மீட்சி

மீட்சி

12 mins read
fc5836f3-002d-49ec-b667-9e0fa25a93c0
-

நான் அந்த வீட்டை அடை­யும்­போது அதி­காலை மலர்ந்து திசை­யெங்­கும் வெளிச்­சம் கசிந்து கொண்­டி­ருந்­தது. முதல் பார்­வைக்கு அந்த வீடு சிறி­த­ள­வும் வித்­தி­யா­ச­மா­கத் தோன்­ற­வில்லை. எல்லா அடுக்குமாடி வீடு­க­ளைப் போலத்­தான் அது­வும் இருந்­தது. பன்­னி­ரெண்­டாம் மாடி­யின் மூலை வீடு அது. வெண்­ணி­றம் பூசப்­பட்ட கதவு ஊட­லில் உள்ள பெண்ணின் முகம்போல இறுக்­க­மாக இருந்­தது. கத­வின் மேலேயோ அல்­லது அதற்கு அரு­கிலோ தெய்­வப் படங்­களோ குறி­களோ இல்லை.

அந்த வீட்டைப் பார்த்­தாலே அது அச்­சு­றுத்­தும் என்றும் அமா­னு­ட சாயல் கொண்ட வீடு என்­றும் நண்­பன் சொல்­லி­யி­ருந்­தான். சொல்­லி­யி­ருந்­தான்.

அந்த வரி­தான் என்னை இந்த வீட்­டிற்கு வர­வ­ழைத்­தி­ருக்­கும் என்று இன்று யோசிக்­கையில் தெரி­கிறது. ஆனால், அதி­கா­லை­யில் அந்த வீட்­டின் தரிசனம் எனக்கு ஏமாற்­றத்­தைத்­தான் அளித்­தது. வெகு நாள்கள் இங்கு தங்­கும் என் திட்­டத்தை மாற்­றிக்­கொண்டு சீக்­கி­ரமே இங்­கி­ருந்து சென்றுவிட வேண்­டும் என்ற முடி­விற்கு மனம் வந்­தி­ருந்­தது.

கத­விற்கு அடி­யி­லுள்ள வாசல் ப­டி­யில் நிரம்­பியிருந்த தூசுப்­ப­ட­லம் கெட்­டி­யாக இருந்­தது. சமீ­ப­கா­ல­மாக சுத்­தமே செய்­யப்­பட்டிராத வீடு என்றபோதும் பன்­னி­ரெண்­டாம் தளத்­தில் ஆளைத் தூக்­கும் காற்­றின் வேகத்­தில் இந்­தத் தூசுப்­ப­ட­லம் இந்­தப் படி­யில் உரு­வாகி நிலைத்­தி­ருக்க வாய்ப்­பே­யில்லை. இந்த வீட்­டின் அமா­னு­டக் குறி­களில் ஒன்றா இது?

அரு­கி­லி­ருக்­கும் வீடு­க­ளைப் பார்த்­தேன். அவை வழமை போலவே இருந்­தன. எவ்­வித வித்­தி­யா­ச­மும் இன்றி. எவ­ரும் என்னைக் கண்டுகொள்ள வில்லை. எதிர்­வீட்டிலிருந்த ஆள் மட்­டும் என்னைச் சற்றுநேரம் உற்­றுப் பார்த்­தான்.

சட்­டை­யற்ற அவ­னது உடல் முழுக்க ஒரு­வித செடியைப் பச்சை குத்­தி­யி­ருந்­தான். அந்­தச் செடி­யின் முட்களைப் பார்க்­கும்­போதே கண்­க­ளைக் குத்­து­வது போலி­ருந்­தது. சிரிப்­பும் அல்­லாத வெறுப்­பும் அல்­லாத மைய­மான முக­பா­வத்தை வர­வ­ழைத்­துக் கொண்­டி­ருந்த அவன், சற்று நேரத்­தில் கதவை மூடிக்­கொண்­டான். வாசல்படி­யின் தூசுப் பட­லத்தை மீண்­டும் பார்த்­தேன்.

