சிறுகதை
ஷோபா குமரேசன்
உறக்கம் என்னிடத்தில் இருந்து விலகி சமூக இடைவெளி விட்டு நின்றது. ஏதோ என்னுடைய செங்காங் வட்டாரத்தில் நான் மட்டுமே தனிமையில் தவித்துக்கொண்டிருப்பதைப் போல ஓர் உணர்வு. எங்கும் ஒரே அமைதி.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வரை, கொரோனாவிற்கு முன் உலகம் சாதாரணமாக இயங்கிக் கொண்டிருந்ததைப் போல் என்னுடைய வாழ்க்கையும் சுமுகமாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் அண்மை காலமாக ஏகப்பட்ட பிரச்சினைகள், சங்கடங்கள் என உருவாகி காட்டு மரங்களில் தானாகவே படரும் களைக்கொடிகளைப் போல என்னைச் சுற்றிப் படர்ந்து பாடாய்ப்படுத்த செய்வதறியாது குழம்பித் தவித்தேன்.
வெகு நேரமாக மெத்தையில் மல்லாக்கக் கிடந்து சுத்துற காத்தாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததில் தலைவலி வந்ததுதான் மிச்சம்.
மெல்ல எழுந்த நான், மகள் கமலியின் அறைக்கதவைத் திறந்தேன்.
பாவம் குழந்தை! நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். அந்த மாத்திரையைப் போட்டாலே இப்படித்தான், குறைந்தது ஆறு மணி நேரம் அவளிடம் எந்த அசைவும் இருக்காது. செல்லமே! என் வாழ்க்கையை வசந்தமாக்க வந்தவளே! உனக்கு என்னதாம்மா பிரச்சினை? என எண்ணித் தவித்த என் மனம் விடையைக் கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனது.
'எல்லாம் என்னால வந்ததுதான். நான் அன்று மலரிடம் அப்படிப் பேசியிருக்கவே கூடாது. பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகள் தலையில விடியும்னு சொல்லுவாங்களே? அதான் கமலிக்கு இப்படி ஆச்சோ?' யோசித்த எனக்கு விழியோரம் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
மாநிறத்தைவிட சற்று தூக்கலான நிறம், முட்டை வடிவ முகத்தில் அழகான பழுப்பு நிற விழிகள், நடுவகிடு எடுத்துப் போட்ட குதிரைவால் பின்னல், வீட்டை எந்நேரமும் கலகலப்பான பட்டிமன்ற அரங்கைப் போல வைத்துக் கொள்பவள். இதுதான் என் கமலி.
அந்தப் பிஞ்சு மனதிற்குள் நிறைய இனிமையான பக்கங்கள். கற்பனைக் கதைகள் அவளுடைய நாவில் சரளமாகத் தாண்டவமாடும்.
பெண் குழந்தைகள் அப்பாவிற்கு இன்னொரு தாய்தான் போலும். அவளுடைய கதைகளைக் கேட்டு நான் கண்ணயர்ந்த நாட்களும் உண்டு.
தாயிடம் தப்பி வந்த கல்லும் மண்ணும்கூட, மகளின் கைப்பட்டால் காந்தச் சிலையாகும்! என்ன ஆழமான வரிகள். ஆம், நானும் என் மகளுக்காக என்னால் விடவே முடியாது என்று நினைத்த சில பழக்கவழக்கங்களைக்கூட அறவே துறந்தேன்.
தூக்கம் முற்றிலுமாக தொலைந்துப் போய் வீட்டுக் கூடத்தில் வந்தமர்ந்தேன்.
எதிரே இருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் என்னவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவளை ஏக்கத்துடன் உற்று நோக்கிய நான், 'என்னோட வாழ்ந்தது போதும்னு நீ போயிட்ட, என் நிலைமையைப் பாத்தியா?' என புலம்பியவாறே பெருமூச்சு விட்டேன்.
