சிறுகதை
கி. சுப்பிரமணியம்
"என்ன வேலைன்னு சொன்ன?"
மரகதம் துருவிக் கேட்டாள்.
"அது ஒரு ஆலை அம்மா. ஏதோ எண்ணெய் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்புறாங்கலாம். அங்குதான் சின்ன வேலை. ஒரு நாளுக்கு நாலு வெள்ளி சம்பளம்" மெல்லப் பதில் சொன்னான் முத்து.
"பதினேழு வயசுல எதுக்குடா இந்த ஆலையில போய் கஷ்டப்படணும். சும்மா வீட்டுல இருடா"!
தாய் மனம் அப்படி அவளைப் பேசச் சொன்னது.
'மூணு மாசம்தான் அம்மா, அப்புறம் படிக்கப் போயிருவேன்' எனச் சமாதானம் சொன்னான் முத்து.
1967ல் பத்தாம் ஆண்டு படிப்பை முடித்தபோது, சிறிது காலம் வேலை அனுபவம் பெற வேண்டி, முத்து வேலைக்குப்போக ஆவல் கொண்டான். அதற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில்தான், சிங்கப்பூரின் ஜூரோங் தொழிற்பேட்டை வேகமாய் வளர்ச்சி காண ஆரம்பித்தது.
தொழிற்பேட்டையில் முதலீடு செய்பவர்கள், ஐந்தாண்டிற்குப் பல வரிச் சலுகைகள் பெறுவர். அதனால் ஆவலுடன் பல பன்னாட்டு முதலாளிகள் பெருமளவு முதலீடு செய்யத் தொடங்கினர். வேலை வாய்ப்புகள் குவிந்துகிடந்தன.
ஆகையால் முத்துவுக்கும் வேலை தேடுவதில் சிரமம் ஏற்படவில்லை. கூடவே அவன் வயதொத்த நண்பன் ஹரியையும் அவனுடன் சேர்த்துக் கொண்டு, தொழிற்பேட்டையைச் சுற்றி வந்தான்.
ஒரு குறிப்பிட்ட ஆலையில், பணியாளர் தேவை என்ற விளம்பரத்தைக் கண்டான். அங்கு சென்று கேட்ட போது, உடனடியாக வேலை கிடைத்தது.
அது ஒரு நடுத்தர அளவிலான ஆலை. முதல் நாள் வேலை தொடங்கும் முன் அதன் மேற்பார்வையாளர் இரத்தினம், அந்த ஆலையைப் பற்றியும், அதன் வணிக நோக்கம் பற்றியும் விரிவாக விளக்கினார். அப்போது அங்கு இருவர் மட்டுமே நேரடி வேலையில் இருந்தனர். ஒருவர் அறுபது வயது மதிக்கத்தக்க நாகலிங்கம் என்பவர். மற்றொருவர் இருபத்தைந்து வயது, மலேசிய இளைஞர் முனியாண்டி. ஆக அன்றாட முக்கிய வேலைகளை நாகலிங்கமும் முனியாண்டியும் செய்துவந்தனர். இப்பொழுது முத்து, ஹரி, இருவரையும் சேர்த்து நான்கு பணியாளர்கள்!
அப்படி என்னதான் இந்த ஆலையில் உற்பத்தி செய்கின்றார்கள்?
இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளின் ஒதுக்கப்பட்ட எலும்பு, கொழுப்பு, மிச்சம் மீதி எல்லாவற்றையும் அங்கிருந்து கொண்டுவந்து, அதை ஆலையின் இராட்சத இயந்திர வாய்க்குள் கொட்டி, அரைத்து, எண்ணெய்யாக உருக்கி, பெரிய டிராம்களில் நிரப்பி, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஆலையின் முக்கிய ஏற்றுமதி!
