சிறுகதை
ஷோபா குமரேசன்
காலை நேர பரபரப்பான வேலையை முடித்த நான் அயர்ச்சி மிகுதியால் 'தொப்' பென நாற்காலியில் அமர்ந்தேன். அப்போது எதிரிலிருந்த நாள்காட்டியில் தேதியைக் கண்ணுற்றதும், ஏதோ சத்து பானத்தை அருந்தியதைப்போல உடனே சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெற்றது. காரணம், இன்று என் செல்ல மகள் இவ்வுலகில் பிறந்து எங்கள் வீட்டை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்திய பொன்னாள்.
மகளின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் நானும் என் கணவரும் சேர்ந்தே அவளுடன் கடைக்குச் சென்று அவளுக்குப் பிடித்த பரிசை வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதற்கு விதிவிலக்காக, அலுவலக வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்ட என் கணவரை நினைத்து மனம் ஒரு கணம் சஞ்சலப்பட்டது. இருப்பினும், 'என்ன செய்வது? அவரோட சூழ்நிலையும் அப்படி ஆயிடுச்சி' என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்.
இன்று பள்ளியிலிருந்து மகள் திரும்பியதும் நானாவது கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவெடுத்து, சூடான தேநீர் தயாரித்து பருகிக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்.
தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பார்த்துக்கொண்டிருந்த என் விழிகள் விரிந்து மனம் பதைபதைத்தது.
என் கையிலிருந்த சூடான தேநீரைப் போலவே அப்போது கீழே ஓடிய அவசரச் செய்தியும் என் உள்ளத்தைச் சுட்டது, இனியும் தாமதிக்காமல் அழைத்துப் பார்ப்பதுதான் சரி என முடிவெடுத்து திறன்பேசியில் அழைக்க, மறுபுறம் அமைதியாய் இருந்தது.
ஒன்றும் செய்ய இயலாதவளாய் அமர்ந்த என் எண்ண அலைகள் பின்னோக்கிச் சென்றன.
*
அப்போது நாங்கள் 'அங் மோ கியோ' வட்டாரத்தில் மூன்று அறை வீட்டில் வசித்தோம்.
அன்றொரு நாள், நாங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அந்த இனிய சம்பவம் நிகழ, நான் சிறகு முளைத்த தேவதையாகப் பறந்தேன்.
ஆம், தற்போதுள்ள சூழலில் பலருக்கு எட்டாக் கனியாய் இருக்கும் சிங்கப்பூர் குடியுரிமை பெறும் வாய்ப்பு என் குடும்பத்திற்கு கிட்ட, என் மனத்தில் புது வீட்டில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்ற ஆசை விதை துளிர்விட ஆரம்பித்தது.
குடியுரிமை பெற்ற கையோடு, நான் வீடு வாங்குவதற்காக இணையப் பக்கத்தில் என் தேடுதல் வேட்கையைத் தொடங்கினேன். அடுத்து வந்த சில மாதங்களில், 'செங்காங்' வட்டாரத்தில் 'பிடிஓ' திட்ட வீடு விற்பனைக்கு வர நான் என் கணவரிடம், "ஏங்க, ஐந்து அறை வீட்டுக்கு விண்ணப்பம் போட்டுடலாம், அப்பதான் வீடு நல்லா விசாலமா இருக்கும்," என்றேன்.
"சரிம்மா, நீயே பார்த்து முடிவு செய்," என அலுவலகத்திற்குக் கிளம்பியவாறே என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார் கணவர்.
அவர் அனுமதியுடன் என் மூளை ஏவுகணை வேகத்தில் அதற்கான திட்டத்தைத் தொடங்கியது.
இயற்கையை நேசிப்பவளான நான், வீடு நல்ல காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருப்பதற்கு ஏதுவாக பத்தாவது மெத்தையில் உள்ள வீட்டைத் தேர்ந்தெடுத்தேன்.
ஆண்டுகள் இரண்டு உருண்டோட, கட்டப்படும் உயரமான கட்டடத்தைப் போலவே வீட்டின் மீதுள்ள என் ஆசையும் உயர்ந்து வளர்ந்தது. புது வீட்டின் சாவி கைக்குக் கிடைத்தபோது, ஏதோ பிறந்த குழந்தையை கையில் ஏந்துவது போன்ற உணர்வு, எனக்கே எனக்கான பளிங்கு போன்ற பளிச்சென்ற வெள்ளை நிற தள ஓடுகள் (டைல்ஸ்) பதிக்கப்பட்ட அழகான புது வீடு.
