டி.என்.இமாஜான்
தந்தையர் தினம்!
அன்னை சுமப்பது பத்து மாதம்,
அப்பா சுமப்பது ஆயுள் முழுதும்!
விண்ணின் மீன்கள் கோடி உண்டு,
விண்ணைத் தாண்டும் தந்தை அன்பு!
பத்து விரல்பிடித்து நடக்க வைப்பார்,
சொத்துச் சுகங்களை நமக்காய்ச் சேர்ப்பார்!
தோளில் சுமந்தே உலகம் காட்டுவார்,
தூசி போல் துன்பம் துரத்தி ஓட்டுவார்!
வேர்வை சிந்தி விதையை நடுவார்,
வேராய் மண்ணில் விழுந்து மடிவார்!
ஆசை யாவையும் பிள்ளைக்குத் தருவார்,
ஆயிரம் கவலை நெஞ்சில் புதைப்பார்!
கண்ணீர் மறைக்கும் பாறை இமயம்,
கண்ணியம் கற்பிக்கும் வாழும் சமயம்!
உள்ளத்து அழுகையை உதட்டில் மறைப்பார்,
பிள்ளையின் உயர்வில் பெருமிதம் அடைவார்!

