சிவகுமார் கே.பி
"வணக்கம் ஆசிரியை" என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து சொல்லியபோது, மாணவர்களின் பார்வை தமிழ் ஆசிரியை கையில் வைத்திருந்த சிவப்பு வண்ண விளம்பரத் தட்டியின் மீது விழுந்தது.
"என்ன? எல்லாரும் ரொம்ப ஆவலா இருக்கீங்க போலிருக்கு?" என்று ஓர் ஆசிரியருக்கே உரிய தொனியில் தமிழ் ஆசிரியை உரக்கச் சொன்னார்.
அடுத்த சில நிமிடங்களில் நிகழ்ச்சி நிரலைப் படித்துவிட்டு, "அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். பாரதியார் விழாவில் ஒரு போட்டி அறிவிச்சுருக்காங்க. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக பேச்சுப் போட்டி. தலைப்பு 'பாரதி கண்ட புதுமைப்பெண்'," என்று ஆசிரியை சொல்லி முடித்ததும் வகுப்பில் ஒரே அமைதி நிலவியது.
"என்ன இவ்வளோ அமைதி? போட்டினு சொன்னதும் ஆவல் எல்லாம் போயிடுச்சா? தைரியமா கலந்துக்கணும்" என்று சொல்லிக்கொண்டே மீனாவின் பக்கம் திரும்பினார்.
மீனா, அந்த பள்ளியின் சிறந்த பேச்சாளர். அவள் ஏறாத மேடை இல்லை, வாங்காத பரிசுகள் இல்லை. அப்படிப்பட்ட மீனா ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்ததைக் கண்டு தமிழ் ஆசிரியைக்கு ஆச்சரியம் கலந்த பயம் உண்டாயிற்று.
"மீனா, உன்னைத்தான் நம்பி இருக்கேன். தலைமை ஆசிரியர் கிட்ட கண்டிப்பா நம்ம மீனா கலந்துக்குவான்னு சொல்லிட்டேன். என்னை கைவிட்டுடாதேம்மா!!" என்று ஆசிரியை மீனாவிடம் கெஞ்சுவதைக்கேட்டு, சக மாணவர்கள் சிரிப்பில் மூழ்கினர்.
இதில் மீனாவின் அருகில் இருந்த அவள் தோழி, "சரி சின்னம்மானு சொல்லிடு," என்று சிரித்துக்கொண்டே முணுமுணுத்தாள்.
மீனாவும், எல்லோரும் தன்னைப் பார்த்து ஏதோ சிரிப்பது கண்டு, ஆசிரியையிடம் மெல்ல தலை அசைத்தாள்.
பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் புனைபெயர் வைப்பதுண்டு. தமிழ் ஆசிரியைக்கு 'சின்னம்மா' என்றும், தலைமை ஆசிரியருக்கு 'ஹிட்லர்' என்றும் அவர்கள் மறைமுகமாக புனைபெயர் வைத்து அவர்களுக்கிடையே பேசுவதுண்டு.
அன்று மதியம், போட்டியில் கலந்துகொள்ள பதிவுசெய்ய மீனாவும் அவள் தோழிகளும் பள்ளி அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கே 'ஹிட்லர்' அவர்களை வரவேற்றார்.
"என்ன மீனா, இந்த ஆண்டும் போட்டியில நீ கலந்துக்கப்போறேன்னு கேள்விப்பட்டேன். மகிழ்ச்சி. போட்டி கடுமையா இருக்கும். நம்ம பள்ளி பெயரை உயர்த்தணும். ஒரு புகழ்பெற்ற பெண்மணியைப் பற்றி பேசணும். சரியா?" என்று 'ஹிட்லர்' சொல்லிக்கொண்டே அங்கிருந்த அலுவலகப் பணியாளரைப் பார்த்து "அந்த போட்டி விண்ணப்பப் படிவத்தை எடுத்து மீனாகிட்ட கொடுங்க," என்றார்.
அந்த அலுவலகப் பெண்மணிக்கு மாணவர்கள் வைத்திருந்த பெயர் "இருமல் பாட்டி".
இப்போதும் அவர் இருமிக்கொண்டேவிண்ணப்பப் படிவத்தை எடுத்து மீனாவிடம் கொடுத்தார். அவள் தோழிகள் அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டனர்.
மீனா அமைதியாக அந்தப் படிவத்தை பணியாளரிடம் வாங்கிக்கொண்டு "நன்றி" என்று மெல்ல அவர் காதுபட மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அடுத்த சில நாட்களில் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒரே கேள்வி 'யாரைப் பற்றி பேசலாம்?' என்பதுதான்.
