சிறுகதை
சித அருணாசலம்
'திண்டுக்கல்.. செம்பட்டி.. ஒட்டன்சத்திரம்.. தாராபுரம்.. பல்லடம்.. கோயம்புத்தூர்...' என்று கத்திக்கொண்டே தனது பேருந்துக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார் அரசு போக்குவரத்துக் கழகத்தின் நடத்துனர். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆரவாரமாய் இருந்தது.
நான் இன்னும் வண்டிய எடுக்கவேயில்லை அதுக்குள்ள என்ன கூவுற என்று முன்னால் இருந்த வண்டியின் ஓட்டுநர் முறைக்க, சரிண்ணே, சரி கிளம்புங்க நேரமாச்சுன்னு சமாதானப்படுத்தி விட்டு திரும்பவும், 'திண்டுக்கல்.. செம்பட்டி.. ஒட்டன்சத்திரம்.. தாராபுரம்.. பல்லடம்.. கோயம்புத்தூர்...'ன்னு சுருதி சுத்தமா கூவிக்கொண்டிருந்தார்.
சோழவந்தான் ஏறிக்கலாமான்னு கேட்டு வந்த பயணியைக் கடிந்து கொண்டிருந்தார் நடத்துனர். டவுன் பஸ்ஸுன்னு நினைச்சுட்டானுங்கன்னு புலம்பிவிட்டுத் தொடர்ந்தார் தனது கூவுதலை.
கோயம்புத்தூர் செல்கிற அந்த வண்டியைத் தேடிக் கண்டுபிடித்து வந்து ஏறினார் ஹேமலதா, தனது இரண்டு குழந்தைகளுடன்.
ஒவ்வொரு ஊரின் பெயராக அவர் சொல்லியபோது, அந்த மாமா என்ன சொல்றாரு என்று கேட்க ஆரம்பித்தான் அம்மாவிடம், மூத்தவன் கிரிதரன். சும்மா தொண தொணன்னு அனத்தாத, பஸ்ஸுல உக்காந்ததும் உன் கேள்வியை கேளுன்னு அவனை அடக்கினாள் ஹேமா. அவனுக்கு வயது ஏழு . சின்னவள் மோனிகா இரண்டு வயது.
பேருந்தில் ஏறும்போதே நடத்துனரிடம், சார் டிக்கெட் என கேக்க, தன்னை சார் என்று ஹேமா அழைத்ததும், குழந்தையுடன் இருந்ததும், அவருக்குப் பெரிய கரிசனத்தை ஏற்படுத்தி விட்டது. ஏறுங்கம்மா, அப்புறம் வாங்கிக்கலாம் என்று சொல்லிக்கொண்டே, ஹேமலதாவிற்கு பெட்டிகளைத் தூக்கிக் கொடுத்து உதவி செய்தார்.
பொதுவாகவே ஹேமா மிகவும் அமைதியானவர். அதிர்ந்து பேசாதவர். எல்லோரையும் மதிக்கும் குணம் அதிகமாகவே கொண்டிருந்தார். சென்ற இடமெல்லாம் பிரச்னைகளை அணுகவிடாமல் ஓரங்கட்டி விடுவார். இப்படிப்பட்ட குணங்கள் அடிப்படையாகவே இருந்ததால், தன்னிச்சையாகவே இதுபோன்று பேசக்கூடியவர்.
பிறந்த இரண்டு வருடத்திலேயே பெற்றோரோடு சிங்கப்பூருக்கு வந்தவன் கிரிதரன். தமிழில் புலவர் பட்டமும், முதுகலைப் பட்டமும் படித்திருந்த அவனது தந்தை சுந்தரேசனுக்கு எளிதில் சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. குடும்பத்தோடு சிங்கப்பூர் வந்துவிட்டார். சிங்கையில் பிறந்தவள் தான் மோனிகா. இதற்கு முன்பு இந்தியாவுக்கு ஒவ்வொரு வருடமும் வந்திருந்தாலும், இந்த முறை பல விஷயங்கள் அவளுக்குப் புதிதாக இருந்தது.