"என்னங்க, வீட்டின் உட்புற வடிவமைப்பை சிறப்பா செய்யணும்," என்றேன் நான். ஆனால் அப்போது அலுவலக நிமித்தமாக வெளிநாடு செல்ல ஆயத்தமான என்னவர், "நம்ம மகளோட அபிப்பிராயத்தையும் கேட்டு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து செய்யுங்க," என யோசனை கொடுத்தார்.
'அட! நமக்கு இது தோணவே இல்லையே', அவளை இன்னும் சிறு குழந்தையாகவே பாவித்துக் கொண்டிருந்த என் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அவளுடன் சேர்ந்து வீட்டை அலங்கரிக்கத் திட்டமிட ஆரம்பித்தேன்.
என் மகள் என்னிடம் வீட்டை வடிவமைக்க நிறைய புதுப்புது உத்திகளை அள்ளித் தெளித்து என்னை வியப்பில் ஆழ்த்தினாள்.
மேல்நாட்டுப் பாணி குசினியில் ஆரம்பித்து அலமாரிகள், வண்ணம் பூசுதல், மீன்தொட்டிக்கென பிரத்தியேக இடம் என அனைத்தையும் ஒரு குழந்தையை அழகுபடுத்துவது போல், கலைநயத்தோடு நாங்கள் போட்ட வீட்டின் திட்டப்பணி ஒரு கட்டமைப்பாளரின் உதவியோடு மிகச் செம்மையாக நிறைவு பெற்றது.
ஒரு வழியாக எல்லா வேலைகளும் முடிந்து, வீடு புதுமனை புகுவிழா கண்டது.
ஏதோ பெரிதாக ஒன்றை சாதித்தது போல் மனதில் அவ்வளவு உவகை!
திரைச்சீலையை விலக்கி சாளரத்தை நன்றாக திறந்து வீட்டினுள் வந்த இதமான காற்றைச் சுவாசிக்க, அது என் மதியை மயக்கியது.
நாளடைவில் எங்கள் குடியிருப்பில் ஒவ்வொருவராக குடியேறத் தொடங்கி அனைவரும் ஒருவருக்கொருவர் நட்புணர்வோடு பழகத் தொடங்கினர்.
நாள்கள் நகர, ஒருநாள் காலை மிதிவண்டியில் பேரங்காடிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன்.
இரவு பெய்த கனமழையினால் பூமி குளிர்ந்திருக்க, நான் சீக்கிரமாக வீட்டை அடைய எண்ணி குறுக்கு வழியாக மிதிவண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். ஆனால் அந்த வழியெங்கும் குண்டும் குழியுமாக ஒரே சகதியுடன் இருக்க, சற்று தூரம் கடந்ததும்தான் நான் செய்தது தவறு எனப் புரிந்தது.
அப்போது 'சதக்' என்ற சத்தத்தோடு மிதிவண்டி சகதிக்குள் மாட்டிக்கொண்டது.
அதற்கு மேல் ஓட்ட திராணியற்று மிதிவண்டியை வியர்க்க விறுவிறுக்க தள்ளிக்கொண்டே மெதுவாக குடியிருப்பை நெருங்கினேன்.
குடியிருப்பின் கீழ்த்தளத்தை அப்போது பணியாளர் செல்வம் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அவர் அருகே சென்ற நான் தயங்கியவாறே, "செல்வம், கொஞ்சம் தண்ணி வேணும்.... வண்டியில ஒரே சகதி..." என நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு என் நிலைமை புரிந்துவிட்டது.
"அதனால என்னக்கா? நானே கழுவித் தர்றேன்," என்றபடி வண்டியைக் கழுவ, அது செல்வத்தின் தூய்மையான மனது போலவே சுத்தமாக மாறியது.
"நன்றி செல்வம்" என்றபடி வீட்டை அடைந்த நான் கணவரிடம் நடந்ததைக் கூறினேன். இது போன்று செல்வம் அவ்வப்போது எங்கள் வட்டார மக்களுக்கு செய்யும் சிறு சிறு உதவிகளும், அவரின் கண்ணியமான நடத்தையும் என் கணவர் உட்பட அனைவரையும் நாளடைவில் கவர்ந்திழுத்தது.
*
அப்போது திடீரெனக் கேட்ட இடிச் சத்தம் என்னை உலுக்கி சுயநினைவிற்கு இழுக்க மீண்டும் தொலைக்காட்சியில் கண்களைப் பதித்தேன்.
கலங்கிய கண்களில் அவசரச் செய்தியில் நகர்ந்த எழுத்துகள் மங்கலாகத் தெரிந்தது.
'என்ன ஆச்சுன்னு தெரியலையே? திரும்பவும் ஒருமுறை அழைத்துப் பார்க்கலாம்' என நான் முயற்சி செய்ய இப்போதும் மறுமுனை அமைதியாகவே இருந்தது.
