சிறுகதை
சிவகுமார் கே பி
"அப்பா...''
காவ்யாவின் குரலில் ஒரு ஏக்கம்.
"சொல்லுடா கண்ணா''.
வேலை செய்துகொண்டே ஏனோதானோ என்று பதிலளித்தான் அருண்.
"எனக்கு ஒரு நாய்க்குட்டி வேணும்''.
காவ்யா சொன்னதை கேட்டதும், தான் வேலை செய்துகொண்டிருந்த கணினியின் பார்வையிலிருந்து கொஞ்சம் தலையை நிமிர்த்தினான் அருண்.
அவனருகே வந்து நின்ற அவனின் எட்டு வயது மகள் காவ்யா கையில் ஒரு வரைபடம் இருந்தது. அந்தப் படத்தில் காவ்யா தான் ஒரு நாய்க்குட்டியோடு சேர்ந்து இருப்பது போல் வரைந்திருந்தாள்.
அந்த நாய்க்குட்டிக்கு, 'ஸ்டெல்லா' என்று பெயரும் வைத்து, அதற்கு தான் போட்டுக்கொள்வது போல் ஒரு பள்ளிக்கூட பையையும் அதன் கழுத்தில் மாட்டி வரைந்திருந்ததை பார்த்ததும், அருணுக்கு சிரிப்புதான் வந்தது.
"என்னது நாய்க்குட்டியா? அது எதுக்குடா கண்ணா? நீயே ஒரு நாய்க்குட்டி மாதிரிதான் இருக்க,'' என்று சொல்லிவிட்டு காவ்யாவை அணைத்து முத்தமிட்டான்.
அவன் அணைப்புக்குப் பிடிகொடுக்காமல், மீண்டும் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள் காவ்யா.
"அப்பா..."
"எனக்கு நாய்க்குட்டி வேணும்'' இப்போது அவள் குரலில் ஒரு பிடிவாதம் தெரிந்தது.
"காவ்யா!! சொன்னா கேளு. இந்த நாய்க்குட்டி, பூனைக்குட்டி வாங்கறதெல்லாம் நம்ம வீட்டில நடக்காது. யாரு அதை பார்த்துக்குவாங்க?'' என்று கொஞ்சம் எதார்த்தைப் பற்றி பேச முனைந்தான் அருண்.
"நான் பார்த்துக்குவேன் பா. நான் அதுகூட தினம் விளையாடுவேன். அதுக்கு நம்ம வீட்டில எந்த போரும் அடிக்காம பார்த்துக்குவேன். நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? பேசாம நான் ஸ்கூல் போகும்போது, அதையும் கூட்டிட்டு போறேன். என் கிளாஸ் நண்பர்களுக்கு கூட நாய்குட்டினா ரொம்பப் பிடிக்கும்.''
"ஹா ஹா.. ஸ்கூலுக்கெல்லாம் அதை கூட்டிட்டுப் போக முடியாது செல்லம்'' என்று சொல்லிவிட்டு அவளின் அப்பாவித்தனத்தை ரசிக்க, அவளுக்கு மீண்டும் ஒரு செல்ல முத்தம் கொடுத்தான் அருண்.
"அப்போ நான் ஸ்கூல் போகிற சமயம், அதுக்கு என்னோட விளையாட்டுச் சாமான் கொடுத்திட்டுப் போவேன். நான் திருப்பி வர வரைக்கும் நாய்க்குட்டி அத்தோட விளையாடிட்டிருக்கும். சரியா? வாங்கலாம் பா. ப்ளீஸ்''.
தன் வேலைக்கு நடுவே அருணுக்கு அவளோடு வாதாடிக் கொண்டிருக்க நேரமில்லை.
"சரி சரி. வாங்கலாம்,'' என்று அவளை திசைத்திருப்ப சொல்லிவிட்டு மீண்டும் தன் கணினிக்குள் மூழ்கினான்.
'சரி வாங்கலாம்' என்று அப்பா சொன்னதைக் கேட்டதும், மகிழ்ச்சியில் அவனருகே உட்கார்ந்த காவ்யா, மீண்டும் ஏதோ ஒரு புது வரைப்படம் வரைய தொடங்கினாள். இம்முறை அவள், அந்த நாய்க்குட்டி, மற்றும் தன் அப்பா அம்மாவோடு சேர்ந்து இருப்பதுபோல் ஒரு குடும்பப்படம் வரைந்தாள். அந்தப் படத்திற்கு வண்ணம் பூசி, 'ஹாப்பி ஃபேமிலி' என்று அதற்கு மேல் எழுதிவிட்டு, அருணின் வேலைக்கு நடுவே அவனிடம் அந்தப் படத்தை நீட்டினாள்.
