சிறுகதை
கி. சுப்பிரமணியம்
கருத்த மேனியில், சாதாரண நூல் சேலை கட்டி, ரவிக்கை எதுவும் போடாத கிழக் கோலம்! பஞ்சடைந்த தலைமயிர். அதிகம் கோதாத அந்த தலைக்குள்தான் எப்பேர்ப்பட்ட அனுபவம், அறிவு, ஆற்றல்! ஆடுகள் மேய்த்துத் திரிந்தபோதும், மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் திறனை எங்கு கற்றதோ இக்கிழவி என்பதே அந்த வட்டாரத்தில், பலருக்கும் ஏற்பட்ட ஆச்சரியம். அது ஒருபுறம் இருக்க, இப்படி ஆடுகள் மேய்க்கும் சூழல் அக்காலத்தில், சிங்கப்பூரில் இருந்ததை இன்றைய தலைமுறை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது! ஆயினும் ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சூழல் இருக்கத்தான் செய்தது!
சிறிய இரப்பர் தோட்ட மேடு. அங்கு சில தகரக் கூரைகளைக் கொண்ட வீடுகள். பல இனத்திற்கிடையிலும் ஒற்றுமையாக வாழும் சில தமிழ்க் குடும்பங்கள். அங்கேதான் இந்த கிழவியும் வாழ்ந்து வந்தது. அதன் பூர்வீகம் சரியாகத் தெரியவில்லை.
கொஞ்சம் ஆடுகள் வைத்து மேய்த்து வந்ததால் இக்கிழவியை ஆட்டுக்காரக் கிழவி என்றே எல்லோரும் அழைக்க ஆரம்பித்தனர். அதுவே அதன் பெயராக நிலைத்துப் போயிற்று.
யாருக்காவது உடம்பில் சுளுக்கு ஏற்பட்டாலோ, பிரசவ வேதனை ஏற்பட்டாலோ, இந்தக் கிழவியை அழைத்தே மருத்துவம் பார்த்தார்கள்.
மகப்பேற்றின்போது அதிகமாக வலி தெரியாதபடி இருக்க, சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த கிழவியைக் கூப்பிட்டு, வாரம் ஒருமுறை உருவிவிட அழைப்பார்கள். இந்தக் கிழவியும் வந்து மிகவும் பக்குவமாக கருவுற்ற பெண்ணின் வயிற்றை மெல்ல நீவி விடுவாள்.
அவளின் திறமையான விரல்கள், பிறக்கப்போகும் மகவை பக்குவமான கோணத்தில் கொண்டுவந்து விடுவதால், மகப்பேறு வலியே தெரியவில்லை என்று ஆச்சரியமாய் தாய்மார்கள் பேசிக்கொள்வார்கள்!
இத்தனைக்கும் வாரா வாரம் வரும் கிழவிக்கு கையில் ஒரு ஐந்து வெள்ளி நோட்டையும் ஒரு சிறிய மான் சாப் சம்சு (சாராயம்) பாட்டில் ஒன்றையும் தந்துவிடுவார்கள். மகப்பேறு நல்லவிதமாக ஆனவுடன், மேலும் கொஞ்சம் பணம், நூல் புடவை, பழங்கள் போன்றவற்றை தாம்பாளத்தில் வைத்து கொடுப்பார்கள். அதோடு சிறிய சாராய பாட்டில் ஒன்றைச் சேர்த்து கொடுத்தால், பொக்கைவாயில் நீண்ட புன்னகை தவழும்!
அந்த கிழவியின் குடும்பம் மற்றும் சுற்றம் பற்றி அதிகமாக யாரும் பேசுவதில்லை!
பொதுவாக கருவுற்ற பெண்கள் மத்தியில் ஆட்டுக்காரக் கிழவிக்கு நல்ல கிராக்கி.
சற்று தொலைவில் வாழ்ந்த, கொஞ்சம் வசதியுள்ள ஒரு தம்பதியருக்கு பல ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லை.
