது. சரக்கு என்றால் ஒவ்வொரு குருவி தலையிலும் இரண்டரை லட்சம் மதிப்புள்ள சரக்கு. அப்பாஸ் வாழ்க்கையே மாறிப்போனது.
அன்று அணைந்த சேட்டின் செல்போன்தான். இன்றுவரை அவரிடம் பேசமுடியவில்லை. மாஸ்கான் சாவடி வீட்டிற்கும் எத்தனையோ முறை நடந்தும் செருப்பு தேய்ந்ததும்தான் மிச்சம். எப்போது போனாலும் "சேட் வெளியூர் போயிருக்கு..." என்பதையே அவனால்கேட்கமுடிந்தது.
அத்தாவின் சாவில் கூட தண்டல்காரர்கள் வீட்டைச் சுற்றி நின்றார்கள். கோவளத்தில் ஒளிந்து கிடந்து துக்கத்திற்கு போனவனை கழுத்தில் கத்திவைத்தார்கள். எங்கு பார்த்தாலும் கடன்! நாலு திசையிலும் கடன்! வாழ்நாள் முழுதும் சம்பாதித்துக் கட்டினாலும் தீராக்கடன். கோர்ட், கேஸ், கந்துவட்டிக்கடன், தற்கொலை முயற்சி என மனஅழுத்தத்தில் சிங்கப்பூரில் அடைக்கலமானான்.
ஆபத்பாந்தவனாக வந்தார் மஜீத்முதலாளி. அப்பாஸை மாதம் 800 வெள்ளி சம்பளத்திற்கு தனது ஆர்கேட் பிளாசா கவுண்டரில் சேர்த்துக்கொண்டார். கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது. ஊர் செலவுக்கு பத்தாயிரம், மீதியை கந்து வட்டிக்குப் பணம் கட்டியதன் மூலம் தண்டல்காரர்களிடம் தவணை கிடைத்தது. ஐந்து ஆண்டு வனவாசத்தில் நிஜாம் அவனுக்கு அறிமுகம்.
"நிஜாம் காப்பி வாங்கி வரவா?"
கையில் வெள்ளைப் பையும் கவருமாய் நின்ற நிஜாம், "வேணாம் இப்பதான் சாப்பிட்டு வாரேன்," என கையிலிருந்த பாத்திரத்தை நீட்டி, "நஃபிசா உனக்கு தந்தாள்," என்றான்.
உள்ளே நான்கு தேங்காய்ப்பால் கொழுக்கட்டைகள் இருந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு தான், அப்பாஸோடு தங்கை இருவருக்குமாய் மொத்தம் மூன்று கல்யாணம். ஏற்கெனவே இருந்த கடனோடு கல்யாணக் கடனும் சேர்ந்துகொண்டது. மூன்று மாதம் வட்டி கட்டமுடியாமல் போனதில் வக்கீல் வீட்டிற்கே அடியாட்களோடு வந்துவிட்டான்.
வீட்டில் கிடந்த சோஃபாவை இழுத்து நடுரோட்டில் போட்டான். அக்கம் பக்கத்தினரை அழைத்து குடும்ப மானத்தை வாங்கினான். தம்பி, தங்கை, மனைவி, அம்மா உடல் கூசிப்போய் தெருவில் நின்றார்கள். தெருவே கூடிநின்று வேடிக்கை பார்த்தது. தவணை கட்டாவிட்டால் அடுத்த முறை பண்டபாத்திரத்தை தெருவில் அள்ளிப்போடுவேன் என மிரட்டிவிட்டு போனதாக அம்மா போனில் கூறினாள்.
கடையடைத்ததில் நிஜாமிற்கு வருமானம், வாடகை, சம்பளம் என கையை கடித்தது. இருந்தும் சகித்துக்கொண்டு மெஸ்செலவு, ரூம்வாடகைக்கு என தன் கைக்காசில் கொஞ்சம் கொடுத்தான். இப்போது கடைதிறந்தும் வியாபாரம் பெரிதாய் இல்லை. இப்படியேபோனால் நிஜாமிற்கு கடும் நசிவு வரும் என்பதை அப்பாஸ் அறியாமல் இல்லை. அப்பாஸின் கடன்சுமையை நிஜாம் அறியாமலும் இல்லை.
