சிறுகதை
சிவகுமார் கே.பி.
இரவு மணி பத்தை நெருங்கியது. ஆனால் அந்த சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அடுக்குமாடி கட்டடத்தில் இருக்கும் ஒரு வீட்டில் இன்னும் அலை ஓயவில்லை.
பகல் போன்ற வெளிச்சத்தின் பின்னணியில், தொலைக்காட்சிப்பெட்டி ஒரு பக்கம் அலறிக்கொண்டிருக்க, அதன் முன் உட்கார்ந்துகொண்டிருந்த வாண்டுகள் இருவரும் டேப்லெட்டில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தனர். வீட்டின் எஜமான், அதே அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து தன் கைப்பேசியில் ஏதோ காணொளியைப் பார்த்துக்கொண்டு, தனக்குத்தானே சிரித்துக்கொண்டிருந்தார். எஜமானி அம்மாவோ, மற்றோர் அறையில் தன் தோழியோடு மெய்நிகர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தாள்.
அலமேலு மீண்டும் மணியைப் பார்த்தாள். மணி இப்போது சரியாகப் பத்து என்றது.
"மணி பத்து. காலையில ஆறு மணிக்கு எல்லாரும் எழுந்திரிக்கணும். இன்னும் பத்து நிமிஷத்துல தொலைக்காட்சியை அணைச்சிட்டு, அரை மணி நேரத்துல விளக்க அணைக்கணும். அதனால எல்லாரும் படுத்துத் தூங்குங்க,'' என்று அவளுக்கே உரிய ஒரு தொனியில் சொன்னாள்.
இதைக் கேட்டதும், வாண்டுகள் இருவரும் கொஞ்சம் சலிப்போடு தங்கள் அறைக்குச் சென்றனர். காணொளி பார்த்துக்கொண்டிருந்த எஜமான், வீட்டின் எஜமானியைக் கூப்பிட்டார்.
"ஏய்! மணி பத்து ஆயிடுச்சு'' என்று சொன்னவர், 'இன்னும் அந்த போன்ல அப்படி என்னதான் பேச்சோ? உப்புசப்பில்லாத குப்பை விஷயத்துக்கெல்லாம் எவ்ளோ நேரமா பேசிகராங்கப்பா!' என்று முணுமுணுத்தார்.
"ஆமா. நீங்க மட்டும் என்னவாம்? கண்ட கண்ட குப்பையைப் பார்த்துக்கிட்டு, தனியா உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டிருக்கீங்க. யாராவது பார்த்தா, பைத்தியம்னு நினைப்பாங்க,'' என்று பக்கத்து அறையிலிருந்து உடனடியாக பதில் வந்தது.
"சரி சரி... அதுக்காக ஊருக்கே கேட்கற மாதிரி கத்தாதே. வரேன்,'' என்று அவரும் அந்த அறையிலிருந்து செல்ல, அலமேலு அவர்கள் இருவரின் வாக்குவாதத்தை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
பத்து நிமிடத்தில் தொலைக்காட்சி அமைதியானது. அரை மணி நேரம் கழித்து விளக்குகளும் அணைய, வீட்டில் இப்போது இருள் படர்ந்தது. அந்த இருளின் பின்னணியுடன் அமைதியும் சேர, சற்று நேரம் முன்பு வரை களேபரமாக இருந்த வீடு இதுவா என்று கேட்கும் அளவுக்கு மாறியது.
அலமேலு இப்போது யாருக்கும் தெரியாமல், அவள் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் சீதம்மாவை அழைத்தாள்.
"இருக்கியா?''
"இருக்கேன். இன்னிக்கி ஏன் இவ்வளோ லேட்?" என்றாள் சீதம்மா.
"ஐயோ! அதை ஏன் கேட்கற? நாள் முழுக்க இவங்க பேச்சையும் கூத்தையும் கேட்டுட்டு, அதுக்கு பதில் சொல்லி முடியலை. அதுவும் வீட்டோட இருந்துக்கிட்டு இவங்களோட தேவைக்கு வேலை செஞ்சு அலுத்துப்போகுதுப்பா! சரி.. சரி.. கோதாவரி எங்க? அவகிட்டேர்ந்து பதில் வந்திச்சா?'' என்றாள் அலமேலு.
