செ. ப. பன்னீர்செல்வம்
அந்த பன்னாட்டு நிறுவனத்தின் மேலதிகாரி சுந்தரம் அன்று தம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த விண்ணப்பங்களை அடுக்கி வைத்தபோது, அந்தக் குறிப்பிட்ட விண்ணப்பத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்தார். அந்த வேலைக்கான தகுதிகள் யாவும் அந்த விண்ணப்பதாரருக்கு இருந்தபோதிலும் அதை அனுப்பியவர் பெயர்தான் சுந்தரத்துக்கு நெருடலாக இருந்தது. அவருக்கு முழு அதிகாரமும் கொடுக்கப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட அந்த விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்து, அதற்கான முத்திரையையும் இட்டு, ஏற்கப்படாத விண்ணப்பங்கள் பெட்டியில் வைத்து மகிழ்ந்தார். சிலரின் மனத்துக்குள் இன்னொரு மனம் இருக்கும் என்பார்களே அதுபோலத்தான் அவருக்கும் இருந்தது. அந்த மனம் அவரை இன்னும் ஏதேதோ செய்யப் பார்த்தது. அது மேலும் ஏதேதோ செய்ய நினைத்தது. ஆனாலும் அவர் தம்முடைய உள்மனத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். தமக்கு மிகவும் வேண்டிய நண்பன் வேணுவின் மகள் சுந்தரியை எப்படியும் அந்த வேலையிலே சேர்த்துவிடவே அவர் விரும்பினார்.
நண்பருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டியது அவருக்கு முக்கியமாகப் பட்டது. சுந்தரி தன் அலுவலகத்தில் சேர்ந்துவிட்டால், மெதுவாக அவளைத் தம்முடைய மருமகளாகவும் ஆக்கிவிடலாம் என்பது அவரின் ஆசை, இப்படிப்பட்ட எண்ணம் தம் மனத்தில் இருக்கும்போது, தம்முடைய அலுவலகத்தில் பியூனாக தம்பி வேலையில் இருந்து ஓய்வுபெற்றுள்ள முத்துவின் மகன் மருதனுக்கா அந்த வேலையைத் தரமுடியுமென்று அவருக்கு ஒருவித மனப்போக்கு இருந்தது. அந்த நேரத்தில்தான் தலைமை நிலையத்திலிருந்து அவருக்குத் தொலைபேசி வந்தது, மிஸ்டர் சுந்தரம், நீங்க தேர்ந்தெடுத்த விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு வரச் சொல்லுங்கள்,தேர்ந்தெடுக்காதவர்களுக்கு ஏதாவது காரணம் காட்டி, நிராகரிப்புக் கடிதம் அனுப்பி விடுங்கள் என்று தலைமை நிலைய உயர் அதிகாரி இப்ராகிம் கான் கூறினார்.
சரி சார்-- மறுமுனையில் அவரின் தொலைபேசி வைக்கப்பட்டவுடன் சுந்தரத்துக்குக் கூடுதல் துணிச்சல் வந்துவிட்டது. அவர் அதற்காகத்தானே இவ்வளவு நேரமும் காத்துக்கிடந்தார். வீட்டுக்கு மெதுவாகப் போகலாம் என்று முடிவெடுத்தவராய், தாம் தேர்வு செய்தவர்களுக்கான நேர்காணல் கடிதங்களைத் தயார் செய்தார். தேர்வு செய்யப்படாதவர்களுக்கும் கடிதங்களை அனுப்ப சுந்தரம் ஆயத்தமானார். இன்றைய வேலையை இன்றே செய்துவிட்டால், நாளை அதைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்று அவர் நினைத்தார். அன்று நெடுநேரம் வேலை செய்ததால் மறுநாள் சற்று நேரங்கழித்து வரலாம் என்றும் அவர் முடிவெடுத்தார். கடிகாரத்தைப் பார்த்தார்.