மணி நள்ளிரவைக் கடந்து கடிகார முட்கள் முன்னே செல்ல, என் நினைவுகள் பின்னோக்கிப் பயணப்பட்டன. அப்போது கமலி தொடக்கநிலை ஆறில் அடியெடுத்து வைத்த நேரம். ஒரு நாள் அலுவலகத்திலிருந்த எனக்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது.
"கமலி, வர வர படிப்புல கவனம் செலுத்துறதில்ல. அதனால பள்ளியில இருக்கிற ஆலோசகர்ட்ட அனுப்பினோம். ஆனால் அங்கேயும் பேசாமல் அமைதியாவே இருக்கான்னு சொல்றாங்க. வீட்ல நீங்க பேசிப் பாருங்களேன்," என்றார் ஆசிரியர். அதைக் கேட்டு திடுக்கிட்ட நான் அண்மை நாட்களாக வீட்டில் நடந்த சில நிகழ்வுகளையும் அசைபோட்டுப் பார்த்தேன்.
எப்போதும் எனக்காக காத்திருந்து பேசி சிரித்தபடி சாப்பிடும் அவளின் நடவடிக்கை காணாமல் போயிருந்தது.
படிப்பு சுமையாக இருக்கும் என நானும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டதன் விளைவை எண்ணி வருந்தியதோடு, இன்று அவளிடம் பேசியே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன்.
அன்று இரவே கமலியிடம்,
"என்னம்மா, உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? சோர்வாவே இருக்கியே, படிப்பெல்லாம் புரியுதாம்மா?" என்றேன்.
"புரியுதுப்பா" என்று என் கடைசி கேள்விக்கு மட்டும் ஒற்றை வார்த்தையில் அவள் பதிலளித்தாள்.
என் கமலியா இது? ஒண்ணு கேட்டாலே ஒரு மணி நேரம் பேசுவாளே! ஏதோ எனக்கு தவறாய்ப் பட, நிலைமையின் தீவிரம் எனக்குப் புரிந்தது.
'ஒரு வேளை என்னிடம் சொல்ல முடியாத பிரச்சினையாக இருக்குமோ?' என சந்தேகித்தவனாய் அடுத்த நாள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கே அவளைப் பரிசோதித்த மருத்துவர், "பூப்பெய்தும் பருவத்தில் நிறைய பெண் பிள்ளைகள் சந்திக்கும் ஹார்மோன் பிரச்சினைதான். ஒரு மாதத்திற்கு மாத்திரை தர்றேன். நல்லா தூக்கம் வரும். அதன் பிறகும் எந்த மாற்றமும் இல்லேன்னா மனநல மருத்துவமனைக்கு இந்த பரிந்துரைக் கடிதத்தோடு ஆலோசனைக்கு அழைச்சிட்டுப் போயிடுங்க," என்றபடி கடிதத்தை நீட்டினார்.
அப்போது வெளியில் கடைசிப் பேருந்து சென்ற சத்தம் என் நினைவைக் கலைத்தது. சாளரத்தின் வழியே எட்டிப்பார்த்த எனக்கு சிங்கப்பூரே கறுப்புக் குடைக்குள் மூழ்கியது போல தோன்றியது.
சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது மட்டும் அந்த பேருந்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைவது புலப்பட்டது.
மலருக்கும் இப்போ இதோ இந்த மாது வயதிருக்கும். அவளைப் பார்த்து எப்படியும் நான்கு வருடங்கள் இருக்குமா? இப்போ எங்க இருக்கான்னே தெரியலையே... அவ வேலை செஞ்ச கடையில எத்தனை தடவை தேடி அலைஞ்சாச்சு..
கடைசியா அவ பேசினப்ப அந்த குரல்ல இருந்த பதற்றம் இன்னும் என் செவியில ஒலிச்சிக்கிட்டுத்தான் இருக்கு.
திறன்பேசி எண்ணை மாற்றியதோடு, வேலையையும் விட்டுட்டாளே... அவ கணவர் இறந்த செய்தி கூட அவளோட கடையில வேலை பாத்தவங்க சொல்லித்தான் தெரிய வந்துச்சு... அந்த நாள்லதான் அவ என்னைக் கடைசியா அழைச்சது...