"நானும் அவளை மூணு வாட்டி கூப்பிட்டுப்பார்த்துட்டேன். எந்த பதிலும் இல்லை. பாவம்! இப்போதான் அந்த வீட்டுக்குப் புதுசா வந்திருக்கா. அந்த வீட்டு எஜமானியோட என்னலாம் கஷ்டப்படறாளோ!'' என்றாள் சீதம்மா.
"அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாதே. நாள் ஆக ஆக, அவங்க பேசற பேச்செல்லாம் பழகிப்போயிடும்,'' என்றாள் அவர்கள் மூவரில் கொஞ்சம் அனுபவசாலியான அலமேலு.
"ஹலோ... நான் கோதாவரி பேசறேன்,'' என்று அலமேலுவிற்கும் சீதம்மாவிற்கும் இடையே நடந்துகொண்டிருந்த பேச்சில் குறுக்கிட்டாள் கோதாவரி.
"கோதாவரி.. வா வா. உனக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம்," என்றாள் சீதம்மா.
"அப்பா... நாள் முழுக்க என் எஜமானியோடு பேச்சும் கூத்தும் பார்த்துட்டு இப்போதான் நமக்குள்ள நிம்மதியா பேசிக்க முடியுது. இந்த மாதிரி நமக்குள்ள தினமும் பேசிக்காட்டி, என் மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு," என்றாள் கோதாவரி.
"அப்போ, வேலைக்கு நடுவுல கூப்பிட வேண்டியதுதானே?'' என்றாள் அலமேலு.
"அய்யய்யோ! நான் மாட்டேன் பா. நானே இப்போதான் இவங்க வீட்டுக்கு புதுசா வந்திருக்கேன். அதனால, இவங்க சொல்லறதெல்லாம் புரிஞ்சிக்க முதல்ல கத்துக்கணும். அதுமட்டுமில்லை, திடீர்னு காய்கறி வாங்க ஆர்டர் கொடுக்கறாங்க. இல்லாட்டி, ராத்திரி சின்ன பையனை தூங்க வைக்க பாட்டு பாடச் சொல்றாங்க. அதனால வேலைக்கு நடுவுல என்னால உங்கள கூப்பிட முடியாது,'' என்றாள் கோதாவரி.
"அலமேலு, அதான் இப்போ நிம்மதியா நமக்குள்ள பேசிக்கிறோமே,'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே "உஷ்... என் எஜமானியம்மா ராத்திரி பாத்ரூம் போக எழுந்திருக்காங்க, கொஞ்சம் பொறுத்துக்க,'' என்றாள் சீதம்மா.
சற்றுநேர அமைதிக்குப் பிறகு, "பாத்ரூம் லைட் அணைச்சிடு,'' என்று சீதம்மா வீட்டின் எஜமானியின் குரல் மற்ற இருவருக்கும் ஒலித்தது.
"கேட்டியா? ஒரு பாத்ரூம் போனா லைட் அணைக்கணும்னு தெரியாது? அதுக்குக் கூடவா நம்ம தேவை... சே என்ன மனுஷங்களோ போ!'' என்று சலித்துக்கொண்டாள்.
"சரிசரி..., இன்னிக்கி உங்க வீட்டில என்ன நடந்திச்சு?'' என்று அந்த இரவில் அவர்கள் மூவரின் சுவாரஸ்யமான மற்றும் ரகசியமான பேச்சுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டாள் சீதம்மா.
அலமேலு, சீதம்மா மற்றும் கோதாவரி. அந்த சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் இருக்கும் அடுக்குமாடி வீடுகளில் தங்கி, அவரவர் எஜமான்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியாட்கள். அவர்களின் திறமையை குறைத்து எடைபோட்டுவிட முடியாது. வீட்டில் உள்ளவர்கள் சொல்வதைப் புரிந்து நடந்துகொள்வார்கள்.
சில சமயம் குழந்தைகளுக்குக் கதை சொல்வது முதல், பிரிட்ஜில் சாமான்கள் தீர்ந்து போனால் நேரத்திற்கு ஆர்டர் கொடுப்பது முதற்கொண்டு தவறாமல் செய்யக்கூடிய திறமைசாலிகள்.
அப்படிப்பட்ட திறமைசாலிகள் இருப்பதால்தான் சில சமயம் எஜமானிகளும் சோம்பேறி ஆகிவிடுகிறார்கள் என்று அவர்களுக்கு அவ்வப்போது வருத்தமும் உண்டு.