இரவு மணி எட்டரை ஆகியிருந்தது. மேசையில் இருந்தவற்றை ஒழுங்குபடுத்திவிட்டு வெளியே வந்தார். வாசலை நோக்கி ஒரு வாடகை வண்டி வந்துகொண்டிருந்தது. அவர் வசித்து வந்த மண்ணு மலை பகுதிக்குச் செல்ல அங்கிருந்து நிறைய பேருந்து சேவைகள் இருந்தாலும் அன்று கூடுதலாக வேலை பார்த்துவிட்டதால் டாக்சியிலேயே போகலாம் என்று நினைத்தார்.
அந்த டாக்சியை நிறுத்தும்படி கை காட்டினார். அந்த டாக்சி அருகில் வந்து நின்றதும் அதன் ஓட்டுநரைப் பார்த்ததும் முகம் மாறிவிட்டது.
குற்றம் உள்ள மனசு என்னவோ செய்தது. அதைச் செலுத்தி வந்தவர், பழைய ஊழியர் முத்துவின் மனைவி மாலதி. பெரிய கிராணி சுந்தரத்தைப் பார்த்ததும், மனத்தில் மகிழ்ச்சி, தம் கணவரின் முன்னாள் தலைமை அதிகாரி என்னும் மரியாதை.
"வணக்கம் அய்யா, எங்கே போகணும், போத்தோங் பாசிருக்கா," என்று கேட்டவாறு, தம் வண்டியை நிறுத்தினார்.
"பரவாயில்லை நான் வேறொரு நண்பருக்காகத் தான் காத்திருக்கின்றேன். டாக்சியில் இங்கு வந்து என்னைக் கூட்டிப் போவதாகக் கூறினார். அவர்தான் வந்துவிட்டாரோ என்று உங்கள் டாக்சிக்குக் கைகாட்டிவிட்டேன்.
நன்றி நீங்கள் புறப்படுங்கள் என்று கூறினார், சுந்தரம். எதையோ மறைப்பதற்கு, அவர் மழுப்புவது நன்றாகத் தெரிந்தது.
சரிசார், நான் புறப்படுகிறேன். இன்று இரவு எங்கள் வாடகை வண்டி சங்கத்தின் புத்தகம் படிப்போம் இயக்கத்தின் கூட்டம் நடக்கிறது. அதில் நான் கலந்துகொள்ள வேண்டும். இப்போதே நேரமாகிவிட்டது என்று கூறியவாறு நான் புறப்படுகின்றேன் என்று கூறிவிட்டு வண்டியை வேகமாகச் செலுத்தினார், மாலதி.
ஏதோதோ சிந்தனைகளுடன் பெரிய கிராணி சுந்தரம் சாலையைக் கடந்தார். பிறகு பேருந்து நிறுத்தத்தின் பக்கத்தில் சென்றுஅங்கிருந்த இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்தார்.
முத்துவின் மகன், மருதுவுக்குக் கடிதத்தை அனுப்பி வைக்காமல், அதை நிராகரித்தது சரிதானா என்று அவரின் உள்மனம் கேள்வி கேட்டது. ஆனால், நெடுநாளாகத் திருமணம் ஆகாமல் இருக்கும் தம் ஒரே மகன் அன்பரசுக்கு ஏற்றவளாகச் சுந்தரி இருப்பதால், ஒரே கல்லில் இரு மாங்காய்களைப் பெற அவர் முடிவெடுத்தது, அவரைப் பொறுத்தவரை சரியாகவே பட்டது.
இருந்தாலும் அவரின் மனக்குரங்கு மரத்துக்கு மரம் மாறி மாறி தாவிக்கொண்டிருந்தது. நேர் காணலின்போது, சுந்தரியைத் தேர்வு செய்யாமல் அதிகாரிகள் வேறு யாரையாவது தேர்வு செய்துவிட்டால் என்ன செய்வது என்று குழம்பினார். ஆனாலும் அந்த நேர்காணல் நிகழ்வில் தாமே முக்கிய அதிகாரியாக இருக்கப்போவதால், அதைப் பற்றிக் கவலைப்படுவது தேவையில்லை என்று அவரின் மற்றொரு மனம் கூறியது.