உருக்கப்பட்ட மாமிச எச்சத்தையும் எலும்பு உதிரிகளையும் மாவாக அரைத்துக் கோழிகளுக்கு உணவாகத் தயாரித்தனர். அப்பொழுது ஜூரோங் தொழிற்பேட்டையில் ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றை இறைச்சிக்காக வெட்டும் இடமான 'அபெட்டோர்' ஒன்று கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று, சந்தைக்குச் செல்லத் தடைசெய்யப்பட்ட மாமிசங்கள், குளிரூட்டப்பட்ட அறையில் தொங்கவிடப்பட்டிருக்கும். அவற்றையும், இந்த ஆலைக்குக் குறைந்த விலைக்கு விற்பார்கள். அங்கும் சென்று, மிகவும் கனமான அந்த இறைச்சித்துண்டங்களை எடுத்து வருவார்கள். போதாதற்கு, அந்த அறுக்கப்பட்ட விலங்குகளின் இரத்தமும், தனித்தனியாக இரு பெரிய உயரமான தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அதையும் பெரிய டிரம்மில் நிரப்பி ஆலைக்கு எடுத்துச் செல்வார்கள்! இந்த இரத்தத்தையும் உறையவைத்து அரைத்து மாவாக்கிக் கோழிகளுக்கான உயர்ரக உணவெனத் தயாரித்து வணிகம் செய்வர்!
மேற்பார்வையாளர் ரத்தினம் அவர்கள் இருவரும் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி விளக்கிவிட்டு, நாகலிங்கத்தைக் கொண்டு புதியவர்களைக் கண்காணிக்கச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். நாகலிங்கம் மிகவும் குறைவாகவே பேசுவார். புதியவர்கள் என்பதால் முத்து, ஹரி, இருவர் மீதும் பரிவுகாட்டி வேலையைக் கற்றுக்கொடுத்தார். அங்கு பல பெரிய இயந்திரங்கள் புழக்கத்தில் இருந்தன. எல்லா இயந்திரங்களின் பயன்பாட்டையும் மேலோட்டமாகச் சொல்லித்தந்தார்.
வந்ததும் வராததுமாக, இவர்களின் துரதிர்ஷ்டமோ என்னவோ, தரையிலிருந்து முதல் மாடிக்கு, பாரம் தூக்கும் இயந்திரம் சில நாளுக்கு முன் பழுதானது. அதை பழுது பார்ப்பதற்கு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிவைத்தனர். ஆகையால், தோளில் சாக்கைப் போட்டு, கனமான இறைச்சித் துண்டங்களைத் தூக்கியபடி பதினைந்து படிகள் ஏறி, முதல் மாடிக்கு வந்தடைந்து, அரைக்கும் இயந்திர வாயில் கொட்ட வேண்டும்.
இதில் பயப்படும் நிலை என்னவென்றால், அந்தப் பெரிய நான்கு அடி அகலமான இயந்திர வாய்க்குச் சுற்றிலும் தடுப்பு இல்லை. தோலில் சுமந்துவரும் இறைச்சித் துண்டங்களைக் கொட்டும்போது, வழுக்கினால் அவ்வளவுதான்! கொட்டியவனும் உள்ளே விழுந்து அரைபட வேண்டியதுதான்!
நாகலிங்கம் சொல்ல வேண்டியதைச் சுருங்கச் சொல்வார். காலை 7 மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை, இருவரும் செய்ய வேண்டிய வேலைகளை விளக்கினார்.
முதல் வேலையாகச் சந்தைகளுக்குச் சென்று மாமிச மிச்சங்களை எடுத்து வரவேண்டும் என்றார். ஹரியும் முத்துவும் அதற்கு ஆயத்தமானார்கள்.
