அன்று
பிஞ்சு என்னைக்
கொஞ்சிய தஞ்சை மண்
இன்று என முதுமையை
கொஞ்சுகிறது்
சோழனின் நாணயம் நான்
எனக்கு மரணமில்லை
60 ஆண்டுகள்
சிங்கப்பூரே என் வசம்- இன்று
சொந்த மண்ணில் சங்கம்ம்
வீட்டுக் கொல்லையில்
பன்னீரப் பூமழை
நனைகிறேன்
மேகம் காகம் பார்க்க
குளிக்கிறேன்
பள்ளித்தோழனோடு
பதநீர் நுங்கு சுகிக்கிறேன்
ஆப்பம் அம்மு பேரனுக்கு
ஆயிரம் தந்தேன்
அன்றைய காலணா கடனை
அது அடைக்குமா?
சட்டை துவைத்த கல்லை
முத்தமிடுகிறேன்
பால்க்கார கோனார் பேரனிடம்
ஆவின் பால் வாங்கினேன்
கோனாரின் மாடுகள்
எவனெவன் தப்புக்கு இன்று
தோல்களானதோ?
வீட்டுப்பல்லிக்கு
நான் அந்நியன்
பெட்டிக்கடை குட்டையன் பேரன்
‘பிரிண்டிங்’ செய்கிறான்
சில கவிதைகளை
நகலெடுத்தேன்
கொல்லுப்பட்டரை ரங்கன்வீடு
இப்போது படக்கொட்டகை
‘தக்லைஃப்’ பார்த்தேன்
எருக்கு மொட்டாய் உடைகிறேன்
நுங்குவண்டி செய்கிறேன்
சிந்துபாத்தோடு பயணம்
தினத்தந்தியில் 23737ஆம் நாள்
தலைக்குமேல் முழு நிலா
முழு வானும் என் வசம்
சைக்கிள்கடை
மாட்டுவண்டி
விறகுவண்டி
புல்லுக்கட்டு
வண்ணான்
குளம் கிணறு
கோலி பம்பரம்
கிட்டிப்புல்லு
அம்மி ஆட்டுக்கல்
அனைத்துக்கும் என்றோ
கண்ணீர்அ்ஞ்சலி
வாசல் கோலம்
விடியல் சேவல் வாழ்க
அவைகள் இன்றும்
அப்படியே
காலைத்தூறல்
வானவில்
சிட்டுக்கூட்டம் காகங்கள்
கண்குளிர்ச்சியாய்
எல்லாமும் இருக்க
பேரப்பிள்ளைகள்
கைபேசிகளில்
தேன்மழை தேக்கத்தில்
காகிதக் கப்பலில்
தனிமையில் என் பயணம்
வாழ்ந்தது கிடைக்காது
வாழ்ந்த நினைவுகள்
என் கதைகளில் கவிதைகளில்
வாழும் ..... அதுபோதும்
அமீதாம்மாள்