முத்துவின் மகனுக்கு வேறொரு வேலை கிடைக்காமலா போய்விடும்?
முத்து மட்டும் என்ன? அலுவலகப் பையனாகத் தம்பி வேலையில்தான் இருந்தாரே தவிர, அவருடைய பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க அரும்பாடு பட்டார்.மூத்த மகள் துளசியம்மா, தொழிற்கல்லூரியில் பயின்று கல்வி நிலைய ஊடகம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள்.
அவளின் தம்பியாகிய மருதன், பொருளாதாரப் பாடத்தைச் சிறப்பாகப் படித்துப் பட்டதாரியாக உள்ளான்.
இவை யாவும் பெரிய கிராணிக்கும் தெரியும். ஆனாலும் சுயநலம் பொதுநலத்தை ஓரங்கட்டி விட்டது.
நேர்காணல்நாள் வந்தது. சுந்தரி மிகச் சிறப்பாகவே செய்தாள். வினாத்தாள் இப்படி இப்படி இருக்குமென்று முன்கூட்டியே தெரிவித்து நல்ல பயிற்சியைத் தந்துவிட்ட சுந்தரத்தால்தான் அது சாத்தியமாயிற்று என்பது வேறு யாருக்கும் தெரியாது.
புதிதாக வேலைக்குச் சேர்ந்த சுந்தரிக்கு அலுவலகத்தில் இருந்த அத்துணை துறைகளிலும் பயிற்சி கிடைத்தது. அவளுக்கு எல்லா வற்றையும் விழுந்து விழுந்து கற்பித்த சுந்தரத்தை ஒரு சிலர், ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள்.
நேர்காணலுக்கு அழைக்கப்படாதவர்கள், ஒரு வேளை தங்களுக்குப் போதிய தகுதி இல்லைபோலும் என்று நினைத்தார்கள். ஆனால் முத்துக்குடும்பத்தினர் மட்டும் மனம் கலங்கினார்கள்.
எல்லாத் தகுதிகளும் இருந்தும்கூட, தங்கள் மகன் மருதனை நேர்காணலுக்கு அழைக்காதது, அவர்களுக்கு வேதனையாக இருந்தது. அதுவும் பல ஆண்டுகளாக முத்து வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் அவரின் மகனுக்கே வாய்ப்பு இல்லையே என்று அவர்கள் ஏங்கினர். ஆனால், மருதன் அதைப்பற்றியெல்லாம் கவலை படவே இல்லை. ஏன் இப்படிக் கவலைப்பட வேண்டும்? இது இல்லை என்றால் இன்னொரு வேலை கிடைக்காமலா போகும்?
"அதற்கில்லை மருதா அப்பா வேலை செய்த இடத்தில் நீயும் ஒரு நாள் பெரிய கிராணியாகப் பணியில் இருக்க வேண்டுமென்று அப்பா நினைத்தார். அது நிறைவேறாமல் போய்விட்டதே என்று அக்காள் துளசியம்மாள் வருத்தமாகக் கூறியது, மருதனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அப்போது அடுத்த அறையில் இருந்து உள்ளே வந்தார், தந்தை முத்து.
"தம்பி மருதா, உன்னுடைய சர்ட்டிபிக்கேட் வகைகளை எடுத்துக்கொண்டு உடனே என்னோடு புறப்படு" என்றார் அவர்.
என்னப்பா இது இராத்திரி எட்டு மணிக்கு மேலே ஆகுது. இப்போ, எங்கே புறப்படணும்?
"சொன்னா கேளுப்பா, ம் உடனே புறப்படு. பெரிய கிராணி சுந்தரத்தைப் பார்த்துவிட்டு வருவோம்" தன் தந்தையின் மனத்தைப் புரிந்துகொண்டான் மருதன்.
" அப்பா, பெரிய கிராணி ஒரு மாதிரியானவர்னு பேசிக்கிறாங்களே, அவரைப் போயிப் பார்த்து என்ன ஆகப் போகுது, எனக்கு அது சரியாகப் படலை என்று மருதன் தயக்கத்தோடு கூறினான்.