எனக்கு அவ­ச­ர­மாக வீட்­டுக்­குள் நுழைந்தே ஆக­வேண்­டிய கட்­டா­யம் ஒன்­று­மில்லை. ஆகை­யால், அந்த தூசுப் பட­லத்­தோடு விளை­யா­டிப் பார்க்­க­லாமே என்று தோன்­றி­யது. என் கைப்­பை­யைத் தரை­யில் வைத்­து­விட்டு, தூசுப் பட­லத்­தில் விர­லால் 'வ' என்ற எழுத்தை எழு­தி­னேன். அடுத்த எழுத்தை எழு­து­வ­தற்­குள் சட்டென காற்­றில் ஒரு அசைவு தோன்றி 'வே' என்ற எழுத்தை எழு­தி­யது. என் நரம்பு மண்­ட­லத்­தில் வெள்­ள­மெ­னப் பிர­வ­கித்த அதிர்ச்­சி­யின் அழுத்­தத்­தால் தரை­யி­லேயே அமர்ந்துவிட்­டேன்.

எந்த மாயவிரல் இந்த எழுத்தை எழு­தி­யது? எனில், என்­ன­ரு­கில் இருப்­பது யார்? அல்­லது இல்­லாது இருப்­ப­வர் யார்? அச்­சத்­தின் ஆக்­ர­மிப்­பில் இருந்து வில­கா­மலேயே அடுத்த எழுத்­தான 'ண'வை எழு­தி­னேன். அதற்­கா­கவே காத்­தி­ருந்­ததுபோல உடனே 'ண்' என்ற எழுத்து அதற்­க­ரு­கில் தோன்­றி­யது. என் சந்­தே­கங்­கள் யாவும் இப்­போது உறு­திப்­படுத்­தப்­பட்­டு­விட்­டன.

ஆக, இங்கு எவரோ இருக்­கி­றார்­கள். அல்­லது, எதுவோ இருக்­கிறது. சரி­தான். இனி நான் என்ன செய்­வது? வந்த வழியி லேயே திரும்பி ஓடி­வி­ட­லாமா? வாழ்­வின்­மீது ஆசை­யுள்­ள­வர்­கள் அதைத்­தான் செய்­வார்­கள்.

ஆனால், என் கதை வேறு. ஆகை­யால், கண்­ணுக்­குத் தெரி­யாத விர­லோடு நான் ஆரம்­பித்த விளை­யாட்­டைத் தொடர எண்­ணி­னேன்.

தூசுப் பட­லத்­தில் இப்­போது 'க்' என்ற எழுத்தை வரைந்­தேன். அதற்­கா­கவே காத்­தி­ருந்­தது போல 'டா' என்ற எழுத்து அதன் அரு­கில் முளைத்­தது. மீண்­டும் 'க' என்ற எழுத்தை நான் எழுத, 'ம்' என்ற எழுத்து அரு­கில் தோன்­றி­யது. இப்­போது அந்­தத் தூசுப் பட­லத்­தில் ஒட்­டு­மொத்­த­மாக எழுத்­து­கள் இவ்­வி­தம் காட்­சி­ய­ளித்­தன.

வ- வே

ண-ண்

க்- டா

க- ம்

நான் வணக்­கம் என்ற சொல்லை எழுதி முடிப்­ப­தற்கு முன்­னரே, வேண்­டாம் என்ற வார்த்தை எழு­தப்­பட்­டு­விட்­டது. நான் இந்த வீட்­டிற்­குள் நுழை­வது ஏற்­கப்­ப­ட­வில்லை. மிகத் தெளி­வான செய்­தி­தான். உயி­ராசை உடை­ய­வர்­க­ளுக்கு. எனக்­கல்ல. உயி­ருள்­ள­வர்­க­ளின் கட்­ட­ளை­களையே நான் மதிப்­ப­தில்லை, உயி­ரற்­ற­வை­க­ளின் கட்­டளை என்ன செய்துவிட முடி­யும்? வீட்­டுக்குள் நுழைந்து பார்த்து விடு­வது என்று முடி­வெ­டுத்­தேன்.

நண்­ப­னி­ட­மி­ருந்து வாங்­கிய சாவி­யைப் பைக்­குள்­ளி­ருந்து எடுத்­தேன். அவன் இந்த வீட்டை விற்­கும் முடி­வுக்கு வந்து விட்­டி­ருந்­தான். ஆனால், வீட்­டைப் பற்­றிக் கேள்­விப்­பட்­டார்­களோ என்­னவோ எவ­ரும் இது­வரை இந்த வீட்டை வாங்க முன்­வ­ர­வில்லை.

