சிறுகதை
ஷோபா குமரேசன்
உறக்கத்திலிருந்து கண்விழித்த துளசி, மெதுவாக எழ எத்தனிக்க அருகில் தூங்கிக்கொண்டிருந்த செல்ல மகளின் பிஞ்சுக்கால்கள் தன் மீது கிடப்பதை உணர்ந்து சுதாரித்தாள்.
அவளின் கால்களை மெதுவாக அகற்றி மெத்தையில் வைத்தவள், குழந்தையின் தலைமுடியை ஆசையுடன் கோதிவிட்டாள்.
துளசியின் ஒருவயது மகளான அபி மாநிறத்தை விட சற்று அதிக நிறம், பௌர்ணமி நிலவு போன்ற வட்ட முகம், முகத்தில் சிறிய நெற்றிக்கு அழகு சேர்க்கும் நீளமான மை பொட்டு, குட்டி நாசியுடன் விழிகள் இரண்டும் கொஞ்சம் பெரியதாய் பார்ப்பதற்கு 'துருதுரு' வென இருப்பாள். வலது கையின் கட்டை விரலை சூப்பிக்கொண்டு நித்திரையிலேயே அவ்வப்போது சிரித்த தன் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த துளசி, கடிகாரத்தை நோக்க மணி காலை 6.30ஐ நெருங்கிக்கொண்டிருந்தது.
அலுவலகத்துக்கு கிளம்பணுமே, நேரமாச்சே என அவசரமாக எழுந்தவள், காலைக்கடன்களை முடித்துவிட்டு அடுக்களைக்குள் நுழைய, அங்கு அறுபது வயதைக் கடந்து கொண்டிருக்கும் துளசியின் அம்மா பார்வதி தேநீர் கலக்கிக்கொண்டிருந்தார்.
சூடான தேநீரை துளசியிடம் நீட்டியவர் அபி தூங்கிக்கிட்டு இருக்கும்போதே சீக்கிரம் கிளம்பு துளசி, சமையலை அப்புறம் பாத்துக்கலாம், எனத் துரிதப்படுத்தினார்.
அம்மாவை நிமிர்ந்து பார்த்த துளசியின் மனம் கலங்கியது.
இது என்ன சாபமா? என அவ்வப்போது துளசி யோசித்துப் பார்த்ததுண்டு.
பார்வதி எப்படி தனியாளாய் நின்று துளசியை வளர்த்து ஆளாக்கினாரோ, இப்போது அதேநிலைமையில் துளசியும் இருக்கிறாள்.
யோசனையிலிருந்து மீண்டெழுந்தவள், அம்மா சொல்வதும் சரிதான், அபி எழுந்துவிட்டால் பிறகு கிளம்புவது கடினம்.
மதிய சாப்பாட்டைக்கூட உணவகத்துல பாத்துக்கலாம் என அவசரமாக புறப்பட்டவள் அறைக்குள் இருக்கும் கைப்பையை எடுக்கப்போக, குழந்தை தன் கொலுசு அணிந்த கால்களை உதைத்து துளசியைப் பார்த்து சிரித்தது.
முளைத்து வரும் இரண்டு பால்பற்களைக் காட்டி, இனிய மழலைக் குரலால் சிரிக்கும் மகளை வாரி அணைத்து முத்தமிட்டவள் ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபுறம் இவளை சமாளிச்சு கிளம்பணுமே என்னும் பதற்றத்திற்கு ஆளானாள்.
வேற வழியில்லை, வழக்கம் போல பாத்துக்கலாம்' என தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு அறையிலிருந்து அபியைத் தூக்கிக்கொண்டு வெளியேறினாள் துளசி.
சுட்டி அபியும் தன் அம்மா கிளம்பிவிட்டதை உணர்ந்தாளோ என்னவோ துளசியின் தோள் மீது சாய்ந்துகொண்டு சிணுங்க ஆரம்பித்தாள்.
சத்தம் கேட்டு அடுக்களையில் இருந்து வெளியே வந்த பார்வதிக்கு இந்த காட்சியைக் கண்டதும் தூக்கிவாரிப்போட்டது.
அவரின் நிலைமையை நினைத்தாலும் துளசிக்கு பரிதாபமாகத்தான் இருந்தது. இனிமேல் இவர்பாடு சிரமம்தான்.
பார்வதிக்கு பேத்தி அபி என்றால் கொள்ளைப் பிரியம். அது அவரின் பேச்சிலேயே அடிக்கடி வெளிப்படும்.
