சிறுகதை
கி சுப்பிரமணியம்
பச்சையம்மாளுக்கு எத்தனையோ கவலைகள். ஏழு பிள்ளைகளை வளர்ப்பதிலும் குடும்ப பாரத்தைச் சுமப்பதிலுமே அவளின் கவனம் முழுதும் இருந்தது.
கணவருக்கோ வேலை சரியாக அமையவில்லை. சிறுசிறு வேலைகள் வந்து போகும். எதுவும் நிரந்தரமாக இல்லை.
அறுபதுகளின் ஆரம்ப காலம் சிங்கப்பூர் இப்படித்தான், சிரமங்கள் நிறைந்ததாக இருந்தது.
இருப்பினும் ஒருநாள் நிலைமை மாறுமென்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது.
நாட்டு நடப்பை பற்றி அதிகம் கவலைப்படாத பச்சையம்மாளுக்கும் இந்த நம்பிக்கை இருந்தது.
உழைப்பால் நாடு உயரும் என்று நம்பிய ஆரம்பகால தலைமுறை அது!
எந்த வேலையென்றாலும் தயங்காது ஏற்கும் மனவலிமை பெற்றவளாக இருந்தாள் பச்சையம்மாள்.
வீட்டில் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இரவெல்லாம் சிந்திப்பாள்.
இந்த சிரமத்திற்கும் கவலைகளுக்கு இடையிலும் ஒவ்வொரு சனிக்கிழமை இரவிலும் சினிமா பார்ப்பதை விடமாட்டாள்.
கூடவே தூக்கக் கலக்கத்தில் இருக்கும் தன் பத்து வயது மகனையும் அழைத்துக்கொண்டு இரண்டு கல் தொலைவில் இருக்கும் திரையரங்கிற்கு ஓட்டமும் நடையுமாக பறப்பாள். அங்கு சனிக்கிழமைதோறும் இரவு தமிழ்ப்படம் திரையிடுவர்.
சிலசமயம் திரையிடப்பட வேண்டிய படத்திற்குப் பதில் வேறு படத்தைப் போடவும் செய்வார்கள்.
பிலிம் கடைசி நிமிடத்தில் வந்து சேரவில்லை என்பதே திரை அரங்கின் சீன உரிமையாளர் கூறும் சமாதானம். பார்க்க விரும்பாதவர்களுக்கு டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் செய்தனர்.
ஒருமுறை இரும்புத் திரை என்ற திரைப்படத்தைப் பற்றி வீடு வீடாக விளம்பரம் செய்தார்கள்.
'நல்ல படம் குடும்பத்துடன் சென்று பார்' என யாரோ ஒரு பெண்மணி சொல்ல, ஏழு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றாள் பச்சையம்மாள்.
ஆயினும், 'இரும்புத்திரை' என்ற படத்திற்கு மாற்றுப் படமாக 'தாய் சொல்லை தட்டாதே' என்ற படத்தை திரையிடவே அரங்கில் ஒரே கூச்சல் குழப்பம். சிவாஜி ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
திரையரங்க உரிமையாளர் தொலைபெருக்கியில், மலாய் மொழியில் மன்னிப்புக் கேட்டார். பச்சையம்மாளுக்கும் வருத்தம்தான். என்றாலும் இந்தப் படத்தையும் முழுக்கப் பார்த்து விட்டுத்தான் குடும்பத்தோடு திரும்பினாள்.
பலரின் துன்பங்களுக்கும் சோர்விற்கும், அக்காலத்திலும் சினிமா ஒரு தற்கால மருந்தாக இருந்தது.
ஆளுக்கு ஐம்பது காசு அல்லது ஒரு வெள்ளி டிக்கெட். இரண்டரை மணி நேரம் எல்லா கவலைகளையும் மறந்துவிடுவாள் பச்சையம்மாள்.
சில நேரங்களில் அவளின் கணவர் திட்டி தீர்ப்பார். 'வீட்டில் இவ்வளவு கஷ்டம் இருக்க, மாதம் நான்கு வெள்ளி படத்துக்கே போகுதே'? என்று சீறுவார்.