இந்தச் சந்தைகளுக்குச் செல்வதற்காக ஒரு நடுத்தர அளவிலான லாரியும் அதற்கு ஓர் ஓட்டுநரும் இருந்தார். ஓட்டுநரின் பெயர் மொக்தார். இவர் ஓர் இந்தோனீசிய வம்சாவளியைச் சேர்ந்தவர். நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவர். தோற்றத்தில் ஒல்லியாகவும், கொஞ்சம் குள்ளமாகவும் இருப்பார். வெறும் ஓட்டுநராக மட்டுமின்றி கூட வந்த முத்துக்கும் ஹரிக்கும் கொஞ்சம் உதவியாகவும் இருந்தார்.
லாரியில், முத்துவும் ஹரியும் ஏறிக்கொள்ள, அது, கேலாங் சிராய் சந்தைக்கு முதலில் சென்றது. அங்கு மாமிச மிச்சங்களை எடுத்துக்கொண்டு, அதேபோல் வேறு சில சந்தைகளுக்கும் சென்றுவிட்டுக் கடைசியாக அன்றைய பழைய தேக்கா சந்தைக்கு வந்து சேர்வதற்குள், பிற்பகல் ஒரு மணியைத் தாண்டிவிட்டது.
"நாம் நினைத்ததைவிட வேலை கடுமையாக இருக்கிறதே," என்று ஹரி முத்துவிடம் ஆங்கிலத்தில் சொல்ல, அதைக் கேட்ட மொக்தார் வேகமாய்ச் சிரித்தான்!
"இதற்கே வேலை கடினம் என்று முதல் நாளிலேயே சொல்கிறீர்களே. உண்மையில் கடினமான வேலையை நீங்கள் சந்திக்கவில்லை. உங்கள் போதாத நேரம், பாரம் தூக்கிப் பழுதாகிவிட்டது. இவ்வளவு மாமிச மலையையும், நீங்கள் இருவரும், முனியாண்டியுடன் சேர்ந்து தூக்கிப் படிகள் ஏறி இயந்திரத்தின் வாய்க்குள் கொட்ட வேண்டும். அப்பொழுது தெரியும் உங்களுக்கு," என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.
முத்துவும் ஹரியும் ஒருவரை ஒருவர் மிரண்டபடி பார்த்துக்கொண்டனர். மதியம் ஒன்றைத் தாண்டியதால் இருவருக்கும் நல்ல பசி. காலையில் வேலைக்கு வரும்போது வாங்கிவந்த புரோட்டா பொட்டலத்தைப் பிரித்து இருவரும் உண்ண ஆரம்பித்தார்கள்.
லாரி மீண்டும் அவர்களை ஏற்றிக்கொண்டு ஜூரோங் ஆலையை வந்தடைந்ததும், கொண்டுவந்த மாமிசக் குவியல்களைப் படியேறி, அரைக்கும் இயந்திரத்தின் வாயில் கொட்ட வேண்டும் என்று ரத்தினம் சொன்னவுடன் இருவரும் வேலையைத் துவங்க ஆரம்பித்தனர். நல்ல வேலையாக முனியாண்டியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டது கொஞ்சம் மனதிற்கு ஆறுதலைத் தந்தது. ஒரு பழைய சாக்கைத் தோளில் போட்டபின், நாகலிங்கம் மாமிசப் பாரத்தை அதன் மீது தூக்கி வைப்பார். கொஞ்சம் வயதானவர் என்பதால் அவருக்கு இந்தப் படியேறும் சிரமத்தை முன்னிட்டு இந்தப் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. எத்தனை முறை ஏறிக் கொட்டினாலும் மாமிசக் குவியல் குறைந்ததாகவே தெரியவில்லை. முனியாண்டி உடல் வலுவிலும் வயதிலும் கூடுதலானவர் என்பதால், அவரால் இதைக் கொஞ்சம் சிரமமின்றிச் செய்ய முடிந்தது. எப்படியோ மாலை நான்கு மணி நெருங்கும்போது ஒருவாறாக இந்தக் கடின வேலை முடிந்தது. சற்று ஓய்வெடுக்க முத்துவும் ஹரியும் ஒரு ஓரமாக அமர்ந்தனர். நாகலிங்கமும் அருகில் வந்து அமர்ந்தார்.