தலைமை ஆசிரியர் ஒரு பிரபலமான பெண்மணியைப் பற்றிப் பேசு என்று சொல்லிவிட்டார். தற்காலத்தில் வாழும் வெற்றி கண்ட பெண்களைப் பற்றிப் பேசுவதா, அல்லது சரித்திரம் படைத்த நாயகிகளைப் பற்றிப் பேசுவதா என்று குழப்பம்.
அவளுக்குக் குழப்பம் வரும்போதெல்லாம் அவள் அணுகுவது அவள் அப்பாவைத்தான்.
அப்பா எப்போதும்போல் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தார்.
"அப்பா, இந்த ஆண்டு பாரதியார் விழாவில நான் பேசப்போறேன். இதுல எல்லாப் பள்ளி மாணவர்களும் கலந்துக்கப் போறாங்க. பேசவேண்டிய தலைப்பு, 'பாரதி கண்ட புதுமைப் பெண்'" என்று மீனா தலைப்பைச் சொன்னதும், அப்பா அவளை நிமிர்ந்து பார்த்தார்.
"நல்ல தலைப்பு. யாரைப் பற்றி பேசப்போற?" என்று அவள் அப்பாவிடம் கேட்க நினைத்த கேள்வியை, அவர் அவளிடமே திருப்பி கேட்டதும், அவள் மேலும் குழப்பினார்.
"அப்பா! கொஞ்சம் உதவி பண்ணுங்களேன். யாரைப் பற்றிப் பேசலாம்? அன்னை தெரசா, மலாலா யூசுப்சாய், இந்திரா நூயி இவங்களப் பற்றி பேசலாமா?"
அப்பா பதில் சொல்லாமல் இருந்தது, அவர் மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது என்பதற்கு அர்த்தம். சற்று யோசனைக்குப் பிறகு "அவங்களப் பற்றி நிறைய பேர் பேசுவாங்க. நாம கொஞ்சம் மாத்தி யோசிக்கணும்னு நினைக்கிறேன்," என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் மீண்டும் வேலைக்குள் மூழ்கிவிட்டார்.
'மாத்தி யோசிக்கணும்னு மட்டும் சொல்லிட்டா போதுமா. கொஞ்சம் துப்புக் குடுக்கவேண்டாமா?' என்று அவளுக்கு அப்பாவின் மேல் அன்பு கலந்த கோபம் வந்தது.
அம்மா சொல்ற மாதிரி, 'இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான். நேரடியா பதில் எதுவும் சொல்லவே மாட்டார்,' என்று நினைத்தாள். பின்பு சற்று நேர யோசனைக்குப்பிறகு, '...ம் வாழ்க்கையில் எதுவுமே நேரடியா எளிதில் கிடைக்கறதில்லை. அப்பா சொல்லறமாதிரி கொஞ்சம் மாத்தி யோசிச்சாதான் கிடைக்கும்போல," என்று மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள் மீனா.
*
போட்டி நாள் வந்தது.
அரங்கில் நல்ல கூட்டம்.
சிங்கப்பூரின் முக்கிய பள்ளிகளின் பேச்சாளர்கள் வந்திருந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அவர்களின் உதவியாளர்கள், போட்டியில் கலந்துகொள்ளும் பேச்சாளர்களின் பெற்றோர்கள் என்று அரங்கமே நிரம்பி வழிந்தது.
பேச்சாளர்கள் ஒரு தனி அறையில் உட்கார்ந்தது அவர்களுக்கு இடையே பேசிக்கொண்டிருந்தனர்.
"ஏய், நீ யாரைப் பற்றி பேசப்போற?" என்ற ஒரே கேள்விதான் அங்கே வலம் வந்தது.
ஒரு சிலர் அவள் நினைத்தது போல், சரித்திர நாயகிகள், பெண் பிரதமர்கள், கார்ப்பரேட் நாயகிகள் என்று பெயர்களைச் சொன்னார்கள்.
ஒரு சிலர் திரைப்பட நடிகைகளின் பெயரைக்கூட சொன்னார்கள்.
எல்லோரும் அவர்கள் யாரைப் பற்றிப் பேசப்போகிறார்கள் என்று சொன்ன பிறகு, கடைசியில் மீனா பக்கம் திரும்பினர்.
"மீனா, நீ யாரை பற்றி பேசப்போற?" என்ற கேள்விக்கு, மீனா ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.
