சிறுகதை
பிரதீபா
"சம்பவம் நடந்து இன்னையோட இரண்டு நாளாச்சு. ஆதிராவைப் பற்றி ஏதாவது விவரம் தெரிஞ்சதா?" என்று கேட்டார் முத்துலிங்கம்.
"நேத்துக்கூட காவல்துறையில விசாரிச்சேன். தேடிகிட்டு இருக்காங்களாம். இன்னும் எந்த விவரமும் தெரியலைன்னு சொன்னாங்க. அப்படி ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்றேன்னு சொல்லிருக்காங்கப்பா," என்றான் அவரின் மகன் தர்மதுரை.
"நம்மகிட்ட ஒருவார்த்தை சொல்லியிருந்தா இதுக்கு ஒரு முடிவு எடுத்திருக்கலாம். அர்ஜூன் வந்து கேட்டா என்ன பதில் சொல்றது?"
"அவ செஞ்ச தப்புக்கு நீங்க ஏம்ப்பா வருத்தப்படுறீங்க? அர்ஜூனை இந்த நிலைமையில விட்டுட்டு எப்போ அவ சந்தோஷத்தைத் தேடி போனாளோ அப்பவே அவள நாம மறந்துடணும்."
"எப்படிங்க மறக்க முடியும்? என்னோட இருக்குற வரைக்கும் அக்கா அக்கான்னு அன்பா இருந்தவ இப்படிச் செய்வான்னு என்னால நெனைச்சுக்கூட பார்க்க முடியல. நம்ம ஆதிராவா இப்படிப் பண்ணுனான்னு என்னால இன்னும் நம்ப முடியல. ஒரு வேளை பணத்துக்காக அந்த மேனேஜர் நம்ம ஆதிராவை ஏதாவது பண்ணியிருந்தா...?" என்றாள் தர்மதுரையின் மனைவி துர்கா.
போனவ தனியா போகல துர்கா. பணம், நகை எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிருக்கா. கிளம்புறதுக்கு முன்னாடி அவ தெளிவா முடிவு செஞ்சுட்டுதான் போயிருக்கா. அதனால நீயா ஏதாவது கற்பனை பண்ணாமயிரு. அதான் புகார் கொடுத்திருக்கோம்ல. அவங்க கண்டுபிடிச்சு சொல்லட்டும்."
"இல்லைங்க அப்படியும் இருக்க வாய்ப்பு இருக்கலாம்ன்னுதான் சொன்னேன்."
"நீ சொல்லுற மாதிரி இருக்கவும் வாய்ப்பிருக்கு துர்கா. ஆனா எல்லாத்தையும் நாமளே ஊகம் செஞ்சிகிட்டு இருக்காம மொதல்ல இந்த வழக்கை விசாரிக்கிற என்னோட நண்பர்கிட்ட என்ன செய்யலாம்ன்னு கேக்குறேன். கேட்டுட்டு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுக்கலாம்ன்னு முடிவு பண்ணலாம். இதை அமைதியாதான் கையாளனும். அவசரப்பட்டோம்ன்னா இந்த விஷயம் வெளியே பரவி நம்ம நிறுவனத்தோட பேரு பத்திரிகையில வந்து நாறிப்போயிரும்.
"இந்த கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை ஆரம்பிச்சு இப்போ இந்த நிலைமைக்குக் கொண்டு வர அப்பா பட்டபாட்டுக்கு அர்த்தமில்லாம போகும்"
"தர்மா முதல்ல இதுக்கு என்ன பண்ணனும்மோ அதை உடனே பண்ணுப்பா. நம்ம குடும்பத்துல எதுக்குப்பா இப்படியெல்லாம் நடக்குது. இதெல்லாம் பாக்கக்கூடாதுன்னுதான் உங்க அம்மா சீக்கிரமாவே கண்ணை மூடிட்டாளோ என்னவோ?"