பணி நிமித்­த­மாக துபா­யில் இருந்த நண்­ப­னும், அங்­கேயே நிரந்­த­ர­மா­கத் தங்கிவிடத் தீர்­மானித்­தி­ருந்­தான். சிங்­கப்­பூ­ரில் சில நாள்கள் தங்­கும் திட்­டத்­தில் வரும் நண்­பர்­கள் அனை­வ­ருக்­கும் இந்த வீட்­டின் சாவியை அனுப்­பி­வி­டு­வான். அப்­படி வந்­த­வர்­கள் எல்­லாம் முது­கில் மூச்­சுக்­குத்து வாங்­கி­யவர்­கள் போன்று வாயைத் திறந்­தும் திறக்­கா­ம­லும் அலறி ஓடிய பின்­னர்­தான் அவனுக்கு இந்த வீட்டை விற்று விடத் தோன்­றி­யி­ருக்­கிறது.

அதிர்ஷ்­ட­வ­ச­மாக அவன் இந்த வீட்­டில் இருந்­த­போது அவ­னுக்கு எவ்­வி­த­மான அமா­னுட சக்­தி­க­ளின் தொந்­த­ர­வு­களோ, உற்­பா­தங்­களோ ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. சில­ருக்கு இப்­ப­டித்­தான், கெட்ட சக்­தி­க­ளின் தரி­ச­னமோ, அவற்­றின் தொந்­த­ர­வு­களோ வாழ்க்கை முழுவதும் ஏற்­ப­டாது.

ஜோசி­யர்­க­ளைக் கேட்­டால் ராசி­களை­யும் நட்­சத்­தி­ரங்­க­ளை­யும் கார­ணம் சொல்­வார்­கள். சிலவகை ராசிக்­கா­ரர்­க­ளுக்கு அமா­னுட சக்­தி­க­ளின் இருப்போ, தொடு­கையோ தெரி­யாது. சுடுகாட்­டுக்­குச் சென்­றா­லும் அவர்­கள் எவ்­வி­த­மான சங்­க­ட­மூட்­டும் அனு­ப­வங்­களும் ஏற்­ப­டா­மல் தப்­பித்­து­வி­டு­வார்­கள்.

என்­னைக் கேட்­டால், இது ஒன்­றும் நல்­லூழ் அல்ல. ஒட்­டு­மொத்த வாழ்க்­கை­யி­லும் ஒரு பேயைக் கூடப் பார்க்­க­வில்­லை­யென்­றால் அது என்ன வாழ்க்கை? அப்­ப­டிப்­பட்ட "பாது­காக்­கப்­பட்ட" வாழ்க்­கை­யி­னால் கிடைக்­கும் சௌக­ரி­யத்­தின் அர்த்­தம்­தான் என்ன? அத­னால்­தான் சிங்­கப்­பூரி­லேயே குடி­யி­ருந்­தா­லும் இந்த வீட்­டைப் பற்­றிக் கேள்­விப்­பட்­ட­வுடன் சில நாள்­கள் இவ்­வீட்­டில் தங்­கிப் பார்ப்­ப­தென துணிச்­ச­லு­டன் வந்­து­விட்­டேன்.

நான் இந்த வீட்­டின் சாவியைக் கேட்­ட­வு­டன் நண்­பன் ஆச்­ச­ரி­யப்­ப­ட­வில்லை. "வேண்­டாம் என்றால் நீ கேட்­க­மாட்­டாய். மற்­ற­படி, உன்­னு­டைய தற்­போ­தைய நிலை­மை­யில் இந்த வீடு உனக்கு ஒரு மருந்­தா­கக்கூட அமை­ய­லாம்," என்று சொல்­லி­யி­ருந்­தான்.

சாவித் துவா­ரத்­தில் சாவியை நுழைத்­துத் திரு­கி­ய­தும் ஒரு விநோ­த­மான ஒலி செவி­யைத் துளைத்­தது. அது ஒரு மிரு­கத்­தின் உரு­மல் போலி­ருந்­தது. அல்­லது காலத்­தின் உரு­மலா? இறந்த காலத்­தில் புதைவு கொண்­டி­ருந்த வீட்­டின் கதவு நிகழ்­கா­லத்­துக்கு வரமறுக்­கின்ற ஓலமா? ஆம். கத­வைத் திறந்­த­தும் மனம் தானறியாத தொல் பழங்­கா­லத்­துக்­குச் சென்­று­விட்ட உணர்­வு­தான் இருந்­தது.

வீட்­டிற்­குள் நுழைந்­த­தும் கண்­களைமூடி என்­னைச் சுற்­றி­யி­ருந்த காற்று மண்­ட­லத்­தி­லி­ருந்து ஆழ­மாக மூச்சை இழுத்­தேன். வீட்­டின் ஆன்­மாவை சுவாச மண்­ட­லத்­துக்­குள் இழுப்­ப­தைப்போல. கண்­களைத் திறந்து என் முன்­னி­ருக்­கும் வீட்­டின் அந்­த­ரங்­கத்தை ஆழ்ந்து நோக்­கி­னேன். எவ்­வித வித்­தி­யா­ச­மும் இன்றி வெகு சாதா­ர­ண­மாக இருந்­தது வீடு.

