பிறந்த மண்ணில் ....

2 mins read
12f31d5d-25c8-475e-a0da-07b224753e4c
-

அன்று

பிஞ்சு என்னைக்

கொஞ்சிய தஞ்சை மண்

இன்று என முதுமையை

கொஞ்சுகிறது்

சோழனின் நாணயம் நான்

எனக்கு மரணமில்லை

60 ஆண்டுகள்

சிங்கப்பூரே என் வசம்- இன்று

சொந்த மண்ணில் சங்கம்ம்

வீட்டுக் கொல்லையில்

பன்னீரப் பூமழை

நனைகிறேன்

மேகம் காகம் பார்க்க

குளிக்கிறேன்

பள்ளித்தோழனோடு

பதநீர் நுங்கு சுகிக்கிறேன்

ஆப்பம் அம்மு பேரனுக்கு

ஆயிரம் தந்தேன்

அன்றைய காலணா கடனை

அது அடைக்குமா?

சட்டை துவைத்த கல்லை

முத்தமிடுகிறேன்

பால்க்கார கோனார் பேரனிடம்

ஆவின் பால் வாங்கினேன்

கோனாரின் மாடுகள்

எவனெவன் தப்புக்கு இன்று

தோல்களானதோ?

வீட்டுப்பல்லிக்கு

நான் அந்நியன்

பெட்டிக்கடை குட்டையன் பேரன்

‘பிரிண்டிங்’ செய்கிறான்

சில கவிதைகளை

நகலெடுத்தேன்

கொல்லுப்பட்டரை ரங்கன்வீடு

இப்போது படக்கொட்டகை

‘தக்லைஃப்’ பார்த்தேன்

எருக்கு மொட்டாய் உடைகிறேன்

நுங்குவண்டி செய்கிறேன்

சிந்துபாத்தோடு பயணம்

தினத்தந்தியில் 23737ஆம் நாள்

தலைக்குமேல் முழு நிலா

முழு வானும் என் வசம்

சைக்கிள்கடை

மாட்டுவண்டி

விறகுவண்டி

புல்லுக்கட்டு

வண்ணான்

குளம் கிணறு

கோலி பம்பரம்

கிட்டிப்புல்லு

அம்மி ஆட்டுக்கல்

அனைத்துக்கும் என்றோ

கண்ணீர்அ்ஞ்சலி

வாசல் கோலம்

விடியல் சேவல் வாழ்க

அவைகள் இன்றும்

அப்படியே

காலைத்தூறல்

வானவில்

சிட்டுக்கூட்டம் காகங்கள்

கண்குளிர்ச்சியாய்

எல்லாமும் இருக்க

பேரப்பிள்ளைகள்

கைபேசிகளில்

தேன்மழை தேக்கத்தில்

காகிதக் கப்பலில்

தனிமையில் என் பயணம்

வாழ்ந்தது கிடைக்காது

வாழ்ந்த நினைவுகள்

என் கதைகளில் கவிதைகளில்

வாழும் ..... அதுபோதும்

அமீதாம்மாள்

குறிப்புச் சொற்கள்
கதைகவிதைஞாயிறு முரசு