ஆனாலும் சில நேரங்களில் அவரையும் வற்புறுத்தி திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றுவிடுவாள் இந்த நாற்பத்தைந்து வயது பெண்மணி. சிறிய ஆப்பக்கடை வைத்தாள். காலையிலிருந்து மதியம்வரை விற்பனை நடக்கும். கையில் ஒரு ஐந்து வெள்ளி சேரும். இதை வைத்துக் குடும்பத்தை ஓட்டுவாள்.
வார இறுதியில் வடை சுட்டு குதிரைப் பந்தய வாசலில் கூடையில் கொண்டு சென்று விற்பாள். பலமுறை காவலர்களால் விரட்டப்பட்டும் இருக்கிறாள். இருந்தும் தொடர்ந்து விடாது போராடினாள். எல்லாம் குடும்பத்தைக் கரைசேர்க்க, அவள் அன்று பட்ட பாடு!
அவள் மகன் குமரேசனுக்கு எட்டு வயதிலிருந்தே மூக்குக் கண்ணாடி போடும் நிலை. பாவம் அவன்தான் என்ன செய்வான்? அவனா விரும்பினான்? பிறப்பில் வந்த குறையோ என்னவோ? சிறு வயதில் மூக்குக் கண்ணாடி போட்டதால், வெளியில் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவதில் மிக சிரமப்படுவான்.
'நம்ம வீட்டுல எல்லார்க்கும் நல்ல கண்பார்வை இருக்க, உனக்கு மட்டும் ஏண்டா இப்படி?' என்று கவலைப்பட்டுக்கொள்வாள்.
*
"புக்கிட் தீமா ஆராங்கல்லுல ஒரு சாமியார் இருக்காராம். அவரு அருள் வாக்கு சொல்லி, சிகிச்சையும் செய்து, பல பேருடைய குறையைத் தீர்த்து வைக்கிறாராம். நாளைக்கு உன்னை அழைச்சிகிட்டு போறேன். அவரால உனக்கு நல்ல பார்வை கிடைக்கலாம்," என்றாள் பச்சையம்மாள்.
குமரேசனுக்கு இது புதிதல்ல. அவன் தாயாருக்கு மருத்துவரை விட சாமியாடிகள் மீதுதான் நம்பிக்கை அதிகம்.
நல்ல பக்தியுடன், பிறரின் நலம் கருதி, வைத்தியம் செய்யும் நல்லோரும் சிலர் இருக்க, போலிகளும் இருக்கத்தான் செய்தனர் அன்றும்!
"வேண்டாம் அம்மா. நாம இது மாதிரி சில பேரை பார்த்தோம் இல்லையா?" என்றான் குமரேசன்.
"ஆமாடா. ஆனாலும் இவரபத்தி நிறைய பேர் நல்லதா சொல்லுராங்க. இவரு பல பேரோட கண்ண குணப்படுத்தி இருக்காராம். போய்த் தான் பார்ப்போமே," என்றாள்.
குமரேசனுக்கு தாயின் வார்த்தையைத் தட்ட மனமில்லை. 'சரி' என்று மெல்ல தலையசைத்தான்.
சிறு வயதில் குமரேசன் மிகவும் மெலிந்து இருப்பான். அப்பொழுதெல்லாம் பள்ளிகளுக்கு, சுகாதார அமைப்பில் இருந்து மாணவர்களை பரிசோதனை செய்யவும் உடலுக்கு உரம் சேர்க்க டானிக், மீன் எண்ணெய், உலர்ந்த கடலை மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் போன்றவைகளை உட்கொள்ள சீட்டு எழுதிக் கொடுப்பார்கள். அதை பெற்றுக் கொண்டு, ஊட்ரம் சாலையில் இருந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் என்னும் மருத்துவமனைக்குச் சென்று அவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
அந்த அடிப்படையில் குமரேசனின் மெலிந்த தோற்றத்தை பரிசோதித்து அவனுக்கும் சீட்டெழுதிக் கொடுத்தனர்.
இது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடக்கும். சத்துணவுகளை இலவசமாக அரசு கொடுப்பதால், பச்சையம்மாள், மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு சீட்டுடன் குமரேசனை அழைத்துக்கொண்டு போவாள்.