கிழவி வந்து வயிற்றை உருவிவிட்டால் சரியாகிவிடும் என்று ஒருத்தி சொன்னதால், அவளை அழைத்து வந்தார்கள்.
மூன்று வாரம் அந்த பெண்ணின் வயிற்றுப் பகுதியை நீவிவிட்டு சென்றது கிழவி. நாலாவது வாரம், நீவிக்கொண்டிருந்த கிழவி ஏதோ முணுமுணுத்தது.
'என்ன. ஏதோ முணுமுணுக்கிறாயே' என்று படுத்தவாறே கேட்டாள் அந்த பெண்மணி.
'சொல்லுறேன்னு, கோபமோ வருத்தமோ படாதம்மா. உன் வயித்த மூனு வாரமா உருவரத வச்சி சொல்லுறேன். உனக்கு மகப்பேறு ஆவுரத்துக்கு கொஞ்சம் நாள் ஆகும். ஒரு ஐந்து வருசமாவது ஆகும் போல தோனுது.
"உருவரத வச்சு சொல்லுறேன். நீ பணம் கொடுக்கிறதுக்காக ஏதோ உருவிட்டு போக எனக்கு மனசு இல்ல," என்று பக்குவமாகச் சொல்லி முடித்ததுதான் தாமதம், வந்ததே அந்த வசதியான அம்மாளுக்குக் கோபம்.
'நீ யாரு இப்படியெல்லாம் சொல்ல. நீ என்ன டாக்டரா? நீ ஒரு குடிகாரக் கிழவி. எனக்குக் குழந்தை பிறக்க ஐந்து வருஷம் ஆகும்னு சொல்ல...' என்று கோபமாக திட்ட ஆரம்பித்தவுடன், பொறுமையுடன் சொல்லிக்கொண்டிருந்த கிழவிக்கும் சாமி ஆட்டம் வந்துவிட்டது!
கிழவி, அவளை தன் அகராதியில் இருந்த கெட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் சேர்த்து பதிலுக்கு திட்டித் தீர்த்தாள்!
'ஏன்டி உன் நிலமைய எடுத்து பக்குவமா நான் சொன்னா, என்னையா குடிகாரினு திட்டுரே?'
மேலும் கொஞ்சம் திட்டிவிட்டு, அன்றைக்குப் பெற வேண்டிய பணத்தையும் வாங்காமல் சென்று விட்டாள் அந்த ஆட்டுக்காரக் கிழவி. அந்த பெண், தன் கணவனிடம் இதைச் சொல்லி அழுது தீர்த்தபின் சில நாட்கள் கழித்து, மிக பிரபலமான மேற்கத்திய மகப்பேறு ஸ்பெஷலிஸ்ட்டை அணுகி, பல மருத்துவ சோதனைக்குப்பின் கிழவி சொன்னதையே டாக்டர் சொன்னது வேறு கதை!
ஐந்து வெள்ளிக்கும் சின்ன சாராய பாட்டிலுக்கும் கிழவி சொன்ன சோதனை முடிவை நம்பாது, முன்னூறு வெள்ளிக்கு அதே பதிலை விலை கொடுத்து வாங்கினர் தம்பதியர்!
*
ஆட்டுக்காரக் கிழவி வசிக்கும் இடத்திலிருந்து, இரண்டு கல் தொலைவில், இந்த கிழவிக்குப் பழக்கப்பட்ட மாரியம்மாளும் தன் குடும்பத்துடன் கம்பத்தில் வசித்துவந்தாள். அன்று நல்ல மழை பெய்து கொஞ்சம் ஓய்ந்தது. பள்ளியில் இருந்து, அவளின் பத்து வயது மகன் வீடுதிரும்பிக் கொண்டிருந்தான்.
மழையால் பாதை எல்லாம் சேறாக இருந்தது. ஒரு சிறிய வாய்க்காலைத் தாண்ட போடப்பட்ட குறுகலான மரப்பாலத்தைக் கடக்கும் போது, திடீரென கால் வழுக்கி வாய்க்காலில் தொப்பென விழுந்துவிட்டான்!
