திடீரென கண்காணிப்புக் கருவியில் கோடுகள் வேகமாக நகர்வதைப் பார்த்தவளுக்குத் திகைப்பு. கட்டிலின் தலைமாட்டிற்கு ஓடோடி வந்தாள்.
"அம்மா, நான் பேசுறது கேக்குதா? நர்ஸ், இங்கே பாருங்க, அம்மாவோட இதயத் துடிப்பில் மாற்றம் தெரியுது," பதற்றத்தோடு தாதியை அழைத்து வந்தாள்.
"மேடம் அஞ்சலை, உங்களால் என் குரலைக் கேட்க முடியுதா?" தாதியின் இனிமையான குரலைவிட அவள் உச்சரித்த அஞ்சலை என்னும் பெயரே அஞ்சலையின் இதய மடிப்புகளுக்குள் உருண்டோடியது.
கடற்கரை மணலில் உலர்ந்த பாதங்களை இதமாக நனைத்துவிட்டுச் செல்லும் கடலலைகள் போல அவளுக்குள் மென்மையாக அலையாடியது.
"மேடம் நிர்மலா, டாக்டர் வரார், கொஞ்சம் வெளியே காத்திருங்க" முதன்மைத் தாதி ஒரு வண்டியில் மருத்துவ சாதனங்களைத் தள்ளிக்கொண்டு வந்தாள்.
அஞ்சலையின் மேல் போர்த்தியிருந்த போர்வையை விலக்குவதற்கும் கையுறைகளோடு மருத்துவர் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் கனம் பொருந்திய ஒன்று அஞ்சலையின் நெஞ்சை அழுத்தியது. இதயம் இறுகுவதும் பின் தளர்வதுமாக இயங்கிக்கொண்டிருந்தது.
கூண்டைவிட்டு வெளியேறி சுதந்திரமாக பறக்கவேண்டும் என்ற எண்ணம் விருட்சமாக எழ, தன் இருப்பிடம் பறந்து செல்லும் வலசைப் பறவையைப்போல அவளது நினைவுகள் நகரத்தைக் கடந்து சதுப்பு நிலத்தைத் தேடி ஓடின.
கம்பத்து வீடுகளும் செம்மண் சாலைகளும் ஓவியமாக அவளது மனத்திரையில் விரிந்தன.
"ஓர் இல, ரெண்டு இல, மூணு இல, நாலு இல, அஞ்சல! கண்ணாமூச்சி ரே...ரே..." பழக்கப்பட்ட குரல் மூளையின் ஒரு மூலையிலிருந்து மேலெழுந்து வந்தது.
"ரகு... ரகு.. ஹமிதா... கௌரி..! எங்கே இருக்கீங்க? எனக்குப் பயமா இருக்கு..." சிறுமியின் அழுகுரலுக்குச் செவிசாய்க்காமல் மரங்களும் செடிகளும் அசைந்தாடிக்கொண்டிருந்தன. தூரத்தில், மரங்களைக் கடந்து ஓடும் சிறுவனின் நிழல்.
"ரகு... ஓடாதே, நில்லு?" செருப்பில்லாத கால்களோடு சிறுமியும் பின்னால் ஓடுகிறாள்.
செம்மண் பாதையில் புத்தகப் பைகளோடு செல்லும் சிறுவர் களுடன் இவர்களும் சேர்ந்துகொள்ள புத்துயிருடன் அன்றைய நாள் குதூகலமாகத் துவங்கியது.
பள்ளி வளாகத்தில் பெரிய மாமரத்து நிழலில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழாசிரியரைச் சுற்றி அரை வட்டத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
ஆதவன் தன் வெள்ளிக் கரங்களை இணைத்து சிறுவர்களுடன் விளையாட்டில் சேர்ந்துகொண்டது.
மாணவர்கள் கதை சொல்லியும் நடனம் ஆடியும் தங்கள் திறமைகளைக் காண்பிப்பதில் முனைப்புடன் இருந்தனர்.
"அடுத்து, யாரு பாட்டுப் பாடப் போறா?" ஆசிரியரின் பார்வை அஞ்சலையின் முன் நின்றது.