அவள் போகத் தூண்டுதலாக இருப்பதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. காலையில் ஊட்ராம் மருத்துவமனைக்குச் சென்று, டானிக் போன்றவற்றைப் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து ஒரு பஸ் ஏறி, நார்த் பிரிட்ஜ் சாலையில் இறங்கி, அங்குள்ள, டைமன்ட் அல்லது பக்கத்தில் உள்ள ராயல் திரையரங்கில் ஏதேனும் ஒரு தமிழ்ப் படம் பார்த்துவிட்டு, மீண்டும், குவீன்ஸ் ஸ்திரீட் பச்சை நிற பஸ் நிலையத்தில் பஸ் பிடித்து புக்கிட் தீமா ஆறாவது கல்லில் இறங்கி சாமியாடியை மாலையில் பார்க்கலாம் என மனதில் ஓர் அட்டவணை போட்டாள்.
"நாளைக்கு உனக்கு வேண்டிய மீன் எண்ணெய், டானிக் எல்லாம், ஊட்ரம் ரோட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு போய் வாங்கிக்கலாம்," என்ன?
தூர பஸ் பயணமென்றால் குமரேசனுக்கு மிகவும் பிடிக்கும். 'சரி' என்று தலையசைத்தான்.
மறுநாள் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பி பச்சை பேருந்தைப் பிடித்து ஓர் இடத்தில் இறங்கி, மீண்டும் ஒரு எஸ்.டீ.சி பஸ்ஸை பிடித்து, ஊட்ரம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.
அங்கு குமரேசனுக்கு கொடுத்த எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு, எடுத்துச் சென்ற பையில் நிரப்பியபடி மீண்டும் பஸ்ஸை பிடிக்க நடந்தாள் மகனோடு.
பையில் இருந்த மீன் எண்ணெய்யின் வாடை கப்பென்று அடித்தது. குமரேசன் முகத்தைச் சுழித்தான்! அவனுக்கு அறவே பிடிக்காத ஒன்று இந்த மீன் எண்ணை தான். அந்த வாடை அவனுக்கு உமட்டிக்கொண்டு வரும்.
"முகத்த சுழிக்காதடா. உனக்கு இந்த மீன் எண்ண பிடிக்காதுன்னு தெரியும். ஆனா இதான்டா உன் உடம்புக்கு நல்லது," என மகனுக்கு உபதேசித்தாள்.
"எப்போதும் போல நாக்கில் வெற்றிலையை வைத்து ஊற்றி விடுறேன்," என்று தீர்வு சொன்னாள்.
வெற்றிலையை நாக்கின் மீது வைத்து, அதன் மீது மீன் எண்ணெய்யை ஊற்றும் தன் தாயின் கண்டுபிடிப்பால், நாக்கில் படாமல் உள்ளே சென்றாலும், ஏப்பம் வரும்போது கூடவே வரும் அதே வாடையை நினைத்து நொந்து கொண்டே, தன் தாயின் வேகமான நடைக்கு ஈடுகொடுத்தான் குமரேசன்.
ஒரு பத்து நிமிடம் நடந்து பஸ்ஸில் ஏறி, குவீன்ஸ் ஸ்திரீட் சாலையில் இறங்கினார்கள்.
"வேகமாக நட, கொஞ்ச தூரத்தில் தான் ராயல் மற்றும் டைமண்ட் தியேட்டர் இருக்கு. நல்ல படம் போட்டாங்கனா பாத்திட்டு நேரா சாமியார பார்க்க பஸ் ஏறி போயிடலாம்," என்றாள்.
ஏதும் பதில் சொல்லாமல் தாயைப் பின்தொடர்ந்து நார்த் பிரிட்ஜ் சாலையில் நடந்தான் குமரேசன்.
கொஞ்ச நேரத்தில் டைமண்ட் தியேட்டரை அடைந்தனர். அங்கு 'பாவ மன்னிப்பு' என்ற படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தது.
பச்சையம்மாள் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. பக்கத்து, ராயல் திரையரங்கில் 'பட்டி விக்கிரமாதித்தன்' படம் திரையிடப்படுவதைப் பற்றி சிலர் பேசிக்கொண்டார்கள். ஆயினும் இங்குதான் கூட்டம் அதிகம் கூடி இருந்தது.