கிளம்புகிற நேரம் வந்ததால், ஓட்டுனரும், நடத்துனரும் வண்டியில் ஏறினார்கள். தனது இருக்கையில் உக்கார்ந்ததுமே, ஓட்டுநர் சிடுசிடுன்னு முகத்தை வச்சிக்கிட்டு, யாரும்மா இங்க கூடைய வச்சிருக்கது என்று கோபத்துடன் சத்தமாகக் கேட்டார். ஒரு பெரிய கூடை என்ஜினுக்குப் பக்கத்தில் இருந்தது.
பக்கத்துல இருந்த பாட்டி, "ஏம்பா, நான் தான் வச்சேன்"ன்னு பதில் சொல்ல, நல்லா வச்ச போ, இங்கன வச்சீன்னா, நான் எங்க கியர் போடுறதாம்?
ஏன் கூடைல போடு, காலியாத் தான இருக்குன்னு வெகுளியா பதில் சொல்லுச்சு பாட்டி.
ஓட்டுனருக்கு ஆத்திரம், கிழவி நக்கலா சொல்லுதா, இல்லை தெரியாம உளருதான்னு குழம்பி,
ஏ! பெரியம்மா, இது என்ன கீரையா கூடைல போடா, கியர் தெரியும்ல. தள்ளி வை கூடையைன்னு அடுப்புல போட்ட உப்பா வெடிச்சார்.
பக்கத்துல இருந்தவுகளெல்லாம் சிரிச்சு பாட்டிக்கு விளக்கிச் சொல்ல, கூடை நகர்ந்தது கியர் போட வசதியாக. கூடவே அந்த வெள்ளந்தி மனதின் வெளிப்படையாக காவிக் கறை படிந்த பற்கள் சிரித்தது.
அட நான் ஒரு வெவரங்கெட்ட சிறுக்கி என்று முனகியது. பற்களில் காவி இருந்தாலும் சொற்களில் சூது வாது தெரியாத கிழவி.
அடுத்த வரிசைல இருந்து இதையெல்லாம் பாத்துக்கிட்டிருந்த கிரிதரனுக்கு சிரிப்பை அடக்க முடியலை. அம்மாவைக் கூப்பிட்டு, இந்தப் பாட்டிக்கு கியர்னா என்னன்னே தெரியலம்மான்னு சிரிச்சான்.
ஒரு அதட்டு போட்டாள், ஹேமா. பெரியவங்களைப் பார்த்து அப்படியெல்லாம் கேலி பேசக் கூடாது என்றாள். மற்றவர்களின் இயலாமையையோ, அறியாமையையோ சிறிதளவு கூடத் தொட்டுப் பார்க்கக் கூடாது என்பது அவளது உறுதியான எண்ணம். உயர்ந்தது என்று கூடச் சொல்லலாம்.
வண்டி கிளம்பியதிலிருந்து ஒரே சீராக நல்ல வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அனுபவம் வாய்ந்த ஓட்டுநராக இருந்ததால், அந்த 215 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கான பக்குவம் இருக்கிற நம்பிக்கையை பயணிகளிடத்திலே, கிளம்பிய சில மணி நேரத்திலேயே பதித்திருந்தார்.
அன்றைக்கு கதிரவன் தனது கரங்களை சுருக்கிக் கொண்டதால், வானம் மப்பும் மந்தாரமாகவும் இருந்தது.
மழை வந்துவிடுமோ என்கிற கவலை பேருந்தில் இருந்த அனைவருக்குமே இருந்ததுபோன்ற முக பாவனையை ஹேமலதா கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஜன்னல் ஓரத்தில் இருந்த கிரிதரனுக்கு மழை வந்துவிட்டால், வேடிக்கை பாக்க முடியாதே என்ற கவலை.