"சரிங்கப்பா! நீங்க வருத்தப்படாம ஓய்வெடுங்க. என் நண்பரைப் பார்த்து இதுக்கு என்ன பண்ணலாம்னு கேக்குறேன். துர்கா இதைப்பத்தி யாருக்கிட்டையும் பேசாத. குறிப்பா வீட்டுல வேலை செய்றவங்களுக்கு இதைப்பத்தி எதுவும் தெரியம பாரத்துக்க. இந்தப் பிரச்சனையில இன்னைக்கு அப்பாவை டயாலிஸிஸுக்கு கூட்டிட்டுப் போக மறந்துடாதே. அவ தனியா காணாம போயிருந்தா கவலைப்படலாம். ஆனா போனவ விவரமா பணம், நகைன்னு எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிருக்கா. அதனால என்ன ஆச்சுன்னு தெளிவா தெரிய வரைக்கும் மனசப் போட்டுக் குழப்பிக்காம அமைதியாயிருங்க. நான் அடுத்து என்ன பண்ணலாம்ன்னு கேட்டுட்டு வர்றேன்," என்று கூறிவிட்டு வெளியே கிளம்பினான் தர்மதுரை.
கணவன் எவ்வளவுதான் சமாதானம் கூறினாலும் துர்காவினால் இதை சுலபமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோகூருக்குச் செல்லும் முன்பு தோட்டத்தில் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தாள் ஆதிரா.
அவள் அருகில் சென்று தோளை தொட்ட பிறகே ஆதிரா சுயநினைவிற்கு வந்தாள்.
"என்ன ஆதிரா? பலமான யோசனையில இருக்கே. என்னாச்சு? அர்ஜூனைப்பத்தி நெனச்சுக்கிட்டுயிருக்கியா?"
"ஆமாக்கா. அவரு இல்லாத வாழ்க்கை ஏதோ சூன்யம் மாதிரி இருக்கு."
"கவலைப்படாதே ஆதிரா. நம்ம டாக்டர் மாமாவோட கண்காணிப்புல அவன் நல்லபடியா மீண்டு வந்துடுவான். நேத்து கூடக் கேட்டப்போ அர்ஜூனோட உடல்நிலையில நல்ல முன்னேற்றம் வந்துகிட்டேயிருக்குன்னு சொன்னாரு. நீ மனசைத் தளரவிடாதே. தைரியமாயிரு"
"அந்த நம்பிக்கையிலதான்க்கா நானும் இருக்கேன்."
"உன்னோட மன தைரியமும் நம்பிக்கையும்தான் அவனைச் சீக்கிரமா இதுலயிருந்து மீட்டு தரும். கவலைப்படாதே. நாங்க இருக்கோம். நீ இங்கயிருந்தா அவனைப்பத்திதான் நெனச்சுகிட்டுயிருப்பே. நீ எஸ்டேட்டுக்குக் கிளம்பு. அவரு ஜெண்டிங் போயிருக்காரு. நாளைக்கு எஸ்டேட்டுக்கு வந்துடுவாரு. நீ அங்கேயிருக்கிற வேலைகளைப் பார்த்துட்டு நாளைக்கு அவருகூடத் திரும்பி வந்துடு"
"சரிங்க அக்கா. நான் போகும்போது அவரை ஆஸ்பத்திரில பார்த்துட்டுப் போரேன்," என்று நம்பிக்கையோடு சொல்லிவிட்டு போனவளா நம்பிக்கை துரோகம் செய்திருப்பாள். ஆனாலும் சில நாட்களாக அவளின் நடை, உடை, பாவனையில் தென்பட்ட மாற்றமும் அவளை யோசிக்க வைத்தது. அடிக்கடி தன்னை மறந்து யோசனையில் ஆழ்ந்திருப்பாள். கேட்டால் அர்ஜூனின் ஞாபகம் என்று மழுப்பி விடுவாள். வீட்டில் இருந்தவளை தேவையில்லாமல் நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்வதற்கு அனுப்பியது தவறோ என்ற எண்ணம் அவளுக்குள் விழுந்தது.
சிங்கப்பூரில் இருக்கும் பணக்கார குடும்பங்களில் அவர்களின் குடும்பம் ஒன்று. செல்வத்தில் மட்டுமல்ல குடும்பத்தில் மகிழ்ச்சியும் குறைவில்லாமல் இருந்தது.
வானவில் போன்று வண்ணமயமாகயிருந்த அவர்களின் வாழ்க்கையில் யார் கண்பட்டதோ இன்று சுனாமியால் உருக்குலைந்த கட்டடம்போல் சிதைந்து நிற்கிறது.
இப்படிக் குடும்பம் பிளவுபட்டு நிற்பதற்குத் தானும் ஒரு காரணமோ என்று எண்ணியபோது அவள் மனத்தைக் கத்தியால் கீறியதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.
