சிறுகதை மலையரசி சீனிவாசன்
கையிலிருக்கும் பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கும்போது "இத்தனை நாளா இந்தப் புத்தி எங்கே போச்சு?" என்று நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டான் ராமன்.
"ஒரு சிகரெட் விலை.." கணக்குப் போடும்போதே சிகரெட் புகையின் வளையங்கள் அவன் கழுத்தை நெருக்குவதைப்போல இருந்தது.
திருமணத்திற்கு முன்னும் சரி திருமணத்திற்குப் பின்னும் சரி ராமன் நிரந்தரமாக ஓர் இடத்தில் வேலை பார்த்ததில்லை.
"நமக்கு இருக்கும் மூணு பிள்ளைங்களை நினைச்சாவது நிலையான ஒரு வேலையைப் பார்க்கக் கூடாதா?" என்ற தனலட்சுமியின் தொடர் நச்சரிப்பில் ராமன் இப்பொழுதுதான் ஒரே இடத்தில் ஏழு மாதமாக வேலை பார்க்கிறான்.
"பன்னிரண்டு மணி நேரமும் வேலை பார்க்க வேண்டியதில்லை." "அதென்னடா வேலை?" நண்பனின் சகோதரனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவன் பார்த்து வந்த வேலைக்கு அழைத்துச் சென்றான். "ஒன்னும் கஷ்டமில்லாத வேலை. வண்டிக்குப் பின்னால ஏறிக்க வேண்டியதுதான் குப்பைத் தொட்டியிலிருக்கும் குப்பையெல்லாம் வண்டிக்குள்ளே கொட்டியதும், பிறகு ஒரு குச்சியை வைச்சு வண்டி ஓரத்திலே ஏதாவது குப்பை இருந்தா வண்டிக்குள்ளே தள்ளிவிடவேண்டியதுதான். ரொம்ப சின்னாங்கு(சுலபம்)" அந்தக் குப்பைத் தொட்டியில் தன்னை யாரோ தள்ளிவிடுவதைப்போல "அய்யோ... ஆள விடுடா" என்று ஓட எத்தனித்தவனைப் பிடித்து நிறுத்தியவன் "கொஞ்ச நாளைக்குத்தான்.." என்று எதை எதையோ கூறிச் சம்மதிக்க வைத்தான்.
"பரவாயில்லங்க எந்த வேலையா இருந்தாலும் சந்தோசத்துடன் செய்யுங்க," என்றாள் தனலட்சுமி.
"என்னமோ பார்க்கிறேன்," என்று சலிப்புடன் கிளம்பினான். ராமனுக்கு உதவியாக மற்றொருவரும் இருந்தது நிம்மதியைக் கொடுத்தது. அவனுக்குக் குடலைப் புரட்டிக்கொண்டு வருவதைப் பார்த்தவர் "அண்ணே….கொஞ்ச நாளுக்கு அப்புறம் இந்த நாற்றமே..." என்றார்.
அடுக்குமாடி வீடுகளில் இருந்து குவியும் குப்பைகளில் இருந்து ஒருநாள் ஒரு சிறிய காற்பந்து அவனைத் தாண்டி உருண்டோடியது. மைனாக்கள் சிறகடித்தன.
"காற்பந்து வேணும் அப்பா," என்று இரண்டாம் மகன் கேட்டது ஞாபகம் வரவே உடனே அதை எடுத்து வண்டிக்குள் போட்டுக் கொண்டான்.
"சபாஷ்,," மகன் பந்தடிப்பதைப் பார்த்து கைதட்டினான். மறுசுழற்சி செய்யும் குப்பைகளை எடுப்பதற்காக அவசரமாக ஆள் தேவையென்று ராமனை அனுப்பினார்கள்.
"புதுசாதான் இருக்கு!" அந்த இளஞ்சிவப்பு கைப்பையை ஈரத் துணியால் துடைத்தாள் தனலட்சுமி.
பாலி கிளினிக்கில் உதவியாளராக வேலை பார்த்துக்கொண்டு வீட்டையும் பொறுப்புடன் பார்த்துவரும் மனைவியிடம் புதிய பூரிப்பைப் பார்த்தவன் பெரியவனுக்கும் ஒரு தோள் பை கிடைத்தால் நல்லாயிருக்குமே என்று சாப்பாட்டுப் பையுடன் கிளம்பினான்.