'துளசி உன்னை சின்ன வயசுல திரும்பவும் பார்க்கிற மாதிரியே இருக்கு' என பேத்தி செய்யும் ஒவ்வொரு செயலையும் அவ்வப்போது ஒப்பிட்டுக் கூறி சிலாகித்துப் பேசுவார்.
இப்போதுதான் சில காலமாக துளசி வேலைக்குக் கிளம்பும் நேரமான காலை 7.30 மணியளவில் பேத்தியைச் சமாளிக்க முடியாமல் திணறிப்போகிறார்.
அபியை கீழே தூக்கிக்கிட்டுப் போய் குறைந்தது ஒரு மணி நேரமாவது சமாதானப்படுத்த வேண்டும்.
பாவம் அம்மா, மூட்டுவலி வேறு அவரை ஒரு பக்கம் பாடாய்ப்படுத்துகிறது.
நானாவது இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பியிருக்கலாம் என தன்னைத்தானே நொந்து கொண்டவள், போக மறுத்த குழந்தையை வலுக்கட்டாயமாக அம்மாவிடம் கொடுத்துவிட்டு கனத்த இதயத்தோடு வீட்டைவிட்டு வெளியேறினாள்.
மின்தூக்கிக்காக காத்திருந்தவளின் நினைவில் அபியின் மழலை முகம் ஊசலாடியது. காலையில் தினமும் அலுவலகம் கிளம்பும் போது இப்படி தேம்பி தேம்பி அழுகிறாளே?
இது இன்னக்கின்னு இல்லை, கடந்த இரண்டு மாதங்களாக குழந்தைக்கு கொஞ்சம் விவரம் புரிய வந்ததில் இருந்து இப்படித்தான் நடக்கிறது.
ஏற்கெனவே அப்பாவின் அன்பை இழந்து வளரும் குழந்தை, இப்போது தாயின் அரவணைப்புக்காக ஏங்குகிறது.
துளசி வேலைக்கு கிளம்பும் நேரம் ஒவ்வொரு நாளும் சமாளிப்பதற்குள் பெரிய சவாலாகி விடுகிறது. ஆனால் ஒற்றைப் பெற்றோரான துளசியால் பொருளாதாரச் சிக்கல் காரணமாக வேலைக்குச் செல்வதை ஒத்திப்போட முடியவில்லை.
சிந்தித்தவாறே வந்துநின்ற மின்தூக்கிக்குள் நுழைய முற்பட்ட துளசியின் செவிகளில் அபியின் அழுகுரல் கேட்கத் தொடங்கியது.
*
அன்று அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த துளசியின் சிந்தனை முழுவதும் அபியைச் சுற்றியே வலம் வந்தது.
பொதுவாக எல்லா குழந்தைகளுமே பெற்றோர் வேலைக்குச் செல்லும் நேரத்தில் பிரிவைத் தாங்காமல் அழுவது இயற்கையாக இருந்தாலும்கூட, அபியின் செய்கை கொஞ்சம் கூடுதலான கவலையைத் தருவதாக இருந்தது.
அவளின் சத்தமான அழுகுரல் யாருக்காவது இடையூறாக இருக்குமோ என்று பயந்து பார்வதி தினமும் காலை குடியிருப்பின் கீழே உலாவ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
இப்படியே சென்றால் என்ன செய்வது? குழப்பத்தில் ஆழ்ந்திருந்த துளசியை தோழி ரியாஸின் குரல் தட்டியெழுப்பியது.
"என்ன தீவிர யோசனை? உணவகத்துல உங்களைப் பார்க்கலையே, சாப்பிட வரலையா?" என்று கேட்ட ரியாஸிடம் தன் மனப்பாரத்தை முழுவதுமாக இறக்க ஆயத்தமானாள் துளசி.
"ஒரே குழப்பமா இருக்கு ரியாஸ், வரவர அபி நான் அலுவலகம் கிளம்புறப்ப ரொம்ப அழுது அடம் பண்றா.
"அம்மாவுக்கும் சில உடல் உபாதைகள் வேறு இருக்கு. அவுங்களும் சமாளிக்க முடியாமல் சிரமப்படுறாங்க," எனக் கூறி பெருமூச்சுவிட்டாள்.
அவள் கூறுவதை முழுவதுமாக செவியுற்ற ரியாஸ், "கவலைப்படாதீங்க துளசி, இதுபோல் குழந்தைகளைப் பற்றி சில தோழிகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன், இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தானாகவே சரியாகிவிடும்," என்று ஆறுதல் கூறினாள்.
