வானம் பொய்த்து
வறட்சிக்கு வழிகாட்டியது.
வறுமையின் பிடிக்குள்
வராமலிருக்க
ஊர்கூடித் தேர் இழுக்க
ஒருமனதாய் முடிவானது.
பெரிதாக ஒன்றுகூடி மழைக்கான
பிரார்த்தனை நிறைவேற்ற,
எல்லோரும் வந்தார்கள்.
ஒருவர் மட்டும் வந்தார்
கையில் குடையோடும்
மனதில் நம்பிக்கையோடும்.
உயரே தூக்கிப் போட்டாலும்
உற்சாகத்தோடு வந்துவிடும்!
தொடர்ந்து போடச்சொல்லித்
தொந்தரவு செய்யும் புன்னகையோடு!
அப்பா இருக்கிறார் என்ற
அதீத நம்பிக்கையோடு!
விழிக்கின்ற உத்தரவாதம்
விடியலில் இல்லையென்றாலும்
உள்ளத்தில் நம்பிக்கை
ஒரேயடியாக இருப்பதால்...
ஒலியெழுப்பி நம்
உறக்கத்தைக் கலைக்க
தவறாமல் இரவினில்
தயாராக்குகிறோம் கடிகாரத்தை.
- சித. அருணாசலம்