"வேலை கஷ்டமா இருக்குது இல்லையா," என ஒரு தந்தையின் பரிவுடன் கேட்டார்.
"ஆம். இருந்தாலும் பரவால்ல," என்று புன்னகைத்தவாறு பதில் சொன்னான் முத்து.
சிறிது ஓய்விற்குப் பின் குளியல் அறையில், ஒன்றுக்கு மூன்று முறை சோப்பு போட்டுக் குளித்துவிட்டு வந்தனர் முத்துவும் ஹரியும்.
"இந்த வேலையை மூன்று மாதம் நம்மாள தாக்குப்பிடிக்க முடியாது. படி ஏறி இறங்கி, காலும் தோள் பட்டையும் இப்படி நம்மால" என ஹரி நொந்துகொண்டான். புத்தகக் கட்டை தூக்கியவனுக்கு இந்த மாமிசக் குவியலைத் தூக்குவதில் சிரமம் ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை தான்!
"ஆலையின் பாரம் தூக்கும் இயந்திரம் பழுதானதால்தான் நம்மை அவசரமாக வேலைக்கு எடுத்துக்கொண்டனர் என்றே தெரிகிறது," என்று தொடர்ந்தான் ஹரி.
'இது முதல் நாள் என்பதால் நமக்குச் சிரமமாகத் தெரிகிறது. போகப்போகப் பழகிவிடும்' என்று ஆறுதல் கூறினான் முத்து.
என்னதான் ஹரிக்குச் சமாதானம் சொன்னாலும் முத்துவும் தனக்குள் அந்த வேலைச் சிரமத்தை உணர முடிந்தது.
வீட்டிற்குச் சென்றவுடன், அவன் தாயார் கேட்ட முதல் கேள்வி.. "என்னடா ஒரு மாதிரியான வாடை அடிக்கிது," என்றதுதான். முத்து ஒன்றும் சொல்லாது மீண்டும் ஒருமுறை குளிக்கப் போய்விட்டான்.
*
மறுநாள் முத்துவும் ஹரியும் ஆலை நிர்வாகி இரத்தினம் இருவரையும் 'அபெட்டோர்' சென்று குளிரூட்டிய அறையில் தொங்கும் மாட்டின் பெரும் பாகங்களை எடுத்துவரச் சொன்னர். முனியாண்டியை வேறு வேலைக்கு அனுப்பினார்.
மொக்தார் லாரியை ஓட்ட, முத்துவும் ஹரியும் லாரியின் பின்பக்கம் அமர்ந்துகொண்டு பயணம் செய்தனர். 'அபெட்டோர்' வெகு தூரம் இல்லை. ஒரு ஏழு நிமிடத்தில் அங்கு சென்றடைந்தனர்.
'அபெட்டோர்' உள்ளே கடுங் குளிர். அங்கு தக்க குளிர் தாங்கும் ஆடையின்றி வெகுநேரம் நிற்க முடியாது. உள்ளே ராட்சசன் போல மாடுகளின் அறுக்கப்பட்ட பெரும் பகுதிகள் வலுவான இரும்பு கொக்கிகளில் தொங்கிக்கொண்டிருந்தன. அங்கு பணியில் இருந்தவர், சொல்லிக்கொடுத்தபடி, மாமிசத்தை, ஏதோ காதலன் காதலியைத் தழுவுவதுபோல் முத்துவும் ஹரியும் தழுவிக்கொள்ள, மேல் பகுதியை அங்கு பணி செய்தவன் அறுத்தான். நல்ல வேளையாகக் கூடவே ஹரியும் இருந்ததால், இருவரும் அதைத் தாங்கியபடி லாரி வரை தூக்கியும், இழுத்தும் கொண்டுவந்து சேர்த்தனர்.