அதைக்கேட்ட துளசி சற்றே நிம்மதி அடைந்தாலும், மருத்துவரிடம் ஏதாவது ஆலோசனை கேட்கலாமா என்று ரியாஸிடம் வினவ, கொஞ்ச நாட்கள் பொறுத்துப் பாக்கலாமே துளசி. வீட்டுல இருக்கும்போது கூடுமானவரை குழந்தையோடையே இருங்க. இரண்டு பேரும் வேலைக்குப் போற வீட்ல பெரும்பாலும் இதே பிரச்சினைதான்.
இது மாதிரி குழந்தையை விட்டுட்டு வரும்போது பெற்றவர்களுக்கும் மனது கலங்கும்தான். என்ன செய்யிறது? இந்த ஓட்டமெல்லாம் அவுங்க எதிர்காலத்திற்குத்தானே? என்று சொல்லி ரியாஸ் துளசியைத் தேற்றினாள்.
ஆமாம், சரிதான் ரியாஸ். இந்த வேலையை விட்டுட்டு கொஞ்சநாள் அபிகூடவே இருந்துட்டு பிறகு வேற வேலை தேடிக்கலாமான்னுக் கூட சிலசமயம் யோசிச்சேன்.
ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையில இருக்கிற வேலையை விட்டுட்டா நல்ல வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாயிடும்.
மாதா மாதம் வாங்குற சம்பளத்தில கட்டணங்களைக் கட்டுறதுக்கே பாதி போயிடுது. இதுல வீட்ல மூணு பேரோட தேவைகள் வேறு என துளசியின் புலம்பல் நீண்டுகொண்டே சென்றது.
சரி, முதல்ல போய் சாப்பிட்டு வாங்க, எல்லாம் சீக்கிரமா சரியாயிடும் என்று கூறிய ரியாஸிடம், தனக்குப் பசியில்லை என்று பதிலளித்த துளசி மேலும் நாளைக்குள்ள வேலையை இன்னிக்கே கொஞ்சம் முடிச்சுக்கொடுத்துட்டு மேலதிகாரிகிட்ட நாளைக்கு விடுப்பு கேட்கலாம்னு இருக்கேன் என்று ரியாஸ் விடைபெற்று தன் இருக்கைக்குத் திரும்பினாள்.
*
அன்று மாலை ரயில்வண்டி செங்காங் நிலையத்தில் நின்றதும் கதவருகில் காத்திருந்தவள் நொடியும் தாமதிக்காமல் மின்படிக்கட்டை நோக்கி விரைய, கையிலிருந்த திறன்பேசியில் அம்மாவின் குறுஞ்செய்தி ஒலித்தது.
'சீக்கிரம் வந்துடும்மா, பாப்பா தேட ஆரம்பிச்சுட்டா' குறுஞ்செய்தியை படித்தவாறே ரயில் நிலையத்திலிருந்து அவசரமாக வெளியேறினாள் துளசி.
ஒப்பனை கலைந்த அவளின் முகத்தில், கண்களுக்கு கீழேயுள்ள கருவளையம் மூன்றாம் பிறையாக தோன்ற ஆரம்பித்தது.
மதியம் சாப்பிடாததால் என்னை மறந்துட்டியே துளசி என வயிறு கோபத்தில் உள்ளுக்குள் கதகளி ஆடியது.
தனது ஒரு வயது செல்ல தேவதையின் மழலை முகம் நினைவில் வந்து நிழலாட, அவளின் இளஞ்சிவப்பு நிற பையில் குழந்தைக்கென்று வாங்கிய 'ஒலியெழுப்பும் பொம்மைகள்' ஒன்றோடொன்று உரசி மெல்லிய இசையை எழுப்ப, அது அவளின் வலுவிழந்த காலின் வலியை மறக்கடித்தது.
சற்று நேரத்தில் குடியிருப்பை நெருங்கியவள், விளையாட்டு மைதானத்தில் அவளின் அம்மா, குழந்தையை வண்டியில் வைத்து ஆட்டிக்கொண்டே தனது வயதையொத்த இரு கூட்டாளிகளுடன் உரையாடிக்கொண்டிருப்பதைக் கண்டாள்.
சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தை இந்தக் கூட்டத்தில் கண்கூடாகக் காணலாம்.