சமயநல்லூரைத் தாண்டியதும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளும், தொடர்ந்த தோப்புகளும் மிகவும் ரம்மியமாக இருந்தன. பேருந்தில் போவது பழக்கமில்லை என்றாலும், அவனுக்குப் பிடித்திருந்தது. உயரமான இடத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பது கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
திண்டுக்கல் தாண்டியதும் தூரத்தில் மலைத்தொடர் தெரிய ஆரம்பித்தது. இவ்வளவு நீளமான மலையெல்லாம் எங்க இருந்து ஆரம்பிக்குது... அம்மாட்ட கேக்கணும். அவனுக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள். முதல்ல சத்தம் போட்டுக்கிட்டே இருக்காரே இவரப் பத்திக் கேக்கணும்னு நினைச்சுக்கிட்டே அம்மா பக்கம் திரும்பினான்.
ஏம்மா, சிங்கப்பூர்ல பஸ்ஸுல டிரைவர் மட்டும் தான இருப்பாரு. இவர் யாரும்மா, ரொம்பப் பேசிட்டே இருக்காரே அப்படின்னு, கேட்டான். ஒரு சில திரைப்படங்கள்ல பார்த்திருந்தாலும், நேரே பார்க்கும்போது கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சு.
அவன் கேள்விக்காக காத்திருந்ததுபோல விளக்க ஆரம்பித்தாள் ஹேமலதா. தம்பி, அவர் தான் கண்டக்டர்.
என்னது கண் டாக்டரம்மா?
கொழுப்புடா உனக்கு, கண்டக்டர் என்று அழுத்திச் சொன்னார்.
தமிழ்ல எப்படிம்மா சொல்றதுன்னு கேட்டான்.
உன் அப்பாவ மாதிரியே இருக்கடான்னு செல்லமா தலைல குட்டி சொன்னாள், தமிழ்ல 'நடத்துனர்'னு சொல்வாங்க'. சற்று விளக்கமாகத் தொடர்ந்தாள்.
இந்த வண்டி கிளம்புறதுல இருந்து, கோயம்புத்தூர் போற வரைக்கும், வழில ஏறுறவங்களுக்கு டிக்கெட், அதாவது பயணச்சீட்டு கொடுக்குறது, அந்தந்த ஊர்ல பயணிகளை இறக்கி விடுறது. டிரைவருக்கு, உனக்குப் பிடிச்ச தமிழ்ல ஓட்டுனருக்கு ஒத்தாசையா வழி பாத்துச் சொல்றது, கணக்குப் பாக்குறது, பயணிகளோட பாதுகாப்பை உறுதி செய்றது. இப்படி ஏகப்பட்ட வேலை அவருக்கு. சில சமயம் பயணிகள் கூட வராம லக்கேஜ், அதாவது, சுமை மட்டும் வரும். அதுக்கு வேண்டிய எல்லாம் இவர் தான் பண்ணுவாரு.
அதெப்படிம்மா ஆளே இல்லாம, பெட்டியெல்லாம் வருமா?
ஆமாடா, யாரவது வந்து வண்டி கிளம்புற இடத்துல ஏத்திவிட்டு, அதுக்கான பணத்தை நடத்துனர் கிட்ட கொடுத்துருவாங்க. இறங்குற இடத்துல ஆள் தயாரா இருப்பாங்க. வந்து வாங்கிட்டு போயிருவாங்க.
வேற யாரவது வந்து வாங்கிட்டா?
அப்படி எல்லாம் வாங்க மாட்டாங்கடா, இன்னொன்னு தெரியுமா, இந்த திரைப்படத்துக்கான படச்சுருள் இருக்கு பாத்தியா, அதை எல்லாம் இந்த நடத்துனர் பேருந்து நிலையத்துல ஆள வச்சு இறக்கி வச்சுருவாரு. அது பாட்டுக்கு இருக்கும். அப்புறமா சம்பந்தப்பட்டவங்க வந்து எடுத்துட்டு போவாங்க. முந்தியெல்லாம் கொரியர் ரொம்ப பிரபலமாகாத சமயத்துல இப்படித் தான் நடக்கும். எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில நடக்கும்டான்னு பெரிய விளக்கத்தைக் கொடுத்தாள் ஹேமா.