வேலையின் மும்முரத்தில் இருந்த அருண், 'வெரி குட்' என்று அந்த வரைபடத்திற்கு மேல் அவசர அவசரமாக எழுதிவிட்டு, மீண்டும் தன் வேலைக்குள் மூழ்கினான்.
சற்று நேரம் கழிந்து, "என்ன அருண்? நீயுமா?" என்று ப்ரீத்தியின் குரல் அவனை அழைத்தது.
"என்ன ஆச்சு?'' என்று அவன் திரும்பியபோது ப்ரீத்தி கையில் காவ்யாவின் 'ஹாப்பி பேமிலி' வரைபடம் இருந்தது.
"நல்லாத்தான் வரைஞ்சிருக்கா. அதனால 'வெரி குட்' போட்டேன்.''
"நான் அவ வரைஞ்ச படத்தை ஒண்ணும் சொல்லலை. காவ்யா சொல்றா, நீயும் நாய்க்குட்டி வாங்கலாம்னு சொல்லி ஒத்துக்கிட்டியாம். அப்படியா?" என்று ப்ரீத்தி கேட்டபோது, அருண் காவ்யாவை தேடினான்.
அவள் மெல்ல ப்ரீத்தி பின்னிருந்து, அவன் முன்னே வந்தாள்.
"காவ்யா கண்ணா. நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல. நாய்க்குட்டி பூனைகுட்டியெல்லாம் நாம வாங்கமுடியாதுன்னு சொல்லி,'' என்று சமாளித்தான்.
"அப்பா... அப்பா... ஆனா நீங்க தானே, கடைசியில 'சரி, சரி வாங்கலாம்னு' சொன்னீங்க?'' என்று எதிர்பார்ப்போடு அவள் கேட்டபோது, கொஞ்சம் நிதானத்தோடு அவளை தன் பக்கம் இழுத்தான் அருண்.
"காவ்யா... சொன்னா புரிஞ்சுக்க... நீ எங்களோட ஒரே பொண்ணு... செல்ல பொண்ணு. நமக்கு எதுக்கு நாய்க்குட்டி?'' என்று மெதுவாய் அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தான் அருண்.
"காவ்யா!!! பிடிவாதம் பிடிக்காதே!'' என்று குறுக்கிட்ட ப்ரீத்தி, மேலும் தொடர்ந்தாள்.
"நாய்க்குட்டி வாங்கினா, அதை தினம் வெளிய கூட்டிட்டுப் போகணும். அப்புறம் அதுக்கு டாய்லெட் வரும். அதெல்லாம் கிளீன் பண்ணனும். என்னால அதெல்லாம் பண்ண முடியாது.''
"நான் பண்ணறேன் மா. அப்பாவும் எனக்கு ஹெல்ப் பண்ணுவார்," என்று அருணை பார்த்தாள் காவ்யா.
காவ்யா அதை சொன்னதும், ப்ரீத்தி அருண் பக்கம் திரும்பினாள்.
"அய்யயோ. நான் அதெல்லாம் பண்ண மாட்டேன்,'' என்று உடனடியாக மறுத்தான் அருண்.
பின் காவ்யாவின் எதிர்பார்ப்பை திசைத்திருப்ப, "நான் ஒரு யோசனை சொல்லட்டுமா காவ்யா?'' என்று தொடர்ந்தான்.
"முதல்ல உனக்கு நாய்க்குட்டி எதுக்கு வேணும்னு சொல்லு?''
"எனக்கு வீட்டில தனியா விளையாட போர் அடிக்குது, நீங்களும் எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு சொல்லி இருக்கீங்க. அம்மாவும் வேலைக்கு போறாங்க. என்னோட விளையாட யார் இருக்கா?'' என்று அப்பாவித்தனத்தோடு கேட்டாள் காவ்யா.
"நீ பக்கத்துல உன்னோட ப்ரண்ட்ஸ் கூட விளையாடு. அவங்க வீட்டுக்குப் போ,'' என்றான் அருண்
"அவங்க வீட்டில அவங்க தம்பி, இல்லாட்டி அக்கா கூட விளையாடறாங்க.''