பச்சையம்மாளுக்கு, புராண இதிகாசப் படங்கள் அதிகம் பிடிக்கும். ஆனாலும் இந்த பாவ மன்னிப்பு படம் அப்பொழுது மக்களால் அதிகம் பேசப்பட்ட படமென்பதால் இதையே தேர்ந்தெடுத்தாள்!
மாயாஜாலப் படத்தைப் பார்க்க முடியாமல் போனதில் குமரேசனுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். இருப்பினும் தன் தாயின் ஆசைக்கு செவி மடுத்து அவளுடன் பாவ மன்னிப்பைப் பார்த்தான். எப்படியோ, அவனுக்கும் படம் பிடித்தமான ஒன்றாகத்தான் அமைந்தது.
திரைப்படம் பார்த்தபின், குவீன்ஸ் ஸ்திரீட் பச்சை பஸ் நிற்கும் இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார்கள்.
கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு பஸ் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
தாங்கள் செல்லும் இடத்திற்குப் போகும் பேருந்தில் மகனுடன் ஏறி அமர்ந்தாள் பச்சையம்மாள். பேருந்து நடத்துநர், ஒவ்வொருவருக்கும் டிக்கெட் கொடுத்துக்கொண்டு வந்தார்.
'படம் நல்லா இருந்தது இல்லையா? என தான் தேர்ந்தெடுத்த படம் சரியானது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டாள் பச்சையம்மாள். அவன் தாயாருக்குப் படம் பிடித்து இருந்ததால் அவனுக்கும் பிடித்திருந்தது.
பேருந்தில் பயணிகள் ஓரளவிற்கு நிரம்பியவுடன், நடத்துநர் விசில் ஊத பேருந்து புறப்பட்டது. சிறிது நேரத்தில், ஓஃபிர் சாலையில் வளைந்து, பின் சிறிது நேரத்தில் புக்கிட் தீமா சாலையில் சற்று வேகமாக சென்றுகொண்டிருந்தது.
ஜன்னல் ஓரமாக தன் தலையைச் சாய்த்தபடி வெளியில் இருந்து வீசும் சில்லென்ற ஈரக் காற்றின் சுகத்தை அனுபவித்துக்கொண்டு இயற்கை கட்சிகளை ரசித்த வண்ணம் மெய்மறந்து இருந்தான் குமரேசன். அரை மணி நேர பேருந்துப் பயணம்.
'அடுத்த ஸ்டாப்ல நாம கீழே இறங்கணும்' என்று மகனைத் தயார் செய்தாள் பச்சையம்மாள்.
அந்த குளிர்ந்த மாலை நேரத்தில், இருவரும் பேருந்தைவிட்டு இறங்கி ஒற்றையடி மண் பாதை வழியாக நடந்தனர்.
போகும் வழியில் இயற்கை ஊற்றும், அங்கு சிறுவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் காட்சியும், குமரேசனின் மனதை உற்சாகப்படுத்தியது.
கொஞ்சம் தூரத்தில் தெரிந்த சில அத்தாப்பு வீடுகளை நோக்கி சேறும் சகதியும் கொண்ட பாதையில் தாயும் மகனும் நடந்தனர்.
எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்துவிட்டாள் பச்சையம்மாள். அதுவும் ஒரு பழைய வீடு என்றபோதும், பெரிதாக இருந்தது.
அறையில் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்திருந்தனர். வரவேற்பு அறையில் இருவர் மட்டும் அமர்ந்து இருந்தனர்.
எல்லோரும் சாமியாரிடம் அருள்வாக்கு பெறவும், வைத்தியம் செய்துகொள்ளவும் வந்தவர்கள் என்பதை அவர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது.
வரவேற்பு அறையிலிருந்து நேர்முகமான சின்ன அறையொன்றில் பேச்சு சத்தம் கேட்கிறது.
கொஞ்சம் சத்தமான குரலில் பேசிக்கொண்டே ஒரு நல்ல வாட்ட சாட்டமான, வேட்டி மட்டுமே கட்டிய கறுத்த நிறமுடைய ஒருவர் வெளியில் வந்தார்!
