- டி.என்.இமாஜான்
துன்பம் நீக்கும் துணையாம் உதவி!
அன்பால் செய்யும் அரிய பணியாம்.
வாடும் உயிர்க்கு மழைபோல் சுரக்கும்;
தேடும் வேளையில் திடனாய் கிடைக்கும்.
அறியா நிலையில் அறிவைக் கொடுக்கும்;
வழியா வறுமையில் வளத்தைக் கொடுக்கும்.
எளிய மனிதர்க்கெல்லாம் ஏற்றம் தருமே;
ஒளியாய் நெஞ்சில் உயர்வை உறுதியாக்குமே!
பயனைக் கருதாது பகிரும் மனமே
உயர்ந்த பண்பாம் உதவி ஆகுமே!
வாழும் நாளில் வாரி வழங்கிட
நாளும் பெருகும் நல்ல புகழே!
ஈதல் அறமே இன்பம் நல்கும்;
காயும் துயரைக் கணத்தில் போக்கும்.
தளர்ந்த நடையைத் தாங்கிப் பிடிக்கும்;
வளர்ந்த அன்பை உலகுக்கு உணர்த்தும்.
இதயக் கதவை இதமாய்த் திறப்போம்!
உதவி செய்ய என்றும் விரைவோம்!
மனிதம் வாழ வழிகள் அமைப்போம்!
இனிதே வாழும் உலகம் படைப்போம்!


