மரம்பட்டு விட்டதென
மனப்பதற்றம் கொள்ளாமல்
மற்றுமொரு பசுமரத்தில்
வாழ்ந்திருக்கும் பைங்கிளிகள்!
நீர் வற்றி விட்டதென
கலக்கமின்றி மயக்கமின்றி
உறுமீன் குளம்தேடி
பறந்துசெல்லும் கொக்குகளே!
புயலென்ன மழையென்ன
பல மைல்கள் தூரமென்ன
சவால்களைக் கடந்தேனும்
பறந்திடுமே பருந்துகளே!
‘யாதும் ஊரே
யாவரும் கேளிர்’ என
இன்பமாய் இடம்பெயரும்
சிறகுப் பறவைக் கூட்டம்!
சின்னஞ்சிறு குருவியென
சுறுசுறுப்பாய் வாழ்ந்திடுவோம்!
பகிர்ந்துண்ணும் நற்பண்பால்
மகிழ்வித்து மகிழ்ந்திடுவோம்!
நம்பிக்கைச் சிறகாக
வாய்ப்புகளே திசையாக
மகிழ்ச்சியொன்றே குறியாக
உறவுகளாய்ச் சிறகடிப்போம்!
- அனுபமா உதிவ்


