மெதுவாக நடந்து
சென்றேன்
கைப்பிடித்துக் கூட்டிச்
சென்றாய்
ஆழக் கடலின் அலைகள்
கண்டு
ஆனந்தம் கொண்ட
நான்...
அலைகளை தொடும்
முயற்சியில்
உன் விரல்தனை
மறந்தேன்
அலையின் சிறு நுரை
தீண்டவில்லை
ஓடிவந்து அள்ளி
எனைத்தூக்கிய
உன் அன்பை இனி
எங்கு காண்பேன்
வலியது உரைக்காமல்
வலிக்கிறதா
எனக்கேட்டு நிற்பாய்,
அப்பாவென அழைக்குமுன்
மன ஓசை உணர்ந்து
ஓடி வருவாய்
மௌனம் உதிர்க்கும் வார்த்தைகளின்
மொழிபெயர்ப்பு நீ.
பேரன்பின் பெட்டகம் நீ.
மனித வாழ்வின் அற்புதம் நீ.
காணக்கிடைக்காத மாணிக்கம் நீ.
மாசு மருவற்ற பசும்பொன் நீ.
தேசமுழுதும் தேடித்திரிந்தாலும்
தேடிப் பெற முடியா பரிசு நீ.
பிள்ளை தன்
மன அதிர்வுகளை
ஆழ்ந்து அறியும்
நகலி நீ!
ஆர்ப்பரிப்பில்லா
பேராழி நீ.
பொம்மையைத் தொலைத்த
குழந்தையாய்
தலைவருடிய கைகளை,
நாளும் தேடும் எண்ணம்,
நான் அப்பா செல்லம்.
உனை இழந்து நித்தம்
கனம் ஏற்றிக்கொள்ளும்
மனம், நாளும் தேடலோடு
நீளும் வலி.
என் முகத்தில் பூக்கும்
இன்பம் கண்டு பூரிக்கும்
அவர் தாயுள்ளம்,
நான் வாடினால்
வதைந்து வருந்தும்.
அப்பாவின் பந்தம்
பெண்ணுக்கு
ஆயிரம் தெய்வங்களின்
சொந்தம்.
தந்தையைப் போல்
மகளைத்தேற்றும்
நண்பனை காணவில்லை,
ஓடிவந்து உதவும்
பேரன்பினைப்போல்
உலகினில் வேறொன்றும்
உண்மையில்லை!
சிவப்பிரியா