நாளை அர்ஜூனுக்குத் தெரியும்போது அவன் இதனை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறானோ என்று எண்ணும்போதே அவள் இதயம் படபடத்தது.
அர்ஜூன் அவளுக்கு மைத்துனன் முறை என்றாலும்கூட அவள் தர்மாவைத் திருமணம் முடித்து வரும்போது அவனுக்குப் பதினைந்து வயதுதான்.
உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். அம்மா இல்லாமல் அண்ணன் மற்றும் தந்தையின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்தவன் என்பதால் இயல்பாக அவளுக்கு அவன்மேல் தாய்மை உணர்வு தோன்றியது.
தன்னுடைய மூத்த பிள்ளையாகதான் அவனைப் பாவித்தாள். அவனும் 'அண்ணி அண்ணி' என்று அவள்பால் அன்பைப் பொழிந்தான். அவனும் பல்கலைக்கழகப்படிப்பை முடித்த பிறகு அண்ணனுக்கு உதவியாக நிர்வாகத்தைக் கவனிக்கத்தொடங்கினான். அவனின் அயராத உழைப்பினாலும், திறமையாலும் அவர்களின் நிறுவனம் சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழில் நிறுவனமாக உருவெடுத்தது. பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவளின் மாமனார் முத்துலிங்கம் வீட்டில் பேரப்பிள்ளைகளோடு ஓய்வெடுக்கத் தொடங்கினார்.
மாமனார் முத்துலிங்கத்தின் அண்ணன் தாமோதரன் சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருக்குறார். அவருடைய மகள் திருமணத்தில்தான் அவன் ஆதிராவைப் பார்த்தான்.
ஆதிராவின் ஆர்ப்பாட்டமில்லாத அழகும் மென்மையான பேச்சும் அர்ஜூனுக்குப் பிடித்துப் போனது. அவன் தன் விருப்பத்தை வீட்டில் தெரிவித்தான்.
பின்னர், பரஸ்பர புரிதலுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்களுக்குத் திருமணம் நடந்தது.
வீட்டு நிர்வாகத்தை இவள் கவனித்துக்கொண்டு வந்ததால் நன்கு படித்த ஆதிரா ஏன் வீட்டில் அடைந்து கிடக்கவேண்டும் என்று எண்ணினாள்.
அவளும் அர்ஜூனுடன் இணைந்து நிர்வாகத்தைக் கவனித்து வரட்டும் என்று கூறி ஆதிராவை அவள்தான் அனுப்பி வைத்தாள்.
இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மலேசியாவில் உள்ள ஜே.பி.யில் இருக்கும் ரப்பர் எஸ்டேட்டை பார்த்துவிட்டு வருவார்கள்.
இருவரும் மனமொத்த தம்பதிகளாக இணைந்து வீட்டையும், நிர்வாகத்தையும் மகிழ்ச்சியுடன் கவனித்து வந்தனர்.
யார் கண்பட்டதோ? சென்ற ஆண்டு அவர்கள் ஜே.பி.க்கு போய்விட்டு சிங்கப்பூர் வரும்போது நிகழ்ந்த விபத்தில் அர்ஜூனுக்குத் தலையில் அடிப்பட்டுக் கோமாவுக்குப் போய்விட்டான்.
நல்ல வேளை ஆதிரா லேசான காயத்தோடு உயிர் தப்பினாள். அதன் பிறகு குடும்பமே நிலைக்குலைந்து போனது. அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதற்கு அவர்களுக்குப் பல மாதங்கள் ஆனது.
எப்பொழுது வேண்டுமானாலும் அர்ஜூன் கோமாவிலிருந்து மீண்டு வரலாம் என்று டாக்டர் மாமா சொல்லிவிட்டார்.
ஆரம்பத்தில் இதோ கண் விழித்துவிடுவான் என்று எண்ணிக்கொண்டு நாட்களைக் கடத்தினார்கள்.
ஆனால் நாட்கள் மாதங்கள் ஆனபோதுதான் அவனை மருத்துவரின் கண்காணிப்பில் விட்டுவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கினர்.
நம்பிக்கைதானே வாழ்க்கையின் அச்சாணி. அந்த அடிப்படையில்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.
