சிறுகதை
மணிமாலா மதியழகன்
'அவர் கொண்டு வர்ற டுரியானில் மட்டும் அவ்வளவு சுவை எப்படித்தான் வருமோ? இதோ இந்த மரம்கூட அவர் நட்டதுதானே', நினைவுகள் மனத்தை ஆக்கிரமித்ததில் பமேலாவின் பார்வை கலங்கலானது. காலை நேரத்து மென்பழுப்பு நிற வெயிலில் கொத்துக் கொத்தாய் இள மஞ்சள் வண்ணப் பூக்கள் பூத்திருந்த டுரியான் மரத்தைச் சுற்றிப் பட்டாம்பூச்சிகள் பறந்தன. காலடிச் சத்தம் கேட்க, சட்டெனக் கண்களைத் துடைத்துக்கொண்டார் பமேலா.
"அவருக்கு... சிங்கப்பூருல ஒரு குடும்பம் இருக்குன்னு நினைக்கிறேம்மா..." மைலோ குவளையைக் கழுவிக்கொண்டே சொன்னாள் சேரா.
"வெட்டிப் பேச்சுப் பேசாம போய்ப் படிக்கிற வேலையைப் பாரு."
"ம்மா... என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கோபப்படறீங்க?"
"இந்த கொவிட் தொற்றுநோய்க் காலத்துல தன்னந்தனியா எப்படில்லாம் அவதிப்படுறாரோன்னு நொந்துபோய்க் கிடக்கேன். நீ என்னன்னா...?"
"நம்ம மேல அக்கறையில்லாத ஒருத்தருக்காக நாம ஏன் வருத்தப்படணும்கிறேன்?"
"அவர் அக்கறையில்லாதவர்னு உனக்குத் தெரியுமா?"
"எல்லாம் தெரியும். உங்க கல்யாணத்துக்கு முன்னவே அவருக்கு சிங்கப்பூருல வேற ஒரு குடும்பம் இருந்திருக்குதானே?"
"வரவர உனக்கு வாய்த்துடுக்கு கூடித்தான் போச்சு. உங்க அப்பாவை இப்படிப் பேச உனக்கு எப்படி மனசு வருது?" காய்கறிகளைக் கொண்டு வந்து உணவு மேசையில் வைத்த பமேலாவின் கண்களில் கனல் தகித்தது.
"கொவிட் வந்த பிறகுதான் அவர் தனியா இருக்காரா? உண்மையச் சொல்லுங்கம்மா..."
"உனக்கு என்னதான் பிரச்சினை? அவரோட சம்பாத்தியத்துலதான் நாம நல்லா உண்ணவும் உடுத்தவும் முடியுதுங்கிறதை புரிஞ்சிக்கோ."
"இதை மட்டும் செஞ்சிட்டாப் போதும். அப்படித்தானே?"
"..." பற்களை நெரித்தவர், மகளை முறைத்துப் பார்த்தவாறு காய்கறிகளை நறுக்கினார்.
"சொல்லும்மா போதுமா?"
"சேரா... உனக்கே நல்லாத் தெரியும். நம்ம மேல அவர் எவ்வளவு பாசமா இருப்பாருன்னு. இந்த கொவிட் பிரச்சினை வர்றவரைக்கும் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைக்கூட அங்கிருந்துதான் தூக்கிட்டு வருவார். அப்படிப்பட்டவரைப் போய்ச் சந்தேகப்படலாமா?"
"அதெல்லாம் ஏமாத்து வேலைம்மா. எனக்குச் சந்தேகம்லாம் இல்லை. உறுதியாவே சொல்றேன். அவருக்கு சிங்கப்பூருல ஒரு குடும்பம் இருக்கு... இருக்கு...!" கத்தினாள்.
"...." மகளை எரிப்பதைப்போலப் பார்த்த பமேலா, வெட்டி வைத்த காய்கறிகளுடன் குசினியை நோக்கி வேகமாக நகர்ந்தார்.
