- நா. ஆண்டியப்பன்
எத்தனைதான் சோதனைகள்
எப்படித்தான் வந்தாலும்
எள்ளளவும் தளராதேடா மனிதா
எள்ளளவும் தளராதேடா! (எத்தனை)
உனக்கு மட்டும் சோதனையா?
உள்ளபடி வேதனையா?
உள்ளமதைக் கலங்கவிடாதே மனிதா
உள்ளமதைக் கலங்கவிடாதே! (எத்தனை)
புயல் வந்து சாய்த்தாலும்
பழைய கூடு சிதைந்தாலும
புதிய கூடு கட்டவில்லையா? பறவை
புதிய கூடு கட்டவில்லையா? (எத்தனை)
மீண்டும் மீண்டும் விழுந்தாலும்
மீண்டெழுந்த சிலந்தியதைக்
கண்ட மன்னன் எழுச்சியுற்றானே மனிதா
கண்ட மன்னன் எழுச்சியுற்றானே (எத்தனை)
எழுச்சியுற்ற மன்னன் புரூஸ்
தோல்விகளைப் புறந்தள்ளி
புயலெனப் புறப்பட்டானே மனிதா
புது வரலாறு படைத்திட்டானே! (எத்தனை)
எத்தனைமுறை விழுந்தாலும்
அத்தனைமுறை எழுந்ததை
எப்போதும் மறந்துவிடாதே மனிதா
எப்போதும் மறந்துவிடாதே (எத்தனை)