மகன் விழுந்ததைக் கண்ட மாரியம்மாள், அலறியடித்துக்கொண்டே ஓடிவந்து, சிலரின் உதவியுடன் மகனை மேலே கொண்டுவந்தாள்.
'அய்யோ கை வலிக்குது அம்மா' என்று முனக ஆரம்பித்தான் பையன்.
'பொறுத்துக்கப்பா கொஞ்சம். வீட்டுக்கு வந்தவுடன் வலிக்கு மருந்து போட்டுக்கலாம். நீ மெதுவா எழுந்து நட' என்று பரிவுடன் மகனை அணைத்தபடி நடந்தாள் மாரியம்மாள். அதற்குள் சின்ன பெண்கள் கூட்டம் கூடிவிட்டது.
'சதை பிரண்டு இருக்கும் போல தெரியுது' என்றாள் ஒரு நடுத்தர வயது பெண்.
'ஆமாம் நல்லா உருவி விட்டா சரியாகிடும்' என்றாள் இன்னொருத்தி!
'நீ எதற்கும் பக்கத்துல இருக்கிற ஐம்பது காசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போரது நல்லது மாரியம்மா!' என்றாள், கொஞ்சம் படித்தவளான இன்னொருத்தி!
(அப்பொழுது இலவச மருத்துவமாக இருந்து, பின்பு ஐம்பது காசு கட்டணம் கட்டும் ஒன்றாக மாற்றப்பட்ட ஒரு சிறிய அரசு மருந்தகம் சற்று தொலைவில் இருந்தது.)
குழப்பத்துடன் மகனைப் பிடித்துக்கொண்டே நடந்தாள் மாரியம்மாள்.
'அந்த ஆஸ்பத்திரிக்கு போனா நாலு மணி நேரம் காத்து கிடக்கணும். நான் சொல்றத கேளு. நீ எதற்கும் ஆட்டுக்காரக் கிழவிய கூப்பிட்டு வைத்தியம் பாரு. அது உருவிவிட்டா சரியாகிவிடும். அதுக்குத் தெரியாத வைத்தியமா?' என்றாள் முதலில் ஆலோசனை சொன்னவள்!
மாரியம்மாளுக்கும் அதுதான் சரியெனத் தோன்றியது. மாரியம்மாளுக்கும் கொஞ்சம் வைத்தியம் தெரிந்தபோதிலும், ஆட்டுக்காரக் கிழவி அளவிற்கு இல்லை. அதனால்தான், அந்தக் கிழவியிடம் காட்டலாம் என்று தோன்றியது அவளுக்கு.
மகனை எப்படியோ வீட்டிற்கு அழைத்துவந்து, முழங்கையருகே ஏற்பட்டுள்ள சிறு வீக்கத்தை வெந்நீரால் ஒத்தடம் கொடுத்து பார்த்தாள். மகன் வலியால் இன்னும் முனகிக்கொண்டே இருந்தான்.
ஆட்டுக்காரக் கிழவிக்கு சொல்ல ஆள் அனுப்பிவிட்டு, மகனுக்கு கொஞ்சம் உணவு தயாரிக்க ஆரம்பித்தாள் மாரியம்மாள்.
மாலை, ஒரு ஏழு மணியளவில் கிழவி, மாரியம்மாள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
'வாங்கம்மா' என கிழவியை வரவேற்றாள் மாரியம்மாள்.
'கொஞ்சம் காப்பி குடிக்கிறீங்களா'? என வந்த கிழவியை உபசரித்தாள்.
'அது கெடக்கட்டும், உன் மகனுக்கு என்ன ஆச்சு' என வந்த காரியத்தில் நாட்டம் காட்டினாள் கிழவி. நடந்ததை விவரமாக சொல்லி முடித்தாள் மாரியம்மாள். அவள் மகனை அருகில் அழைத்து, காயம்பட்ட அவன் கையை கிழவியிடம் காட்டினாள்.