இறுகப் பின்னிய இரட்டைச் சடையின் நுனியில் சிவப்பு வண்ண ரிப்பனோடு அஞ்சலை ஓடோடி வந்தாள்.
சந்தனத்தில் இரண்டு சிட்டிகை மஞ்சள் கலந்த நிறம். கறுப்புப் பொட்டுக்குக் கீழ் மெல்லிய திருநீற்றுக் கீற்று. பயமின்றி முன்னே வந்து, தொண்டையைச் சரி செய்துகொண்டு பாடத் தொடங்கினாள்.
"சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து, சேர்ந்திடக் கண்டேனே..." வலது, இடது விரல்களைக் குவித்தும், இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்த்தும், பிரித்தும் அபிநயத்தோடு பாடினாள்.
"பொறு, பொறு. நேத்தும் இதே பாட்டுத்தான் பாடினே. போன வாரமும் இதே பாட்டுத்தான்... வேற பாட்டு தெரியாதா?" ஆசிரியரின் கேள்வியையும் முந்திக்கொண்டு வந்தது சக மாணவர்களின் கேலிச் சிரிப்பு.
"வேற பாட்டு தெரியாதே" கால் விரல்களால் தரையில் கோலமிட்டுக்கொண்டே ஆசிரியரின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் கூறினாள்.
"சரி, அடுத்த முறை வேற பாட்டுப் பாடணும்... சரியா?" உதடுகளைக் குவித்து மலங்க மலங்க விழிக்கும் அஞ்சலையின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி, அவளை உட்காரச் சொன்னார்.
அடுத்தடுத்த வாரங்களில் அஞ்சலை, சிட்டுக்குருவிகளை விடுவதாக இல்லை. ஆனாலும் சில மாதங்களுக்குப் பிறகு மரத்தடியில் கூடிய மழலைக் கூட்டங்களில் அஞ்சலை என்னும் சிட்டுக்குருவி மாயமாய் மறைந்தது.
பாவாடை சட்டையிலிருந்து தாவணிக்கு மாறியிருந்தாலும் நூற்கப்படாத பருத்தியென அஞ்சலை குழந்தை மனம் மாறாமலே வலம் வந்தாள்.
மாமரக் கிளைகளில் பறவைகள் இளைப்பாறுவதும், கிளைக்குக் கிளை மாறுவதுமாக இருந்தன.
பங்குனி வெயிலுக்கு இதமாக சாலையோரத்துக் கடையிலிருந்து வாங்கி வந்த 'ஐஸ் போலாவை' சுவைத்துக்கொண்டிருந்தாள் அஞ்சலை.
இயந்திரத்தில் அரைத்தெடுத்த பனிக்கட்டித் துகள்களை பந்துபோல் கெட்டியாக உருட்டி, அதன் மேல் பச்சை, சிகப்பு, ஆரஞ்சு, வண்ண சீனிப் பாகை ஊற்றிக் கொடுத்திருந்தார் மைதீன் அண்ணா.
ஐந்து காசுக்கு அஞ்சலைக்கு மட்டும் சிறப்பாக டின் பாலையும் அதன் மேல் ஊற்றிக் கொடுத்திருந்தார்.
பனிக்கட்டியின் குளிர்ச்சியால் 'ஐஸ் போலாவை' வலது கைக்கும் இடது கைக்குமாக மாற்றிக்கொண்டிருந்தவளைச் சீண்டினான் ரகு.
"அஞ்சல, ஏன் போன மாசம் பள்ளிக்கு வரல?" உருகும் சீனிப்பாகுவை ருசித்துக்கொண்டிருந்தவளின் பார்வை சிறிது நேரம் ரகுவை விட்டு அகலவில்லை
"சீ போ! தெரியாத மாதிரி கேக்குறே?" பனிக்கட்டிகள் நாவில் ஏற்படுத்திய குளிர்ச்சியில் வார்த்தைகள் குளறலாக வந்தன. ரசனையுடன் ரகு அவளருகில் நெருங்கினான்.