அருகில் இருந்த மாணவி, மீனா கையில் வைத்திருந்த காகிதத்தை எட்டிப்பார்த்தாள். காகிதத்தில், 'சாரதா - சொல்லப்படாத கதை' என்று எழுதியிருந்தது.
"ஏய்... இவ யாரோ சாரதா பற்றி பேசப்போறாளாம்" என்று எல்லோரும் கேட்கும்படி சொன்னாள். "யாரும்மா இந்த சாரதா? நாங்க கேள்விப்பட்டதே இல்லையே?" என்று நமட்டுச் சிரிப்போடு அவளை அனைவரும் கேட்டனர். அதே நேரத்தில், ஒரு சிலர் 'கூகலை' அணுகினர்.
இந்தத் தலைமுறையினருக்கு எந்தக் கேள்வியாக இருந்தாலும் பதில் தெரிய அணுகும் ஒரே இடம் 'கூகல்'. இணையத்தளத்தில், எந்த சாரதா பற்றியும் வராதது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
*
பேச்சுப்போட்டி ஆரம்பித்தது. பல மாணவர்கள் பேசியபிறகு, மீனாவின் முறை வந்தது.
மேடை ஏறும் எல்லோருக்கும் கிடைக்கும் வரவேற்பு, கைதட்டல்கள் ஓய்ந்த பிறகு அரங்கத்தில் அமைதியும் எதிர்பார்ப்பும் நிலவியது. மீனா மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தாள்.
"சென்ற நூற்றாண்டின் எண்பதுகளை, பொதுவாக 'கோல்டன் எயிட்டிஸ்' என்று ஆங்கிலத்தில் கூறுவது வழக்கம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. வர்த்தகம், விஞ்ஞானம், விளையாட்டு என்று பல துறைகள், மனித வரலாற்றில் அதுவரை காணாத முன்னேற்றப்பாதையில் வேகமாக வளர்ந்துகொண்டிருந்தன.
ஜப்பான், சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள் அமெரிக்காவின் இருநூறு ஆண்டுகால வளர்ச்சிக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. ஏன்? நம்ம சிங்கப்பூர் கூட உலக அளவில் ஒரு வளராத நாட்டிலிருந்து வளர்ந்த நாடக மாறிக்கொண்டிருந்த காலம். நாட்டின் வளர்ச்சியோடு, தங்கள் வாழ்க்கை முறையும் வளர்ச்சியின் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு நாள்..அந்த நாள், சாரதா என்று நம்மை போன்ற சாமானிய மனிதர்களுக்கு இடையே வாழ்ந்துகொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு, வாழ்க்கை முற்றுப்புள்ளியாக மாறும் சவால் விட்டது.
மீனா தன் பேச்சில் இப்போது விட்ட இடைவெளியில் அரங்கத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. யார் இந்த சாரதா என்ற கேள்வி பலர் மனதில் எழ தொடங்கியது.
"சாரதா, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவில் பிறந்தவள். பெண் கல்வி, பெண் சுதந்திரம் போன்ற சமுதாய மாற்றங்கள் நிகழாத காலம் அது. அவள் பிறந்த நாள் முதல், காலம் அவளின் வாழ்க்கையோடு எப்போதும் விளையாடிக்கொண்டே இருந்தது.
சிறு வயதில் தந்தையை இழந்தாள். குடும்பச் சூழ்நிலையால் தன் படிப்பை உயர்நிலை படிப்போடு நிறுத்திவிட்டாள். பிறகு, அந்தக் காலத்தில் எளிய குடும்பங்களில் பிறந்த எல்லா பெண்களையும் போல் சிறுவயதிலேயே திருமணம் என்ற காலத்தின் கட்டாயத்திற்கு அடிபணிந்து, அறுபதுகளில் இந்தியாவிலிருந்து பல கனவுகளோடு சிங்கப்பூரில் குடிபுகுந்த குடும்பங்களில் அவளும் அவள் கணவனும் அடங்குவர்.
கணவன், இரு குழந்தைகள் என்று வாழ்க்கை துளிர்விட்டு கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் காலம் அவள் வாழ்க்கையோடு விளையாடத் தொடங்கியது.
எண்பதுகளில் ஒருநாள், அந்த நாள். அவள் தன் கணவனை இழந்தாள். எங்கோ பிறந்து, வேறு எங்கோ வாழ வந்தவள்.
இப்போது யாரும் இல்லாத ஒரு தனி மரமாக நின்றாள். தன் இரு பிள்ளைகளின் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்கப்போகிறோம் என்று செய்வதறியாமல் திகைத்தாள்.