நான் நினைத்­த­தற்கு மாறாக வீட்­டிற்­குள் குப்­பையோ, அழுக்கோ, தூசுப்பட­லமோ இல்லை. பொருள் களின் ஒழுங்கு குலை­யா­மல் புத்­தம் புதி­தா­கப் பேணப்­பட்­டி­ருந்­தது வீடு. ஆட்­கள் புழங்­கிய தட­மும் தென்­பட்­டது. வழக்­க­மான வீடு போன்று காட்­சி­ய­ளித்து இந்த வீடு என்னை ஏமாற்­றப்­பார்க்­கிறது. நான் இதற்­கெல்­லாம் ஏமா­று­ப­வ­னல்ல. நானும் இந்த வீட்டை ஏமாற்­றப்­போ­கி­றேன்.

எந்த வித­மான தயக்­க­மும் இன்றி ஹாலில் இருந்த சோபா­வில் தொப்­பென விழுந்­தேன். கால் மேல் கால் போட்­ட­ப­டியே வீட்டை ஆராய்ந்­தேன்.

அதன்­பின் வீட்­டின் அறை­களுக்­குள் சென்று ஒரு நோட்­டம் விட்­டேன். ஸ்விட்­சைப் போட்டதும் விளக்கு எரி­கி­றதா என்றுதான் முத­லில் பார்த்­தேன். அதன்­பின் குழா­யில் தண்­ணீர் வரு­கி­றதா என்று. எல்­லாம் சரி­யா­கத்­தான் இருந்­தது. இந்த வீட்­டில் எந்­த­வொரு துர்­நி­மித்­தத்­தை­யும் சாய­லை­யும் அவ­லட்­ச­ணத்­தின் கூறு­க­ளை­யும் என்­னால் கண்­ட­றிய முடி­ய­வில்லை. மெல்­லி­ய­தொரு சலிப்பு எழுந்­தது.

நான் என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றேன். சிங்­கப்­பூ­ரி­லேயே இருந்­து­கொண்டு எதற்­காக இந்த வீட்­டிற்கு வந்­தேன். உண்­மை­யில் நான் சாகச விரும்­பியா? அல்­லது வாழ்­வின் மீதுள்ள வெறுப்­பில் வாழ்­வைப் பழி­தீர்ப்­ப­தற்­காக அலை­கி­றேனா? சிறிது காலத்­துக்­குத் தனி­யாக இருக்கவேண்­டாம் என்­றல்­லவா மருத்­து­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார். அதை ஏன் நண்­ப­னுக்கு நான் தெரி­விக்­க­வில்லை? எந்­தத் தனி­மை­யும் என்னை மீட்­காது என்று நான் ஏன் உணர மறுக்­கி­றேன்?

சட்டென்று உடல் நடுங்­கத் தொடங்­கி­யது. வலி மின்­னல்­கள் மூளைத்­தி­ரை­யில் மின்னி அணைந்­தன. பின்­க­ழுத்­தில் யாரோ பாறை­யைத் தூக்கி வைத்­தது போன்ற வலி துளைத்­தது.

கண்­ணுக்கு முன்­னி­ருக்­கும் பொருள்கள் யாவும் அன­லில் வெந்து உரு­கு­வதுபோல மறைந்து கொண்டே வந்­தன. சட்­டென்று பிடி­மா­னத்­திற்­காக அரு­கி­லி­ருக்­கும் மதி­லில் கைவைத்து அத­னு­டன் ஒட்­டிக்­கொண்­டேன். இது­போன்ற சம­யங்­களில் நிலை­யாக எதுவோ கைய­ரு­கில் இருப்­பது எவ்­வ­ளவு வச­தி­யாக இருக்­கிறது.

மெல்ல என்னை நிலை­மீட்­டுக் கொண்­டேன். மூச்சை ஆழ இழுத்து வெளி­விட்­டேன்.