"அப்போ, நீ சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டுவியா?" மீசை முளைக்காத வாலிபனின் குறும்புப் பார்வை அவளுக்குள் மெட்டிசைத்தது
"ஐயே! கல்யாணமா? நான் படிக்கணும், நிறைய படிக்கணும்..." அவளின் சிணுங்களில் மரத்தின் கிளைகளும் அசைந்தாடின.
"இங்கே பாரு, உனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறேன்னு!" குவித்திருந்த கைகளை மெல்ல அவள் முகத்துக்கு அருகே திறந்தான். அவன் கைக்குள் அடைபட்டிருந்த மஞ்சள் வண்ண பட்டாம்பூச்சி, தன் சிறகுகளை ஓவியமாக திறந்து, மூடி, திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்த அஞ்சலையின் இடது தோள்பட்டையில் உரசிச் சென்றது. அஞ்சலையும் உற்சாகத்தோடு தன் கையில் கரைந்துகொண்டிருந்த பனிக்கட்டிகளைக் கீழே போட்டுவிட்டு, பட்டாம்பூச்சியின் பின்னால் ஓடினாள். மண்மீது விழுந்த பனிக்கட்டிகள் உருகி, மண்ணுக்குள் கலந்துவிட்டிருந்தன.
அஞ்சலை வீட்டை நெருங்கும்போது அப்பத்தாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
"அஞ்சல பெரிய பொண்ணா ஆயிட்டா, இனிமே அவள வெளியே அனுப்ப வேண்டாம், பொம்பள பிள்ளைக்குப் படிப்பு எதுக்கு? ரெண்டு வீட்டு வேலை கத்துக்கிட்டாத்தான் போற எடத்துல பொங்கிப்போட முடியும்"
"அவ படிக்க ஆசைப்படுறா அத்தை... படிக்கட்டுமே.." கமலம் குசினியிலிருந்து வந்தாள். ஈரக் கையைச் சேலை முந்தானையில் துடைத்துக்கொண்டே வெத்தலைப் பெட்டியை எடுத்தாள்.
கடைசியாகப் பிறந்த கடைக்குட்டி சிலுவாரில்லாமல் தரையில் ஊர்ந்துகொண்டிருந்தது. குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு, மாமியாரின் பக்கத்தில் அமர்ந்தாள்.
வெற்றிலையின் இரண்டு பக்கங்களையும் நன்றாகத் துடைத்து விட்டு, சிறிதாக அதன் காம்பைக் கிள்ளினாள். பழைய நாளிதழில் மடித்து வைக்கப்பட்ட சுண்ணாம்பை வலது கைச் சுட்டுவிரலால் எடுத்து, லேசாக வெத்தலையில் தடவினாள்.
அண்ணாச்சி கடையில் வாங்கி வந்த சீவல் பாக்கை வெத்தலைக்குள் வைத்து, முக்கோண வடிவில் மடித்து மாமியாரிடம் நீட்டினாள்.
பால் டின் குவளையை அவள் பக்கமாக நகர்த்தி வைத்தாள். குழந்தை அவள் மடியிலிருந்து இறங்கி, கிள்ளியெறியப்பட்ட வெத்தலைக் காம்பை நோக்கித் தவழ்ந்தது. கமலம் ஓடிச் சென்று குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டாள். அவள் எதேச்சையாகத் திரும்பும்போது அஞ்சலை நின்றுகொண்டிருப்பதைக் கவனித்தாள்.
"அஞ்சல, தம்பியைக் கொல்லைப்பக்கம் கூட்டிட்டுப் போ, எனக்குத் தலைக்குமேலே வேலை இருக்கு," என்று விரட்டினாள். அஞ்சலைக்கு அடுத்ததாகப் பிறந்த ஒரு தங்கையையும் கடைசியாகப் பிறந்த கடைக்குட்டி தம்பியையும் சேர்த்து அறுவருக்கு அந்த குவாட்டர்ஸ் வீடு கச்சிதமாக இருந்தது.