வந்தவர்களை ஒருமுறை நோட்டம் பார்த்துவிட்டு, அங்கு ஏற்கெனவே அமர்ந்திருந்த இருவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.
மீண்டும் அறையில் பேச்சுக் குரல். வெளியில் பச்சையம்மாளும் குமரேசனும் அமர்ந்திருந்தனர்.
"சாமியார் கேட்டார்னா, தைரியமா பதில் சொல்லணும்," என்று அறிவுரை சொன்னாள் பச்சையம்மாள்.
இருபது நிமிடத்துக்குப்பின், உள்ளே சென்ற இருவரும், சாமியாடியிடம் வணக்கம் சொல்லிவிட்டு வெளியேறினார்கள். சற்று நேரத்தில் அந்த கறுத்த உருவத்திற்குச் சொந்தக்காரர் அறைக்கு வெளியே வந்தார்.
'என்ன விஷயமா வந்தீங்க' என்று, துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டே கேட்டார்.
"இவன் என் மகன். இவனுக்கு கண்பார்வையில் கொஞ்சம் குறைபாடு உள்ளது. அதான்," என்று தொடங்கினாள் பச்சையம்மாள்.
"கண்ணுல குறைபாடுனா கண் டாக்டர் கிட்டே போய் காட்டவேண்டியதுதானே," என்று சொல்லி வேகமாகச் சிரித்தார் அந்த சாமியாடி.
"காமிச்சு பார்த்துட்டேன். மூக்கு கண்ணாடி போட வச்சுட்டார் டாக்டர். இவனும் வெளியில் பிள்ளைகளோடு விளையாடி ஆறு கண்ணாடி உடைச்சுட்டான். சாமிய வேண்டி நீங்கதான் கண்பார்வைய திருத்த வழிசெய்யணும்," என்று அவரிடம் வேண்டிக்கொண்டாள்.
அவர் மீண்டும் சிரித்தார். அந்த கறுத்த வலிய மனிதரை இங்கு வந்ததிலிருந்தே கொஞ்சம் பயத்துடன் பார்த்தான் குமரேசன்.
"நம்ம கையில என்ன இருக்கு. எல்லாம் அவன் செயல்தான். இருந்தாலும் முடிஞ்சத செய்றேன்," என்று சொல்லி, முருகேசனை ஊடுருவி ஒரு பார்வை பார்த்தார்.
முருகேசன் இப்பொழுது மிரண்டே போனான்!
"சரி பையன உள்ளே அனுப்புங்க. சோதிச்சுப் பார்க்கிறேன் நீங்க இங்கேயே இருங்க," என்று பச்சையம்மாளுக்கும் உத்தரவிட்டார் அந்த முரட்டு சாமியாடி. இப்பொழுது மிகவும் பயந்தே போயிருந்தான் குமரேசன்.
"தைரியமா அவர்கூட போ. அவர் நல்லா பார்த்து தீர்வு சொல்வார்," என்று சொல்லி குமரேசனைத் தேற்றினாள் பச்சையம்மாள்.
அந்த சிறிய அறைக்குள் முரட்டு சாமியாடியைப் பின்தொடர்ந்தான் குமரேசன்.
தரையில் அமரச்சொல்லிவிட்டு, எதிர்ப்புறத்தில் அவரும் அமர்ந்துகொண்டார். குமரேசன் அறையை ஒரு நோட்டமிட்டான்.
சுவரில் பல படங்களுக்கு இடையே இரண்டு இடத்தில் இரண்டு அரிவாள்கள் ஒன்றின் மீது ஒன்று குறுக்கில் மாட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. இப்பொழுது பயத்தின் உச்சிக்கே போய்விட்டான் குமரேசன்.
"சொல்லு. ரொம்ப நாளா உனக்கு கண்பார்வை குறை இருக்கா?" என கண் டாக்டர் பாணியில் கேட்க ஆரம்பித்தார் முரட்டு சாமியாடி.
'ஆம்' என மெதுவாய் பதில் சொன்னான் குமரேசன்.
"பெலக்க தைரியமாய் பதில் சொல்லு," என கொஞ்சம் அதட்டலாகச் சொன்னார்
இது போதாதா குமரேசனை மிரளவைக்க!
