ஊடலின் மழை

ஊடலின் மழை

1 mins read

செரிமானம் ஆகாது உழல்கிறது

நம் மெளனம் தின்ற இரவு

புளித்த ஏப்பத்துடன்

புலர்கிறது காலை

மெல்ல இருண்ட வானத்தின்

சன்னத் தூறலோடு

இணைந்து இளகத் தொடங்கியது

கனத்த கணம்

நீ தயாரித்த

காலைத் தேநீரிலும்

என் மதிய தயாரிப்பின்

குழம்புக் கரைசலிலும்

விழுந்திருக்கக் கூடும்

இளகலின் நழுவலாய்

சில துளி காதல்

மாலையில்

உனக்கு சற்றும் பிடிக்காத

டுரியான்களோடு நீயும்,

எனக்கு பிடித்தமற்ற

பண்டான் கேக்கோடு நானும்...

நேற்றை மறந்து

வெண் பட்டு உடுத்தி

விருந்துக்குக் காத்திருக்கிறது

இரவு...

காலை பொழிந்த மழையின்

வாசனையை

அறையெங்கும் பதுக்கியபடி!

- ப்ரியா கணேசன்