இதுபோல் மேலும் மூன்று மாமிச மலைகளைத் தூக்கி இழுத்து வந்ததால் இரண்டு இளைஞர்களும் களைத்து விட்டனர். எல்லாவற்றையும் லாரியில் ஏற்றி ஆலைக்குச் சென்று அடைந்தபோது மதிய நேரம் நெருங்கியது.
கை கால்களைக் கழுவியபின் கொண்டுவந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்தான் முத்து. வேலை ஏதுமின்றி வீட்டில் தாய் சமைத்துப் போடும் போது, எவ்வளவுதான் சுவையான உணவென்ற போதிலும், அதை ரசித்து, ருசித்து உண்டது குறைவு. பசியும் அதிகம் இருப்பதில்லை. ஆனால், இப்படி உழைத்த களைப்பில் உண்பது, சாதாரண உணவகத்தில் வாங்கி வந்த உணவென்றபோதும், அமுதம் போல் சுவைத்தது அவனுக்கு! கடின உடல் உழைப்பால் தளர்ந்து வீடு வரும் தன் தந்தையை நினைத்துப் பார்த்தான்.
இந்தச் சிறு வயதில், அதுவும் இரண்டு நாள் வேலையிலேயே இவ்வளவு சோர்வு தெரிகிறதே, காலமெல்லாம் வெயிலில் வேலை செய்யும் தன் தந்தையைப் பற்றியும், சாலை செப்பனிடும் தொழிலாளிகளைப் பற்றியும் அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது. சரியாகக் கல்வி கற்காது போனால் இப்படித்தான் குறைவான ஊதியத்தில் உடல் நோக உழைத்து வாழவேண்டும் என்பதை நினைத்தாலே அவனுக்குப் பயம் வந்தது. கல்வியின் அருமையை நன்றாக உணர ஆரம்பித்தான்.
மறுநாள் காலை எழும்போது தான் முத்துவுக்கு உடல் சோர்வை உணர முடிந்தது.
ஆலையில் அன்று ரத்தினம், இருவரையும் மீண்டும் 'அபெட்டோருக்கு அனுப்பி வைத்தார் இரத்தினம். சிறிது நேரத்தில் மொக்தாருடன் லாரியில் அபெட்டோருக்கு விரைந்தனர்.
அங்கு ஒரு பத்தடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த இரு கோபுரத்தின் உச்சியில் கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டிருந்தன ஒன்றில் பன்றி இரத்தமும், மற்றொன்றில் மாட்டின் இரத்தமும் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அவை யாவும் காலையில் அறுக்கப்பட்ட விலங்குகளின் சேமிப்பு! ஒவ்வொரு தொட்டியும் நாலரை அடி உயரம் இருந்தது! கோபுரத்தின் அடியில், குழாய் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. ஆகவே, லாரியில் இருந்த டிரம்களை இறக்கி அதன் கீழ் வைத்து, குழாய் மூலம் இரத்தத்தை நிரப்ப ஆரம்பித்தனர்.
இரத்தம் வேகமாக டிரமில், நிரம்ப ஆரம்பித்தது. அவ்வப்போது அது நின்றுவிடும். அதற்குக் காரணம், உறைந்த இரத்தம் இறுக்கமாகி, தொட்டியில் அடைத்துக்கொள்ளும்.
மொக்தாருக்கு இதுபற்றி தெரியும். உடனே ஹரியைப் பார்த்து, மேலே தொட்டிக்குள் இறங்கி, அடைப்பை விலக்குமாறு சொன்னான்!
வந்ததே ஹரிக்குக் கோபம்!
"என்னையா அந்த இரத்தத் தொட்டிக்குள் இறங்கச் சொல்கிறாய். இடுப்பு வரைக்கும் இரத்தம் இருக்கும் போல் தெரிகிறது. என்னால் முடியாது," என்றான்.