'சதை கொஞ்சம் புரண்டமாதிரி தெரியுது, நீங்க உருவி விட்டா நல்லாயிடும்னு நினைக்கிறேன்' என்று இழுத்தாள் மாரியம்மாள்.
கிழவி அவனை அருகில் வரச்சொல்லி, அவனுடைய வீக்கம் கண்ட கையை உன்னிப்பாக கண்களை சுருக்கிப் பார்த்தாள். பின்பு கொஞ்சம் தொட்டு பார்த்தவுடனேயே அவன் வலியால் மீண்டும் முனக ஆரம்பித்தான்.
கிழவி அவனை கொஞ்சம் சாந்தப்படுத்தி, அவன் கையை சற்று உயர்த்தி தன் காதை அவனுடைய வீக்கப் பகுதியில் லேசாக பதித்து, மெல்ல அவன் கையை கொஞ்சம் அசைவுகொடுக்க, பையன் விர்ர்...என கத்த ஆரம்பித்துவிட்டான்!
அவ்வளவுதான்!
அவன் கையை மெல்ல இறக்கிவிட்டு, மாரியம்மாளை முறைத்துப் பார்த்தாள் கிழவி!
'நீ என்ன நெனச்சிகிட்டு இருக்கே'?
'எலும்பு முறிஞ்சு இருக்கு. அங்க உருவிவிட சொல்லுரியே. நான் தான் கைய ஒடச்சேனு போலீசு என்ன புடிச்சிட்டு போறதுக்கா'? என்று மாரியம்மாளை திட்ட ஆரம்பித்தது கிழவி!
மாரியம்மாள் அதிர்ந்து போனாள்!
'நீ மரியாதையா பெரிய ஆஸ்பத்திரிக்கு உன் மவன அழைச்சிட்டுபோய் கட்டுப்போடு' என்று மாரியம்மாளை பார்த்துச் சொல்லிவிட்டு கிழவி தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
கிழவி சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும் என இப்பொழுது நம்பினாள் மாரியம்மாள்.
மகனின் வீக்கம் கண்ட கைப்பகுதியை காதில் பதியவைத்து, கொஞ்சம் அசைத்தே, எலும்பு முறிவு என்று கிழவி சொன்னாளே! சரி ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதுதான் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
பெரிய ஆஸ்பத்திரி என்று அழைக்கப்பட்ட ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு மறுநாள் காலை, மகனை அழைத்துக்கொண்டு பஸ் பிடித்து விரைந்தாள் மாரியம்மாள்.
அங்கு சென்று டாக்டரை கண்டவுடன், அவரும் எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு, இது தலைமயிர் அளவு, இரண்டு அங்குலம் எலும்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறி மாவுக்கட்டு போட்டு, கையைத் தாங்குவதற்கு, துணியால் தொட்டில் ஒன்றும் செய்து பையனின் கழுத்தில் மாட்டி விட்டார்!
மகனுடன் வீடுநோக்கி சென்றுகொண்டிருந்த மாரியம்மாள், ஆட்டுக்காரக் கிழவியைப் பற்றி சிந்தித்துக்கொண்டே சென்றாள்.
டாக்டர் எக்ஸ்ரே கருவி மூலம் எலும்பில் ஏற்பட்ட முறிவை கண்டுபிடித்தார், சரி! ஆனால் காதுவைத்து கேட்டே இதை சர்வசாதரணமாகச் சொல்லிட்டதே கிழவி, என்ற ஆச்சரியத்துடன் வீடு சென்று சேர்ந்தாள்.
மறுநாள் ஆட்டுக்காரக் கிழவியை சந்தித்து, பெரிய ஆஸ்பத்திரிக்கு சென்று மகனின் கைக்கு கட்டுபோட்ட விவரத்தை சொல்லி, ஐந்து வெள்ளி பணத்தை கிழவியிடம் நீட்டினாள் மாரியம்மாள்.
