- அ. பிரபா தேவி
சில்வண்டுகளைப்
பொன்வண்டுகளாக்க
தலைகீழாகத்தான்
நிற்கின்றன சில
தற்பெருமை உள்ளிகள்.
நீங்கள் புறந்தள்ளுவதால்
பொன்வண்டுகளுக்கு
இழப்பென்ன?
தரம் விலக்கித் தாங்கள்
சில்வண்டுகளைச்
சீவிவிடுவதால் அவை
மின்னிவிடுமா என்ன?
சீவுங்கள் சீவுங்கள்.
உமது காழ்ப்புக் கத்தியின்
முனை மழுங்கும்வரை..
தற்பெருமைக் கைகளில்
இழுக்கெனும் காய்ப்புகள்
நிலைத்து நெருடட்டும்.
பொறாமையும் இயலாமையுமாய்
அலைக்கழியும் கொடுந்தீயில்
எரிந்து காந்தட்டும் நீவிர்
போர்த்தியிருக்கும் போலியறப்
பொய்த்திறமைத்தோல்.
அறத்துலாக்கோலின் நடுமுள்
என்றேனும் ஒருநாள்
உமது நெஞ்சில் நேராக
ஆழமாக இறங்கும்.
அந்நாளில் அச்சில்வண்டுகள்
ஐயோ என்செய்யும்?