வாசலைக் கடந்து சிறு கூடம், அதனை அடுத்து படுக்கை அறை. அதையும் கடந்தால் பின்புறக் கதவுடன் சிறு சமையற்கட்டு. சன்னல்கள் அதிகம் இல்லாத குடியிருப்பு.
சமையலறைக் கதவைத் திறந்து சென்றால் கொல்லைப்புறம் வந்துவிடும். துணிகளைக் கொடியில் காயவைப்பதற்கும் மசாலா பொருள்களைத் தரையில் காயவைப்பதற்கும் மாலையில் குழந்தைகள் விளையாடுவதற்கும் ஏற்ற இடவசதி இருந்தது.
கொல்லைப்புறத்தில் கௌரியும் ஹமிதாவும் 'ஃபைவ் ஸ்டோன்ஸ்' விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அஞ்சலை ஓடிச் சென்று தம்பி பாப்பாவைத் தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டு தோழிகளுடன் விளையாட்டில் இணைந்துகொண்டாள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் திருப்பங்களை உணராமல் தோழிகள் முக்கோணக் கற்களைத் தூக்கிப்போட்டு பிடிக்கும் விளையாட்டில் மூழ்கிப்போனார்கள்.
சில மாதங்களுக்குப் பிறகு ஹமிதாவின் பெற்றோர் சிங்கப்பூரிலிருந்து குடும்பத்துடன் மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்குத் திரும்ப ஏற்பாடானது.
தொப்புள் கொடி தொடர்பில்லாத ஊரில் கூலியாக இருப்பதைவிட தாய்நாட்டில் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று அவளது தந்தை நம்பினார்.
"மறக்காம எனக்குக் கடுதாசி போடு," என்று தனது வீட்டு விலாசத்தைக் கொடுத்தாள். தோழிகள் ஒருவருடன் ஒருவர் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்ணீரில் கரைந்தனர்.
ரகுவின் அப்பாவும் அஞ்சலையின் அப்பாவும் மற்றும் கம்பத்தில் குடியிருந்த சிலரும் ஹமிதாவின் குடும்பத்தை ராஜூலா கப்பலில் ஏற்றிவிட்டு வந்தார்கள்.
கப்பல், கோடாலிச் சின்னத் தைலம், சிங்கப்பூர்ப் பேனா, இந்தோனீசிய கைலி, ஜப்பான் சேலைகளோடும், எண்ணங்களைச் சலித்தெடுத்த கடிதங்களோடும் ஊர் போய்ச் சேருவதற்கு ஒரு திங்களுக்கு மேல் ஆகும்.
பிரிவுகளும் துயரங்களும் வாழ்க்கையில் நிரந்தரமானவை என்பதை உணர்ந்தபோது அஞ்சலைக்கு வயது பதினைந்து.
ஹமிதாவின் பிரிவால் துவண்டிருந்த அஞ்சலைக்கு, ரகுவின் அருகாமை ஊக்க மருந்தாக இருந்தது. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசவும், மெல்ல தங்களது அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் காலம் அவர்களுடன் ஒத்திசைத்தது.
கத்தக்காம்பு, வெந்த சோறு, எலுமிச்சை சாறும் சேர்த்து அரைத்துப் பூசிய மருதாணியின் நிறம்போல் ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருந்த அன்பும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டது.
"அம்மா, நான் மன்மதன் கோவிலுக்குப் போயிட்டு வரேன்" கொல்லைப்புறத்தில் பூத்திருக்கும் மல்லிகை மலர்களைச் சரமாகத் தொடுத்து, சாமிக்குச் சாத்திவிட்டு வருவதாகச் செல்வாள்.
கண்டோன்மெண்ட் சாலையில் அமைந்துள்ள மன்மதன் கோவில் இவர்களையும் அரவணைத்துக் கொண்டது. சில சமயங்களில் அவளுக்கு அடுத்ததாய்ப் பிறந்த சிவகாமியையும் உடன் அழைத்துச் செல்வாள். வாரம் ஒருமுறை மகள்கள் இருவரும் சண்முகம் ஐயாவிடம் தேவாரம் கற்றுக்கொள்வதைப் பார்த்து கௌரி பெருமிதத்தில் பூரிப்பாள்.
