- டி ஆர் லெட்சுமணன்
புதிர் என்று நினைத்தவனுக்கு
புனிதமாய் தெரிவான்
புனிதமாய் நினைத்தவனுக்கு
புதிராய் தெரிவான்
தப்பு செய்தவனை
தண்டிப்பதில்லை என்று
நினைக்க வைப்பான்
திருந்தியவனை
மன்னிப்பதில்லை என்று
தோன்ற வைப்பான்
நேரில் வரமாட்டானா என்று
தவித்தவனுக்கு
கனவில் வந்து மறைவான்
கனவிலும் தேடாதவனுக்கு
நேரில் தோன்றுவான்
கெட்டவன் வாழ்கிறான்
நல்லவன் தவிக்கிறான் என்று
யோசிக்க வைப்பான்
நித்தமும் நினைத்தவனை
உருக வைப்பான்
நினைக்க நேரம் இல்லாதவனை
சிலிர்க்க வைப்பான்
ஏன் இந்த போராட்டம் என்று
கலங்கும் போது பக்கத்தில்
நிற்பான் நண்பனாய்.
அன்று புரியும்
இவன் செய்த அனைத்துக்கும்
காரணம் உள்ளதென்று
நமக்குதான் இல்லை
பொறுமையென்று.