"ஆமாம்" என்று குரலைக் கொஞ்சம் சிரமப்பட்டு உயர்த்தி பதில் சொன்னான்.
இப்படிக் கேள்வி கேட்டுக்கொண்டே, தன் வாயில் வெற்றிலையை மடித்துப்போட ஆரம்பித்தார்.
குமரேசனின் மூக்குக் கண்ணாடியைக் கழற்றச்சொல்லி, வாயில் வெற்றிலையை குதப்பிய வண்ணம் ஏதோ மந்திரம் போல், குமரேசனின் கண்களுக்கு மிக அருகில் சென்று முணுமுணுத்தார்.
கொஞ்ச நேரம் முணுமுணுத்துவிட்டு, ஒரு கிண்ணத்தில் இருந்த நீரை பளிச் பளிச் என்று குமரேசனின் இரு கண்களிலும் அடித்தார்.
அடுத்து என்ன நடக்குமோ என்று பயந்துகொண்டிருந்தான் குமரேசன்.
இத்தனைக்கு இடையிலும் சாமியாடியின் வாய், வெற்றிலையை கொதகொதவென அரைத்துக்கொண்டே இருந்தது. மீண்டும் கொஞ்சம் குளறுவது போல் பேச ஆரம்பித்தார்.
"இப்ப கண்ண திறந்து பாரு," என்றார்
குமரேசன் மெல்ல கண்களைத் திறந்தான்.
"இப்ப பார்வை கொஞ்சம் நல்லா தெரியுதா?" என்றார்.
குமரேசனுக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை.
"அப்படியேதான் இருக்கு" என்று கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பதில் சொன்னான்.
சாமியாடியின் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றமும் கடுகடுப்பும் தென்பட்டது.
வாயில் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலை எச்சிலை ஒரு கிண்ணத்தில் துப்பிவிட்டு, மிச்சம் உள்ள வெற்றிலைக் கலவையை மெல்ல மென்றபடி மீண்டும் குமரேசனை உற்றுப் பார்த்தார்.
"கண்ண நல்லா மூடிக்க," என்று கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னார் அந்த சாமியாடி.
குமரேசனின் மனம் இப்பொழுது மிகவும் கலவரப்பட்டது. ஐயோ அடுத்து என்ன செய்யப் போகிறாரோ என்ற திகில் அவனை கவ்விக்கொண்டது. குமரேசன், சாமியாடி சொன்னபடியே கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.
ஒரு சில நிமிடங்கள் அமைதி நிலவியது. அடுத்து, தன் மூடிய கண்களில், சாமியாடி எதையோ வைத்து அப்பும் உணர்வு குமரேசனால் உணர முடிந்தது.
மெல்ல மெல்ல மூடிய கண்களின் வழியே ஏதோ பட்டு, கண்கள் கொஞ்சம் எரிச்சல் தர ஆரம்பித்தது. ஆ.. வெற்றிலைக் கலவையின் வாடை அதிகமாக அடிக்க ஆரம்பித்தது. அவன் கண்ணெரிச்சல் கொண்டதால் மெல்ல முனக ஆரம்பித்தான்.
இங்கிருந்தபடியே தாயைக் கூவி கூப்பிடலாமா என்று ஒருகணம் அவன் மனம் எண்ணியபோதும் அவன் தன்மானம் அதற்கு இடந்தரவில்லை.
"கொஞ்சம் கண் எரிச்சல் இருக்கும் பொறுத்துக்க," என்றார் சாமியாடி.
சிறிது நேரம் ஏதோ முணுமுணுத்துவிட்டு, குமரேசனின் கண்களில் வைத்த வெற்றிலைச் சக்கையை மெல்ல அகற்றினார் பின்பு கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்து கண்களைக் கழுவச்சொன்னார்.
கண்களை நீரால் கழுவியும் எரிச்சல் இன்னும் இருந்தது குமரேசனுக்கு.
இந்த பாவி வெற்றிலையோடு என்னென்ன கலந்து மென்றானோ தெரியவில்லையே என்று உள்ளுக்குள் நொந்துகொண்டான் குமரேசன்.