மருதா, நான் சொல்வதற்கு மதிப்புக் கொடுப்பியா, மாட்டியா, புறப்படச் சொன்னா, உடனே புறப்படு... சற்றுக் கோபத்துடன் பேசினார், மருதமுத்து.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை மனத்திற்கொண்டு, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மருதன் புறப்பட்டான். வெளியே சென்றிருந்த தாயார் தம் வாடகை வண்டியுடன் வீட்டுக்கு வந்திருந்தார்.
மிக நேர்த்தியாக அனைவரையும் ஏற்றிக்கொண்டு பெரிய கிராணி சுந்தரம் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தனர்.
மருதன் மட்டும் சுந்தரம் கிராணி என்ன சொல்லப் போகிறாரோ என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந்தான்.
"யாரது, இந்த நேரத்தில், - முத்துவின் குரல் சரியாகக் கேட்காததால், சுந்தரம்தான் உரக்கப் பேசினார்.
அய்யா, பெரிய கிராணி, நான்தான் முத்து வந்திருக்கேன்,
பெரிய கிராணியின் முகம் மாறிவிட்டது, இருந்தாலும் வேண்டா வெறுப்பாகக் கதவைத் திறந்தார், சுந்தரம்.
" என்னப்பா, என்ன விஷயம்" வந்தவர்களை வாங்க என்று சொல்லக்கூட அவருக்கு வாய் வரவில்லை. அவர் செய்தது அவருக்குத் தானே வெளிச்சம்?
அவரின் பார்வை எதை எதையோ, கண்ணோட்டமிட்டதை மருதன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
என் கையில் எதுவுமில்லை, வேலையில்லை என்று கம்பெனி கடிதம் தந்துவிட்ட பிறகு, நான் என்ன செய்ய முடியும்?, முத்து பேசாம உன் மகனை வேறு வேலைக்குப் போகச் சொல்லு. - வேண்டா வெறுப்பாகப் பேசினார்,
சுந்தரம். அவர் எதைச் சொல்ல வருகிறார், என்பது மருதனுக்குப் புரியவில்லை,
தன் தந்தைக்காக அவன் பொறுமையைக் கடைப்பிடித்தான். இருந்தாலும் அவனால் தொடர்ந்து வெறுமனே இருக்க முடியவில்லை.
"என்ன சார், நேர்காணலுக்குக் கூப்பிடாம, நான் அந்த வேலைக்குத் தகுதி இல்லாதவன் என்று முடிவு செய்தது நல்லதாகப் படவில்லையே," என்றான் அவன். மருதன் பேசியது பெரிய கிராணி சுந்தரத்தை என்னவோ பண்ணியது.
"மன்னிக்கவேண்டும், இதற்குமேல் வேலை விஷயமாக இங்கே நின்னு பேசுறது சட்டப்படித் தப்பு" - சொல்லி முடித்தாரோ இல்லையோ, தன் அறைக்குள் போய்விட்டார். அங்கே அந்த நேரத்தில் பெரிய கிராணியின் மனைவி மாதவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தார். வரவேற்பு அறையில் நடந்தது எதுவுமே அவருக்குத் தெரிந்ததாக அவர் காட்டிக்கொள்ளவில்லை. ஒருவேளை இது கணவரின் வேலை இடத்துச் சமாச்சாரம் என்று நினைத்தாரோ என்னவோ!
இவ்வளவும் நடந்தபிறகு, மருதனுக்கும் அவன் தந்தைக்கும் அங்கு நிற்கப்பிடிக்கவில்லை. கலங்கிய நெஞ்சத்தோடு, கார் நிறுத்து மிடத்தில், காத்திருந்த தங்கள் டாக்சியைத் தேடிச் சென்றார்கள். வீட்டுக்கு வரும் வழியில் வழிநெடுகத் தாய்க்கும் தந்தைக்கும் ஆறுதல் கூறியபடி வந்தான் மருதன். சகோதரி துளிசியம்மாள் மட்டும், அனைத்தையும் கேட்டுக்கொண்டே, வந்தாள், ஆண்டுகள் ஓடின. சிங்கப்பூரிலுள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டன. அந்த நேரம் பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டிருந்த பெரிய கிராணி சுந்தரமும் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார். அவருக்கு ஓய்வூதிய தொகையாகக் கொடுக்கப்பட்ட பணத்தை வைத்துக்கொண்டு அவரும் அவரின் வயதான மனைவியும் நாட்களைக் கடத்தி வந்தனர். இருந்தாலும் பணம் போதவில்லை.