'எனக்கு எதுக்குப் பணம் தர?' என்றாள் கிழவி
'நேத்து மகன வந்து பார்த்தீங்க இல்லையா. அப்ப பணம் கொடுக்கிறதுக்கு முன்னால நீங்க கிளம்பிட்டீங்க' என்று விளக்கம் தந்தாள் மாரியம்மாள்.
நான் ஒரு வைத்தியமும் செய்யல. எலும்பு முறிவு தெரிஞ்சி உன்கிட்ட சொன்னே அவ்வளவுதான். அதனால பணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள் கிழவி!
அது அவள் சுபாவம்!
செய்யாத வைத்தியத்திற்கு பணம் வாங்க மாட்டாள். தான் செய்த வைத்தியத்தால் இன்னார் பயன் பெற்றார் என்றும் ஒரு வார்த்தை அவள் யாரிடமும் சொன்னதில்லை. மேலும் தன்னைவிட ஏழ்மையில் இருந்த எத்தனையோ குடும்பத்திற்குப் பணம் வாங்காமலே வைத்தியம் செய்திருக்கிறாள்!
*
குழந்தைகளுக்கு வைத்தியம் பார்ப்பதிலும் திறமையானவள்.
ஒருமுறை, அதே வட்டாரத்தில் வாழ்ந்த இளந்தம்பதிகளுக்கு பிறந்த நான்கு மாத குழந்தைக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
உறக்க அழுதுகொண்டே இருந்ததை அவ்வழியே நடந்து சென்ற கிழவியின் காதில் விழ, கொஞ்சநேரம் அங்கேயே நின்று உன்னிப்பாக அந்த அழுகையின் தன்மையை கேட்டுக்கொண்டிருந்தாள்.
குழந்தையின் விடா அழுகைக்கு இடையே பெற்றோரின் பேச்சுக் குரலும் கேட்கிறது.
வீட்டில் இருந்த பெரியவர்களும் குழந்தைக்கு, விஷப்பூச்சி ஏதேனும் கடித்திருக்குமோ என்ற சந்தேகம் ஒருபுறம்.
ஆளுக்கு ஆள் தூக்கிவைத்து சமாதானப்படுத்தியும், குழந்தை அழுகுரல் கூடி, கதற ஆரம்பித்ததே தவிர குறையவில்லை!
அந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருக்கையில், கிழவி அவர்கள் வீட்டின் கதவோரம் வந்து நின்றது.
கிழவியைக் கண்ட குழந்தையின் தாய், கிழவியைப் பார்த்து என்ன வேண்டும் என்று பதற்றத்துடன் கேட்டாள்.
இந்த படித்த இளந்தம்பதியருக்கும் இந்த கிழவியை பற்றி கொஞ்சம் தெரியும். ஆயினும் அவளிடம் வைத்தியம் செய்துகொண்டதில்லை. அதில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை.
'குழந்தை ரொம்ப நேரமா அழுகிறதே' என்று கிழவி அக்கரையுடன் கேட்டாள்.
"ஆமாம். ஏன்னு தெரியவில்லை. அதான் ஆஸ்பத்திரிக்கு கிளம்புறோம்," என்று குழந்தையின் தாய் பதில் சொல்ல, அவள் கணவன் மருத்துவமனைக்குச் செல்ல அவசரம் காட்டினான்.
கிழவி கொஞ்ச நேரம் அமைதியுடன் இருந்துவிட்டு, 'குழந்தைக்கு, கழுத்தில் உரம் விழுந்திருப்பதுபோல் தெரிகிறது அம்மா' என்றாள்
"உரம்னா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் குழந்தையின் தாய்.
"சில சமயம் குழந்தைய சரியாக தூக்காததால் கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டிருக்கும், அதைத்தான் உரம்னு சொன்னேன்," என்று விளக்கினாள் கிழவி.
