சிறுகதை
செல்வராணி
'டோக்கன் எண் 325' என்று தாதி அழைத்தார். அதுவரை தன் முறைக்காகக் காத்திருந்த அகிலாவும் அவரது கணவர் சரவணனும் ஆர்வத்துடன் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தார்கள்.
ஒன்பது ஆண்டுகளாக மருத்துவர் கூறப்போகின்ற அந்த இனிய செய்திக்காகத் தவமாய்த் தவம் கிடக்கின்றனர் இருவரும்.
திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்தப் பாக்கியம் இவர்களுக்கு ஏனோ கிடைக்கவில்லை.
இருவரும் கைநிறைய சம்பாதிக்கின்றார்கள்; நல்ல வேலை. ஆனால் கொஞ்சி விளையாட ஒரு மழலைச் செல்வம் இல்லையே என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கின்றனர் அகிலாவும் சரவணனும்.
எல்லாருக்கும் எல்லாம் நினைப்பதுபோல் கிடைத்துவிடுவது இல்லையே. அந்த வரிசையில் சரவணன் தம்பதியினரும் மழலைச் செல்வத்திற்காக ஏங்கி மருத்துவரைக் காணக் காத்துக்கிடக்கும் வேளையில்தான் தாதி அவர்களை அழைத்தார்.
"இப்ப நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்திய சொல்லப் போறேன். சரவணன்! வாழ்த்துகள்! நீங்க அப்பா ஆகப் போறீங்க' என்றார் மருத்துவர்.
மகிழ்ச்சியில் அகிலாவைப் பார்க்க அவள் முகம் பௌர்ணமிபோல் பிரகாசித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க சரவணனுக்கு எல்லையில்லா ஆனந்தம்.
மருத்துவர் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். இருவரும் வீடு திரும்பினார்கள்.
பல ஆண்டுகளாகக் காத்துக்கிடந்த வரம் இன்றுதான் கிடைத்துள்ளது. உலகத்தில் தாங்கள்தான் இந்த நேரத்தில் கொடுத்து வைத்தவர்கள் போன்று ஆனந்தக் கடலில் இருவரும் மூழ்கித் திளைத்தார்கள். அகிலாவைக் கண்ணின் மணிபோல பத்திரமாகக் கவனித்து வந்தான் சரவணன்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவள் வயிற்றினுள் கரு வளர்ந்து வந்துகொண்டிருந்தது.
மாதங்கள் உருண்டோடின. பிரசவத்திற்கான நாளும் நெருங்கியது. மருத்துவரிடம் பரிசோதனைக்காக இருவரும் இன்று வந்திருக்கின்றனர்.
"வாம்மா அகிலா! இப்படி வந்து உட்கார்," என்று அகிலாவை அறையினுள் அழைத்துச் சென்றார் மருத்துவர்.
பரிசோதனைகளை எல்லாம் முடித்துவிட்டார். பின்னர் சரவணனை அழைத்து, "இதாப்பாருங்க சரவணன், தாயும் சேயும் நல்லா இருக்கிறாங்க. ஆனா அகிலாவுக்கு வயசு முப்பைத்தைந்த தாண்டினதால சுகப் பிரசவம் என்பது கொஞ்சம் கஷ்டந்தான். அதனால ஆப்ரேஷன்தான் செய்ய வேண்டிவரும். ஒங்களுக்கு வசதியான நாளை நீங்களே குறிச்சிக்கலாம்," என்று சொன்னார் மருத்துவர்.
"நாங்க வீட்டில போய் நல்ல நாளா எங்க சோசியருக்கிட்டக் கேட்டுச் சொல்றோம்," என்று தம்பதியர் சொல்ல, "சரி உங்க வசதிக்கு ஏற்ற நாளைக் குறிச்சிட்டு சொல்லுங்க, நாங்க ஏற்பாடு செய்றோம்," என்றார் மருத்துவர். நன்றி கூறிக்கொண்டு விடைபெற்றார்கள் அகிலாவும் சரவணனும்.
"என்ன! சோசியரிடம் போய் நல்ல நாள் பார்க்கப் போறீங்களா? நான் இந்த உலகத்தை முதல் முதலாகப் பார்க்கப் போகும் நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் என்பதில் என் பெற்றோர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை? இது அக்கறையா? இல்லை மூட நம்பிக்கையா? நான் வெளிவரும் முன்பே என்னைக் குழப்பி விடுகிறார்களே என் பெற்றோர்கள்," என்று வயிற்றினுள் குழந்தைப் புலம்பியது.
"அகிலா! வர்ற பதன்கிழமை நாள் நல்லா இருக்குன்னு சோசியர் சொன்னார்.
அன்னைக்கே ஆப்ரேஷனை வெச்சுக்கலாம்," என்றான் சரவணன்.
"நாளையிலிருந்து நீ ஆபீசுக்கு லீவ போட்டிடு. மூணுமாசம்தானே மருத்துவ லீவு தருவாங்க இல்லையா? எனக்கும் இரண்டு வாரங்கள் கிடைக்கும்; பரவாயில்லை. பணிப்பெண் இருக்கிறாதானே? அதுக்கப்புறம் அவ பாத்துக்குவா. நீ தொடர்ந்து வேலைக்குப் போலாம்," என்றான் சரவணன்.
"ஆமாங்க, மூணு மாசம்தான் லீவு எடுப்பதா நானும் நினைச்சன். அதத்தாங்க நீங்களும் சொல்றீங்க. பணிப்பெண் குழந்தையை நல்லபடியாப் பாத்துக்குவாளா? எனக்கென்னவோ கொஞ்சம் தயக்கமா இருக்குங்க, என்ன செய்றது?" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அகிலா.