ஒரு வேளை, அந்த துக்கச் செய்தியை சொல்லத்தான் என்னை அழைச்சிருப்பாளோ? அன்னக்கி அலுவலகக் கூட்டத்தில பெரிய பிரச்சினை.
மேலதிகாரி என்னை உண்டு இல்லைன்னு புரட்டிப் போட்டு கேள்வி கேட்டுட்டு இருந்தாரு...அந்த நேரம்னு பாத்தா அவ அழைப்பு வரணும்? அதான் அப்படி பேசிட்டேன்... யோசித்துப் பார்த்த எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
அப்போது கமலியின் அறையில் இருமல் சத்தம் கேட்டு விரைந்தேன். நல்லவேளை தூக்கத்தில்தான் இருந்தாள்.
அவளுடைய சுருண்ட கேசத்தை வருடியவாறு அருகிலேயே அமர்ந்தேன்.
மருத்துவர் சொன்ன மாதிரி ஒரு மாதம் முடியப் போகிறதே! ஆனால் இவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.
வாரத்துல இரண்டு நாள் பள்ளிக்குப் போறா. மீதி நாள் தலைவலின்னு படுத்துடுறா.
போதாக்குறைக்கு சரியா சாப்பிடுறதில்லைன்னு பணிப்பெண்ணிடமிருந்து புகார் வேறு.
இப்போல்லாம் அலுவலகத்துல என்னால நிம்மதியா வேலைகூட செய்ய முடியலை என உள்ளுக்குள் வெம்பிப் புழுங்கினேன்.
சிந்தித்த நான் இனியும் தாமதிக்காமல் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுதான் இதற்குச் சரியான தீர்வு என முடிவெடுத்தேன்.
மனநல மருத்துவமனைக்கு கமலியோடு சென்ற எனக்கு, அந்தச் சூழலே மிகவும் வித்தியாசமாகப் பட்டதோடு உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்தது.
அங்கே அவ்வப்போது சில பிள்ளைகள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். சீட்டுக்கட்டை குலுக்கி ஒவ்வொன்றாக எறிவது போல, எனக்குள் இருந்து அடுக்கடுக்காக கேள்விகள் பறந்தன.
இத்தனை பிள்ளைகள் ஆலோசனைக்காக வருகிறார்களா? அப்படி இந்த வயதில் என்னதான் பிரச்சினை?
ஓடியாடி விளையாட வேண்டிய பருவமல்லவா? அப்போது ஒரு தாதி வந்து என்னை வெளியிலேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு முதலில் கமலியை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றார்.
அறைக்கு வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்து சற்றே என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன்.
எதிர்த்திசையில் சற்றுத் தள்ளி சீரான வரிசையில் ஆர்க்கிட் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
அதைப் பார்த்ததும், மலர் விமானப் பயணத்தில் பேசிய நினைவுகள் என்னுள் மலர ஆரம்பித்தன.
நான்கு வருடங்களுக்கு முன்பு அலுவலகத் திட்டப்பணிக்காக இந்தியா சென்று விட்டு சிங்கப்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தேன்.
நாம் ஒவ்வொருவருமே பயணத்தின்போது வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களைக் கடந்து வந்திருப்போம். அன்று நான் பயணம் செய்த விமானத்தில் என் இருக்கைக்கு அருகில் சுமார் இருபத்தி நான்கு வயது மதிக்கத்தக்க ஓர் இளம்பெண், கையில் ஒரு சிறிய மஞ்சள் நிறப் பையை இறுக்கப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள். அவள் காதுகளில் அடைக்கப்பட்ட பஞ்சும், விமானம் புறப்படும்போது இருக்கைப் பட்டையைப் போட தடுமாறிய விதமும் அது அவளின் முதல் விமானப் பயணமாக இருக்கலாம் என என்னை எண்ண வைத்தது.