நிஜாம் கையிலிருந்த கவரை பார்த்துக்கொண்டே ட்ராயரை திறந்தான் அப்பாஸ். அதே 22 வெள்ளி. எத்தனை முறை திறந்து பார்த்தாலும் மாறுவதாய் இல்லை. ஏதாவது அற்புதம் நிகழாதா என அச்சத்தில் மூழ்கிக் கிடக்கும் எண்ணற்ற தொழிலாளர்களில் அவனும் ஒருவன்.
மஜீத் மணிசேஞ்சரில் இருவரும் ரன்னர்கள். முதுகில் ஆமைஓடுபோல் பணத்தை பேக்கில் கட்டிக்கொண்டு முதலில் பேங்கிற்குப் போகவேண்டும். நாணயம் டெலி வரி முடிந்ததும் திரும்பவும் ஆர்கேட். கொஞ்சம் ஆசுவாசம், பின்பு வெளிநாட்டு கப்பல் ஆர்டர் இருக்கிறதா எனப் பார்த்து செய்துவிட்டு ஆஸ்திரேலியா, மலேசியா, பவுண்ட், யூரோ நாணயத்தை திரும்பவும் முதுகில் கட்டிக்கொண்டு ஓடவேண்டும். மீண்டும் ஆர்கேட்.
இந்த முறை உள்ளூர் நாணய மாற்றுக்காரர்களுக்கு சரக்கு டெலிவரி. மதியம் சாப்பிட மூன்று மணியாகிவிடும். எல்லா நாணயங்களையும் இருப்பில் வைத்துக்கொண்டு தக்கசமயம் பார்த்து கைமாற்றிவிடுவதில் மஜீத் முதலாளி கில்லாடி. படித்தவர் இல்லை. ஆனால் நாணயத்தின் மதிப்பையும், ஏற்ற இறக்கங்களையும் கணிப்பதில் வல்லவர். எல்லாம் நாகூர் பெரிய எஜமானோட பார்வை என தவறாமல் உண்டியலில் இரண்டு வெள்ளி போட்டுவிடுவார். கிடைக்கும் லாபத்தில் செலவுகளைச் சுருக்கிக்கொண்டு ஊரில் சொத்து வாங்கிப் போடுவார்.
நெகரா பேங்ல வெள்ளியில்லனாலும் மஜீத்திடம் வெள்ளி
யிருக்கும் என்பது ஆர்கேட் வியாபாரிகளிடையே புழங்கும் பேச்சு வழக்கு. கொஞ்சம் கருமியே தவிர, மனிதர் ரொம்ப நாணயமானவர். காலை இரண்டு ரொட்டித் துண்டு- 11 மணிக்கு மைலோ த்ரி இன் ஒன், மதியம் வெள்ளைச்சோறு ரெண்டு காய்கறி, இரவு இரண்டு சப்பாத்தி என சிக்கனமாக வாழ்பவர். கடையில் யாரேனும் நெய்சோறு இறைச்சி வாங்கி சாப்பிட்டால் கூட, "கட்டுசட்டா சம்பாதிச்சு சொத்து சேர்க்கணும்டா.. சம்பளத்தை திண்டழிச்சா பின்னாடி கஷ்டம்..." என கத்திக்கொண்டே இருப்பார்.
இந்த நேரத்தில்தான் நிஜாமிற்கு கல்யாண வரன் வந்தது. கருப்புகேசம் திரண்டு கிடக்கும் புருவங்கள் இரண்டும் சேர்ந்திருக்கும். கொத்து கொத்தாய் நெற்றியில் வழிந்து விழும்முடியை கோதிவிட்டு அவன் வியாபாரம் செய்யும் அழகு, பார்ப்பதற்கு ஒரு சினிமா நாயகனுக்குரிய எல்லா முகலட்சணங்களும் அவனுக்கு இருந்தது.