" சரி. அப்போ நம்ம வீட்டிலையும் ஒரு தம்பி பாப்பா இல்லாட்டி தங்கச்சி பாப்பா வந்தா உனக்கு நாய்க்குட்டி வேண்டாம்ல?'' என்றான்.
கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதை போல் இருந்த அருணின் பதில் கேட்டு, "அருண், நீ இந்த பிரச்சனைக்கு முடிவுகட்டுவேன்னு பார்த்தா, புதுசா ஏதோ கிளப்பி விடற. சும்மா ஏதாவது சொல்லி புது பிரச்சனையை கிளப்பிவிடாதே,'' என்று சீறினாள் ப்ரீத்தி.
"அப்பா அப்பா... எனக்கு ஒரு சந்தேகம்? தம்பி பாப்பா வந்திச்சுன்னா அதுக்கு டாய்லெட் யாரு கிளீன் பண்ணுவாங்க?" கேட்டாள் காவ்யா.
"அப்படி தம்பி பாப்பா வந்திச்சுன்னா, நான், அம்மா எல்லாரும் சேர்ந்து கிளீன் பண்ணுவோம்.''
"அப்போ நாய்க்குட்டிக்கும் அதே மாதிரி பண்ணலாமே.''
"கண்ணா, நாய்க்குட்டியும் தம்பி பாப்பாவும் ஒண்ணு இல்லை...'' என்று சமாளிக்க முயன்றான் அருண்.
அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வருவதாய் தெரியவில்லை என்று உணர்ந்தாள் ப்ரீத்தி.
"காவ்யா! இந்த வாரக்கடைசியில, நான் உனக்கு ஒரு நல்ல நாய்க்குட்டி பொம்மை வாங்கிக்கொடுக்கறேன். அந்த நாய்க்குட்டி பொம்மை கூட நீ தினம் படுத்துக்கலாம். அதோட விளையாடலாம். அப்புறம், நாம டிரைவ் போகும்போது, நீ அதை கூட்டிட்டு வரலாம்,'' என்று சொல்லிவிட்டு அவளை சமாதானப்படுத்தினாள்.
"அருண். நீ சும்மாவாச்சும் அவ மனசுல நாய்க்குட்டி, அதுஇதுனு ஆசைய கிளப்பி விடாதே. இதெல்லாம் காலப்போக்குல மாறி போயிடும்,'' என்று அந்த பேச்சுக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தாள் ப்ரீத்தி.
அந்த வாரக்கடைசியில், ஒரு ஆள் உயர அளவுள்ள நாய்க்குட்டி, அவர்கள் வீட்டின் புதிய ஆளாக குடி பெயர்ந்தது.
முதலில் காவ்யா அதற்கு 'ஸ்டெல்லா' என்று பெயர் வைத்தாள். பின் அதன் கழுத்தில் 'காவ்யாவின் ஸ்டெல்லா' என்று எழுதி, அதில் அருணின் கைத்தொலைபேசி எண்ணை குறித்து வைத்தாள். அந்த நாய்க்குட்டிக்கு அவர்கள் வீட்டின் சோபா மற்றும் சாப்பாடு டேபிளில் ஒரு இடம் கொடுத்தாள். நாய்க்குட்டிக்கு உணவு கொடுக்க ஒரு தட்டும் தனியாக வைத்தாள். உறங்கும் போது குளிராமல் இருக்க, அதற்கு ஒரு போர்வையும் தனியே எடுத்து வைத்தாள்.
ஆகமொத்தம், ஸ்டெல்லாவிற்கு பாஸ்போர்ட் மட்டும்தான் இல்லை. மற்ற எல்லா அடையாளங்களும் சலுகைகளும் அந்த வீட்டில் இருந்தன.
காவ்யாவும் ஸ்டெல்லாவும் ஒருவரோடு ஒருவர் கொஞ்சிப் பேசி விளையாட துவங்கியது அருணிற்கும் நிம்மதியா இருந்தது. ஆனால் அது நிலைத்து நிற்கவில்லை.
சில வாரங்கள் கழித்து, காவ்யா மீண்டும் அருணிடம் வந்தாள்.
"அப்பா, ஸ்டெல்லா மற்ற நாய்க்குட்டி மாதிரி நடக்க மாட்டேங்கிறா, குறைக்க மாட்டேங்கறா. அவளை, டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போலாமா?''
"டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக வேண்டியது ஸ்டெல்லாவை இல்லை, உன்னை....'' தன் வேலைக்கு நடுவே தொந்தரவு செய்த காவ்யா மீது எரிஞ்சு விழுந்தான் அருண்.