"அப்படிப்பார்த்தா சிங்கப்பூரில ஆம்பளங்க மட்டுத்தான் வேலைக்குப் போவாங்க. பொம்பளங்க வீட்டில குழந்தையைப் பார்த்துக்கிட்டுதான் இருப்பாங்க, ஆனா இங்க அப்படியா நடைமுறையில இருக்கு? பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்றாங்க. அவங்க குழந்தைகளை யார்தான் பார்த்துக்கிறாங்கன்னு நீ நெனெக்கிற? ஏதோ ஒரு சிலரைத்தான் பெத்தவங்க கூட இருந்து பார்த்துக்கிறாங்க. மற்ற எல்லா குழந்தைகளையும் பணிப்பெண்கள்தான் பார்த்துக்கிறாங்க. அதனால நீ கவலைப்பட வேணாம். நம்ம பணிப்பெண் குழந்தையை நல்லபடியா கவனிச்சிக்குவா," என்று அகிலாவைச் சமாதானப்படுத்தினான் சரவணன்.
"என்ன? இன்னும் மூன்றே மூன்று மாசம்தான் நான் என் அம்மாவுடன் இருக்கப் போகிறேனா? அதுக்கப்புறம் என்னைப் பணிப்பெண் கவனித்துக் கொள்வாங்களா? அதுக்கப்புறம் எனக்கு எல்லாமே என் பணிப்பெண்தானா?
நான் அழுதா ஏன் அழறேண்ணு அவங்களுக்கு எப்படித் தெரியும்? இதெல்லாம் தாய்க்குத்தானே தெரியும்.
தாய்ப்பாலுடன் தன் உணர்வுகளையும் சேர்த்து அம்மாவால மட்டும்தான் ஊட்ட முடியும். இது ஏன் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புரியல்ல?
இதுக்கப்புறம் தெனமும் அம்மாவும் அப்பாவும் ஆபீசில இருந்து தாமதமாக வீட்டுக்கு வருவாங்க. வந்ததும் களைப்பா இருக்குன்னு ஓய்வெடுத்துக்குவாங்க. எங்கூட எவ்வளவு நேரம்தான் செலவழிக்கப் போறாங்க? நான் வளர்வது எல்லாம் பணிப்பெண்ணின் கவனிப்பில் என்றால் பெற்றோர்களின் கடமைதான் என்ன? குழந்தை கிடைக்கலைன்னா மட்டும் பொலம்ப தெரிஞ்ச இவங்களுக்குக் அதை எப்படிப் பார்த்துக்கிறதுண்ணுத் தெரியல்ல.
தாயின் அரவணைப்பில் இருப்பதுதான் எனக்குப் பாதுகாப்பாக இருக்கும். நான் ஆரோக்கியமா வளரணுன்னா என் பெற்றோர் எங்கூட இருக்ணுந்தானே? என் பெற்றோர்களின் உலகமே நான்தான்; யாராவது கொஞ்சம் என் பெற்றோருக்கிட்ட இத எடுத்துச் சொல்லுங்களேன் பிளீஸ்...
இதோடு நின்றுவிடுவாங்களா இவங்க? எனக்குப் பதினெட்டு மாதம் ஆனவுடன் என்னைக் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திலதானே இவங்க சேர்க்கப் போறாங்க? அங்க நான் அதிகாலையில ஏழு மணி முதல் சாயந்திரம் ஏழு மணி வரைக்கும் இருக்கணும். காலையில நான் தூங்கிக்கிட்டு இருக்கிறப்பவே என்னை அனுப்பிவிடுவாங்க.
காலையில் நான் கண்முழிச்சதும் அம்மா என்னைக் கட்டியணைச்சு முத்தமிட்டா எப்படி இருக்கும்? என்னைக் குளிப்பாட்டி தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் அந்த இனிமையான சுகம் எனக்குக் கிடைக்காதா?
என்னைக் குளிப்பாட்டுறது என் பாலர் பள்ளி ஆயா. எனக்குப் பசித்தால் உணவூட்டுவது ஆயா. ஏன் என்னைத் தூங்க வைப்பதும் ஆயாதான்.
இப்படிப் பகல் முழுவதும் பாலர் பள்ளியில் கழித்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தால் வீட்டில் என்னைக் கவனிப்பது பணிப்பெண்.
ஆக மொத்தத்தில் நான் என் அம்மாவுடன் மகிழ்ச்சியாகக் கழிக்கும் நாட்கள் இந்தப் பத்தே பத்து மாதங்கள்தான்.
இந்த உலகத்தை நான் பார்க்கும் நாள் முதல் என்னைக் கவனித்துக் கொள்றவங்க பணிப்பெண்ணும் ஆயாவும்தானே அப்படிப்பட்ட உலகில நான் பிறக்க விரும்பல.
நான் என் அம்மா அப்பாவுடன் இனிமையாகக் களிக்க வேண்டிய மழலைப்பருவத்தை ஆயாவுடனும் பணிப்பெண்ணுடனும்தான் களிக்கவேண்டுமென்றால் அப்படிப்பட்ட உலகில் நான் ஏன் பிறக்க வேண்டும்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளில் குழந்தை மூழ்கத்தொடங்கியது. நாள்கள் புயல் வேகத்தில் கடந்தன; புதன்கிழமையும் வந்தது. மழலையின் புலம்பலைப் புரியாத பெற்றோர் மகிழ்ச்சியுடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். "இதோ நான் வெளியுலகைக் காணப்போகிறேன். ஆனால், மற்றவர்களின் பராமரிப்பில்தான் நான் வாழவேண்டுமென்றால் அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு எதற்கு?" என அப்பிஞ்சு உள்ளம் வாட, அதன் இதயத்துடிப்பு மெல்ல மெல்ல வழக்கத்திற்கு மாறாகத் துடிக்க ஆரம்பித்தது.

