நிலாச்சோறு

1 mins read
8af4cb85-e5e8-4016-9096-47096217c1c4
ரிஷி சேது - ரிஷி சேது

சிட்டுக் காட்டினாய்

சிறு முகை முட்டிப்போகும் நிலாக்காட்டினாய்

சிகை தடவி என் பிஞ்சு முகம் தடவி

சின்னப் பொய்சொல்லி -இல்லா

மூன்று கண்ணனை வரச்சொல்வாய்

பதறி வாங்கிக்கொள்வேன்

மருதாணி பூசிக்கொண்ட கைவிரலின் வாசத்தோடே

கவளவாய் உண்டபின்னும்

கவலை கொள்வாய்

கண்ணுருட்டி, அதட்டி மிரட்டி -நான்

கண்கலங்க

கன்னமழுந்த முத்தமிட்டு, கண்ணே என்பாய்

“ஆ” காட்டி இரண்டாம் முறையும் வாங்கிக்கொள்வேன்

உண்ட வாய் வழிய

கண்ட இடமும் ஓடித்திரிவேன் -நீ

நின்ற இடம் ஒளிந்துகொள்வாய்

மறைந்த இடம் தேட, மரம் -செடி சுற்றிப்பார்ப்பேன்

பறவை போல் சத்தம் செய்வாய்

ஓடி வந்து கட்டிக்கொள்வேன் -முத்தம் பரிமாற ,

மீண்டும் ஒரு பிடி உள்ளிறங்கும்

முகிலுண்டு துப்பிய நிலா- கடிபட்ட

முகம் காட்டும் -நீ,

அந்த நிலாவுக்கு ஒருவாய்

மரம் அமரும் பறவைக்கு ஒருவாய்

வாலாட்டி முகம்காட்டி நிற்கும் நாய்க்கு ஒருவாய்

வழித்து துடைத்து -என் தங்கக் கட்டிக்கு ஒருவாய்

என்றேற்கும் கடைசிவாயோடு

முடியுமந்த நிலாச்சோறு ...

சோறுண்ட களைப்பில் தூங்கிப்போகும்

வெளித்தூளியில் நானும்

எனக்கு நேர் மேலே நிலவும் ...

ரிஷிசேது