"ம்மா... நீங்க வேணா அவரை நம்பிக்கிட்டிருங்க. நான் உங்களைப்போலக் கண்மூடித்தனமா இருக்கப் போறதில்ல. அவர்கிட்டயிருந்து போன் வரட்டும் அப்பப் பாத்துக்கிறேன்," சோபாவில் அமர்ந்திருந்தவளது குரல் அடுப்பங்கரையை நோக்கிச் சீறியது.
"சேரா... உனக்கு என்னைப்பத்தியும் தெரியும். நீ மட்டும் அவர் மனசு கோண ஏதும் பேசினே... அவ்வளவுதான்...!"
"இப்படிச் சொல்லிச் சொல்லியே வாயை அடைச்சுடுங்க. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா ஒரே ஒரு தடவையாவது நம்மை சிங்கப்பூருக்குக் கூட்டிக்கொண்டு போயிருக்காரா?"
"ஒரு வாரம்விடாம நமக்காகத்தானே இங்கே ஓடி வந்தார்?"
"ஏன் அவர் நம்மை அங்கே அழைச்சிக்கிட்டுப் போகல. இதான் என்னோட கேள்வி?"
"சமைச்சிட்டேன், சாப்பிட்டுட்டுப் போய்ப் படி," என்று பமேலா மீயை வேக வேகமாகக் கிண்டியபடி சொன்னார்.
"இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டீங்களே...?" சட்டென அறைக்குள் நுழைந்த சேரா கதவை அறைந்தாள்.
'அவர் என்னன்னா மக ஏன் பேசமாட்டேங்கிறான்னு கேக்குறார். இவ என்னன்னா அவரிடம் இப்படி ஏடாகூடமாக் கேட்டே தீருவேன்னு நிக்குறாளே. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?' பமேலாவின் கண்கள் கலங்கின.
இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பணிப்பெண் வேலைக்காக வந்தவர்தான் பமேலா. அவரையும் சிங்கப்பூரில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்த யூ செங்-ஐயும் காதல் சேர்த்தது. யூ அப்போது 'சுங்கை தெங்காவிலுள்ள' கம்பத்தில் வசித்து வந்தார். மனத்தால் இணைந்தவர்கள் விரைவிலேயே மண வாழ்க்கையிலும் ஒன்றிணைந்தனர்.
"இந்த முறையும் மூணு மாசம்தான் நான் சிங்கப்பூருல இருக்க முடியுமா?" எனக் கேட்கும் பமேலாவின் விழிகளில் ஏக்கம் குடிகொண்டிருக்கும்.
"என்னம்மா செய்வது? அதற்குமேல் விசா கிடைக்கமாட்டேங்குதே" பரிதாபமாய்ச் சொல்வார் யூ.
விசா கிடைக்கும் காலம் மட்டும் சிங்கப்பூரிலிருக்கும் பமேலா, காலக்கெடு முடிகையில் இந்தோனீசியாவிற்குச் செல்வது வாடிக்கையானது. உழைப்பதற்கு கால நேரம் பார்க்காத யூ, வாகனம் ஓட்டுவதுடன் கிடைக்கும் வேலை எதுவாகயிருந்தாலும் செய்யத் தயங்கமாட்டார். நிரந்தரமாக ஒரே இடத்தில் இணைந்து வாழ முடியவில்லை என்பதைத் தவிர தம்பதியினர் மகிழ்ச்சிக்கு குறைவின்றியே வாழ்ந்தனர்.
மகளைப் பள்ளியில் சேர்க்கும்வரை பமேலா சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவிற்குமாக அல்லாடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த வேலையை யூ செய்ய வேண்டி வந்தது. கைநிறைய பொருள்களோடு வெள்ளிக்கிழமை இரவு பாத்தாமுக்குச் செல்பவர், வாடிய மனத்தோடுதான் ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூருக்குத் திரும்புவார்.
