- பாவலர் முல்லைவாணன்
கைகுவித்தோம் வாழ்க! உயர்
கலைகளில் சிறந்தாய் நீ வாழ்க! அம்மா
கைகுவித் தோம் வாழ்க! (கை)
காலத்தேரினில் கன்னிமை குன்றாது
ஞால உலாவரும் நற்றமிழ்த்தாயே! (கை)
இசையில் எழில்வளர்த்தாய்
இயலில் பிறப்பெடுத்தாய்
நசைகொள் கூத்தினிலே
நடங்கொள் கனித்தமிழே! (கை)
பத்துப் பாட்டினிலும்
பதினெண் கணக்கினிலும்
முத்துத் தொகையினிலும்
முழங்கும் நெறியானாய்! (கை)
திருப்புகழ் நிலையாலே
திசையெல்லாம் சிறக்கின்றாய்!
திருக்குறள் ஒளியாலே
உலகத்தைப் புரக்கின்றாய்! (கை)