இதற்கிடையில் முத்து அவனுக்குக் கிடைத்த நீண்ட கம்பியைக்கொண்டு குழாய் வாய்வழிக் குத்திப்பார்த்தான். அடைப்பு விலகியதாகத் தெரியவில்லை.
மொக்தார் தலையை முடியாது என்ற பாவனையில் அசைத்தான்.
மீண்டும் மொக்தார் பேச ஆரம்பித்தான்,
'அடைப்பு தொட்டிக்குள்தான். அதைச் சரி செய்தால்தான் இரத்தம் சீராக ஓடும். வேறு வழி இல்லை," என்றான்!
"எந்த ஒரு மாற்று ஆடை ஏதும் இன்றி எப்படி இறங்குவது? நாலு வெள்ளி சம்பளத்திற்கு இதையெல்லாம் செய்ய வேண்டுமா," என்று கோபமாக கத்தினான் ஹரி.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு புன்னகைத்தபடி லாரியில் சாய்ந்தபடி நின்றான் மொக்தார்.
உண்மையில் மொக்தாரை குறை சொல்வதற்கில்லை. அவன் ஓட்டுநர் வேலை செய்பவன். அவனிடம் கோபத்தைக் காட்டி என்ன செய்ய?
நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டான் முத்து. ஹரியின் பொறுமையின்மை மற்றும் முன்கோபம் பற்றியும் அவன் நன்கு அறிவான்.
உடனே மொக்தாரை நோக்கி ஏதேனும் பழைய மாற்று அரைக்கால் சட்டை லாரியில் இருக்குமா எனக் கேட்க, கொஞ்ச நேரச் சிந்தனைக்குப்பின், ஓட்டுநர் அமரும் பகுதியைக் கிண்டி, அரைக்கால் சட்டை என்ற ஒரு கந்தலைக் கொண்டுவந்தான்.
வேறு எதையும் சிந்திக்காமல் நேரே அங்குள்ள குளியலறைக்குச் சென்று, தான் அணிந்திருந்த ஆடையைக் கலைத்து, இந்தக் கந்தல் கால்சட்டையை அணிந்து வந்தான் முத்து. இதைக் கண்டவுடன் மொக்தாருக்கு சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஹரிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாய் இருந்தான். முத்து மெல்ல இதற்காகச் செய்து வைக்கப்பட்டிருந்த கயிற்றுப்படியின் மேலே ஏறி தொட்டிக்குள் இறங்கினான். தொடைவரை இரத்தம்! ரத்தத்தின் உச்சத் துர்நாற்றம் மற்றொரு புறம்! அவனுக்கு அருவருப்பும், கால் வழுக்கி விழுந்துவிடுவோமோ என்ற பயமும் கவ்விக்கொண்டது! எப்படியோ இரத்தம் தொட்டியை விட்டுக் கீழே இறங்கும் நடுப் பகுதிக்கு வந்து, பாதத்தால் தடவிப் பார்த்தான். ஏதோ தடிப்பாக, கொழகொழ வென்று அடைத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான். அது நிச்சயமாக இரத்தம் உறைந்த நிலையென அவனுக்கு மனதில்பட்டது. மேலிருந்தவாறே மொக்தாருக்கு நிலைமையை எடுத்துச் சொன்னான்.
மொக்தருக்கு இதுபற்றிய முன்னனுபவம் இருந்ததால், குனிந்து கையால் எடுத்து அதை அகற்றிவிடு என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
முத்து அப்படியே கொஞ்சம் உறைந்து நின்றுவிட்டான்.
சரி, இரத்த ஆற்றில் கால் வைத்தாகி விட்டது. இனி கைவைப்பதில் என்ன வேண்டிக் கிடக்கிறது, என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, கையைவிட்டு அந்த அடைப்பை நீக்கினான்.