ரகு, தேவார வகுப்புகளில் இணைந்துகொள்ளாவிட்டாலும் தூரத்தில் அமர்ந்து அஞ்சலை பாடுவதை ரசிப்பான்.
"அஞ்சலைக்குத் திருமணமாம். பெரிய இடத்து மாப்பிள்ளையாம். சொந்தமாகத் தொழில் செய்றாராம். தலைமுறை, தலைமுறையா உக்காந்தே சாப்பிடலாமாம், அஞ்சலை கொடுத்துவச்சவ" கம்பமே இதே பேச்சாகத்தான் இருந்தது.
அஞ்சலையின் கல்யாணப் பேச்சு தொடங்கியதிலிருந்து அவள் கோவிலுக்குச் செல்வது நிறுத்தப்பட்டது.
எப்படியாவது ரகுவைப் பார்த்து, அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்குக்கூட காலம் அவளுக்கு அவகாசம் கொடுக்கவில்லை.
"ஏ புள்ள கௌரி, உன் அண்ணாக்கிட்ட சொல்லி எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்லேன்," கௌரியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.
"பொறுமையா இரு புள்ள, எங்க அப்பாகிட்டே சொல்லி, பேசச் சொல்றேன்," என்று நம்பிக்கை அளித்து விடைபெற்றாள் கௌரி.
ரகுவின் அப்பாவும் வந்தார். ஆனால் அவர் பேசியது களிமண்ணின் மேல் விழுந்த மழைதுளியானது. அஞ்சலை, அம்மாவிடம் மன்றாடினாள். கமலத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் மாமியாரிடம் சரணடைந்தாள். மாமியாரோ, பாக்கு உடைக்கும் உரற்கல்லில் களிப்பாக்கோடு வார்த்தைகளையும் சேர்த்தே இடித்தார்.
"நான் வாக்கப்பட்டு வரும்போது, எனக்கு பதிமூணு வயசுதான். உம் புருஷன், அதான் என் மூத்த பிள்ளை பொறக்கும்போது பதினாலு வயசு! அவனுக்கு அப்புறம், ஒம்போது பிள்ளைங்க. நான் நல்லாதானே இருக்கேன். அது, அது காலாகாலத்தில நடக்கணும்" இடித்த பாக்கு துகள்களை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார். மீதமிருந்த துகள்களைப் ஒரு தாளில் மடித்து வைத்தார். அஞ்சலை செய்வதறியாது தவித்தாள்.
கெப்பல் துறைமுத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள், கம்போங் பாரு குடியிருப்பில் வசித்த மக்களின் வருகையால் மன்மதன் கோவில் வளாகம் கோலாகலமாக காட்சியளித்தது. மணமக்களைப் பல்லாண்டு வாழ வாழ்த்தியவர்கள், அஞ்சலையின் கணவனை வித்தியாசமாகப் பார்த்துச் சென்றனர்.
"என்ன இருந்தாலும் காளிமுத்து இப்படி செஞ்சிருக்கக்கூடாது, காசு, பணம் இருக்குன்னு வயசான ஆளுக்கா நம்ம அஞ்சலையைக் கொடுக்கிறது?" என்ற ஊராரின் ஏளன வார்த்தைகள் அஞ்சலையின் அப்பாவின் காதுகளில் எட்டாமல் இல்லை. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் ஏற்பாட்டில் கவனம் செலுத்தலானார்.
விடைபெறும்போது, கௌரியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறி அழுதாள் அஞ்சலை. ரகு, மேற்படிப்பிற்காக வெளியூர் செல்கிறான் என்று அஞ்சலையின் காதில் ரகசியமாகச் சொன்ன செய்தியால்தான் என்பதை அறியாமல் ஊர்மக்கள் தோழிகளைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
நீர் தேங்கிய கண்களுடன் ரிக்க்ஷாவில் ஏறி அமரும்போதுதான் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள மாமரத்தின் நிழலில் ரகு நிற்பதைக் கவனித்தாள் அஞ்சலை. கிளைகள் அசையாதிருந்த மாமரத்தின் நிழல் ரகுவின் நிழலையும் தனக்குள் அணைத்துக்கொண்டது. அஞ்சலை தன் விழிகளை மூடிக்கொண்டாள். ரிக்க்ஷா வண்டியின் சக்கரங்கள் நகரவும் மாமரத்தின் நிழல் மெல்ல மறையத் தொடங்கியது.