"எங்களை எப்போ சிங்கப்பூருக்குக் கூட்டிக்கொண்டு போவீங்கப்பா?" சேரா கேட்பாள். மனைவியுடனும் மகளுடனும் ஓயாமல் பேசுபவர், மகள் இதைக் கேட்கும்போது மட்டும் மௌனமாகிவிடுவார். மகள் அவரை இதைக் கேட்பதற்குள் பமேலா எப்படியாவது பேச்சை மாற்ற முயற்சி செய்வார். கடந்த சில ஆண்டுகளாக சேரா தந்தையிடம் பேசுவதையே தவிர்த்து வந்தாள்.
கொவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட முடக்கநிலை காரணமாக யூவினால் சிங்கப்பூரைவிட்டு நகர முடியாத சூழ்நிலை உருவானது.
'பாவம்... முடிந்தால் இவ்வளவு நாளா வராமலிருப்பார்? இரண்டு சீனப் பெருநாள் அவர் இல்லாமலே கழிந்ததே!' பமேலாவின் தளும்பிய கண்கள் கடிகாரத்தை நோக்கின. மணி எட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
'என்ன இது? தினமும் ஏழு மணிக்கெல்லாம் பேசுவார். இரண்டு மூணு நாளாய்ப் பேசவேயில்லையே. ஒருவேளை, அந்தப் பொல்லாத நோய் அவரையும் தொற்றியிருக்குமோ?' உடல் நடுங்கியது.
"ம்மா... இங்க பாருங்களேன்...!" சேராவின் குரல் பதற்றத்துடன் கேட்டது.
'அவ்ளோ வேகமாய்ப் போய்க் கதவைச் சாத்தினவ எதுக்கு இப்படிப் பதறியடிச்சிக்கிட்டு வர்றா?'
"ம்மா... அ... அப்பா...!"
"எ... என்னாச்சு...?" பமேலாவின் மனத்தில் பிரளயம் உண்டானது.
"அ... அப்பா...!"
"அப்பாவுக்கு என்ன?"
"இங்க பாருங்க" கைப்பேசியை நீட்டினாள்.
"முப்பத்து மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூர் காட்டில் வாழும் மனிதர்" என்று ஒரு குரல் மட்டும் ஒலிக்க, கேள்வியாக மகளை நோக்கினார்.
"போனைப் பாருங்கம்மா!"
காட்டைச் சுற்றி வரும் காணொளிக் காட்சி கைபேசியில் ஓடியது. வேலி அமைத்து போட்டிருந்த காய்கறித் தோட்டமும் அதனருகில் ஒரு குளமும் இருந்தது. சாய்ந்த வாக்கில் மூங்கில் கழிகளை நட்டு அதன் மேல் 'பிளாஸ்டிக் ஷீட்டால்' மூடிய ஒரு சிறு குடிசை பெரிதாகக் காட்டப்பட்டது. 'இதை ஏன் பார்க்கச் சொல்றா?' யோசனையோடு மகளைப் பார்க்க "இப்பப் பாருங்கம்மா" என்றவளது முகமெங்கும் வியர்வை, முத்துகளாய்ப் பூத்து நின்றது.
குடிசைக்குள்ளிருந்து கிழிந்த ஆடையுடுத்தியிருந்த முதியவர் ஒருவர் தலையைக் குனிந்துகொண்டே வெளியே வந்தார். பமேலாவின் இடுங்கிய கண்கள் மேலும் சுருங்கின. "இ... இது.... உங்கப்பாதான...?" மயக்கமே வருவதுபோலிருந்தது.
'கடவுளே... என்ன இது...? இப்படி ஆளே மாறிட்டாரே...! இவர் அத்தனை ஆண்டுகளாகக் காட்டில் வாழ்ந்தாரா?'
பமேலாவுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. சேரா அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்து காற்றாடியைச் சுழலவிட்டாள்.
"இப்ப எங்கிருக்கார்? நல்லா இருக்காரா? நான் உடனே அவரைப் பாக்கணுமே!"
