- அனுபமா உதிவ்
அறுபடை வீடெலாம் ஆறுதல்தரு அமரேசா!
ஏழாம்படை வீடாகச் சிங்கைவரு குமரேசா!
எட்டாம்படை வீடாகப் பத்துமலை பால்முகா!
ஒன்பதாம்படை வீடான தண்ணீர்மலை பொன்முகா!
மாசமாம் தையிலே பூசமெனும் மீனிலே
வீசுமுழு நிலவில்நறு வாசம்செய் வேலவா!
ஈசனின் உடுக்கையே பேசுகின்ற முன்னமே
சாமிமலை தந்தைக்கு உபதேசப் பிரணவா!
மந்திரத் திருப்புகழ் மனமாறப் படிப்போரை
எந்திர உலகினில் நோய்தீர்த்த மயிலூரா!
தந்திரத்தில் வீழந்திட தன்கரத்தால் வணங்கிய
சுந்தரத்தமிழ் அருணகிரிக்குத் தந்தருள் வயலூரா!
சுட்டபழம் சுடாப்பழம் கேள்வியின் தமிழ்க்குமரா!
ஔவைக்கு ஞானப் பழமான பழனியப்பா!
திருப்பரங் குன்றமே! செந்தமிழ் மன்றமே!
செவ்வடி பற்றுவேன் சேவற் கொடியோனே!

