நான்கின நல்லிணக்க கூட்டாட்சிக் கொண்டு
நல்லதோர் தூய்மையான நல்லாட்சி பெற்று
வான்புகழ் பெருமையினை பெற்றுவிட்ட தாலே
வாழ்த்தி வரவேற்போம் தேசியத்தின் நாளை
எத்துணை வளமுமின்றி மனிதவளம் ஒன்றால்
ஏற்றம் கண்டுவிட்ட எழுச்சிமிக்க நாடு
நித்திரை பாராது நாடுயர உழைத்த
நல்லதோர் முன்னோடி பெற்றெடுத்த பேறு
புத்துணர்வும் புதுமையும் தொய்வின்றி பெற்று
பொலிவுடன், சிங்கப்பூர் பல்லாண்டு வாழு
எத்தனை இன்னல்கள் வந்திடினும் ஏற்று
அத்தனை இடர்களையும் வென்றுயர்வோம் நாமே!
கி. சுப்பிரமணியம்