கீழே இரத்தம் டிராமிற்குள் பாய்வதாக ஹரி சொன்னவுடன் கால்களில் இருந்தும் கைகளில் இருந்தும் இரத்தம் சிந்தி வழியும் வண்ணம், மெதுவாகக் கீழே இறங்கினான் முத்து.
முத்து அந்தக் கோலத்தில் இறங்குவதைப் பார்த்த ஹரிக்குக் கோபமும் அனுதாபமும் ஒருங்கே ஏற்பட்டது. கீழே இறங்கிய முத்து பக்கத்தில் இருந்த தண்ணீர் குழாயடியில் இரத்தம் போகும்வரை கைகால்களைக் கழுவிவிட்டு அருகில் இருந்த குளியல் அறைக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டு வந்தான்.
இப்பொழுது இரத்தம் நிரப்பப்பட்ட டிரம்களை லாரியில் ஏற்ற வேண்டும். அது எளிதான காரியமல்ல. மொக்தார் இதற்காகவே இரண்டு வலுவான ஐந்தடிப் பலகையை லாரியின் பின்புறத்தில் வைத்திருப்பான். அதை லாரியின் கடைசிப் பகுதியில் சாய்த்து வைத்து டிரம்மை பலகையின் மீது ஏற்றி உருட்டி, லாரிக்குள் தள்ள வேண்டும் என்றான்!
இரு டிரம்களும், நிறைந்த நிலையில் இருந்தன. இதை எப்படி உருட்டி லாரிக்குள் ஏற்றுவது என்று நினைத்து நின்றுகொண்டிருந்த இருவரையும் உற்சாகப்படுத்தினான் மொக்தார்.
"உங்களால் முடியும். நானும் கொஞ்சம் உதவுகிறேன்," என்றான்!
முத்து லேசாகப் புன்முறுவல் செய்துவிட்டு ஹரியுடன் சேர்ந்து தள்ள ஆரம்பித்தான். டிராம் கொஞ்சம்கூட அசைந்தபாடில்லை. தொடர்ந்து, பலம்கொண்ட மட்டும் தள்ளினர். மொக்தார் ஒரு நீண்ட இரும்புத்தடி கொண்டு டிராம்மின் நடுப்பகுதியில் வைத்து நெம்பினான்.
சிறிதுநேர முயற்சிக்குப்பின் டிராம் மெல்ல மேல் நோக்கி நகரத் தொடங்கியது. பலம்கொண்ட மட்டும் இரண்டு டிரம்களையும் எப்படியோ லாரிக்குள் தள்ளிவிட்டு, ஓர் ஓரமாக அமர்ந்து கொஞ்சம் களைப்பாறினர்.
நான்கு வெள்ளிச் சம்பளத்துக்காக இப்படியா நாம் கஷ்டப்படணும்? என்று முனக ஹரி ஆரம்பித்தான்.
முத்து அமைதியாக இருந்தான்.
சிறிது நேர ஓய்விற்குப்பின், லாரியில் ஏறி, டிரம்களைச் சரியாத வண்ணம் பிடித்தபடி நின்றிட, மொக்தார் லாரியை ஆலையை நோக்கி ஓட்ட ஆரம்பித்தான். அந்தக் களைப்பிலும் மொக்தார் பாடிக்கொண்டே ஓட்டுவது, லாரியின் பின்புறம் நின்று கொண்டிருக்கும் இருவருக்கும் லேசாகக் கேட்டது. ஆலை வந்தடைந்ததும், டிரம்களை இறக்கி அவற்றை ஆலைக்குள் உருட்டி வந்து அரைக்கும் இயந்திரத்திற்குள் கொட்ட வேண்டும். இங்கும் படாத பாடுபட்டனர். இயந்திரம் மூன்றடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்ததால் இங்கேயும் பலகை போட்டுத் தள்ள வேண்டியிருந்தது. வேலையை முடித்த களைப்பில் ஓர் ஓரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.