அர்ஜூனை நினைத்து வீட்டில் முடங்கிக் கிடந்தவளை தேற்றி அவள்தான் எஸ்டேட் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள மீண்டும் அனுப்பி வைத்தாள்.
ஆனால், இவள் இப்படிச் செய்வாள் என்பதை அவள் கனவிலும் நினைக்கவில்லை.
அர்ஜூன் கோமாவிலிருந்து விடுபட மாட்டான் என்று நம்பிக்கையை இழந்துவிட்டாளா? அல்லது ஒருவேளை பணத்துக்கு ஆசைப்பட்டு ஆதிராவை யாராவது ஏதாவது செய்திருப்பார்களோ? ஆனால் அவள் மகிழ்ச்சியாக மானேஜருடன் சென்றதாகச் சொல்கிறார்களே?
வீட்டு லாக்கரிலிருந்த அவளுடைய நகைகளையையும் காணவில்லை.
எதை நம்புவது?
எது உண்மை?
புரியாமல் அவளுடைய மனம் கலங்கியது.
இந்தப் பிரச்சனையை யாரிடம் சொல்லி தீர்வு காண்பது என்ற மனவேதனையில் உழன்றுகொண்டிருந்தவளை கடிகாரத்திலிருந்த குயில் 'குக்கூ குக்கூ' என்று 11 முறை கூவி அவளை நனவுலகிற்கு அழைத்து.
அப்போதுதான் மாமனரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அவள் நினைவுக்கு வந்தது.
உடலளவில் தளர்ந்துபோயிருந்தவர் அர்ஜூனுக்கு நடந்த விபத்துக்குப் பிறகு இப்போது மனத்தளவிலும் சோர்ந்து போய்விட்டார்.
ஆதிராவின் பிரச்சினை அவரை மேலும் முடக்கி போட்டுவிட்டது. அவரைத் தேற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
அவர்கள் சென்ற சற்று நேரத்தில் ஜோகூர்பாரு செல்வதற்காகத் தன் கடவுச்சீட்டை எடுப்பதற்கு வீட்டிற்கு வந்தான் தர்மதுரை.
அப்போது ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த தன் தம்பி அர்ஜூனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் ஒரு கணம் நின்றுவிட்டான்.
தர்மாவுக்குத் தான் காண்பது கனவா அல்லது நனவா என்பது புரிய ஒரு நிமிடம் நீடித்தது.
பிறகு, 'அர்ஜூன் நீயா? நீ எப்போ வந்தே? எப்படி இருக்க? தாமோதரன் பெரியப்பா உனக்கு நினைவு திரும்புனதைப்பத்தி ஒன்னும் சொல்லலையே?' என்று சந்தோஷத்தில் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்
'அண்ணா! எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறீங்க. அமைதியா இருங்க. நான் முன்ன விட இப்போ ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். எனக்கு இரண்டு நாளைக்கு முன்பே நினைவு திரும்பிடுச்சு. ஆனா சில பரிசோதனைகளை முடிஞ்ச பிறகு தான் பெரியப்பா வெளியே அனுப்புவேன்னு சொன்னாரு. அவரு உங்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லணும்னு துடிச்சாரு. நான்தான் பெரியப்பாகிட்ட எதுவும் சொல்லவேணாம்ன்னு சொன்னேன். உங்க முன்னாடி திடீர்ன்னு வந்து நின்னு இப்படி உங்களை ஆச்சரியப்பட வைக்கணும்னு நெனச்சேன்.'
"நல்லா ஆச்சரியப்பட வெச்ச. உன்னைப் பார்த்தா வீட்டுல இருக்குற எல்லாரும் சந்தோஷத்துல துள்ளி குதிக்கப் போறாங்க. அர்ஜூன்! உன்னை மறுபடியும் இப்படிப் பார்க்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்குது தெரியுமா? என் பலமே இப்பதான் திரும்பி வந்த மாதிரியிருக்கு. நீ கூட இல்லாம நான் பட்ட கஷ்டப்பட்ட எனக்குதான் தெரியும். எப்படியிருந்த நம்ம குடும்பம் இன்னைக்கு இப்படி உடைஞ்சு போயிருக்குறத பார்க்கும்போது மனசு வலிக்குது"
"காலம் நடத்திய கோலம். என்ன பண்றது அண்ணா?