"மந்திரத்த ஓதி உன் கண்ணுல இந்த வெத்தல சக்கைய வச்சேன். எல்லாம் உன் பார்வ நல்லா வரணுமுன்னுதான். கொஞ்சம் எரிச்சலாதான் இருக்கும். பொறுத்துக்க.
இதுபோல இன்னும் சில நாளுக்குப்பின்னால இரண்டு தடவ இதேமாதிரி செஞ்சா பார்வ ரொம்பவும் நல்லா இருக்கும்," என்று தன் அருள்மிக்க வைத்திய முறையை விளக்கினார் அந்த முரட்டு சாமியாடி!
சிறிது நேரத்திற்குப்பின் அவர், குமரேசனை அறையைவிட்டு வெளியில் அழைத்து வந்தார்.
"கண்ணுக்கு கொஞ்சம் வைத்தியம் செஞ்சிருக்கேன். இது போல இன்னும் இரண்டு தெடவ செஞ்சா எல்லாம் சரியாகிவிடும்," என்றார்.
குமரேசனின் சிவந்த கண்களை கண்டு திடுக்கிட்டாள் பச்சையம்மாள்
ஏன் இவன் கண்ணு சிவந்து இருக்கு என்று பதற்றத்துடன் கேட்டாள் சாமியாடியைப் பார்த்து.
"ஒன்னும் இல்லம்மா, பயப்படாதிங்க. ஜபம் செஞ்சி, கொஞ்சம் வெற்றிலைச் சக்கையை பையன் கண்ணில் கொஞ்ச நேரம் வச்சு எடுத்தேன். அது சரியாகி விடும்," என்றார் அலட்சியமாக அந்த சாமியாடி.
வந்ததே பச்சையம்மாளுக்கு கோபம்!
"அப்படி செய்யணும்முனா என் கிட்ட முதல்ல சொல்லியிருக்கனும்," என்று உரக்க கத்தி பேசி, சாமியாடியை நன்றாகத் திட்ட ஆரம்பிக்கவும், அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர்.
இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத சாமியாடிக்கு உடல் கொஞ்சம் நடுக்கம் கண்டுவிட்டது.
இந்த மாதிரி நேரங்களில் பச்சையம்மாளை சாந்தப்படுத்துவது கொஞ்சம் சிரமம்.
எப்படியோ சில அக்கம்பக்க முதியவர்கள் சேர்ந்து பச்சையம்மாளை மெல்ல பேசி சாந்தப்படுத்த, அவள் குமரேசனை அழைத்துக்கொண்டு, மீண்டும் ஒருமுறை சாமியாடியைத் திட்டிவிட்டு, அங்கிருந்து வெளியேறி, சாலையை நோக்கி வந்த பாதை வழியே வேகமாக நடந்தாள்.
நடந்துகொண்டே மகனிடம் வருத்தத்துடன் பேசினாள், "கண்ணு ரொம்ப எரியுதாப்பா," என்று பரிவுடன் கேட்டாள்.
இப்ப கொஞ்சம் குறைவா தெரியுது என்று தாழ்வான குரலில் பதில் சொன்னான் குமரேசன்.
"இனி இந்த ஆள வந்து பார்க்க வேணாம் அம்மா," என்று சற்று தழுதழுத்த குரலில் கேட்டுக்கொண்டான் குமரேசன்.
"இல்லடா. இனி இந்த ஆள வந்து பார்க்கவே வேணாம். போதும் இவரோட வெத்தல வைத்தியம். இனி எந்த சாமியாடியையும் பார்க்க வேண்டாம்," என்று தன் தவற்றை நினைத்து நொந்துகொண்டாள் பச்சையம்மாள். கொஞ்ச நேரம் நின்று சாமியாடி வீட்டை நோக்கி மீண்டும் வேகமாகத் திட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
மீண்டும் சிறிது நேர மௌனம்.
"இனிமே நேரா அந்த ஆண்டவனதான் உனக்காக நம்பி வேண்டுவேன்," என்றாள் கண்கள் சற்று கலங்கியபடி!
பேருந்து வரும் சாலையை நோக்கி, அதே ஒற்றையடிப் பாதையில் இருவரும் நடக்கத் தொடங்கினர்.