அடுப்பூதும் பெண்ணிற்குக் கல்வி எதற்கு என்ற காலத்தில் பிறந்ததால், தன் காலில் தனியாக நிற்கும் அளவிற்கு படிப்பும் இல்லை, காப்பீடும் இல்லை!
இத்தோடு தம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைக்கும் பல பெண்களுக்கு நடுவே, அதே முற்றுப்புள்ளியை ஒரு காற்புள்ளியாக மாற்ற நினைத்தாள் சாரதா.
ஒரு சின்ன மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்ந்தாள். அந்தக் கடையில் கிடைத்த வருமானத்தில் வாழத்தான் முடியுமே தவிர, வளர முடியாது. தன் இரு பிள்ளைகளின் உயர் படிப்பிற்கும் எதிர்காலத்திற்கும் இன்னும் பணம் தேவைப்பட்டது.
'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ் வையம் தழைக்குமாம்' என்ற பாரதியின் கனவை பூர்த்திசெய்வதுபோல், தனது கல்வித்தகுதியை உயர்த்திக்கொண்டு ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டாள். பிறகு ஒரு பள்ளியில் வேலைக்கும் சேர்த்தாள். ஒவ்வொரு பொழுதும் சவாலாகவே இருந்தது.
பகலில் பள்ளியிலும், இரவில் மருந்துக் கடையில் வேலையுமாய், தன் குடும்பத்துக்காகவே உழைத்தாள்.
இப்படியே பல வருடங்கள் கழிந்தது. மெல்ல காலம் அவள் கனவைப் பூர்த்தி செய்யத் தொடங்கியது. இன்று சாரதாவின் குடும்பம் சீரும் சிறப்புமாக சிங்கப்பூரில் வாழ்வதற்கு அவளின் உழைப்பும் தியாகமும்தான் அடித்தளம்," என்று மீனா நீண்ட நேரம் பேசிய பிறகு சற்று நீர் பருகினாள்.
மீனாவின் கதைபோல் வர்ணித்த இந்தப் பேச்சுக்கு, ஆவலும், அமைதியும் தான் அரங்கத்தின் பதிலாக இருந்தது.
"பாரதி கண்ட புதுமை பெண் சமுதாயத்தில் எல்லோரும் அறிந்த முகமாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. முற்றுப்புள்ளியை காற்புள்ளியாக மாற்றி, பல குடும்பங்களை தங்கள் தியாகத்தாலும், உழைப்பாலும் முன்னுக்கு கொண்டுவரும் ஒவ்வொரு சாரதாவும், பாரதி கண்ட புதுமைப்பெண் தான் என்பது என் கருத்து.
இப்படி நம்மிடையே, நம் வீடுகளில், நம் சமுதாயத்தில் பல சாரதாக்கள் இருக்கிறார்கள்.
ஏன்? எங்கள் வீட்டிலும், பள்ளியிலும்கூட ஒரு சாரதா உண்டு," என்று அவள் சொன்னபோது அரங்கத்தில் எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.
"எங்கள் பள்ளியில் எல்லோரும் மறைமுகமாகப் பேசும் 'இருமல் பாட்டி'தான், நான் இன்று பேசிய அந்த சாரதா. சாரதா, நிஜ வாழ்வில் என்னுடைய பாட்டியும் கூட. அவரின் முகத்தையும் கதையையும் அறிய, இன்று பலர் 'கூகலை' தேட முயன்றனர். ஆனால் அவர் முகமும், கதையும் ஒரு நாள் 'கூகலில்' வரவேண்டும் என்பதற்காகத்தான், நான் அவரின் வாழ்க்கையில் சொல்லப்படாத கதையை இன்று உங்களிடையே சொன்னேன். 'இருமல் பாட்டி' என்று எல்லோராலும் அழைக்கப்படும் என் பாட்டி, என்னைப் பொறுத்தவரையில் ஒரு 'இரும்பு' பாட்டி'.
அவரும் பாரதி கண்ட புதுமைப் பெண்தான்" என்று பெருமிதத்தோடு சொல்லி மீனா தன் பேச்சை முடித்தாள்.
இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மீனாவின் தலைமை ஆசிரியர் 'ஹிட்லர்' கண்களில்கூட நீர் பெருகியது. ஆனால் அவர் அருகே இருந்த அந்த 'இரும்புப் பாட்டி' சாரதாவின் கண்களில் நீர் வரவில்லை. அவர் பாரதி கண்ட புதுமை பெண். அழமாட்டாள்.