"காலம் இப்படி ஒரு அலங்கோலத்தை நம்ம குடும்பத்துக்குக் கொடுத்துருக்க வேணாம். பிள்ளைங்களுக்காக மனசை கல்லாக்கிட்டு ஓடிகிட்டிருக்கேன். பழசையெல்லாம் பேசி வீட்டுக்கு வந்தவுடனே உன்னை வருத்தப்பட வச்சுட்டுயிருக்கேன். குளிச்சுட்டு வா. நாம இரண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்"
"எனக்குப் பசிக்கலண்ணா. வீட்டுல யாரையும் காணோம். எல்லாரும் எங்கே போயிருக்காங்க?'
"பிள்ளைங்க பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்காங்க. அண்ணி அப்பாவைக் கூட்டிட்டு மருத்துவமனைக்குப் போயிருக்கா. நான் அண்ணிக்கு கால் பண்ணி சிகிச்சை முடிஞ்சதும் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்றேன். அப்பா உன்னைப் பார்த்தாருன்னா அப்படியே மகிழ்ச்சியில் பூரிச்சுப் போயிடுவாரு"
"ஆதிரா எங்கண்ணா?"
ஆதிராவைப்பற்றிக் கேட்டதும் தர்மாவால் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பல மாதங்களுக்குப்பிறகு குணமாகி இப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனிடத்தில் நடந்ததைச் சொன்னால் மீண்டும் அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவருக்குத் தோன்றியது. உடனே, அவன், "ஆதிரா ஜேபிக்குப் போயிருக்கா," என்றான்.
"ஆதிராவுக்கு என்ன ஆச்சுன்னா?"
"ஆதிராவுக்கு என்ன...? அவ நல்லா தான.... இருக்கா? அவளுக்கு என்ன ஆச்சு? ஜேபிக்கு தானே போயிருக்கா?"
"அண்ணா மறைக்காம என்ன நடந்ததுன்னு சொல்லுங்க..."
"பெரியப்பா ஏதாவது சொன்னாரா?"
"ஆமா... ஆதிராவைப் பார்க்கணும்னு கேட்டேன். ஆனா அவரு எனக்கு சரியான பதிலைச் சொல்லலை. அப்புறம் வற்புறுத்தி கேட்ட பிறகுதான் ஆதிராவைக் காணோங்கிற விபரத்தைச் சொன்னாரு. அவளுக்கு என்ன ஆச்சுண்ணா?'
"இப்போ அவளைப்பத்தி தெரிஞ்சு என்ன பண்ணப்போற?'
"என் பொண்டாட்டியபத்தி நான் தெரிஞ்சுக்காம யாரு தெரிஞ்சுக்குவா?"
"அந்த அக்கறை அவளுக்கு இல்லையே. அப்படியிருந்திருந்தா உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு போயிருப்பாளா?"
"என்ன நடந்தததுன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க?"
தர்மன் பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டுக்கொண்டே "சாலை விபத்துல உனக்குத் தலையில அடிப்பட்டதுல நீ கோமாவுக்குப் போயிட்ட. நல்ல வேளை ஆதிரா லேசான காயத்தோட பொழச்சுகிட்டா. நீயும் எப்படியும் கண் முழிச்சுடுவன்னு நாங்க நம்பிக்கையா இருந்தோம். ஆனா, நாட்கள் கடந்ததே தவிர உங்கிட்ட எந்த முன்னேற்றம் இல்ல. எங்களுக்கும் நம்பிக்கை விட்டுப்போச்சு. உனக்கு இப்படி ஆனதை நெனச்சு அப்பாவோட உடல்நிலையும் மோசமா ஆயிடுச்சு.
"வீட்டுலேயிருந்தா பழைய நினைவுகள் ஆதிராவை அழைக்கழிச்சுக்கிட்டே இருக்கும். அதனால ஒரு மாற்றமா இருக்கட்டும்ன்னுதான் நீ பார்த்துக்கிட்டு வந்த நிறுவனத்தை அவளைக் கவனிச்சுக்கச் சொன்னேன். உன்னை மாதிரி அவளும் புத்திசாலி. எல்லாத்தையும் சீக்கிரமா கத்துகிட்டா.
"அடிக்கடி மலேசியாவுல இருக்குற நம்ம எஸ்டேட்டைப் பார்த்துகுறதுக்குப் போவா. அப்படி இரண்டு நாளைக்கு முன்னாடி கிளம்பிப் போனவதான் திரும்பவேயில்லை.