செம்பட்டி வந்ததும், பேருந்து நிலையத்திற்குள் வண்டி நுழைந்தது. கொய்யாப்பழத்தையும், பலாச்சுளை வெள்ளரிக்காய்களை கூவி வித்துக் கொண்டிருந்த கூட்டம் பஸ்ஸுக்குள்ளயும் வந்தது. இந்த மாதிரி எல்லாம் சிங்கப்பூர்ல பாக்க முடியாதுல்ல என்று சொன்ன அம்மாவிடம், வாங்கிக் குடும்மா என்று கேட்டான். கொஞ்சம் யோசிச்சு, கொய்யாப்பழம் வாங்கினாள் அப்படியே சாப்பிடப் போனவனை தடுத்து, அவசரக் குடுக்கை, கொஞ்சம் இருன்னு சொல்லிட்டு சுற்று முற்றும் ஆள் இல்லைங்குறத உறுதி செஞ்சுட்டு ஜன்னல் வழியா பழத்தை தண்ணீர் விட்டுக் கழுவினாள்.
பாத்துக்கிட்டே இருந்த கிரி, 'இதையும் சிங்கப்பூர்ல பாக்க முடியாதும்மா' அப்படின்னான் நக்கலா.
முறைச்ச அம்மாவிடம், கியர் பாட்டியை காணும்மா, இறங்கிட்டாங்களோன்னு சொல்லிக் கொண்டே கூடை இருக்கான்னு பாத்தான். அம்மா கூடை இல்லை. பாட்டி இறங்கிருச்சு போல என்றான். பாட்டி இருக்கட்டும், பாப்பா தூங்க ஆரம்பிச்சுட்டா, அவ விழுந்திராமப் புடிச்சுக்கன்னு சொல்லி விட்டு கொய்யாப்பழத்தை நறுக்கி கொடுத்தாள்.
இங்க வண்டி பத்து நிமிஷம் தான் நிக்கும். சாப்பாட்டுக்கு தாராபுரத்துல தான் நிக்கும்னு, வண்டி நின்னவுடனே சொன்னதால சரியா பத்து நிமிடத்துல, ஆள்களை கணக்கு எடுத்து வண்டிய கிளப்ப சொன்னாரு. வண்டி தாராபுரம் நெருங்க சாலைகளின் இருபுறமும் பசுமையின் அளவு குறைந்து கொண்டே வருவதை சிறுவயதாக இருந்தாலும் கிரிக்கு உணர முடிந்தது.
ஏம்மா இப்படின்னு கேக்க, இது வானம் பாத்த பூமிடான்னு புதுசா ஒரு வார்த்தையைப் பிரயோகித்தாள் ஹேமா.
அப்படின்னா என்னம்மா?
அதுவா, இந்தப் பக்கத்துல மழை ரொம்பப் பெய்யாது. எப்படா மழை வரும் அப்படின்னு, இங்க இருக்கவங்க ஆகாயத்த அடிக்கடி பாக்குற நிலமைடா என்றாள்.
இவனது கேள்விகள் தொடர வண்டியும் பல்லடம் தாண்டி சூலூருக்கு வந்து விட்டது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வண்டி நின்றதும், நடத்துனர் தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பி இறக்கும் வேலையில் மும்முரமாயிருந்தார்.
கோயம்புத்தூர் வந்ததும், நானாக வீட்டுக்கு வந்துவிடுவேன், யாரும் கூப்பிட வரவேண்டாம் என்று ஹேமா ஏற்கெனவே சொல்லியிருந்தாள்.
ஹேமாவின் மாமா பெரியவர் மல்லையனுக்கோ காலையில் வண்டி கிளம்பியதும் வந்த தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு மனது எதிலும் ஒட்டவில்லை.
பிள்ளைகள் சூதானம வந்து சேரணுமேன்னு ஒரே கவலையா இருந்தது.