ஒன்­றுக்­குள் ஒன்­றாய் பிணைந்துபோயி­ருந்த நரம்­பு­கள் மெது­வா­கச் சீர­டைந்து வரு­வதை உணர முடிந்­தது. உயி­ரைப் பிடுங்­கும் இந்த வாதை சமீ­ப­கா­ல­மாக என் உட­லுக்­குள் தொற்­றிக்­கொண்டு விட்­டது. கால சர்ப்­பம் தன் விஷ­மூச்சை என் மேல் வீசத் துவங்­கி­விட்­டது. எம­னின் பாசக்­க­யிறு போன்ற அதன் தேகம் என்­னைச் சுற்­றிக்கொண்டு விட்­டது. சம­யம் பார்த்து உடம்பை இறுக்­கத் துவங்கி விடு­கிறது.

எந்த மருந்­தும் என்னை இதி­லி­ருந்து மீட்­கும் வல்­ல­மை­யு­டை­ய­தல்ல. என் கலை­யைத் தவிர.

பென்­சி­லை­யும் தூரி­கை­யை­யும் கையில் எடுத்து வரை­யத் துவங்­கி­னால் விடு­தலை அடைந்துவிடு­வேன். காட்­டாற்று வெள்­ளத்­தில் இலை­யைப் பிடித்து தப்­பித்­துக் கரை­யே­றும் எறும்­பைப் போல ஒரு சிறிய ஓவி­யத்தை வரை­வ­தன் மூல­மாக நான் என்­னைக் கொல்­லும் வலி­யின் சைன்­யத்­தி­னின்­றும் தப்­பி­வி­டு­வேன். சந்­தே­க­மில்லை.

பய­ணப்­பை­யில் இருந்த ஓவி­யத்­ தா­ளை­யும் பென்­சி­லை­யும் எடுத்­தேன். வண்­ணங்­க­ளையோ தூரி­கை­களோ மற்ற உப­க­ர­ணங்­களையோ எடுத்து வர­வில்லை. ஓவி­யத்­தாளை எதி­ரில் இருந்த சுவ­ரில் ஒட்­டி­னேன். பென்­சி­லைக் கூர்­தீட்­டிக்கொண்டு வரை­யத் துவங்­கி­னேன். வண்­ணங்­களை அள­வா­கவே பயன்­ப­டுத்­தும் ஓவி­யன் நான். அதி­லும் பென்­சில் ஓவி­யங்­கள் வரை­வ­தில் நிபு­ணன் எனப் பெயர் பெற்­றி­ருந்­தேன்.

வரை­யப்­ப­டாத வெள்­ளைத் தாள் வழி­பாட்­டுக்­கு­ரி­யது. அடுத்த கணம் அதில் என்­ன­வி­த­மான ஓவி­யம் தோன்­றப்­போ­கிறது என்று ஓவி­ய­னான எனக்கே தெரி­யாது. கலை­யின் மாபெ­ரும் கருப்பை அல்­லவா அது. அதில் தோன்­றக்­கூ­டிய ஓவி­யம் குப்­பைக்­கும் போகும், கலைக்­கூ­டத்­துக்­கும் போகும். இன்றே அழிந்­தா­லும் அழி­ய­லாம் அல்­லது தலை­மு­றை­கள் கடந்து நினைவுகூர­வும் பட­லாம். எண்­ணிக்­கை­யற்ற சாத்­தி­யக்­கூ­று­களை உள்­ள­டக்­கிய வெள்­ளைத்தாளைத் தொட்டு முத்­த­மிட்­டேன். சட்­டென அகத்­தின் தோன்­றிய உரு­வத்தை தாளில் கீறி­னேன்.

வண்­டிச்­சக்­க­ரத்­தில் ஒட்­டிய பல்­லி­யைப்போல அகச்­சக்­க­ரத்­தில் ஒட்­டிக்­கொண்டு அது பய­ண­மா­கும் திசைக்­குள் செல்­லத் துவங்­கி­னேன். அகத்­தின் வீச்­சுக்­குள் சிக்­கிய உரு­வத்தை மெல்ல மெல்ல ஓவி­யத்­துக்­குள் பெயர்த்­துக்கொண்டு வந்­தேன்.

முழு­மை­யாக ஓவி­யத்தை வரைந்து முடித்­த­போது இரவு முதிர்ந்­தி­ருந்­தது. எனில் எவ்வளவு நேர­மாக நான் வரைந்துகொண்­டி­ருந்­தி­ருக்­கி­றேன்? என் கலை யில் நான் கவ­னம் குவிக்­கத் துவங்­கி­னால் மணித்­து­ளி­கள் வினா­டி­க­ளெ­னக் கரைந்­தோடி விடும். அது­தான் எனக்கு நல்­லது என்­றும் மருத்­து­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார்.