"பிறகு விசாரிச்சுப் பார்த்ததுல அவ அங்கே எஸ்டேட்டுல வேலை பார்க்குற ஒருத்தன் கூட நெருக்கமா பழகுனதா சொன்னாங்க. போகும்போது பல லட்ச வெள்ளி பணத்தையும், நகையையும் எடுத்துட்டுப் போயிட்டா. இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு நாங்க எல்லாம் கொதிச்சுப்போய் இருக்கோம். உன்கிட்ட இந்த விஷயத்தை எப்படிச் சொல்லப் போறோம்ன்னு துடிச்சுகிட்டு இருந்தோம். இவ்வளவு சீக்கிரமா அது நடக்கும்ன்னு நான் நெனைச்சுக் கூடப் பார்க்கல.
"அர்ஜூன், நீ வருத்தப்படுவேன்னுதான் இதபத்தி பேச வேணாம்ன்னு சொன்னேன். ஆதிராவைப்பத்தி யோசிச்சு மனசை குழப்பிக்காத. எல்லாத்தையும் மறந்துட்டு புது வாழ்க்கைய தொடங்கப்பாரு."
"அப்போ ஆதிரா எங்க இருக்கான்னு உங்களுக்குத் தெரியாதா?"
"தெரியாது."
"ஆனா, உங்களுக்குத் தெரியும்ன்னு ஆதிரா சொன்னாளே?"
"என்ன சொல்ற..... அர்ஜூன்? ஆதிரா உன்கிட்ட பேசினாளா? எப்போ?"
"இப்பதான் கொஞ்ச நேரதுக்கு முன்னாடி."
"என்ன சொன்னா?"
"என்னை மட்டும் நெனச்சுகிட்டு இருக்கிறதா சொன்னா"
"உன்னை மட்டும் நெனச்சுகிட்டு இருக்கிறவ ஏன் வேறொருத்தன் கூட ஓடி போனான்னு கேட்டியா?"
"கேட்டேனே. உங்க அண்ணன்கிட்ட கேளுங்கன்னு சொன்னா."
"எங்கிட்ட....கேக்க சொன்னாளா?"
"ஆமா..சொல்லுங்கண்ணா."
"நீங்க சொல்லமாட்டீங்க. ஆனா நான் சொல்றேன். சின்ன வயசுல அம்மா இல்லாத குறையே தெரியாம அண்ணனா மட்டுமில்லாம அம்மாவுக்கு அம்மாவாயிருந்து என்னை வளர்த்தீங்க. பார்த்துப் பார்த்து என்னைப் படிக்க வச்சீங்க. தேடி தேடி ஆதிராவ எனக்குக் கட்டி வெச்சீங்க. எல்லாமே நல்லாதான் போயிட்டு இருந்தது. என்னைக்குச் சூதாட்டத்துக்கு அடிமையாகி பணத்தை இழக்கத் ஆரம்பிச்சீங்களோ அப்பவே தர்மனாயிருந்த நீங்க சகுனியா மாறிட்டீங்க. மகாபாரத்துல அந்தத் தர்மன் பாழாபோன சூதாட்டத்தால தன் குடும்பத்தையே வெச்சுச் சூதாடுனான். ஆனா நீங்க சூதாட்ட மோகத்தால, சொத்துக்கு ஆசைப்பட்டுத் தம்பி குடும்பத்தையே கொல்ல துணிஞ்சிட்டீங்க'
"இல்ல... நான் எதுவும் செய்யல," என்ற தர்மாவின் அலறலையும் தாண்டி கதறிய அவன் கைபேசி அவனை நிலைப்படுத்த எடுத்துப் பார்த்தான். திரையில் அவனுடைய டாக்டர் பெரியப்பா அழைப்பதாகக் காட்ட, அவன் வேகமாக அழைப்பை எடுத்தான். மறுமுனையில், "தர்மா! திடீர்ன்னு கோமாவுலயிருந்த அர்ஜூனுக்கு வலிப்பு வந்துடுச்சு. எவ்வளவோ முயற்சி பண்ணியும் எங்களால அவன் உயிரைக் காப்பாத்த முடியல," என்று பதற்றமாகப் பேசினார்.
அவன் சட்டென்று ஊஞ்சலைப் பார்த்தான்.
ஊஞ்சல் மட்டும் ஆடிக்கொண்டிருந்தது.