நதி மூலம் போல
வேலியின் முடிவுகள்
பாவாடை சட்டையும்
ஒற்றைப் பின்னலும்
அசட்டுச் சிரிப்பும் அணிந்திருந்த
இரண்டு அகதிக் கன்றுக்குட்டிகள்
ஒரு கன்றுக்குட்டி
எங்கோ கண்டுபிடித்த செவ்வக அட்டைக் கோத்தாவை
கீழ்த் துவாரம் வழியே சொருக
மறு குட்டி
அதன் மறுபக்கத்தை
லாகவமாகப் பிடித்துக்கொண்டது
பக்கத்தில் கிடந்த பாறைத்துண்டை
நடுக்கல்லாகப் பொருத்தி
அட்டைக் கோத்தாவை
அதன் மேலே அமர்த்தி
சீ-சா கட்டிக்கொண்டன
ஒன்றன் பின் ஒன்றாக
இல்லாத எடை கொண்டு
சீ-சாவில் ஒரு பொழுது ஊனவும்
மறு பொழுதே
அந்தர சிகரத்தைத் தொட
தாவிய பின் சரிந்தும்
இதயங்கள் துள்ளத் துள்ள விளையாடின
சீ-சாவும் அவற்றுடன்
சாய்ந்து சாய்ந்து விளையாடியது
நீதித் தராசின் சாயல் தெரிந்தது.
- தங்கமுனை விருது 2019 போட்டியில், இரண்டாம் பரிசு பெற்ற கவிதை