"ம்மா... 'ஃபேஸ் புக்லதான்' இதைப் பார்த்தேன்....!"
"வேற என்ன போட்டிருக்கு? அவர் ஏன் ரெண்டு மூணு நாளா பேசவேயில்லை?"
"முதல்ல இந்தத் தண்ணிய குடிங்கம்மா சொல்றேன்."
"நீ முதல்ல சொல்லு."
"அப்பா நல்லாத்தான் இருக்கார். இங்க பாருங்கம்மா" எனச் செய்தித்தாளில் வந்த தகவலை கைப்பேசியில் காட்டினாள்.
சிறு குடிசையில் தட்டுமுட்டுச் சாமான்களும் கணவருமாக இருந்த காட்சியைக் கண்டவரது கண்கள் நனைந்தன. "என்னன்னு போட்டிருக்காங்க?" மூக்கை உறிஞ்சிக்கொண்டே கேட்டார்.
"ம்மா... சிங்கப்பூருல 1980களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்காக அரசாங்கம் கம்பத்தில் வசித்தவர்களை இடம் மாற்றியிருக்கு. ஆனா, அப்பாவுக்கு அங்க வீடு கிடைக்கல. அதனால சிங்கப்பூரின் 'சுங்கை தெங்கா' காட்டிலேயே இவ்ளோ நாளா வாழ்ந்திருக்கார்."
"கடவுளே... அப்புறம்...?"
"முன்னல்லாம் பகல்ல வண்டி ஓட்டிட்டு ராத்திரியிலும் 'பாசார் மாலம்' போடுற இடங்களில் வேலை செய்வதை வாடிக்கையா வைத்திருந்திருக்கார். கொவிட் காரணமா அவருக்கு வண்டி ஓட்டுற வேலையும் போனதோட சிங்கப்பூருல இரவுச் சந்தையும் இல்லாமலே போயிருக்கு."
"அடப் பாவமே... இவ்ளோ சிரமத்திலும் எப்படி நமக்கு மாசாமாசம் பணம் அனுப்பினாருன்னு தெரியலையே!"
"அவர் தங்கியிருந்த பகுதியிலேயே தோட்டம் போட்டு, அந்தக் காய்கறிகளை விற்றுதான் நமக்குப் பணம் அனுப்பியிருந்திருக்கார்" சேராவின் குரல் தழுதழுத்தது.
'முப்பத்து மூணு வருசமா தன்னந்தனியா காட்டுல வாழ்ந்தாரா?' நம்பவே முடியவில்லை. "அவரோட கஷ்டத்தை ஒருவாட்டிக்கூட நம்மகிட்டச் சொல்லாமலே இருந்திருக்காரே...!" எரிமலை அதிர்வுகளைச் சந்தித்ததைப்போல உள்ளம் துடித்தது.
"ம்மா... இதெல்லாம் தெரியாம வெயில் தாங்க முடியல, வீட்டுக்கு 'ஏர்கோன்' போடுங்கன்னு கேட்டேனே. அது மட்டுமா? உடனே புது போன் வாங்கிக் கொடுங்கன்னும் தொல்லை கொடுத்தேனே" சேராவின் சிவந்திருந்த கண்களிலிருந்து பொங்கிய கண்ணீர்க் கன்னங்களில் கோலமிட்டோடியது.
"இத்தனை வருஷமா நம்மகிட்டக்கூட எதையுமே சொல்லாம இருந்திருக்காரே?"
"இரண்டு நாளுக்கு முன், 'சுவா சூ காங்கில்' உள்ள 'டெக் வை லேனில்' ஒருவர் கீரைகளை விற்கிறார் என்ற செய்தி சமூக ஊடகத்துல வந்ததால்தான் விஷயம் வெளியே வந்திருக்கு."
"நான் இப்பவே அவரைப் பாக்கணுமே" கண்ணீருடன் சொன்னார் பமேலா.
