தைத்திங்கள் முதல் நாள் என்றார்!
தமிழர்கள் திருநாள் என்றார்!
புத்தமு தாக வந்த
பொங்கல் நாள் என்றார்க் கின்றார்!
கைத்திற ஓவி யங்கள்
காட்டுக வீட்டில் என்றார்!
முத்தமிழ் எழுக என்றார்!
முழங்குக இசைகள் என்றார்!
கொணர்கவே புதிய செந்நெல்
குன்றாக என்றார்! பெண்கள்
அணிகள், பொன் னாடை யாவும்
அழகாகக் குவிக்க என்றார்!
மணமலர் கலவை கொண்டு
மலைஎனக் குவிக்க என்றார்
கணுவகல் கரும்பும் தேனும்
கடிதினிற் கொணர்க என்றார் !
எழுத்தாளர் பொங்கல் வாழ்த்தே
எழுதுக ஏட்டில் என்றார்!
பழச்சுமை வருக என்றார்!
பட்டியல் எழுதிச் சென்று
வழக்கத்துக் கடைச்ச ரக்கு
வாங்கிவந் திடுக என்றார்!
முழுக்குலை வாழை மாவின்
தோரணம் முடிக்க என்றார்!
எழுந்தது கீழ்க்க டல்மேல்
இளங்கதிர், மூசைத் தங்கம்
பொழிந்தது! விண்ணும் மண்ணும்
பொலிந்தது தமிழர் நாடு!
வழிந்தது பொங்கல் பொங்கி!
வாழ்த்தினர் பரிதி தன்னைத்
தழைத்தது நெஞ்சில் இன்பம்,
தமிழர்கள் பொங்கல் உண்டார்,
வாழிய பொங்கல் நன்னாள்
வாழிய திராவி டந்தான்!
வாழிய புதுமை நூற்கள்?
வாழிய தமிழ்க் கலைகள்!
சூழிய மணிமு கில்கள்!
துலங்குக நன்செய் யாண்டும்
ஆழ்கடல் மிசை எழுந்த
அழகிய பரிதி வாழ்க
பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறே.
உண்ணும் விழிகள் உவக்கும்ஓ வியமே,
முன்னைக்கு முன்னர் முளைத்தமூ தொளியே,
இந்நாள் மட்டும் இளமைமா றாமல்
புதிது புதிதெனப் போற்றும் பரிதியே,
இந்நாள் புதுமையிற் புதுமை இயற்றினாய்!
காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்
கோலக் கதிர்கள் குலுங்க, நீலக்
கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனே,
ஆடல்வா ழியநின் அழகு வாழிய!
புத்தம் புதிய முத்தரிசி ஆய்ந்து
தித்திக் கும்பால் செம்மையின் அளாவ
அலரிச் செவ்விதழ் அவிழ்த்தன போல
இலகெரி அடுப்பில் ஏற்றிய பானை,
பொங்கிடப், "பொங்கலோ, பொங்கலென் றார்த்தே
புரைதீர் வெல்லம், புலிப்பல் போன்ற
ஏலம், பருப்புச் சேலத்து நறுநெய்
நன்று சேர்த்துக் குன்றென இறக்கித்
தேன்பெய்து, முக்கனி சேர்த்து விருந்துடன்
ஒக்கலும் மக்களும் உரிமையின் உட்கார்ந்
திருள்நீக்கி எழுநன் எழுச்சி வாழ்த்தி
அருள்தேக் குழவர் வாழ்த்தி அந்தமிழ்
வாழ்வினை வாழ்த்தி வாழ்த்தி
மூழ்குவர் இன்பத்து முழுதுண்டு நன்றே!