நான் அசதியில் என்னுடைய இருக்கையைப் பின்னால் நகர்த்தி உடலை சற்று தளர்த்திக்கொண்டு அமர்ந்தேன்.
சிறிது நேரத்தில் விமானப் பணிப்பெண் பானங்களைக் கொண்டு வர எனக்கு இருந்த உடல் அசதியில், "ஒயின் ப்ளீஸ்" என்றேன். அப்போதுதான் அவளைப் பற்றிய நினைவு வர, அவள் ஏதும் சங்கடப்படுவாளோ என ஐயம் தோன்றியது. தயங்கியப்படியே அவளிடம், "உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லேன்னா, நான் ஒயின் எடுத்துக்கலாமா?" என்று கேட்க, அவளோ "உங்கள் விருப்பம்" என்றாள். அவள் அவ்வாறு கூறினாலும் ஏனோ ஒயினை அன்று தவிர்க்க முடிவு செய்தேன்.
அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு என் மீது சற்று நம்பிக்கை வந்ததுபோல் தோன்ற, அதற்கு அடையாளமாக ஒரு புன்சிரிப்பை உதிர்த்தாள். நான் அவளிடம்,
"சிங்கப்பூர்ல எங்க, உறவினர் வீட்டுக்கா?" என்றேன்.
"இனிமேல்தான் அறிமுகமாகி உறவினர் ஆகணும்," என்றாள்.
என்ன குழப்பமான பதில் இது? யோசித்த என் முக ரேகைகளை படித்தவளாய், "கல்யாணத்துக்குப் போறேன்," என்றாள். இப்படி முன்னாடியே தெளிவா சொல்லியிருக்கலாம் என நினைத்தவாறே, "வேறு யாரும் கூட வரலையா?" என்றேன்
"கல்யாணப்பொண்ணு நானிருந்தா பத்தாதா?" என்று அவள் கூற, ஏதோ விமானமே ஆட்டம் கண்டு கீழே இறங்குவதைப் போல் அதிர்ந்தேன்.
"என்ன சொல்றீங்க, உங்களுக்குக் கல்யாணமா?" என நம்பாமல் கேட்ட என்னிடம் அவள் கையில் வைத்திருந்த அந்த மஞ்சள் நிறப் பையிலிருந்து ஊரில் செய்யப்பட்ட தாலி, திருமண அழைப்பிதழ் மற்றும் சில சடங்கு சம்பிரதாயப் பொருள்களை எடுத்துக் காட்டினாள். அவள் திருமண அழைப்பிதழை என்னிடம் நீட்ட, அவளின் பெயர் மலர் என புரிந்துகொண்டேன்.
"ஏன் இப்படி தனியா?" என நான் அதற்கு மேல் வார்த்தை வராமல் இழுக்க, அவளிடம் சற்று நேர அமைதி. 'தேவையில்லாம அதிகமா உரிமை எடுத்து கேட்டுட்டேனோ? முன்பின் அறிமுகமில்லாத என்னிடம் இதெல்லாம் பகிர அவசியமில்லை என பேசாம இருக்காளோ?' எனக்குள் கேள்வி பிறந்து குற்ற உணர்வு குறுகுறுத்தது.
சற்று நேரத்தில் விமானம் சீரான வேகத்துடன் மேலே பறக்க, உள்ளே விளக்கு அணைக்கப்பட்டு விமானமும் அவளைப் போலவே மௌனமாகியது.
பயணிகளில் சிலர் தூங்க ஆயத்தமானார்கள். அப்போது மலர் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடீரென்று என்னிடம், "நீங்க சிங்கப்பூர்வாசியா?" என்று கேட்க, நானும் அதை ஆமோதித்து தலையசைக்க அவள் இப்போது அதிக நம்பிக்கையுடன் பேசத் துவங்கினாள்.