ஆர்கேட்டிற்கு சரக்கு வாங்கவரும் இன்னொரு வியாபாரி சாகுல் அமீது மாமா தன்னுடைய மகளுடன் ஒருமுறை கடைக்கு வந்தார். எல்லாம் கைகூடி வர, மஜீத் முதலாளியே முன்நின்று நிஜாம் - நஃபிசா திருமணத்தை நடத்திவைத்தார். தனியாக தொழில் வைக்கப் போகிறேன் என நிஜாம் லைசன்சோடு வந்து நிற்க அவரே இந்த கவுண்டரையும் பிடித்துக்கொடுத்தார்.
"கடனுக்கு யாவாரம் பண்ணாதே... அப்படியே பண்ணுனாலும் ஒருநாள்தான் கடனுக்கு கெடு.உட்கார்ந்து கடன் கொடுத்தா அதை அலஞ்சு வாங்கணும். எதையும் ரொக்க யாவாரமா பண்ணு. என்னட்ட காலையில சரக்கு எடுத்துக்க. ஆனா ராத்திரி எட்டுக்குள்ள செட்டில் பண்ணிடு," என கட்டளை கள், அறிவுரையோடு, "இவனையும் கூட வச்சுக்கோ நல்லா தொழில் தெரிஞ்சவன்," என்று அப்பாஸையும் அனுப்பிவைத்தார்.
கடை ஆரம்பித்ததும் மஜீத் முதலாளி முதல் வியாபாரமாக பிஸ்மி சொல்லி நூறுவெள்ளி கொடுத்தார். நிஜாம் அதை சென்டிமென்டாக இன்னும் கடையில் வைத்திருக்கிறான்.
ஆரம்பத்தில் 50க்கும் 60க்கும் பிசிறு தட்டி, பின்பு 500 வெள்ளியை ஒருவழியாக மூன்று மாதங்களில் தாண்டியது. வியாபாரத்தை கூட்டும் உத்திகளில் அப்பாஸ், வெளிநாட்டினர் அதிகமாக புழங்கும் கடைத்தொகுகளில் பழைய கூட்டாளி ஷோரூம் சேல்ஸ்பெர்சன்களை சந்தித்தான். நல்ல விலை தருவதாக உறுதியளித்தான்.
சந்தை விலையைவிட இரண்டு- மூணு காசு உடைத்து கொடுத்தான். வியாபாரம் வளர்ந்தது. கொரோனாவிற்கு முன்பு வரை நாளொன்றுக்கு சராசரி 1,000 வெள்ளி, மலேசியா டிடியில் மட்டும் சுளையாக 200 வெள்ளி லாபம் நிற்கும். மஜீத் முதலாளி காலத்திற்கு பிறகு அவருடைய மகன்கள் பொறுப்பில் நிறுவனங்கள் கைமாறியது. நாணயம் தவற மார்க்கெட்டில் பெயர் கெட்டுப்போனது.
"மஜீத்" கடையை பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு பாகப்பிரிவினையில் அவரையே ஊருக்கு அனுப்பிவிட்டார்கள்.
"மஜீத் முதலாளி மாதிரி அவரோட பிள்ளைங்க கிடையாது," என அவர்கள் காதுபடவே ஆர்கேட் வியாபாரிகள் பேச ஆரம்பித்தார்கள். அவ்வப்போது வந்துபோகும் முதலாளியை எங்காவது கண்டால் பழைய உற்சாகத்தையும் பேச்சையும் கேட்க முடிவதில்லை.
"முடிஞ்சா புண்ணியத்த சேருங்கடா. காசு பணத்தை சேர்த்து வச்சா புள்ளைங்க அடிச்சுக்கு வானுங்க," என புலம்பிக்கொண்டிருந்தார்.
இரவு எட்டு மணி. கடையடைக்க தயாரானபோது "சாப்பிடுவோமா?" என்றான் நிஜாம்.