ஆனா­லும், எனக்­குள் இருக்­கும் துர்­தே­வ­தை­கள் என்னை ஓவி­யத்­தின் பக்­கம் வர­வொட்­டாமல் துரத்­தி­வி­டு­கின்­றன. இவற்றை நான் எந்த அள­வுக்கு வெல்­கிறேனோ அந்த அள­வுக்கு மீண்டு­வி­டு­வேன்.

முழு­மை­யாக வரைந்து முடித்த ஓவி­யத்­தைப் பார்த்­தேன். பத்­மா­வின் முகம் துல்­லி­ய­மாக வந்­தி­ருந்­தது. நிறை­வே­றாத அவ­ளது கன­வு­க­ளின் எடை மிகுந்த கண்­கள். காதோ­ர­மாக மிதக்­கும் அந்த ஒற்றை முடி­யில் அல்­லவா என் இத­யம் ஊஞ்­ச­லா­டி­யது. குழந்தை நிலவு போன்ற நெற்றி. குடை போன்று வளைந்த புரு­வங்­கள். இள­மை­யின் கொழுந்­தைச் சுமந்த கன்­னக் கதுப்பு. தோண்­டத்தோண்ட நீர் சுரக்­கும் மணற்­கே­ணி­யைப்போல தொடும்­போதெல்­லாம் தட்­டா­மல் முத்­தங்­கள் சுரக்­கும் இதழ்­கள்.

நோக்க நோக்க எல்­லாமே அழ­கா­க­வும் இனி­தா­க­வும் இருக்­கும் இந்த முகம் ஏன் இப்­போது என்­னு­டன் இல்லை? எப்­போ­தைக்­கு­மாக என் வாழ்­வில் இருந்து எவர் பெயர்த்­துப் போனார்­கள் இம்­மு­கத்தை? இந்த வடி­வான முகம் வாழ்­வில் எனக்­க­ளித்த அர்த்­தங்­க­ளை­யெல்­லாம் எப்­படி இந்த ஒற்­றைத் தாளில் கீறு­வது?

மீண்டும் சோபாவில் படுத்துக் கொண்டேன். களைப்பின் சுமை உடலை அழுத்தவே, புதைமணலில் ஆழ்வதுபோல மெல்ல மெல்ல உறக்கத்தினுள் மூழ்கினேன்.

அமைதி... ஆழ்ந்த அமைதி. இதைத் தேடித்தானே இத்தனை காலம் அலைந்தேன். கைக்கு எட்டுவதுபோல வந்து வாய்க்குச் சிக்காமல் என்னிடம் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடும் வஸ்து இதுதானே.

இப்படிப்பட்ட அமைதிகிட்டு மானால் இதுபோல் ஆயிரமாயிரம் பேய் வீடுகளுக்குச் செல்வேனே. ஏன், ஆயிரமாயிரம் வீடுகளுக்குப் போகவேண்டும்? இந்த வீட்டி லேயே நிரந்தரமாக தகைவு கொண்டுவிட்டால் என்ன? நீரில் மேற்பரப்பில் தோன்றும் மெல்லிய அலைகளென சிந்தனை வட்டங் களின் சலசலப்புகளைத் தாண்டி, அமைதியின் ஊற்றுமுகத்தை நோக்கி அகம் சென்றுவிட்டிருந்தது.

ஆனா­லும், வலை­யில் சிக்­கிய மீனைப்போல ஒரு பெருங்­க­ன­வுக்­குள் மனம் சிக்­கிக்கொண்­டதை உண­ர­மு­டிந்­தது. இப்­போது என்­முன்­னி­ருக்­கும் வெளி­மு­ழுக்­கத் ததும்­பிக்கிடப்­பது தூய பொன்னிற மணல். பாலை­வ­னத்­தில் தீயாய்ப் பொழி­யும் வெயில்.

ஆனால், அதி­ச­யம்போல அந்த வெயிலோ வெயி­லில் சுடும் மணல்­வெ­ளியோ எனக்கு எந்­த­வி­த­மான சிர­மத்­தை­யும் அளிக்­க­வில்லை. பூக்­கள் கொட்­டப்­பட்ட பாதை­யில் நடப்­ப­தைப்போல சௌக­ரி­ய­மாக நடந்துகொண்­டி­ருந்­தேன்.