துளசிச்செடியின் நறுமணம் காற்றில் கமழ்தலைப்போல, குழந்தை தன் தாய் துளசியின் வாசத்தை நுகர்ந்ததோ என்னவோ சற்றுத் தொலைவில் அவள் வரும்போதே அடையாளம் கண்டு கொண்டது. அவ்வளவுதான் உடனே தன் கை கால்களை ஆட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அப்போதுதான் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த துளசியின் அம்மா திரும்பி என்ன துளசி இன்னைக்கு தாமதம் என்றார்.
காலையில அபி மிகவும் அழுததால் மனதே சரியில்லை என வருந்தியவள், அதனால் கூடுதலான நேரம் வேலை செய்து கொடுத்ததோடு நாளை விடுப்பு சொல்லிட்டு வந்துவிட்டதாக பதிலளித்துவிட்டு கை சுத்திகரிப்பானால் கையைக் கழுவிய பின் குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.
அம்மாவும் தனது கூட்டாளிகளிடம் விடைபெற வீட்டை அடைந்தார்கள்.
மறுநாள் காலை பதினோரு மணியளவில் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, யாரது கடைக்குப் போன அம்மா அதுக்குள்ள திரும்பிட்டாங்களா? என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவள் சற்றே தடுமாறிப்போனாள்.
வெளியே இரண்டு காவல் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். என்ன இது, நம்ப வீட்டுக்கு காவல் அதிகாரி?
'மழையில திடீர்னு முளைக்கிற காளான் மாதிரி பிரச்சினை மட்டும் வாழ்க்கையில புதுசு பதுசா முளைக்கிது' எண்ண அலைகள் உள்ளுக்குள் உறுத்த படபடப்பானாள்.
இந்த நேரம்னு பார்த்து அம்மா வேற கடைக்குப் போயிட்டாங்களே, அவங்க இருந்தாவாவது கொஞ்சம் தைரியமா இருக்கும் என சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே, துளசியின் நிலைமையை உணர்ந்த ஒரு அதிகாரி, சின்ன விசாரணைதான். கவலைப்படாதீங்க என்றார்.
எ... என்னது விசாரணையா என்று கேட்ட துளசியின் வார்த்தைகள் எரிபொருள் இல்லாமல் திக்கித் திணறி நிற்கும் வாகனத்தைப் போல் வெளிவந்தன.
வீட்ல எத்தனை பேர் இருக்கீங்க என அதிகாரி கேட்க அதற்கு துளசி குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கூறினாள்.
அதைக் கேட்ட அதிகாரி அடுத்தது பணிப்பெண் பற்றி விசாரிக்க, துளசி இருபுறமும் தலையசைத்து இல்லையென்றாள்.
அவளால் இன்னும் எதற்கு இந்த விசாரணை என்பதை யூகிக்க முடியவில்லை.
காவல் அதிகாரி திரும்பவும் தொடர்ந்தார். பயப்படுற மாதிரி ஒண்ணுமில்லை.
இந்த வீட்டில் இருந்து தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில இடைவிடாம குழந்தையின் அழுகுரல் கேட்பதாகவும், யாராவது துன்பப்படுத்துறாங்களோன்னு சந்தேகிப்பதாகவும் எங்களுக்குப் புகார் வந்திருக்கு என்று கூறியதும் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றாள் துளசி.
என்னது குழந்தையைத் துன்புறுத்துறோம்னு புகாரா?
"யார் கொடுத்தாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?" என்று கேட்ட துளசியிடம் அதை தங்களால் குறிப்பிட்டுக் கூற இயலாது என மறுத்தனர் அதிகாரிகள்.
பிறகு துளசி அவர்களிடம் தான் தினமும் காலை 7.30 மணியளவில் அலுவலகம் கிளம்பும் போது, பிரிவைத் தாங்க முடியாம தன் குழந்தை அழுவதாகவும், சிறிது நேரத்தில் தன்னுடைய அம்மாவே கீழே தூக்கிட்டுப் போய் அவள் சமாதானமானவுடன் கூட்டிக்கிட்டு வருவார் என்றும் விளக்கமாகக் கூறினாள்.
கேட்ட அதிகாரிகள் துளசியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதாகவும் ஆனால் புகார்னு வந்தா விசாரிக்க வேண்டியது எங்க கடமை என்றும் கூறினர்.
மேலும் அவர்கள் இந்தப் புகார் குறித்து குடும்ப சேவை மையத்துல சொல்லி உதவச் சொல்வதாக கூறியதோடு, அந்த மையத்தை நாளையே தொடர்புகொண்டு பேசுமாறும் அறிவுறுத்தினர். அவர்களின் இணையம் வழி ஆலோசனைகள் துளசிக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறி அதற்கான அட்டையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
இந்த செங்காங் வட்டாரத்தில் அவர்கள் குடிவந்து ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் முடியப்போகிறது.