இதோ வந்துட்டேன் நிஜாம் என விளக்குகளை அணைத்துவிட்டு பக்கவாட்டு கதவையும் அடைத்தான். ஒன்றுக்கு இரண்டுமுறை கதவை சரிபார்த்துவிட்டு இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
பூரி கிழங்கும் தோசையும் ஆர்டர் செய்துவிட்டு இருவரும் மேசையில் அமர்ந்திருந்தார்கள். எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் தொண்டையைக் கனை த்துக்கொண்டிருந்தான் நிஜாம்.
"என்ன யோசிக்கிற நிஜாம்?"
தன் கையிலிருந்த கவரை அப்பாஸை நோக்கி நகர்த்தினான். ஊருக்கு டிக்கெட் புக்காகியிருந்தது. பின்பு கையிலிருந்த பையையும் தள்ளினான்.
"இதுல வீட்டுக்கு கொஞ்சம் சாமான் இருக்கு. உம்மாவ கேட்டதா சொல்லு."
புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான் அப்பாஸ்.
"நிலைமை உனக்கு புரியும்ணு நினைக்கிறேன். நானும் பல்ல கடிக்கிறேன்.. இதுக்குமேல இத நம்பி காலம் தள்ளமுடியாது."
"....."
"இந்த வாரம் மட்டும் மூணு பேர் லைசன்ஸ் வேணாம்னு திருப்பிக் கொடுத்துட்டாங்க. இந்த மாசத்துல மட்டும் இதோட எட்டு பேர். நிலைமை சரியானதும் சொல்லியனுப்புறேன்." என எழுந்து போய்விட்டான் நிஜாம். தோசையும் பூரியும் மேசையில் கேட்பாரற்றுகாய்ந்து கிடந்தது.
"நிஜாம்... நான் காதர் மாமா பேசுறேன்"
"சொல்லுங்க மாமா..." மறுமுனையில் மஜீத் முதலாளியின் மானேஜர் காதர்.
"உங்களுக்கு அடிச்சுப் பார்த்தேன்.. லைன் போகல.. என்ன அவசரம் மாப்ளே.. காலையில அப்பாஸ் வந்து 7,000 வெள்ளி பாக்கிய வாங்கிட்டு போயிட்டார்."
நிஜாமிற்கு ஒரு கணம் தலைசுற்றியது. சில வினாடிகளுக்கு பிறகு சுதாரித்துக்கொண்டு, நான் தான் மாமா வாங்கிக்க சொன்னேன்," என போனை அணைத்து விட்டு நஃபிசாவிடம் கொடுத்தான்.
நஃபிசா வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருந்தாள்.
"படிச்சு படிச்சு சொன்னேனே வைக்கிற இடத்துல வைக்கணும். நல்ல ஆளுன்னு நெனச்சேன். இப்படி நல்லபாம்புக்கு முட்டை உடைச்சி வளர்த்திருக்கோம்."
"பரவாயில்லை விடு..."
"பிளாசா வாடகை பாக்கிய எப்படி செட்டில் பண்ணபோறீங்க... என்னமோ கையில காசு இருக்குற மாதிரி பரவாயில்லைன்றீங்க..."
"கொஞ்சம் அனத்தாம இருக்கியா!"
கையில் இருந்த கடை கணக்குப் புத்தகத்தை சோபாவில் வீசி எறிந்துவிட்டு போனாள். கையில் தலைவைத்தவாறே சோபாவில் சாய்ந்தான். அப்பாஸின் பழைய நினைவுகள் புகைபோல சூழ்ந்துகொண்டிருந்தது. சோயா நடுவில் சொருகிகிடந்த போன் இடுப்பைக் குத்திக்கொண்டிருந்தது. நகர்ந்து அமர்ந்தான். மீண்டும் அசெளகர்யமாகவே இருந்தது. இருட்டுக்குள் கைவிட்டு துலாவி போனை
எடுத்துப் பார்த்தான். "Your account XXXX has been credited with 7000.00" வாசகம் திரையில் மின்னியது.