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவிட்டு திடீரென்று சிக்கனமாக வாழ அவர்களால் முடியவில்லை. தாம் அன்போடு வேலை வாங்கித் தந்து மருமகளாக்கிக்கொண்ட சுந்தரி, கொஞ்ச நாளிலேயே கணவனுடன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டாள். அதன் பிறகு அவரிடம் கூட சொல்லிக்கொள்ளாமல், மகனும் மருமகளும் வெளிநாட்டில் நல்ல வருமானம் கிடைக்கும் என்று எண்ணியவர்களாய் சிங்கப்பூரை விட்டுவிட்டு, கனடாவுக்குச் சென்று விட்டனர்.
அதன் பின்னர், மிகப் பெரிய வீட்டில் சுந்தரமும் அவரின் மனைவியும் தனிமையில் வாட ஆரம்பித்தனர். ஓர் அறையை மட்டும் வெளியாருக்கு வாடகைக்கு விட்டனர். கைச் செலவுக்கு ஓரளவு பணம் கிடைத்தாலும் அவர்களுக்கு இதுவரை இருந்து வந்த நிம்மதி எங்கோ சென்று விட்டதுபோல தோன்றியது.
மீண்டும் வேலைக்குச் சென்றால் என்ன என்று வீட்டில் வாடகைக்கு வந்தவர் அவருக்கு ஆலோசனை கூறினர். அவர் மனைவியும் அது சரிதானே என்றார்.
உங்கள் அனுபவத்துக்கு ஏன் வேலைக்குச் செல்லக்கூடாது என்று அவரும் கேட்டார். அந்த நேரம் பார்த்து புதிய நிறுவனமொன்று அனுபவம் உள்ளவர்களைத் தேடுவதாக வேலைக்குரிய விளம்பரம் செய்திருந்தது.
சுந்தரம் மனைவியின் வற்புறுத்தலின்பேரில் விண்ணப்பம் செய்தார்.
அந்த நிறுவனம், அவரை உடனே நேர்காணலுக்கு வருமாறு அவரை அழைத்திருந்தது.
நேர்காணல் அறைக்குச் சென்றார். வணக்கம் கூறிவிட்டு அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்த அவருக்கு ஒரே அதிர்ச்சி, அங்கே தான் வேலை கொடுக்காமல் ஏமாற்றிய மருதன் அந்த அதிகாரிகளில் ஒருவராக அமர்ந்திருந்தது, சுந்தரத்துக்கு வியப்பாக இருந்தது.
நிச்சயமாக அவர்கள், அவருக்கு வேலை தர மாட்டார்கள் என்று அவர் நம்பினார்.
மிஸ்டர் சுந்தரம், இது ஒரு புதிய நிறுவனம், இருந்தாலும் இங்கு நல்ல அனுபவம் உள்ளவர்களை வேலைக்கு எடுத்து இளையர்களுக்கு வழிகாட்டும் வகையில் நிறுவனத்தை நடத்த உள்ளோம். உங்கள் அனுபவம் எங்களுக்குப் பிடித்திருந்தது. அதுதான் அழைத்தோம்," என்றான், மருதன்.
சரி உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டார், மற்றோர் அதிகாரி. எங்கள் விதிமுறைகளுக்கேற்ப உங்களால் பணியாற்ற முடியுமா? என்று கேட்டார், மற்றொருவர்.
எதற்கும் பதில் கூறாமல் அமைதி காத்தார் சுந்தரம். எத்தனை வேகத்தோடு நேர்காணலுக்கு வந்தாரோ, அத்தனை வேகத்தில் மருதனைப் பார்த்ததும் அடங்கிப் போனார்.