அஞ்சு மணி நேரம் கணக்கு வச்சு சிறிது முன்னாடியே சிங்கநல்லூர் பேருந்து நிலையத்துக்கு வந்து விட்டார், மருமகளையும், பேரப்பிள்ளைகளையும் கூப்பிட. அங்க வந்து சேரும் அரசு பேருந்து எல்லாத்தையும் விடாம போய் நின்னு ஹேமா தெரிகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்களிலேயே அவர்கள் வந்த பேருந்து வந்து சேர்ந்தது.
தனது வயதையும் மறந்து வண்டியின் பின்னே வேகமாகச் சென்றார் பெரியவர். இறங்குனதும், ஹேமான்னு வாஞ்சையோடு அழைக்க, ஏன் மாமா நீங்க அலையிறீங்கன்னு அவள் கேட்டதற்கு சிரிப்பே பதிலாக மோனிகாவை வாங்கிக் கொண்டார்.
மறு கையால் கிரியைப் பிடித்துக்கொண்டார். பிள்ளைகள் மாமாவிடம் இருந்ததால், ஹேமா சுமைகளைச் சேர்த்து எடுத்துக் கொண்டாள். ஏற்கெனவே சொல்லி வைத்திருந்த ஆட்டோ வந்து நின்றது.
ஒன்றும் சொல்லாமல் ஹேமா, மாமாவோடு ஏறிக்கொண்டார். பிள்ளைகள் இருவரது மடியிலும் அமர, இருகூருக்கு வழி சொல்லி விட்டு, ஹேமாவிடம் கேட்டார், ஏம்மா, இப்படிக் கஷ்டப்படுற.
ஒரு கார் எடுத்துக்கலாம்ல, இல்லை சுந்தரேசன் வரும்போது இப்படி வரலாம்ல என்று அக்கறையோடு கேட்டார்.
அவங்களும் அப்படித்தான் மாமா சொன்னங்க, ஆனா நான் தான் இந்த முடிவெடுத்தேன்னு சொன்னாள். சொல்லிவிட்டுத் தொடர்ந்தாள்.
பிள்ளைங்க வாழ்க்கைல எல்லாத்தையும் பாக்கணும் மாமா. சிரமம்னா என்னன்னு உணர்றதோட அத நேரடியா அனுபவிக்கணும். அம்மா வீட்டுல இருந்து ஒரு கார் எடுத்து சௌரியமா வந்துரலாம். பிறந்ததில் இருந்து எல்லா வசதிகளோடு வளர்ந்து வர்ற இவங்க எதிர்காலத்துல ஒரு சின்ன பிரச்சினையைக் கூட சகிச்சுக்க முடியாமப் போயிருவாங்க.
அது மட்டும் இல்ல, இந்த சமூகம் எப்படி இருக்கு, அதுல மக்களெல்லாம் எந்த நிலமைல இருக்காங்க அப்படின்னு நேரடியா அவங்க பாக்கணும், கத கேக்குற மாதிரி தெரிஞ்சுக்கக் கூடாது.
இந்த சமுதாயத்துக்குத் தன்னோட பங்களிப்பு என்னங்குற எண்ணம் அப்பத் தான் துளிர் விட ஆரம்பிக்கும். பணத்தோட அருமைய உணரணும்.
எல்லா மக்களும் எப்படித் தங்கள் வாழ்க்கையை ஓட்டுறாங்கன்னு பக்கத்துல இருந்து தெரிஞ்சுக்கணும்.
மொத்தத்துல வாழ்க்கையோட மறுபக்கமும் அவர்கள் கண்ணுல படனும் மாமா. இதனால எனக்கும் சிரமம் தான். இந்த சுமையோட பல சுமைகளை நான் சுமக்க வேண்டி இருந்தது. அதிலும் ஒரு சுகம் இருந்தது மாமா என்றாள்.
தன் மகனின் வாழ்வில் இணைந்து செல்கிற இன்னொரு தண்டவாளமாக ஹேமா அவருக்குத் தெரிந்தாள்.