தலைவலி பாரமாய் அழுத்த, மீண்டும் பழைய நினைவுகளோடு சேர்த்து தலையை பின்சாய்த்தேன்.
*
ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்பி வந்த என் மகள் ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.
"என்னம்மா, அடுத்த வாரம் பிறந்தநாள் வருதே, என்ன பரிசு வேணும் என் செல்லத்துக்கு?" என்று அவளிடம் வினவினேன்.
"அம்மா, நம்ப குடியிருப்புக்குக் கீழே தோட்டம் வைக்கலாமா?" என்று என் மகள் ஆவலுடன் கேட்க, இப்படியொரு பிறந்தநாள் பரிசை மகள் கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
"என்னது? கீழே தோட்டமா? விசாரிப்போம், ஆமா என்ன திடீர்னு?" ஒன்றும் புரியாமல் கேள்விகளை அடுக்கினேன்.
"இன்னக்கி பள்ளியில உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வுப் பயிலரங்கு நடந்துனாங்கம்மா," எனக் கூறி மகள் நிறுத்த, அவளின் நோக்கத்தை ஓரளவு புரிந்துகொண்ட நான் பூரிப்படைந்தேன். ஒரு தாயாக எனக்கும் இது மகளுக்குக் கொடுக்க வேண்டிய ஒரு சிறந்த பரிசாகத் தோன்றவே என் கணவரை நோக்கினேன்.
"நல்லது செய்றதை தள்ளிப் போட வேண்டாம். உடனே விசாரிம்மா," என அன்புக் கட்டளையிட்டார் கணவர்.
இதன் முதற்படியாக எங்கள் வட்டாரத்திலுள்ள குடியிருப்பாளர் குழுவை தொடர்புகொண்டு தோட்டம் வைப்பதற்கான தகவல்களைத் திரட்டினேன்.
அவர்கள் என்னை முதலில் அங்கு உறுப்பினராகச் சேரச் சொல்லி ஊக்கம் கொடுத்ததோடு, மற்றும் சில குடியிருப்பாளர்களும் இணைய முன்வந்தால் என் கோரிக்கையை நகர மன்றத்திற்கு பரிந்துரை செய்வதாகக் கூறினர்.
நான் இந்த செய்தியை உடனடியாக அண்டை அயலாரிடம் பகிர, எதிர்பார்த்தது போலவே சிலர் தோட்டக் கலையில் விருப்பம் தெரிவித்தார்கள்.
இதற்கிடையில் ஒருநாள் கீழே இறங்கிய என் கண்ணில் மிக நேர்த்தியாக வெட்டப்பட்ட புற்கள் தென்பட, உடனே எனக்கு செல்வத்தின் ஞாபகம் வந்தது. கண்களை நாலாபுறமும் சுழற்றி அவரைத் தேட,
"அக்கா, எப்படி இருக்கீங்க?"
என் பின்னால் குரல் கேட்டு திரும்ப, செல்வம் நின்று கொண்டிருந்தார்.
"இப்பதான் உங்களைப் பத்தி நினைச்சேன் செல்வம்" என்று புன்சிரிப்பை உதிர்த்த நான், மகளின் விருப்பம் பற்றியும், தோட்டம் வைப்பதற்கு நடந்துகொண்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றியும் அவரிடம் விளக்கிக் கூறினேன்.
"நாங்க பத்துப் பேர் சேர்ந்து தொடங்க இருக்கிறோம், ஏதாவது உதவின்னா உங்கள்ட்ட..." என நான் தயக்கத்துடன் இழுக்க,
"கண்டிப்பா செய்யிறேன்கா," என்றார் செல்வம்.
நாட்கள் நகர, எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, மண்ணின் தரம் சோதிக்கப்பட்டது.
பிறகு அதற்கேற்ப தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கி தரப்பட்டதும் எங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்க, நானும் என் மகளும் ஆலோசித்து தினமும் சமைக்கத் தேவைப்படும் தக்காளி, கறிவேப்பிலை முதற்கொண்டு சில காய்கறிகளையும் பயிரிடத் திட்டமிட்டோம்.
சிறிது நாட்களில் பச்சைப் பசேல் என வளரத் தொடங்கிய எங்கள் தோட்டத்தை சுற்றுலாப் பயணிகள் போல் பட்டாம் பூச்சிகள் சுற்றிவர, தோட்டமே வண்ணமயமானது. மேலும் அதில் விளைந்த காய்கறிகளை முதன்முறையாக பறித்துச் சாப்பிட, அந்த உணர்வு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத தனி மனநிறைவை எங்களுக்குக் கொடுத்தது.
பகல் பொழுதில் செல்வம் அவர் பணிகளுக்கிடையே அங்கிருந்த குப்பைகளை அகற்றி பராமரித்து எங்களுக்கு உதவினார்.