****
"மேடம் நிர்மலா, நிலைமை மோசமா இருக்கு. எதுக்கும் உங்க முக்கியமான உறவினர்களிடம் தெரிவிச்சிருங்க..." ஒத்திகையற்ற முகபாவனையோடு தன் கடமையில் கண்ணாயிருந்தார் மருத்துவர்.
"ப்ளீஸ் டாக்டர், எங்க அம்மாவை எப்படியாவது காப்பாத்துங்க...". நிர்மலா மருத்துவரைக் கையெடுத்துக் கும்பிட்டாள். மருத்துவர் அவளது தோளை ஆதரவாகத் தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
அஞ்சலையைத் தாங்கியிருந்த கட்டிலருகே வந்தாள் நிர்மலா. அஞ்சலையின் வாய்க்குள் பெரிய குழாய் பொருத்தப்பட்டிருந்தது. அவளின் உடலில் பொருத்தப்பட்டிருந்த வெவ்வேறு கருவிகளும் அவை எழுப்பும் ஒலிகளும் நிர்மலாவை பயமுறுத்தின. முப்பது வயதிற்குடைய முதிர்ச்சி இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக கம்பீரத்துடன் வளம் வந்த அம்மா இன்று வாடிய மலராய் படுத்திருக்கும் காட்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சென்ற வாரம் வரை இயல்பாக நடமாடியவள். "நான் கண்ண மூடுறதுக்குள்ளே ஒனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப்பாக்கணும் நிம்மி" அஞ்சலை சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கணவரின் படத்துக்கு ஒரு டம்ளர் தண்ணீரும், அகர்பத்திகளையும் வைத்துக்கொண்டே கூறினாள்.
"கல்யாணம்...? நோ மம்மி!" கணினித் திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவளின் பார்வை அம்மாவின் மேல் விழுந்தது. அஞ்சலை அன்றைய நாளிதழை எடுத்துக்கொண்டு நிதானமாக சோபாவில் அமர்ந்தாள்.
"மம்மி, நான் இன்னும் செட்டில் ஆகணும், 'பி.ஹெச்.டி' எடுக்கணும்கிறது என்னோட கனவு...எத்தனவாட்டி உன்கிட்டே சொல்லியிருக்கேன்" நிர்மலா, 'செட் ஜி.பி,டி யில் தரவிறக்கம் செய்திருந்த ஆய்வுக்கட்டுரைகளைச் சரிபார்த்தபடியே பதிலளித்தாள்.
"நானெல்லாம் உன் வயசிலே ஒரு பிள்ளைக்கு அம்மாவாயிட்டேன்" அன்றைய நாளிதழில் வந்த செய்திகளை ஆராய்ந்துகொண்டிருந்தாலும் அஞ்சலையின் மனம் நிர்மலாவைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
"பழைய பாட்டை ஆரம்பிச்சாச்சா?" சமகாலத்து தகவல்கள் சில விட்டுப்போயிருப்பதைக் கவனித்து, குறிப்பெடுத்துக்கொண்டிருந்ததால் தாயின் வாடிய முகத்தைக் கவனிக்கத் தவறினாள்.
