- பனசை நடராஜன்
உழைப்பையே சுவாசிக்கும்
உழவர்களின் திருவிழா!!
உணவு விளைய உதவுகின்ற
கதிரவனை கௌரவிக்கும் விழா..
நம் இரைப்பை நிறைக்க
கலப்பை இழுக்கும்
காளைகளைப் போற்றும் விழா..
பண்பாட்டை விழுங்க வரும்
பாம்புகளுக்கெதிராக
படைதிரளும் பெருவிழா..
வெளிச்சம் திருடி இருளை விற்கும்
விளம்பரக் கழுகுகளை
விரட்ட விழிப்புணர்வூட்டும் விழா..
கிளை, இலைகளாய் சலசலக்கும்
நமக்கும் பசிபோக்கும் வேர்களை
பணிந்து தொழும் விழா..
மீண்டும் மீண்டும் மேகங்கள் மறைத்தாலும்
சுட்டெரித்து மீண்டுவரும்
சூரியனாய் நாமிருக்க
நினைவூட்டும் நல்விழா - நம்
இனிய தைப்பொங்கல் விழா!!