"நான் தஞ்சாவூர் பக்கம். எனக்கு பெத்தவங்க கிடையாது. சித்தி வீட்ல தங்கி கிடைச்ச சின்னச் சின்ன வேலையை செஞ்சிக்கிட்டு தட்டுத்தடுமாறி பனிரெண்டாவது வரையிலும் படிச்சு, பள்ளியில இரண்டாவதா வந்தேன்," என்று சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் ஒருவிதப் பெருமிதம். அவளுக்கு படிப்பின் மேல் அலாதியான விருப்பம் என்பது எனக்கு தெளிவாகப் புரித்தது. அவளே தொடர்ந்தாள்.
"வீட்டுச் சூழ்நிலை அதுக்கப்புறம் படிக்க முடியலை. இப்பதான் யாரோ சொல்லி சிங்கப்பூர்ல மாப்பிள்ளை இருக்க செய்தியை சித்தி தெரிஞ்சிக்கிட்டு என்னைப் பேசி முடிச்சு ஏத்திவிட்டாங்க," என்று பெருமூச்சுடன் நிறுத்தினாள்.
"நல்லதுதானே மலர், சீக்கிரமே சிங்கப்பூர் மருமகளாகப் போறேன்னு சொல்லுங்க. கட்டிக்கப் போறவரு என்ன பண்றார்?" என நான் விசாரித்ததும் அவளுடைய அந்த முகம் வெளிறிப்போனதுடன் கண்கள் கலங்கின.
"மனநிலை சரியில்லாதவருக்கு வாழ்க்கைத் துணையாகப் போறேன்," என்றாள் சன்னமான உடைந்த குரலில்.
அதிர்ச்சியின் விளிம்பிற்கே சென்ற எனக்கு, அப்போதுதான் அவளின் இக்கட்டான நிலைமை புரிந்தது. ஏதோ அதிசயத்தைப் பார்த்தது போல் எனக்குள் ஒரு பிரம்மிப்பு!
எந்தப் பெண்ணும் எடுக்கத் தயங்கும் முடிவை சர்வசாதாரணமாக எடுத்துவிட்டாளே! நான் அதிர்ச்சியில் பேச்சிழக்க அவளே தொடர்ந்தாள்.
"போற இடம் சிங்கப்பூராச்சே, எப்படியும் பிழைச்சிக்கலாம்னு ஒரு நம்பிக்கையில நானும் கிளம்பிட்டேன். அவரையும் சரி பண்ண முயற்சிக்கணும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் உங்களை அழைக்கலாமா?" எனக் கேட்டாள்.
"நிச்சயமா மலர். முதல்ல என் எண்ணை குறிச்சிக்கங்க," என்றேன்.
அவளிடம் அப்போது திறன்பேசி இல்லாததால் ஒரு துண்டுக் காகிதத்தில் என் எண்ணை எழுதிக்கொண்டு அவளே என்னை தொடர்புகொள்வதாய் கூறினாள்.
அந்தத் காகிதத்தின் பின்புறம் அவள் போக வேண்டிய சிங்கப்பூர் வீட்டின் முகவரியும் இருந்தது.
விமானம் தரையிறங்க, நாங்கள் வெளியேறி பயண மூட்டைகளை எடுக்க விரைந்தோம்.
விமான நிலையத்தின் உள்ளே வழியெங்கும் வியப்போடு பார்த்துக் கொண்டே வந்தவளின் விழிகள் ஓரிடத்தில் நிலைகுத்தி நிற்க, அந்தத் திசையில் திரும்பினேன்.
"இதுதான் சிங்கையின் தேசிய மலர், ஆர்க்கிட்" என்று ஒரு மலரைப் பற்றி இன்னொரு மலரிடமே கூறினேன். கேட்ட அவள், "பார்க்கவே ரொம்ப அழகா இருக்கே!" என பூரித்தாள்.
பேசியவாறே வெளியே வந்து வாடகை உந்து வண்டியில் முதலில் அவளை ஏற்றி விட்டு பிறகு நான் வீடு திரும்பினேன்.