தூரத்­தில் கருநிற சேலை யணிந்த ஒரு தேவ­தை­யின் பின்­புறத் தோற்­றம். கானல் அலை­யடிக்­கும் அந்த மங்­க­லான நில­வெளி­யி­லும் அந்த தேவ­தை­யின் உரு­வம் மன­திற்கு மிக­வும் பழக்­கப்­பட்ட உரு­வம் போலி­ருந்­தது. இத்­தனை தூரத்­தைக் கடந்து அவ­ளி­டம் எவ்­வாறு செல்­வது என்று மனம் தவித்­தது. என் தவிப்­பின் ஓலம் அவ­ளுக்கு எட்டி­விட்­டதுபோல, சட்­டென என் அரு­கில் வந்­து­விட்­டாள்.

இந்த நெடுந்­தூ­ரத்தை மனி­தக் கால்­க­ளால் இத்­தனை விரை­வில் தாண்­டி­விட முடி­யாதே, இவள் யார்? காற்­றின் சுழ­லில் அந்­த­ரத்­தில் ஒரு சவுக்­கென எழுந்த மணல் துகள்­க­ளுக்கு நடுவே என் தேவ­தை­யின் சௌந்­தர்ய முகத்தை இப்­போது தீர்க்­க­மா­கக் காணமுடிந்­தது.

இந்த முகத்தை மறக்கமுடி­யுமா? இந்த முகத்­தின் சுடர்­வெளிச்­சத்­தில்­தானே என் இது­வரை­யி­லான ஆயுள் கழிந்­தி­ருந்தது. என் சுகங்­க­ளை­யும் துக்­கங்­க­ளை­யும் மனச்­ச­ல­னங்­க­ளை­யும் அறிந்த முக­மல்­லவா இது.

இதைத்­தானே நான் விழித்­தி­ருக்­கும் போதெல்­லாம் வரைந்து கொண்­டி­ருக்­கி­றேன். என் சிந்­த­னையை இடை­வெட்­டிப் பேசினாள் பத்மா.

"இங்கு என்ன செய்­கி­றாய்?"

"சற்று முன்­னர்வரை இங்கு ஏன் வந்­தேன் என்று எனக்கே தெரி­யா­து­தான். ஆனால், உன்னைப் பார்த்­த­தும் அறிந்­தேன். நான் வரவேண்­டிய இடத்­துக்­குத்­தான் வந்­தி­ருக்­கி­றேன்".

"இங்கு நீ வரக்­கூ­டாது?"

"ஏன்?"

"இது அம­ரர்­கள் உல­வும் பிராந்­தி­யம்."

"எனில் என்­னை­யும் அம­ர­னாக்­கி­விடு".

"கடைசிவரை உன்னை இங்கு வர­வொட்­டா­மல் தடுக்கமுயன்­றேன்."

"வேண்­டாம் என்று படி­யில் எழு­தி­யது நீதானா?"

"என்­னு­டைய பேச்சை நான் உயி­ரோ­டி­ருந்­த­போது நீ கேட்­ட­தில்லை. இப்­போ­து­தா­வது கேள்."

"நம் குழந்தை இப்­போ­தும் உன் வயிற்­றில் இருப்­பானா?"

........

"ஏன் பதில் பேசா­தி­ருக்­கி­றாய்"?

.......

"உன்­னைக் கொண்டுபோன கொரோனா என்­னைக் கொண்டு போயி­ருக்­க­லாமே?"

"எது­தான் நம் கைகளில் இருக்­கிறது?"

"இரண்டே வாரங்­கள்­தான் வெளி­யூர் சென்­றேன். அதற்­குள் என்­னைத் தவிக்கவிட்­டுப் போய்­விட்­டாயே?"

........

"உயி­ரோடு எரிந்துகொண்­டி­ருக்­கி­றேன். பார்த்­துக்கொண்­டு­தானே இருக்­கி­றாய்?"

"ஆம். உன் மூச்சு வெளிக்­குள் ­தான் இன்­ன­மும் இருக்­கி­றேன். உயி­ரோடு நீ எரி­வ­தைப் பார்த்­துக் ­கொண்­டு­தான் இருக்­கி­றேன்."

"என்னை மீட்கமாட்­டாயா? மருத்­து­வன் எனக்கு மனப்பிறழ்வு என்­கி­றான். நான் தெளி­வா­ன­வன் என்று அறிந்­த­வள் நீ மட்­டும்­தான். தய­வு­செய்து என்னை மீட்­டு­விடு"

"என் உயிரே. யோசித்­துத்­தான் பேசு­கி­றாயா? அந்த உலகில் இன்­னும் நீ அனு­ப­விக்க வேண்­டிய எது­வும் இல்­லையா?"