காலப்போக்கில் அந்தத் தோட்டம் என் மகளின் பயனுள்ள பொழுதுபோக்கு இடமாக மாறியது.
அவளின் ஆர்வத்தைப் பார்த்த செல்வம் செடிகளை வளர்ப்பதற்கான நுட்பங்களையும் அவளுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.
அதோடு மட்டுமல்லாமல் அவளின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தொட்டிச் செடிகளைப் பரிசளித்து ஊக்கப்படுத்தவும் தொடங்கினார்.
மாதங்கள் சில கழிய, ஒருநாள் செல்வம் என்னிடம்,
"அக்கா, நான் ஊருக்கு போய்ட்டு ஒரு மாதத்தில திரும்பி வந்துடுவேன்," என்றார்.
"என்ன செல்வம் திடீர்னு? ஏதாவது நல்ல செய்தியா?" என நான் சிரித்தபடி வினவ, "ஆமாக்கா, எனக்கு திருமணம் பேசி முடிச்சிட்டாங்க," என்றார்.
அதைக் கேட்டதும் ஏதோ என் சொந்த தம்பிக்கே திருமணம் போல் உள்ளம் குதூகலிக்க எங்கள் தோட்டக் குழுவிலிருந்த உறுப்பினர்கள் அனைவரிடமும் பேசி நிதி திரட்டி புது மணமக்களுக்கு உடுப்புகளோடு பண உதவியும் செய்து வழியனுப்பினோம்.
ஆனால் ஒரு மாதம் கழித்து திரும்பி வந்த செல்வத்தின் முகத்தில் கொஞ்சம்கூட உற்சாகம் இல்லாமல் ஏதோ வாடிய செடியைப் போல் தோற்றமளிக்க,
"என்னாச்சு செல்வம்?" என்று வினவினேன்.
"என்னன்னு சொல்றதுக்கா? தங்கைகளை கரையேத்த வாங்குன கடனோடு இப்ப என் கல்யாணச் செலவும் சேர்ந்து கண்ணைக் கட்டுதுக்கா," என்று வருத்தத்தோடு கூறினார். 'ம்ம்....எப்படியாவது செல்வத்துக்கு உதவணுமே' என யோசித்த நான் அன்றிரவே என் கணவரிடம் இதைப் பற்றி ஆலோசித்தேன்.
நான் சொல்வதை பொறுமையுடன் செவிமடுத்த என் கணவர் என்னிடம், "ஆமாம்மா, பாவம் செல்வம். ரொம்ப பெரிய குடும்பம் போலருக்கு," எனக் கூறி பெருமூச்சு விட்டார்.
"ஏங்க நம்மால செல்வத்துக்கு வேற வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?" என்றேன்.
"நானே அதைப் பத்திதாம்மா யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.. எப்படியாவது செல்வம் ஸ்கில் டெஸ்ட் எடுத்திட்டா கட்டுமானத் துறையில வேலைக்குச் சேர்த்து விட்டுடலாம், நானே செல்வத்திடம் இதப்பத்தி பேசுறேன்," என கணவர் கூற எனக்குள் நிம்மதி பிறந்தது.
அதன் பிறகு வளர்ச்சி கண்ட எங்களின் தோட்டத்தைப் போல, செல்வமும் படித்து படிப்படியாக வளர்ந்து வேறு வேலைக்கு மாறினாலும், இன்று வரை என் மகளின் பிறந்தநாளுக்கு தவறாமல் தொட்டிச் செடி பரிசோடு வந்து விடுவார்.
அப்போது வெளியிலிருந்து அடித்த குளிர்க்காற்றில் உடல் சிலிர்க்க, மீண்டும் சுய நினைவு அடைந்தேன்.
என் மகளின் பிறந்தநாளான இன்று செல்வத்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம்.
இதோ தொலைக்காட்சியில் வேலையிட விபத்து பற்றிய அவசரச் செய்தி என்னை இடியாய்த் தாக்கியது. அதுவும் அது செல்வம் வேலை செய்யிற கம்பெனியேதான் என உறுதியாய்த் தெரிந்தது. திறன்பேசியில் அழைத்தும் எந்த பயனுமில்லை.
யாருக்கும் எந்தப் பாதிப்பும் நேர்ந்திருக்கக்கூடாது என உள்ளுக்குள் கடவுளை வேண்டியவாறே நிலைகொள்ளாமல் குழம்பித் தவித்தேன்.
அப்போது அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்தேன். பள்ளியிலிருந்து புன்சிரிப்புடன் திரும்பி வந்த என் மகள் கையில் தொட்டிச் செடி இருந்தது.