"எனக்கும் அப்படித்தாம்மா இருக்கு. ஆனா, முடக்கநிலை நடப்பில் இருப்பதால் இப்போதைக்கு யாரும் யாரையும் பார்த்துக்கொள்ள முடியாதே!" தாயின் கண்ணீரை மகள் துடைத்தாள்.
"ஆமா... அவர் ஏன் ரெண்டு மூணு நாளா பேசவேயில்ல?"
"அப்பாவோட போன் தொலைஞ்சிடுச்சாம். அதனாலதான் பேசாமலிருந்திருக்கார். நம்ம எண்ணை, இந்தச் செய்தியை வெளியிட்டவங்களுக்கு அனுப்பியிருக்கேன். எப்படியும் பேசுவார்மா" நம்பிக்கையோடு சொன்னாள்.
தாயும் மகளுமாகக் கைப்பேசியையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இரண்டு, மூன்று முகக் கவசங்களை ஒன்றாகச் சேர்த்து மாட்டிக்கொண்டிருப்பதைப்போல பமேலாவுக்கு மூச்சு முட்டியது. இயக்கிவிடப்பட்ட வானொலிபோல ஓயாமல் குரல் கொடுக்கும் சேரா பேச்சையே மறந்திருந்தாள். காலையில் சமைத்து வைத்த 'ஹொக்கியன் மீ' அடுப்பைவிட்டு இறங்கவேயில்லை. இருண்டிருந்த வீட்டில் விளக்கைப் போட வேண்டுமென்ற எண்ணம்கூட இல்லாமல் திசைக்கொருவராய்க் கூடத்தில் சுருண்டிருந்தனர்.
கைப்பேசி அழைப்புவிடுக்க, இருவரும் பரபரப்புடன் எழுந்தனர். 'யார் வீடியோ கால் செய்வது?' முனகிக்கொண்டே சேரா கைப்பேசியை எடுத்தாள்.
கைப்பேசியின் திரையில் யூ தோன்றினார். வசந்த விளக்குத் திருவிழா கால நிலவைப்போல அவர் முகம் மகிழ்ச்சியில் சொலித்தது.
"ப்பா..." விம்மல் வெடித்துக் கிளம்பியது. மகளிடமிருந்த கைப்பேசியைப் பறித்த பமேலா, "இப்படிச் செய்திருக்கீங்களே?" கண்ணீருடன் கேட்டார்.
"உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சா? சரி... சரி... அழாதீங்க."
"ப்பா... என்னை மன்னிச்சிடுங்கப்பா...!"
"என்னோட செல்லம் இப்படி அழலாமா?"
"நான் உங்களைத் தப்பா நினைச்சிட்டேம்பா."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல விடும்மா."
"இங்க எங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுத்துட்டு, அங்க காட்டுல வெயில்லயும் மழையிலும் கிடந்து கஷ்டப்பட்டிருக்கீங்களேப்பா."
"உங்களைப் பார்க்க முடியாததுதான் வருத்தமாயிருக்கே தவிர வேற ஒரு கஷ்டமும் இல்லம்மா. நீ அழாதே. முதல்ல கண்ணைத் துடை."
சேரா முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.
"உனக்கு வேற தனியா சொல்லணுமா?" இமைக்காமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் கேட்டார்.
"இப்படி எலும்பும் தோலுமா ஆகிட்டீங்களே?"
"நீ மட்டுமென்ன? மேண்டரின் ஆரஞ்சு மாதிரி கண்ணுக்குக் குளிர்ச்சியா தெரியுற உன்னோட கன்னம் வீணாய்ப்போன ஆரஞ்சுபோல ஆகியிருக்கே?"
தாய், மகள் இருவரது இதழ்களிலும் சிறு புன்னகை அரும்பியது.