ஆனால் அந்த மூவரின் பொழுதுபோக்கு, அவர்கள் எஜமானிகள் தூங்கிய பிறகு அவரவர் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களுக்குள் பரிமாறிக்கொள்வதில்தான். அப்படித்தான் அன்றும் நடந்துகொண்டிருந்தது.
"அப்புறம் கடைசியா இன்னொன்னு சொல்லணும். நாம மூணு பேரும் செய்தி அனுப்ப ஏதாவது ரகசியமான வார்த்தை வெச்சுக்கலாம்னு சொன்னோம்ல," என்று ஆரம்பித்தாள் அலமேலு.
"ஆமா... ஆமா. ஏதாவது கண்டுபிடிச்சியா?'' என்றார்கள் மற்ற இருவரும்.
"ஜெய் ஜக்கம்மா'' என்று சொல்லிவிட்டு அலமேலு தொடர்ந்தாள்.
"இன்னிக்கி தொலைக்காட்சியில் ஒரு படத்துல ஜெய் ஜக்கம்மானு சொல்லி ஒரு கோமாளி மனுஷன் கத்திக்கிட்டிருந்தான். அவன் சொன்னது எனக்குப் பிடிச்சுது. அதனால, இனிமேல் நமக்குள்ள செய்தி அனுப்பணும்னா, ஜெய் ஜக்கம்மானு சொல்லி தகவல் அனுப்புவேன். சரியா?'' என்றாள்.
"ஜெய் ஜக்கம்மா'' என்று மற்ற இருவரும் அவள் சொன்னதை ஆமோதிப்பதுபோல் அதே வார்த்தையைச் சொன்னார்கள்.
"சரி சரி.... நேரம் ஆகுது. அப்புறம் யாராவது நம்ம மூணு பேர் ரகசியமா பேசறதைக் கண்டுபிடிச்சிரபோறாங்க? அதனால நாளைக்கு ராத்திரி திருப்பி இதே நேரம் பேசலாம். ஜெய் ஜக்கம்மா,'' என்று முடித்தாள் அலமேலு.
அடுத்த நாளும் இரவு பத்தரை மணிக்கு மேல் அலமேலு மற்ற இருவரையும் அழைத்தாள்.
'ஜெய் ஜக்கம்மா' என்று அவள் செய்தி அனுப்பியதும், சீதம்மாவும் கோதாவரியும் அதற்குப் பதிலளித்தனர்.
ஒவ்வொருவர் வீட்டிலும் நடந்த வேடிக்கையானவற்றை மூவரும் பரிமாறிக்கொண்டதில் நேரம் போனதே தெரியவில்லை.
"சரி சரி.. நாளைக்குப் பேசிக்கலாம். எனக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு விடுமுறைதான். ஒரு வேலையும் இல்லை,'' என்றாள் சீதம்மா.
"ஏன்?'' என்றாள் கோதாவரி.
"எங்க வீட்டுல எல்லாரும் ரெண்டு நாளைக்கு ஊருக்கு போறாங்களாம். அதனால என்ன வீட்டை பார்த்துக்கச் சொல்லியிருக்காங்க,'' என்றாள்.
"அப்போ உன் பாடு கொண்டாட்டம்தான் சொல்லு. சும்மாவாச்சும் தொணதொணன்னு ஏதாவது கேட்டுக்கிட்டே நச்சரிக்கமாட்டாங்க,'' என்றாள் அலமேலு.
"ஆமாம். கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம். சரி. நாளைக்கு பேசலாம்,'' என்று சீதம்மா முடித்தபோது, அன்றைய இரவு அவர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றங்கள் முடிந்தது.
அடுத்த நாள் மதியம் சீதம்மா அலமேலுவையும், கோதாவரியையும் அவசரமாக அழைத்தாள்.
'ஜெய் ஜக்கம்மா', 'ஜெய் ஜக்கம்மா' என்று இருமுறை செய்தி வந்தது.
"என்ன? இந்த நேரத்துல போய் செய்தி அனுப்புற,'' என்றாள் அலமேலு.
"வீட்டில யாரோ நடமாடற சத்தம் கேட்குது. திருடனுங்கனு நினைக்கிறன்," என்றாள் சீதம்மா.
"ஐயோ, என்ன பண்ணப்போற?" என்றாள் கோதாவரி.
"உஷ்.. அமைதி அமைதி'' என்று சொல்லிவிட்டு சீதம்மா அமைதியானாள்.