நாட்கள் நகர்ந்தன. பிறந்த குழந்தையைவிட்டு நகர முடியாத தாயைப் போல என்னால் என் திறன்பேசியை விட்டு அகலவே முடியவில்லை. உள்ளுக்குள் ஒரே தவிப்பு.
இந்நேரம் மலருக்கு கல்யாணம் ஆயிருக்குமே! ஏன் என்னை இத்தனை நாட்களாக அழைக்கவே இல்லை?
வேறு யாரேனும் உதவி செய்திருப்பாங்களோ?
எந்த புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும் பாய்ந்துசென்று எடுத்து ஏமாந்ததுதான் மிச்சம்.
என் தவிப்புக்கு மருந்தாக கிட்டத்தட்ட மூன்று மாதம் கழித்து அவளிடமிருந்து அழைப்பு வந்தது.
யாரோ கணவர் வழி தூரத்து உறவினர் அவளை ஒரு கடையில் காசாளர் வேலைக்கு சேர்த்துவிட்டதாகக் கூறினாள். அவளது குரலைக் கேட்டதும் எனக்குள் நிம்மதி பரவியது. காத்திருக்க பொறுமையின்றி, அன்று மாலையே அவளைப் பார்க்க சென்ற நான்,
"எப்படி இருக்கீங்க மலர்?" என்றேன்.
"இருக்கேன், கல்யாணம் மட்டும் ஆயிடுச்சி". கழுத்தில் தொங்கிய தாலிக்கயிறு புதுப் பொலிவுடன் இருந்தாலும் அவள் மெலிந்த உடலுடன் இன்னும் பழைய மலராகவே இருந்தாள்.
"வேலை பரவாயில்லையா மலர்?"
"ஏதோ போகுது. அவருக்கு மருத்துவச் செலவு வேற அதிகமா ஆகுது. ஏதாவது படிச்சிட்டு வேற வேலைக்கு மாறினா நல்லது. கொஞ்சம் உதவி பண்றீங்களா?" என்றவளிடம், "சரி மலர். இங்க படிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு, நான் எல்லாத்தையும் விசாரிச்சிட்டு அதற்கான ஏற்பாட்டோடு ஒரு வாரத்துல உங்களை திரும்பவும் வந்து பாக்குறேன்," என்றபடி விடைபெற்றேன். ஆனால் அடுத்த நாளே அலுவலகக் கூட்டத்தில் பிரச்சினையின்போது அழைப்பு வர, "நான்தான் விசாரிக்கிறேன்னு சொன்னனே, அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி மலர்?" என்றபடி அவள் பதிலைக்கூட கேட்காமல் அழைப்பைத் துண்டித்தேன். அதற்குப் பிறகுதான் தெரிந்தது நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று, அன்றுதான் அவளுடைய கணவர் இறந்திருக்கிறார்.
அப்போது ஒரு தாதி வந்து அழைக்க, சுய நினைவு அடைந்த நான் மருத்துவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற பரிதவிப்புடன் கால்கள் நடுங்க உள்ளே நுழைந்தேன்.
கமலி அங்குள்ள நாற்காலியில் தலையைக் கவிழ்ந்தபடி அமர்ந்திருக்க, குளிர்சாதன வசதி கொண்ட அறையிலும்கூட எனக்கு மெல்லிழைத் தாள் தேவைப்பட்டது.
மருத்துவர் என்னிடம், "கமலியிடம் பேசினோம். அவளுக்கு அப்பா மட்டும்தான்னு சொன்னா. அவ பருவமடையும் நிலையில இருக்கால்ல.. சில பெண்களுக்கு இப்படித்தான் காரணமில்லாமல் மனநிலை மாற்றம், மன அழுத்தம் உண்டாகும். ஆலோசனை கொஞ்சம் கொடுத்தா எல்லாம் தெளிவாயிடுவா. அதுக்காக கமலிக்கு நல்ல அனுபவமுள்ள ஊழியரை நியமிச்சிருக்கேன்," என்றார்.
அப்போது கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, "வாங்க மலர்," என்றார் மருத்துவர்.