"இதை எப்படிங்க செய்யறது"
"இப்படியே சேர்த்துச் சேர்த்து வைச்சுத்தான்,"
"ஆனா... எதோட எத சேர்க்கணும்னு ஒரு படம் இருக்குமே," என்றவள் நெகிழிப் பைக்கு ஒரு முடிச்சைப் போட்டாள். "ரம்யாவிற்கு எல்லாம் தெரியும். நீ நல்லாக் கழுவி பிள்ளைக்குத் தெரியாம எடுத்துவை," என்று கடுகடுப்புடன் கூறியவன், "அப்பா!" என்று இரண்டாம் வகுப்பிற்கான துணைப்பாடம் முடிந்து ஓடி வரும் ரம்யாவை அள்ளி அணைத்தான்.
"ஞாயித்துக்கிழமையில கிடைக்கிற ரெட்டை சம்பளத்தை விட்டுட்டு.." தனலட்சுமி முகத்தைச் சுழித்தாள். சின்னது பெரிது என்று ஒவ்வொரு லேகோவையும் பொருத்திப் பார்க்கும் ரம்யாவின் துருதுருப்பைக் கண் இமைக்காமல் ரசித்தான்.
"இது என்னவாக இருக்கும்?"
"இப்ப லேகோவில் விதவிதமா வந்திருக்குங்க."
"அப்படியா?" "ம்ம்... அந்தக் கடை பக்கம் போனாத்தானே?" வெடுக்கென்று தோள்பட்டையை இடித்துக் காட்டினாள். அதைப் பொருட்படுத்தாமல் "ரயிலு!" என்று பச்சை லேகோவை நீட்டினான்.
"ஆமா அப்பா" அடுத்த நாற்பது நிமிடங்களில் ரயில் வண்டி புறப்படுவதற்குத் தயாராக இருந்தது. லேகோ தண்டவாளங்களை இணைத்து இணைத்து பாதை உருவாக்கிக்கொண்டிருந்தாள் ரம்யா.
"ஓ... இது ரெடியானதும் கையாலேயே ரயில் வண்டியை இதுல தள்ளனும் அப்படியா?" ஆமாம் என்று தலையாட்டிய அவளுக்குத் தண்டவாளத்தின் வளைவு சரியாக வரவில்லை. அதைப் பார்த்தவனுக்குப் பகீரென்றது "ஒண்ணு குறையுது," என்று மனைவியிடம் சாடையில் கேட்டான்.
"அந்தப் பைக்குள்ளேயே நல்லாத் தேடிப்பாருங்க," நெகிழி பையைக் கசக்கினான். வாடிய முகத்துடன் தரையில் விரித்திருக்கும் பாய்க்கு அடியில் கையை விட்டுத் துழாவினாள் ரம்யா. ராமனுக்கு என்ன செய்வதென்று புரியாமல் "சரியாப் பார்த்து வாங்காம விட்டுட்டேனே!" பொய்யை உமிழ்ந்தவனின் கோபப் பார்வை மனைவி மீது பாய்ந்தது.
"அன்னைக்குச் சுத்தமா கழுவி காயத்தான் வைச்சேன்." 'லெகோ'வால் குடும்பத்தில் ஏதாவது கலவரம் நடந்துவிடுமோ என்கிற பதற்றத்துடன் அவள் அணிந்திருக்கும் நீளமான கவுனை உதறினாள். ரம்யாவிற்குச் சட்டென்று ஏதோ நினைவிற்கு வரவே தனது பென்சில் பாக்ஸைத் திறந்தாள்.
"குளிக்கும்போது எனக்கு ஒரு லெகோ கிடைச்சது அத ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டுப்போய் எல்லார்கிட்டேயும் காண்பிச்சேன்," குற்றவுணர்ச்சியில் எதுவும் கேட்க நா எழாமல் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருப்பதைப்போல மரண பயம் கவ்வியது.
"சாரிப்பா அத லிண்டா கேட்டதும் கொடுத்துட்டேன்" கன்னத்தில் கைவைத்தாள். சரிந்து விழுந்தவன் எழுந்து அமர்வதற்கு ஓரிரு நாட்களாகியது. ராமன் ஒரு மாதமாக ஊதித்தள்ளாத பணத்துடன் கடைத் தொகுதிக்குள் நுழைந்தான். கீழ்த்தளத்தில் சிறுவர்களுக்காக நடக்கும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குப் பிள்ளைகளுடன் பெற்றோர்களும் உற்சாகத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்.
லேகோ விற்கும் கடையைத் தேடினான். கடைத் தொகுதியின் இரைச்சலில் கைப்பேசி அழைப்பை மூன்று முறை தவறவிட்டதைக் கவனித்தவன் உடனே அழைத்தான்.
நண்பன் கூறுவது ராமனுக்குச் சரியாக விளங்கவில்லை.
"என்னடா சொல்றே?"
"தம்பிக்கு உடம்பு சரியாயிட்டு. நாளையிலிருந்து வேலைக்கு நீ வரவேண்டாம்."