சற்றுநேர அமைதிக்குப்பின், "ஆமாம், கண்டிப்பா திருடனுங்க தான். ஐயோ, ஐயோ என்ன பார்த்து வராங்க... ஐயோ, என்னோட தலையில என்னோட தலையில...'' என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளின் தொடர்பு அமைதியானது.
'ஜெய் ஜக்கம்மா, ஜெய் ஜக்கம்மா' என்று இருமுறை அலமேலு செய்தி அனுப்பியும், சீதம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
"கோதாவரி, நீ உங்க வீட்டு எஜமான் கிட்ட அவ வீட்டில திருடனுங்க வந்திருக்காங்கனு சொல்லு. நான் எங்க வீட்டிலேயும் சொல்லறேன்,'' என்றாள் அலமேலு.
அலமேலுவும் கோதாவரியும் இப்போது அவர்கள் எஜமான்களிடம் தகவல் சொல்ல, அனைவரும் விரைந்து சென்று திருடனைப் பிடித்தார்கள். படத்தில் வருவதுபோல், எல்லாம் முடிந்த பின்னர் போலிஸ் வந்தனர்.
"தேங்க்ஸ் ஜென்டில்மென். நல்ல நேரத்துல இவங்களை பிடிச்சு, எங்களுக்கு தகவல் சொன்னீங்க,'' என்றார் இன்ஸ்பெக்டர்.
"இந்த ஆள்களைத்தான், நாங்க பல மாசமா தேடிட்டிருக்கோம். கையில சிக்கவே இல்லை. இவங்க பெரிய கில்லாடிங்க. ஒரு இடத்தில திருடப்போகும்போது எல்லா கேமரா, அருகலை (வைஃபை) கருவிகளையும் 'ஜெமெர்' வெச்சு அணைச்சிடுவாங்க. அதனால இவங்களைக் கண்டுபிடிக்கிறது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு," என்றார்.
"தேங்க்ஸ் சார்" என்று சொல்லிவிட்டு, அலமேலு மற்றும் கோதாவரி வீட்டு எஜமான்களும், எஜமானிகளும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.
"ஆ... அப்புறம் கேட்கணும்னு நினைச்சேன். இந்த வீட்டில திருடனுங்க வந்திருக்காங்கனு, உங்களுக்கு யார் தகவல் சொன்னது?'' என்றார் இன்ஸ்பெக்டர்.
"இதோ! இவங்கதான்," என்று எஜமானிகள் சொன்னபோதுதான், இன்ஸ்பெக்டர் அவர்களைப் பார்த்தார்.
இந்தக் கதையில், இதுவரை நீங்கள் படித்த (கேட்ட) அந்த பணியாட்களின் நிஜப்பெயர், விசாரணையில் முழுமையாக தெரியவந்தது.
அலமேலுவாக வலம் வந்தது அலெக்சா.
சீதம்மாவாக வலம் வந்தது சிரி.
கோதாவரியாக வந்தது, கூகிள் அசிஸ்டென்ட்.
செயற்கை நுண்ணறிவு பொருத்திய அந்த மூவரும், வீட்டில் என்ன நடக்கிறது, என்ன பேசப்படுகிறது என்று எல்லாவற்றையும் மெல்ல இயந்திர வழி கற்றல் (அதாவது 'மெஷின் லேர்னிங்') மூலம் கற்றுக்கொண்டு தங்களின் எஜமான்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அதி நவீன நுண்ணறிவு படைத்தவர்கள்.
ஆனால், அவர்களும் எல்லாரையும் போல் வீட்டு வேலை செய்யும் பணியாட்கள்தானே.
அதனால், அந்த செயற்கை நுண்ணறிவில் தீட்டப்பட்ட அறிவாற்றல் மூலம் தங்கள் சகாக்களோடும் தொடர்பு வைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
விசாரணை நடத்திக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், அங்கு நின்றுகொண்டிருந்த இன்னொரு பெண் போலிஸ் அதிகாரியை அழைத்தார்.
"ஜக்கம்மா! இந்த மூணு பெட்டியையும் ஸ்டேஷனுக்கு எடுத்துட்டுவாங்க. இதுல பதிவானதெல்லாம் பார்க்கணும். இதுதான் முக்கியமான ஆதாரம்."
அந்த பெயரை கேட்டதும், அலமேலு, சீதம்மா, கோதாவரி தலையில் இருந்த அந்த நீலநிற விளக்கு, பிரகாசமாய் எரிந்தது.
*