"அந்நாளில், குடிக்கவும் குளிக்கவும் குளத்துத் தண்ணிய பாவித்து, அன்னன்னிக்கு கிடைக்கிறதை சமைச்சு சாப்பிட்டு கம்பத்துல வாழ்ந்த எனக்கு எதுவுமே சிரமமாய்த் தெரியல. இங்க பாருங்க... புதுச் சட்டை போட்டிருக்கேன். முன்னல்லாம் குடிசைக்கு வெளியே பொங்கிச் சாப்பிடுவேன். ராத்திரியில எலிங்களுக்கு என்னோட துணிங்க உணவாகும். இப்ப வீட்டுக்குள்ளவே சமைச்சு சாப்பிடுறதும் கிழிசல் இல்லாத சட்டையைப் போட்டிருக்கிறதும் ஒரு மாதிரியா இருக்கு. காட்டோட வாசமில்லாம தூங்கவும் முடியல. அதுவுமில்லாம என்னோட நண்பர்கள் வேற இல்லையா?" சத்தமாகச் சிரித்தார்.
"என்னப்பா சொல்றீங்க? அங்க உங்களுக்கு நண்பர்கள் இருந்தாங்களா?"
"ஆமாம்மா."
"நீங்க மட்டும் காட்டில் வசித்ததாகத்தானே செய்தியில வந்தது?"
"எப்பவும் உடனிருக்கும் கொசுக்களைச் சொன்னேம்மா. மழைக்காலம்னா அவற்றுக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகமாயிடும்" வெடிச் சிரிப்புடன் சொல்ல, தாயும் மகளும் கண்ணீரைத் துடைக்க மனமின்றி நின்றனர்.
"அழாதீங்க... நீங்க ரெண்டு பேரும் இப்படிக் கலங்கினால் என்னால் தாங்க முடியுமா?"
"உங்களை உடனே பார்க்கணுமே. எப்போ வருவீங்க?" பமேலா சிறுமியைப்போலக் கேட்டார்.
"கொவிட் கட்டுப்பாடு நீக்குன அன்றே அங்கே வந்துடுவேன்."
"அந்த நோய் போவதுபோலத் தெரியலையே!"
"போயிடும்... போயிடும்... இந்த எழுபத்தொன்பது வருசத்துல நான் பார்க்காத வியாதியா? கவலைப்படாதே... சிங்கப்பூருல எல்லாத்தையும் சீக்கிரமா சரிப்படுத்திடுவாங்க."
"ப்பா... நான் வேலைக்குப் போய் உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிறேன். இங்கேயே வந்துடுங்கப்பா" சேராவின் குரல் பிசிறியது.
"உழைப்பதற்கு அப்பா ஒடம்புல வைரம்போலத் தெம்பு இருக்கு. நீ நல்லாப் படிம்மா."
"இத்தனை வருஷம் நீங்க தனியா வாழ்ந்ததெல்லாம் போதும். வருமானம் குறைவாயிருந்தாலும் சேர்ந்து வாழுற நிம்மதி ஒண்ணே போதுங்க" என்றார் பமேலா.
"ஏம்பா எங்ககிட்ட எதையுமே சொல்லல?"
"நாலு வயசுல அனாதையா ஆனவனோட கதைய எப்படிம்மா சொல்ல முடியும்?"
"அப்பா...!"
"பட்ட வேதனை அப்படிம்மா... வயித்துப்பாட்டுக்காக அங்கே இங்கேன்னு எடுபிடி வேலை செய்ததை நினைக்கவும் விரும்பல. என் வயசு பிள்ளைங்கல்லாம் பள்ளிக்கூடம் போனப்ப ஏக்கத்தோட பார்ப்பேன். பசியில்லாத் தூக்கம் பத்து வயசுக்கு மேலதான் கிடைச்சது. வண்டியோட்ட ஆரம்பித்த பிறகு மூணு வேளை சாப்பிட முடிந்தது. வாழ்க்கை மேலிருந்த வெறுப்பில், அரசாங்கத்துல வீடு தர்றாங்கன்னு சொன்னப்பவும் எனக்கெதுக்கு வீடுன்னு விட்டேத்தியா இருந்துட்டேன். உங்கம்மாவைப் பார்த்த பிறகுதான் வாழ்க்கை மேல பிடிமானமே வந்தது. தனிமையிலேயே காலம் முடிஞ்சிடுமோன்னு இருந்தவனுக்கு மனைவியும் அமைந்து, மகளும் பிறந்துவிட்டால் மகிழ்ச்சிக்குச் சொல்லணுமா? நான் பட்ட சிரமம் எதையும் என்னோட மகள் படக்கூடாதுன்னுதான் ஓயாம உழைத்தேன். என்னோட ஏக்கம், உன்னை நல்லாப் படிக்க வைக்கணும்கிற வெறியா மாறியது. இங்கும் அங்குமா அலைஞ்சிகிட்டிருந்தா அது நடக்காமப் போயிடுமோ என்கிற பயம்தான் நீங்க அங்கேயே இருக்கட்டும்னு நினைக்க வைத்தது."