"கொஞ்ச நேரம் குழந்தைய என்கிட்ட கொடுத்தா உரம் விழுந்ததை சரியாக்கிடுவேன்," என்று கேட்டுக்கொண்டாள் கிழவி.
அந்தப் பெண்ணின் கணவனுக்கு இந்த உரம் விழுந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
இந்த கிழவி உரத்தை எடுக்கிறேன் என்று சொல்லி குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தினால் என்ன செய்வது. வேண்டாம் என்று மனைவிக்கு ஆங்கிலத்தில் சொல்லி தடுத்தான்.
ஆங்கிலம் புரியாவிட்டாலும் அவனின் மனநிலை கிழவிக்கு புரிந்தது.
"சரி குழந்தைய என்கிட்ட கொடுக்க வேண்டாம். ஒன்னு செய்யுங்க, வீட்டில் வேட்டி இருந்தா கொண்டுவாங்க. பயப்படாதீங்க," என்றாள்.
குழந்தையின் பாட்டியும் அங்கிருந்ததால், அவர்களும் கொஞ்சம் கேட்டுக்கொள்ள, குழந்தையின் தந்தை, நம்பிக்கை இல்லாது உள்ளே சென்று ஒரு வேட்டியை எடுத்து வந்தான்.
வேட்டியை தரையில் விரித்து குழந்தையை நடுவில் படுக்கவைக்கச் சொன்னாள் கிழவி. அதன்படியே குழந்தையின் தாய் படுக்க வைத்தாள்.
குழந்தை இன்னும் உரக்க கத்தி அழுதுகொண்டேதான் இருந்தது. முகமெல்லாம் சிவந்துபோய் வலியால் துவண்டு கிடந்தது.
கிழவி குழந்தையின் தந்தையை பார்த்து, வேட்டியின் இரு முனைகளையும் இரு கைகளால் பிடித்து காட்டி, அதுபோல் அங்கும் அவரை வேட்டியை பிடித்து கொஞ்சம் உயரமாக தூக்கச் சொன்னாள். குழந்தையின் தந்தையும் கொஞ்சம் பயந்த வண்ணம் சற்று உயர்த்தித் தூக்கினான்.
"நீ எதையும் செய்யாம சும்மா பிடிச்சிக்கிட்டு இருந்தா போதுமப்பா," என்று சொல்ல, இப்போது தொட்டில்போல் வேட்டி ஆனது.
தான் பிடித்திருந்த இருமுனைகளால் மெல்ல வேட்டியை ஒருவகையாக அசைக்க செய்தாள் கிழவி. குழந்தை இப்பொழுது வேட்டிக்குள் உருள ஆரம்பித்தது, இது போல் இப்படியும் அப்படியும் உருண்ட குழந்தையின் அழுகுரல் கொஞ்சம் கொஞ்சமாக தாழ்ந்தது.
மெல்ல வேட்டியை பழையநிலைக்கு தரையில் வைத்து, தாயைக்கொண்டு, குழந்தையைத் தூக்கச் சொன்னாள் கிழவி.
அழுகையை நிறுத்திய குழந்தை, கொஞ்சநேரம் சிணுங்கிக்கொண்டிருந்து, பின்பு சோர்ந்து தாயின் தோளில் தூங்க ஆரம்பித்தது!
தம்பதியர் ஆச்சரியப்பட்டனர்!
"குழந்தையின் கழுத்தில் உரம் விழுந்ததால் வலியால், அழுதுக்கிட்டிருந்திருக்கு. இப்ப கவலைப்பட ஒன்னும் இல்லை. குழந்தைய தூக்கும்போது கவனமா தூக்குங்க," என்று அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பத் தயாராக இருந்தது கிழவி.
கண்கலங்கி நின்ற குழந்தையின் பெற்றோர், கிழவியின் கைகளைப் பிடித்து, உணர்ச்சிபூர்வமாக நன்றி சொல்லி, கிழவியின் கையில் இருபது வெள்ளியை கொடுக்க, கிழவி பலமுறை மறுத்தது. பின்பு பத்து வெள்ளியை மட்டும் எடுத்துக்கொண்டு, மெல்ல நடந்துசென்றது.