"நீ யாரையாவது காதல் பன்னுன்னா கூட எனக்கு ஓகேதான். உன்னோட விருப்பம்தான் என்னோட விருப்பம்" நிர்மலாவின் நீண்ட மௌனம், அவள் கணினிக்குள் ஒன்றிணைந்துவிட்டாள் என்பதைப் புலப்படுத்தியது. பெருமூச்சுடன் செய்தித்தாளின் அடுத்தப் பக்கத்தைத் திருப்பியவளுக்கு அதிர்ச்சி. அறை பக்கத்தில் வந்திருந்த அறிவிப்பில் கௌரியின் பெயரைப் பார்த்ததும் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. புகைப்படத்தை உற்று நோக்கினாள். ஆம் கௌரிதான். தன் ஆருயிர் தோழி. கண்களில் குபுக்கென்று நீர் முட்டியது. உடனே கைபேசியை எடுத்து நாளிதழில் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கும் எண்களை அழுத்தினாள்.
அதன்பிறகுதான் அம்மா அதிகமாகப் பேசவில்லை என்பது நிர்மலாவுக்கு நினைவு வந்தது. நாளிதழில் வந்த செய்தியால்தான் என்பதை ஒருவழியாக யூகித்திருந்தாள். அஞ்சலை, கோமாவுக்கு சென்ற முதல் நாளில் அவளின் கைப்பைக்குள் பத்திரப்படுத்தப்பட்டிருந்த செய்தியைக் கண்டுபிடித்து அவள் கோடிட்டு வைத்திருந்த தொடர்பு எண்ணுக்கு அழைத்தாள். அம்மாவின் நிலைப் பறறி தகவல் கொடுத்துவிட்டு பிறகு அதைப்பற்றி மறந்தே போனாள்.
அறைக்குள் யாரோ நுழைவதைப் பார்த்ததும் நினைவுகளைக் கலைத்து, எழுந்தாள் நிர்மலா.
"வாங்க, நீங்க....நேற்று நான் பேசியது உங்களிடம் தானே?" நிர்மலா சந்தேகத்துடன் வினவினாள்
"ஆமா, அஞ்சலைக்கு எப்படி இருக்கு, டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க?"
"இனிமே எங்க கையில ஒண்ணுமில்லன்னுட்டாங்க... இந்தச் செயற்கைச் சுவாசக்குழாய் வழியாகத்தான் அம்மாவோட ஆயுசு நீட்டிக்கப்பட்டிருக்குதாம்..." நங்கூரமிட்டிருந்த நிர்மலாவின் தேம்பல்கள் மீண்டும் மேலெழுந்து வந்தன. அவளின் அழுகைக்கு அணை கட்டுவதைப்போல உள்ளே நுழைந்தாள் தலைமைத் தாதி. மருத்துவர் அவளைப் பார்க்க விரும்புவதாகக் கூறி அழைத்துச் சென்றாள்
வந்தவர் அஞ்சலையின் தலையருகே சென்றார். கண்காணிப்பு கருவிகளில் மேலும், கீழும் ஓடிக்கொண்டிருக்கும் பச்சை நிறக் கோடுகள் நம்பிக்கையின் நீட்சிகளாக அவரின் கண்களுக்குக் காட்சியளித்தன.
"அஞ்சும்மா ...." அதற்குமேல் பேச முடியாமல் நாக்கு வாய்க்குள் அழுத்தமாக ஒட்டிக்கொண்டது. என்ன பேசுவது? எங்கேயிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை.
"அஞ்சும்மா, நா..நா...ரகு வந்திருக்கேம்மா. அன்னைக்கு மட்டும் நீ விளம்பரத்தைப் பார்த்து, அழைக்காம இருந்திருந்தா... கடைசி வரைக்கும் உன்ன பாக்க முடியாம போயிருக்கும். நாம சந்திக்கும் நாளுக்காக எவ்வளவு ஆவலோடு காத்திருந்தேன். அதுக்குள்ளே உனக்கு இப்படி ஆகும்னு நினைக்கலியே அஞ்சும்மா..." அஞ்சலையின் முதுமை போர்த்திய கையைத் தனது கைக்குள் வைத்துக்கொண்டு வாஞ்சையுடன் அழுத்தினார். நினைவுகளின் கிளரலில் அவரின் கண்கள் குளமாகின. கட்டிலில் படுத்திருந்தவளின் சிறு அசைவைக்கூட உணரமுடியாத தூரத்திற்குச் சென்றிருந்தார்.