காவ்யா அதற்குமேல் அருணிடம் எதுவும் பேசவில்லை.
அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே நடந்த உரையாடலுக்கு சாட்சியாக, அந்த அறையின் ஓரத்தில் ஸ்டெல்லா அமைதியாக அமர்ந்திருந்தது.
ஒரு நாள் காலை, காவ்யா முகத்தில் உற்சாகம் ஓங்கி இருந்தது.
"என்ன காவ்யா, இன்னிக்கி மகிழ்ச்சியா இருக்க? என்ன ஆச்சு? ஸ்டெல்லா குறைக்கறாளா?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டான் அருண்.
"அருண், இன்னிக்கி அவளோட ப்ரெண்ட் பர்த்டே. சாயந்திரம் அவங்க வீட்டுக்கு அவளை பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்காங்க. அதான், மகிழ்ச்சியா இருக்கா.'' என்று சொல்லிவிட்டு, ப்ரீத்தி மேலும் தொடர்ந்தாள்.
"காவ்யா, அவங்க வீட்டில ஜாக்கிரதையா இருக்கணும். பார்த்து சாப்பிடணும். ரொம்ப ஜூஸ் குடிக்காதே. அப்புறம், அப்பாவும் அம்மாவும் வேலை முடிச்சிட்டு உன்னை அவங்க வீட்டிலிருந்து திரும்பி கூட்டிட்டு போவோம். சரியா?''
சரி, என்று தலையை ஆட்டிவிட்டு, ஏதோ மும்முரமாக ஒரு நாய்க்குட்டியின் படத்தை வரைந்து கொண்டிருந்தாள் காவ்யா.
அன்று மாலை ஆபீஸ் வேலையில் மும்முரமாக இருந்த அருணின் கைத்தொலைபேசி அழைத்தது.
"அருண்...அருண் ....'' என்று மறுமுனையில் பேசிய ப்ரீத்தியின் குரலில் பீதியை உணர்ந்தான் அருண்.
"என்னாச்சு ப்ரீத்தி?''
"நீ உடனே ஆஃபீசிலேர்ந்து கிளம்பு. காவ்யாவ நாய் கடிச்சிடுச்சாம். நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கிளினிக் கூட்டிட்டு போயிருக்காங்க,'' என்றாள் கவலையோடு.
"என்னது நாய் கடிச்சுடுச்சா? அவ ஸ்டெல்லாகூடதானே விளையாடுவா? அது எப்படி கடிக்கும்?'' என்று கேட்டான் அருண்.
"ஐயோ அருண். டோன்ட் பி சில்லி. அவ ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போன இடத்துல அவங்க வீட்டு நாய்க்குட்டி அவளை கடிச்சிடுச்சாம். ஸ்டெல்லா கூட விளையாடற மாதிரி, இவ அந்த நிஜ நாய்க்குட்டிகிட்ட போய் விளையாடியிருக்கா. அது கடிச்சிடுச்சு. அந்த பர்த்டே பெண்ணோட அம்மாதான் அவளை கிளினிக் கூட்டிட்டு போயிருக்காங்க. அங்கிருந்து எனக்கு போன் பண்ணி தகவல் சொன்னாங்க. நீ உடனே கிளம்பு. நான் உன் ஆபீஸ் பக்கத்துலதான் இருக்கேன். நானே உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன். நீ சீக்கிரம் உங்க ஆபீஸ் வாசலுக்கு வா''
"சரி சரி. உடனே வரேன்,'' என்று போட்டது போட்டபடி கிளம்பினான் அருண்.
தன் ஆபீஸ் வாசலருகே வந்த ப்ரீத்தியின் காரில், அவசர அவசரமாக ஏறினான்.
"இதுக்குதான் இந்த நாய்க்குட்டி பூனைகுட்டியெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். நீதான் அவளுக்கு ஸ்டெல்லா வாங்கிக்கொடுத்த...'' என்று ப்ரீதியிடம் தன் கோபத்தை காரில் ஏறியதும் வெளிப்படுத்தினான்.
"அருண், என்ன நடந்திச்சுன்னு தெரியுமா? அவ ஸ்டெல்லாகூட விளையாடற மாதிரி, அந்த நிஜ நாய்க்குட்டிகிட்ட போய் விளையாடியிருக்கா. அது கடிச்சிடுச்சு.''