இங்கு வசிக்கும் எல்லாருமே கிட்டத்தட்ட நன்றாக அறிமுகமானவர்களே! அப்படியிருக்க நம்மிடமே நேரடியாக வந்து புகார் சொல்லியிருக்கலாம். காவல்துறையை அணுகியிருக்க வேண்டியதில்லை. புகாரளித்தது யாராக இருக்கும்? என்ற கேள்விக்கான பதிலைத் தேடி கதவைத் திறந்து வெளித் தாழ்வாரத்திற்கு வந்த துளசி, சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட்டு சத்தம் அதிகமாகக் கேட்க வாய்ப்புகள் உள்ள வீட்டை மனக்கண்ணால் அலசினாள்.
ஒருவேளை பக்கத்து வீட்டுத் தாத்தாவோ? எப்போ குழந்தை கத்தினாலும் வெளியே வந்து எட்டிப்பார்ப்பார் என அம்மா கூறியது நினைவில் வந்தது.
சில சமயம் மிட்டாயைக்கூட குழந்தையிடம் நீட்டி சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போய் திரும்பியிருக்கிறார்.
தாத்தா அவர் வீட்டு பேரக்குழந்தைகளிடம் அதிகமான பாசத்தைக் காட்டுபவராயிற்றே? அவராக இருக்காது.
ம்ம்... அவர் இல்லையென்றால் நேர் கீழ்வீட்டுப் பாட்டி? சன்னல் வழியாக சத்தம் அங்கு அதிகமாகக் கேட்க வாய்ப்புண்டு. ஆனால் அவர் அம்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆயிற்றே, அப்படி ஏதும்னா அம்மாவிடம் வந்து நேரடியாகவே கேட்டிருப்பார்.
பிறகு? அதற்கு பக்கத்து வீட்டு பெண்மணியோ? அவரை அதிகமாக வெளியில் பார்க்க முடியாது. அவருக்கு சத்தமே ஆகாதாம். இதுவும் அம்மா சொன்ன தகவல்தான்.
யோசித்து யோசித்து தலைவலி வந்ததுதான் மிச்சம். சரி, யாராக இருந்தாலும் பரவாயில்லை. குழந்தையை எப்படி சமாளிப்பதுன்னு பார்ப்போம்.
நாளைக்கு மட்டும் விடுப்பு கிடைச்சா அதுக்குள்ள குடும்ப சேவை மையத்தோட பேசிப் பாக்கலாம், ஏதாவது ஆலோசனை தருவாங்க.
ஆனால் இன்னிக்கி வேற விடுப்பு எடுத்தாச்சு. நாளைக்கும் கேட்டா மேலதிகாரி கண்டிப்பா சத்தம் போடுவாரு.
சரி வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி கேட்டு பாக்கலாம்னா அதுக்கும் சரியான காரணம் இல்லேன்னா ஒத்துக்க மாட்டாரு....என்ன சொல்லி விடுப்பு கேட்கலாம்?
அப்போது கூடத்திலிருந்த திறன்பேசி கிணுகிணுத்தது. அருகில் சென்று முகத்திரையைப் பார்த்தவள் அதிர்ந்தாள். என்ன இது, இந்த நேரத்துல மேலதிகாரி கூப்பிடுறாரு?
எல்லா கோப்புகளையும் நேத்தே சரிபாத்துக் கொடுத்துட்டேனே, என்ன பிரச்சினைன்னு தெரியலையே.
எதுவா இருந்தாலும் சரி, பேசிட்டு அப்படியே நாளைக்கும் விடுப்பு கேட்டுப் பார்ப்போமா? என சிந்தித்தபடி அழைப்பை ஏற்றாள். மறுமுனையில் மேலதிகாரி பதற்றத்துடன், துளசி, ரியாஸ் கணவருக்கு இன்று தொற்று உறுதியாயிருக்காம். அதனால விதிமுறைப்படி, ரியாஸோட கடைசி ஒரு வாரத்துல நேரடித் தொடர்பில் இருந்தவங்க எல்லாரும் பத்து நாட்கள் வீட்டிலிருந்து பணி செய்துகொண்டே தங்களைக் கண்காணித்துக் கொள்ளவேண்டும் என்றார்.