எப்படியோ காலம் உருண்டோடியது. அவ்வப்போது, கிழவியின் சேவைக்காக சிலர் கூப்பிட்டு கொண்டு தான் இருந்தார்கள்.
வழிவழியாக தான் கற்ற இந்த சின்ன வைத்திய முறைகள் இந்த கிழவியின் தலைமுறையோடு மெல்ல மறையத் தொடங்கியது.
மெல்ல மெல்ல கம்பத்து வீடுகள் மறைந்து அடுக்குமாடி வீடுகள் தோன்ற ஆரம்பித்தன.
சில வாடகை வீடுகளாகவும், மேலும் சில விற்பனைக்கும் விடப்பட்டன.
கம்பத்து வீடுகளில், இயற்கையுடன் ஒட்டி வாழ்ந்தவர்கள், அதை விட்டு விலகி, இந்த அடுக்குமாடியின் சிறிய கூண்டில் அடைபடும் புதிய வாழ்க்கை முறைக்கு மாறிக்கொண்டனர். பல வகையில் சுத்தமான சுற்றமும், வசதிகள் ஏற்படுத்தப்பட்டபோதும் பழைய கம்பத்து வாழ்க்கை வாழும் ஏக்கம் பலருக்கு ஏற்பட்டது.
இந்த மாற்றத்திற்கு ஆளான வர்களில் ஆட்டுக்காரக் கிழவியின் குடும்பமும் ஒன்று.
ஆடுகளை விற்றுவிட்டு, தன் உறவுகளுடன் அடுக்குமாடி பகுதிக்கு போய்விட்டதாக சிலர் பேசிக்கொண்டர்கள்.
சில ஆண்டுகள் உருண்டோடின.
அந்த வட்டாரத்து மக்களும் காலத்திற்கு ஏற்ப மேற்கத்திய வைத்திய முறையில் தங்களை மாற்றிக்கொண்டனர்.
ஆட்டுக்காரக் கிழவியைப் பற்றிய பேச்சும் சிந்தனையும் மெல்ல மறைய தொடங்கியது.
சில பழைய தலைமுறை சார்ந்தவர்கள் மட்டும் அவ்வப்போது கிழவியின் திறனைப் பற்றி நினைவு கூர்வார்கள்.
'என்ன எழவுடா இது. கழுத்து வலிக்கு, ஆஸ்பத்திரிக்குப் போனா, ஏதோ டிராக்ஷன் என்று சொல்லி, உட்காரவைத்து, கழுத்த சுத்தி, பெல்ட்டு ஒன்றை மாட்டி, மிஷினால மேல இழுக்கிறான், ஏதோ தூக்குப் போடற மாதிரி! இத பத்து நிமிஷம் செஞ்சிட்டு, இருபது வெள்ளி வாங்கிட்டான். இன்னும் இது மாதிரி நாலு தடவ வரணுமாம்!' என்றார் அலுத்துக்கொண்டே ஒரு முதியவர்.
இப்ப மட்டும் ஆட்டுக்காரக் கிழவி இருந்தா உன் கழுத்து வலிய நல்லா இரண்டு மொற உருவிவிட்டுச்சின்னா, வலி பறந்து போயிருக்கும். என்ன செய்ய, அந்த கிழவி எங்க போச்சின்னு தான் தெரியல," என்றார் இன்னொரு பெரியவர்.
இதை கேட்டுக்கொண்டிருந்த இன்னொருவர் 'அட, உங்களுக்கு விஷயம் தெரியாதா, ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்த்த ஆட்டுக்காரக் கிழவி, ஏதோ நோய் வந்து போன மாசம் இறந்து போச்சுதாம் பா!'
அந்த இடம் கிழவர்களின் பெருமூச்சோடு ஆட்டுக்காரக் கிழவியின் நினைவும் காற்றில் கலந்து அமைதியானது.