"ப்பா... உங்களைப் போய்த் தப்பா நினைச்சிட்டேனே...!"
"அழாதடா... இந்தக் கொவிட் நம்மை நிரந்தரமா பிரிச்சிடுமோன்னு ரொம்பவும் கலங்கிட்டேன்..." பேசிக்கொண்டிருந்தவரது குரல் கம்மியது.
"அப்பா..."
"சட்டவிரோதமா காய்கறிகளை விக்கிறேன்னு ஒருத்தங்க என்னைப் படம் பிடிச்சப்ப, இருந்த ஒரே பிழைப்பிலும் மண்ணான்னு ஆடிப்போயிட்டேன். ஆனா அடுத்தடுத்த நாளிலிருந்து எதிர்பார்க்காததெல்லாம் நடக்குது. எனக்குத் தனியா ஓரறை வீடு கிடைச்சிருக்கு. பத்திரிகையில வந்த செய்தியைப் பார்த்துட்டு நிறைய பேர் உதவி செய்துட்டு வர்றாங்க. இனி எனக்கு எந்தப் பொருளும் வேண்டாம்னு சொல்லியிருக்கேன்.
"இப்ப நான் பேசிட்டிருக்குற இந்தப் போன்கூட யாரோ ஒருவர் கொடுத்ததுதான். போனை கொடுத்ததும் இல்லாம அதில் எப்படிப் பேசணும்னு சொல்லியும் கொடுத்துட்டுப் போனார்" ஒடுங்கிய கன்னங்கள் இன்னும் உள்வாங்கிக்கொள்ள மேற்பற்கள் இரண்டும் பளீரிட்டன.
"குடும்பத்தோட சிங்கப்பூரில வாழணும்கிறதுதான் என்னோட ஒரே ஆசைன்னு சொல்லியிருக்கேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்துட்டுருக்கும்மா" குரல் நெகிழ்ச்சியுடன் வந்தது.
"கொவிட் நமக்கு நல்லதுதான் செஞ்சிருக்குப்பா" மெல்லிய சிரிப்புடன் சொன்னாள் சேரா.
"அப்படிச் சொல்லாதம்மா... இந்த வியாதியால மக்கள் கும்பல் கும்பலா சாவதை சாப்பாட்டுக்கடையில இருக்குற டிவியில காட்டினாங்க. அன்னிக்கு நான்பட்ட வேதனையிருக்கே..." தலையைக் குனிந்துகொண்டார்.
"அப்பா...!"
"1948ஆம் ஆண்டு காசநோயில் அம்மா, அப்பா, இரண்டு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தம்பி எனக் குடும்பத்துல உள்ளவங்க அத்தனை பேரையும் பறிகொடுத்தேன்...!"
பேசிக்கொண்டிருந்த யூவின் பார்வை வேறு திசையை நாட, தாயும் மகளும் பேச்சிழந்தனர். கனத்துக்கிடந்த அமைதியை, சீறிக்கொண்டு சென்ற ஆம்புலன்சின் சத்தம் துரத்தியது.
- முற்றும் -
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:
tmlifestyle@sph.com.sg

