- இரா சத்திக்கண்ணன்
உயர்ந்த மரங்களின்
நடுவே ஊடுருவிப் பறந்தபடி
வண்ணங்களையும்
மகிழ்ச்சியையும்
மண்ணிலும் விண்ணிலும்
அள்ளித்தெளிக்கும்
ஆயிரமாயிரம்
ஜூரோங் பறவைகள்
சூரியத் தங்கத்துகள்களை
கொட்டித்தீர்க்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
ஆகாயவெளி சொல்வதை
அப்படியே திரும்பச்சொல்லும்
கிளிகள்
ஆகாயத்திலிருந்து
அழகோவியமாய்
தரை இறங்கி
என் உள்ளங்கையில்
வந்தமர்ந்த
அசுரக்கழுகுகள்
ஆயிரமாயிரம் மைல்கள்
பயணித்து வந்தடைந்த
சாகசப்பறவைகள்...
கடலுக்கடியில் நீந்தி
சொர்க்கம் படைக்கும்
பென்குயின்கள்...
இசைத்தபடி
நினைத்தபடி
தோகை விரித்தபடி
அரசாளும் மயில்கள்...
சுதந்திரம்
மகிழ்ச்சியை
பறைசாற்றி
பரவசப்படுத்தும்!
பறவைப்பூங்கா
பரவசம்

