நமக்குத் தெரிந்தவர்
நம்மோடு இருப்பவர்
நம்மை நேசிப்பவர்
நமக்காக நின்றவர்
நமக்கென வந்தவர்
நம்மோடு இருந்தவர்
அன்பில் அழகன்
அருந்தமிழ்க் கலைஞன்
ஆயக்காரன்புலன்
நேயமான குணன்
நேசக்கூட்டின் மகன்
மாசிலா அன்பழகன் !
எடுத்த காரியம் முடித்தல்
எதிலும் தன்னைக் கொடுத்தல்
புதியோரை மெச்சி உயர்த்தல்
மதியாதார் வாசலும் மிதித்தல்
புன்னகையால் அனைத்தையும் ஜெயித்தல்
புதுமைத் தேனீயாய் தமிழுக்கு உழைத்தல்
கவிமாலை காத்த உயரன்
சலிக்காமல் நூல் பல யாத்த சிகரன்
வியாபார ஒழுங்கில் நேர்த்தி வணிகன்
எல்லார்க்கும் ஈந்த கொடைஞன்
எந்நாளும் உற்சாக இதயன்
எண்பதிலும் இருபதென இளைஞன்
அன்பெனும் ஆலமரம் சாய்ந்ததே
காலம் எங்கள் கற்பூரத்தைக் கரைத்ததே
அன்பழகன் எனும் பறவைப் பிரிந்ததே
திரும்பாத திசை நோக்கிப் பறந்ததே
வருவதும் போவதும்…
வாழ்க்கையின் பொதுவிதி !
அன்பழகன் போல்,
வாழ்வதும் மறைவதும்
எல்லோர்க்கும் அறமொழி !
நெப்போலியன்