ஹரியின் முனகலுக்கும் வெறுப்புக்கும் இடையிலும் நாள்கள் வேகமாக நகர்ந்தன. போகப்போக வேலையின் சுமை, பழக்கப்பட ஆரம்பித்தது. போதாததற்கு மொக்தாரின் நகைச்சுவைப் பேச்சும் சிரிப்பும், ஹரியைக்கூட உற்சாகப்படுத்தியது. இப்பொழுதெல்லாம் மொக்தாரை கிண்டல் செய்து, அவன் வேடிக்கை சிரிப்பைக்கேட்டு, அவனும் சிரிக்கத்தொடங்கினான். ஒரு மாதம் எப்படியோ ஓடி முடிந்தது.
ஹரி ஏதோ முடிவிற்கு வந்தவனாக, "இந்த இரண்டாம் மாதம் முடிந்தவுடன் வேலையிலிருந்து நின்றுவிடப் போகிறேன்," என்று சொன்னான். படிப்புக்குத் தயாராக வேண்டும் என்றான். நண்பன் விலகப் போகிறான் என்றவுடன், முத்துவும் விலகுவதாக ஹரியிடமும் சொன்னான். "நாம் நாளை திரு இரத்தினம் அவர்களிடம் முறைப்படி விலகல் கடிதத்தைக் கொடுத்து விடுவோம்," என்றான் முத்து.
*
மறுநாள் இரெத்தினத்திடம், விலகல் கடிதத்தை இருவரும் கொடுக்கும்போது அவர் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. "சரி, தொடர்ந்து இந்த மாதம் முழுதும் எப்போதும் போல் வேலை செய்யுங்கள்," என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். இருவரும் விலகப்போகும் செய்தியை நாகலிங்கத்திடமும் முனியாண்டியிடமும் சொன்னான் முத்து. இதை அவர்களும் எதிர்பார்த்தது தான். மொக்தார் மட்டும் இதைக் கேட்டுக் கொஞ்சம் வருத்தப்பட்டான்.
நாட்கள் உருண்டோடி மாதத்தின் கடைசி நாள் மாலையும் வந்தது. முத்துவும் ஹரியும் விடைபெறும் நேரம். மொக்தார் உணர்ச்சிபூர்வமாக இருவரின் கைகளைக் குலுக்கிய வண்ணம் 'ஐ விஷ் யூ லக்' என ஆங்கிலத்தில் வாழ்த்தினான். எப்பொழுதும், எதற்கும் சிரிக்கும் அவன் முகத்தில் இப்பொழுது அதன் சாயல் தென்படவில்லை. அமைதியாக வேலையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நாகலிங்கம், முத்துவின் அருகில் வந்தார்.
"இந்த இரண்டு மாதம் உங்கள் இருவரின் கடின உழைப்பைப் பார்த்தேன். இது உங்களுக்கு நல்லதொரு அனுபவம். உங்கள் படிப்பைத் தொடருங்கள். எதிர்காலத்தில் நல்ல வேலையில் நீங்கள் அமரலாம். எங்கள் தலைமுறையோடு இந்தக் கஷ்டம் போகட்டும். என் மனைவி மக்களைத் தமிழகத்தில் விட்டுவிட்டு, இங்கு பல காலம் மாடாய் உழைக்கிறேன்.
முறையாகப் படித்திருந்தால் இந்த அவலநிலை வந்திருக்காது. நன்றாகப் படித்து முன்னேறுங்கள்," என்று தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்ததோடு ஆசியும் வழங்கி வழியனுப்பி வைத்தார்.
ஆலையை விட்டு ஹரியுடன் சற்றுதூரம் நடந்துசென்ற முத்து, மீண்டும் ஒருமுறை ஆலையைத் திரும்பிப் பார்த்தான். அந்த ஆலை ஒரு பல்கலைக் கழகம் போல் மனதில் தோற்றம் தந்தது!