"அனு­ப­வித்­த­தெல்­லாம் உன்­னோடு அனு­ப­வித்­தா­யிற்று. என்னை உன்­னு­டைய உல­கிற்கு அழைத்­துச் செல். இந்த வீட்­டிற்கு நான் வந்­ததே இதற்­கா­கத்­தான். இந்த வீட்­டில் நிச்­ச­யம் உன்னை என்­னால் பார்க்க முடி­யும் என்று என் மனம் உணர்ந்­த­தால்­தான் இங்கு வந்­தேன்."

"ஆம். சில வீடு­கள்­தான் அம­ரர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கின்­றன. இது அப்­ப­டிப்­பட்­ட­தொரு வீடு"

"என்னை அழைத்­துச் செல்!"

"ஆம். நேரம் வந்­து­விட்­டது. கண்­ணைத் திற. இனி உன் கனவில் இருந்து விரை­வாக வெளி­யேறு."

சட்­டென விழித்­துப் பார்த்­தேன். வியர்­வை­யில் நனைந்­தி­ருந்­தது உடல். இத­யம் அதன் அதி­க­பட்ச துடிப்­பில் தள்­ளா­டிக்­கொண்­டி­ருந்­தது. அலை­க­ட­லில் தவிக்­கும் பட­கில் நின்­றி­ருப்­பது போல என் பாதத்­திற்கு கீழி­ருந்த தரை தள்­ளா­டி­யது. எதி­ரில் இருந்த பத்­மா­வின் ஓவி­யத்­தைப் பார்த்­தேன். இப்­போது அது ஓவி­ய­மாக இல்லை. முழுக்க மலர்ந்த மனித முக­மாக, என் பத்­மா­வின் முக­மாக உருப்­பெற்­றி­ருந்­தது. உரு­வெளி மயக்­க­மல்ல. உயிர் ததும்­பும் ஒண்­மு­கம்.

"வா. எனக்­குள்­ளாக வா. எப்படி வரு­வது என்று உனக்­குத் தெரி­யு­மல்­லவா..." என்ற குரல் ஒலித்­தது.

எப்­படி அவ­ளுக்­குள் செல்­வது என்று சில வினா­டி­கள் குழம்­பி­னேன். அவள் முகத்­தில் இருக்­கும் சாவியை சட்­டெ­னக் கண்­டு ­பி­டித்­தேன். இந்­தச் சாவியை எப்படி மறந்­தேன்? உயி­ரூ­றும் அந்த முகத்­தின் ஈர இதழ்­களில் மெல்ல என் இதழை ஒற்­றி­னேன்.

அதன்­பின் நடந்­த­தெல்­லாம் என்­னால் ஊகிக்­கவே முடி­யாத ஆச்­சர்­யங்­கள் அல்­லது அம­ரர் உல­கின் யதார்த்­தங்­கள். மெல்ல அந்­தச் சிறிய இதழ்­கள் ராட்­சத வடி­வில் பெரி­தாகி என் மொத்த உட­லை­யும் உறிஞ்­சின.

காந்­தத்­தைச் சென்­ற­டை­யும் இரும்­புத் துக­ளென என் உடல் அதற்­குள் நொடி­யில் சென்று மறைந்­தது. போதக் கரை­யில் இருந்த என்னை அபோ­தக் கடல் உள்­ளி­ழுத்­துக்கொண்­டது. இனி எனக்­குத் துக்­கம் இல்லை. நினைவு­க­ளின் சுமை இல்லை. காலத்­தின் அழுத்­தம் இல்லை. கன­வு­க­ளின் பிர­மை­கள் இல்லை. இப்­போது நான் துளி மிச்­சமு மின்றி அவ­ளில் நிரந்­த­ர­மா­க­வும் முழு­மை­யா­க­வும் கலந்­தேன்.

பின்­கு­றிப்பு: இன்­னும் சிறிது நாள்­க­ளுக்­குப் பின் நாற்­றம் தாளா­மல் இந்த வீட்­டின் கதவை உடைத்­துக்கொண்டு என் உடலை அப்­பு­றப்­ப­டுத்­து­வார்­கள். அதன்­பின் என்ன ஆகும்? நான் பெற்ற இந்த மீட்­சியை மற்­ற­வர்­களுக்­கும் அளிக்க விரும்­பு­கிறேன். என்­னைப் போன்ற துயரம் பீடித்த இன்­னொரு மனி­தர் இந்த வீட்­டுக்கு வரும்­வரை அவ­ருக்­காக நானும் என் பத்­மா­வும் காத்­தி­ருப்­போம்.

சிறுகதை

கணேஷ் பாபு