இவர்களின் காதலைப்போல் கம்போங்கின் ஆயுசும் குறைவுதான் என்பதை வெளிநாட்டில் படிப்பை முடித்துத் திரும்பிய நாள் தெரிந்துகொண்டார். நகரமயமாக்குதலால் அவர்கள் குடியிருந்த கம்போங்கும் அங்கிருந்த மக்களும் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்குச் சென்றது தெரியவந்தது. ஆளுக்கொரு திக்காகச் சென்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே ரகுவுக்குத் தெரியவில்லை. அஞ்சலையின் பெற்றோர்கள் ஊருக்கே சென்று விட்டார்கள் என்ற செய்தி மட்டும் அப்பாவின் மூலம் தெரியவந்தது. ஆனால் இச்சிறிய தீவில் அஞ்சலை என்னவானாள் என்று சொல்வதற்கு ஆள் இல்லை. ரகு சிறிது நேரம் அமைதியாக இருக்க முயற்சித்தார், ஆனால் மனம் இரைச்சலாக இருந்தது.
மற்றுமொரு இரத்தப் பரிசோதனைக்காக அறைக்குள் நுழைந்தாள் தாதி. கண்காணிப்பு இயந்திரங்களின் திரையில் தெரிந்த துல்லிய மாற்றத்தை உணர்ந்தவளாக உடனே மருத்துவரை அழைத்துவர ஓடினாள்.
வெளியேறுவதற்குமுன் "சார், ப்ளீஸ் வெயிட் அவுட் சைட்" என்றாள். விடைபெறும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவராக வாஞ்சையுடன் அஞ்சலையின் நரைத்த கேசங்களை கோதி விட்டார்.
"அஞ்சும்மா, உனக்கு ஒன்னும் இல்லம்மா. நீ பொழச்சுக்குவ. நம்பிக்கையை விட்டுறாத. நீ..நீ.. தைரியமானவ. எனக்குத் தெரியும், நீ மீண்டு வந்துருவ... உனக்காக எப்பவும் நா காத்திருப்பேன்..." ரகுவின் சூடான கண்ணீர்த் துளிகள் அவளது சுருங்கிய நெற்றியில் விழுந்து, உருண்டோடி, தலையணை விரிப்பை நனைத்தது.
"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..." ரகுவின் சட்டைப்பைக்குள் கைப்பேசியின் சிணுங்கல் இயந்திரங்களின் ஒலியோடு கலந்து எதிரொலித்தது. கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு, கைப்பேசியை அணைத்துவிட்டு, கனத்த இதயத்துடன் வெளியேறினார்
நிழல்போல் அறையிலிருந்து வெளியேறும் ரகுவின் முதுகில் பதிந்து, நிலைகுத்தியது அஞ்சலையின் விழிகள்!
-நிறைவு
ஓர் அசாதாரண போராட்ட உணர்வோடுதான் அவளுக்கு விழிப்பு வந்தது. கறுமை போர்த்திய அடர்வனத்தில் கை நீளும் பக்கமெல்லாம் வெறுமை. ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து நீயே எழுதிக்கொள் என்பதுபோல் காலம் அவளின் முன்னே நிர்வாணமாக நின்றது.
தூரத்தில் துயரம் மிகுந்த அழுகுரல் சன்னமாய் கேட்க, அந்தக் குரலை உணருமுன்பே இருண்மை அவளை அனைத்துக்கொண்டது.
உயிர்மீட்புக் கருவிகளின் ஒலியாலும், இரத்த பரிசோதனைகளுக்காக ஊசியுடன் நுழையும் தாதியரின் வருகைகளாலும் மட்டுமே அந்தத் தீவிர கண்காணிப்பு அறை உயிர்ப்பெற்றிருந்தது.
இரண்டு நாள்களாக கோமா நிலைக்குச் சென்று விட்ட அம்மா, இமை திறக்கமாட்டாளா என கட்டிலின் விளிம்பில் கலங்கிக்கொண்டிருந்தாள் நிர்மலா.
சிறுகதை
பிரேமா மகாலிங்கம்

