வகுப்பறைகளைத் தாண்டிப் பள்ளியில் பல நடவடிக்கைகளில் ஈடுபட மாணவர்களுக்கு வாய்ப்புகள் பல உள்ளன. அதற்கான வளங்கள் ஏராளமாக நம்மைச் சுற்றியே இருக்கின்றன.
"தொடக்கநிலைக் கல்வியை முடித்து உயர்நிலைக்குச் செல்லும் மாணவர்கள் ஏட்டுக்கல்வியில் சிறந்தோங்க அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அதோடு இணைப்பாட நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.
அதே சமயம்துடிப்பான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளவதிலும் கவனம் செலுத்தவேண்டும்," என்று உயர்நிலை ஒன்றாம் வகுப்பில் பயிலும் ஜோஷுவா சரவணன் கூறினார்.
"உயர்நிலைப்பள்ளியில் அடியெடுத்து வைத்தவுடன் அதிக நேரம் அமர்ந்தே இருக்கவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. பள்ளியில் வகுப்பு நேரமும் அதிகம். பின்னர், இணைப்பாட நடவடிக்கைகள், வீட்டுப்பாடம் என உட்கார்ந்தே செய்யவேண்டிய வேலைகள் அதிகமாகிவிட்டன. அதனால், உடலுக்குப் பயிற்சியளிக்கும் நடவடிக்கைகளில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்தேன்," என்றார் அந்த இளையர்.
"இணைப்பாட நடவடிக்கையாகக் காற்பந்து விளையாட்டை நான் தெரிவுசெய்ததற்கும் அதுவே காரணம். காற்பந்தாட்டக் குழுவில் சேர்ந்துள்ளேன். மனத்திற்கு இதமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்க இது உதவுகிறது," என்றும் கூறினார் ஜோஷுவா. அத்துடன் பள்ளிக்கு நடந்தே செல்வதும் அவரே எடுத்துள்ள இன்னொரு முடிவு.
பொங்கோல் வட்டாரத்தில் வசிக்கும் ஜோஷுவா, பள்ளிக்குப் பேருந்தில் சென்றால் 10 நிமிடங்கள் ஆகும். மூன்று பேருந்து நிறுத்தங்களே அவரது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள இடைவெளி. அதனால், பேருந்தில் செல்வதற்குப் பதிலாக நடந்தே சென்றுவிடலாம் என்று அவர் முடிவெடுத்தார். இதற்கு அவர் கூடுதலாகப் பத்து நிமிடங்களே செலவிடவேண்டி உள்ளது. "இதுபோன்ற செயல்கள் நான் துடிப்புடன் செயலாற்ற உதவுகின்றன. ," என்கிறார் ஜோஷுவா.
இவ்வாறு அனைவரும் சைக்கிள் ஓட்டுவது, நடந்து செல்வது எனத் துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அவரது கருத்து.