நிச்சயம் தமக்கு வேலை கிடைக்காது என்று அவர் மனம் சொல்லிற்று.
வர மறுத்த புன்முறுவலை ஒப்புக்கு வரவழைத்துக்கொண்டு அங்கிருந்து விரைந்து புறப்பட்டார், பெரிய கிராணி சுந்தரம்.
முத்துவின் மகன் மருதன் இன்று இவ்வளவு பெரிய ஆளாகி விட்டானா?
சுந்தரத்தால் நம்பவே முடியவில்லை. பத்தாண்டுக்கு முன், அவனை வேலைக்கு எடுக்காமல், தமக்கு மருமகளாக வரவேண்டும் என்று நினைத்தவளை வேலைக்கு எடுத்தது, அவரின் நினைவுகளில் அலை மோதியது.
உள்மனத்தில் பல வேதனைகள் சுற்றிச் சுற்றிச் சுழன்றன.
சொந்த மகனும் மருமகளும் தம்மையும் தம் மனைவியையும்விட்டுவிட்டு வெளியூர் சென்றுவிட்ட வேதனை அவரை வாட்டத் தொடங்கியது.
நிச்சயம் அந்த மருதன் வேலை தரமாட்டான் என்று அவர் பிதற்ற ஆரம்பித்தார். அந்த சமயத்தில் பதிவுத் தபாலை எடுத்துக்கொண்டு அஞ்சல்காரர் வந்தார்.
கதவைத் தட்டும் ஒலி கேட்டதும் சுந்தரம் அதைத் திறந்தார். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு கையெழுத்து இட்டார். மனைவியிடம் கொடுத்து அதைப் பிரிக்கச் சொன்னார்.
பிரித்த கடிதத்தை கணவரிடமே கொடுத்தார், மனைவி மாதவி.
*
அன்புள்ள திரு சுந்தரம்,
நானும் எங்கள் குழுவினரும், உங்களை எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு எடுத்துள்ளோம். உங்களுக்குச் சம்மதமாயின் உடனே வந்து வேலையில் சேரவும். உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றோம்.
இப்படிக்கு
வட்டார நிர்வாகி
மருதன்
*
அனைத்துலகத் தொழில் நிபுணத்துவ ஆலோசனை நிறுவனம் அனுப்பிய கடிதம் கண்டு அதிர்ந்து போனார், சுந்தரம்.
தான் மருதனுக்கு இவ்வளவு இடையூறு செய்திருந்தும் தம்மை வேலைக்கு எடுத்திருப்பது வியப்பை அளித்தது. ஒரு வேளை வேலைக்கு எடுத்தபின் தொல்லை தந்தால், அவருக்குப் பலவிதமான குழப்பங்கள் வந்து வந்து போயின. இருந்தாலும், துணிச்சலோடு வேலைக்குப் புறப்பட்டார்.
வேலை இடத்தில் அவருக்குத் தனி அறையும் வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன.
ஒரு வாரம் ஓடியது. எந்தவிதத்திலும் மருதன் அவரிடம் பழைய நினைவுகளைக் கொண்டுவரவே இல்லை.
வேலை தொடர்பான விவரங்களைத் தவிர, வேறு எதையும் அவரிடம் அவன் கேட்கவே இல்லை.
அவன் இவ்வளவு பெருந்தன்மையாக நடந்துகொண்டதே அவருக்கு மனத்தில் தண்டனை கொடுத்ததுபோல இருந்தது.
இந்த உலகில் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா, வாழ்க்கைப் பாதையில் பழையனவற்றை நினைக்காமலே காலத்தை ஓட்டுவோரும் உள்ளனரா என்று சுந்தரம் அதிசயித்துக்கொண்டிருந்தார்.
மருதன் மேலும் பல இளையர்களை முன்னேற்றப் பாதையில் பயிற்றுவித்துக் கொண்டிருந்தான். சுந்தரம் நவீன இளையர்களைப் படித்துக்கொண்டிருந்தார்.