"அப்போ. நீ எதுக்கு அவளுக்கு ஸ்டெல்லா வாங்கிக்கொடுத்தே?'' என்றான் அருண்
"ஹலோ... என் மேல பழியை போடாதே..நீதான் அவ மனசுல நாய்க்குட்டி படத்துக்கு 'வெரி குட்', 'ஹாப்பி பேமிலி', அப்படி இப்படினு ஆசையை வளர்த்துவிட்ட. அதுக்குதான், நான் ஸ்டெல்லா வாங்கி கொடுத்தேன். இப்போ பிரச்னை ஸ்டெல்லா இல்லியே...'' என்று கடுப்போடு பதிலளித்தாள் ப்ரீத்தி.
"பிரச்னை ஸ்டெல்லாதான்'' என்றான் அருண்.
"என்ன அருண் பேசற...? ஸ்டெல்லாவா அவளைக் கடிச்சிச்சு? ஒரு நிஜ நாய்க்குட்டி தானே அவளை கடிச்சிச்சு''
அவர்களின் வாக்குவாதம் முடிவதற்குள் கிளினிக் வந்தடைந்தனர்.
"காவ்யா.. ஒரு எட்டு வயசு பொண்ணு… ஏதோ நாய்கடிச்சிடுச்சுனு சொல்லி அட்மிட் பண்ணியிருக்காங்க,'' என்று மூச்சிரைக்க அந்த வரவேற்பறையிலிருந்த பெண்மணியிடம் விசாரித்தாள் ப்ரீத்தி.
"நேரா போங்க. கடைசி ரூம்,'' என்று அவள் கைகாட்டிய திசையில் இருவரும் ஓடினர்.
கண்களில் நீர் பெருகியது.
"காவ்யா காவ்யா...''
"அம்மா...''
காவ்யா அருகே இருந்த நர்ஸ் கோபப்பட்டாள்.
"அமைதி.. அமைதி... ரொம்ப சத்தமா பேசாதீங்க.. ஊசி போட்டிருக்கோம். நாளைக்கு வீட்டுக்குக் கூட்டிட்டு போகலாம். பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரத்துல டாக்டர் வருவார். அவர்கிட்ட பேசிக்குங்க," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
"என் செல்லம்... ஏன்டா அவங்க வீட்டில நாய்க்குட்டி இருக்குனு எங்கிட்ட சொல்லலை...''
"சொன்னா நீங்க பர்த்டே பார்ட்டிக்கு அனுப்பமாடீங்கனு....'' என்று அப்பாவித்தனத்தோடு பதிலளித்தாள் காவ்யா.
"ரொம்ப வலிக்குதா கண்ணா? எங்க கடிச்சிடுச்சு? பெரிய நாயா? சின்ன நாயா?'' என்று பல கேள்விகள் ப்ரீத்தி கேட்க, அவளை குறுக்கிட்டான் அருண்.
"காவ்யா.. இதுக்குதான் நான் நாய்க்குட்டி, பூனைக் குட்டியெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். கேட்டியா??? இப்போ பார், என்ன நடந்திச்சுன்னு...'' என்றான்.
காவ்யா அமைதியாக இருந்தாள். பின் மெல்ல, "அப்பா... சாரி…..எனக்கு ஸ்டெல்லா வேண்டாம்,'' என்றாள்.
"வெரி குட். இப்பதான் நீ என் செல்லப்பொண்ணு,'' என்று காவ்யாவை கொஞ்சினான் அருண்.
சற்று நேரத்தில் அங்கு வந்த டாக்டரிடம், ப்ரீத்தியும் அருணும் பேசினார்கள். அவரோடு பேசிய பிறகு கொஞ்சம் நிம்மதியடைந்தான் அருண்.
"காவ்யா கண்ணா. டாக்டர் பயப்பட ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டார். நீ ரெஸ்ட் எடுத்துக்க. அப்பாவும் அம்மாவும் இங்க பக்கத்துல கடை வரைக்கும் போய்ட்டு மருந்து வாங்கிட்டு வர்றோம். உனக்கு என்ன வேணும்னு சொல்லு? அப்பா வாங்கிட்டுவரேன்,'' என்றான் அருண்.
"அப்பா...'' காவ்யாவின் குரலில் ஒரு ஏக்கம்.
"சொல்லுடா கண்ணா!'' என்று கிளம்பும் அவசரத்தில் கேட்டான் அருண்.
"எனக்கு ஒரு தம்பி பாப்பா வேணும்''.