ஆர்த்தி சிவராஜன்
குழந்தைகளுக்கு நன்னெறிப்பண்புகளும் புதிய வார்த்தைகளும் கற்றுக் கொடுத்து, அவர்களின் சிந்தனைத் திறனை வளர்த்து, தமிழ் மொழி மேல் உள்ள ஆர்வத்தைக் கூட்டுவதே 'கதை நேரம்' எனும் புத்தாக்க முயற்சியின் நோக்கமாகும். இம்மாதம் நடைபெறும் தமிழ் மொழி விழாவின் நிகழ்ச்சிகளில் 'கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்' உருவாக்கிய 'கதை நேரம்' என்னும் வலைத்தளமும் ஒன்று.
உயிரோவியம் (அனிமேஷன்) மூலம் உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளுக்கு உயிரூட்டுவதும் ஊடகங்களுக்குக் குழந்தைகளை அறிமுகப்படுத்துவதும் இதன் தனித்துவம்.
தமிழ் மொழி விழாவிற்காக உருவாக்கப்பட்ட இவ்வலைத்தளம், குழந்தைகளின் கதைகளுக்கு முன்னுரிமை அளித்து அக்கதைகளைச் சித்திரித்து வருகிறது.
அவ்வகையில் ஒரு வாரத்தில் நான்கு கதைகள் வெளியிடப்படுகின்றன. முதல் கதையான 'அன்பான அ' ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இக்கதையை எழுதியவர் திருமதி தேவி விஜயன். இதைத் தொடர்ந்து 'நட்பின் அடையாளம்' ஏப்ரல் 11 அன்றும் 'வண்ணப்பெண்' ஏப்ரல் 18 அன்றும் 'பிஞ்சுமிட்டாய்' ஏப்ரல் 25 அன்றும் வெளியிடப்படும். இவை வெவ்வேறு உள்ளூர் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை.
http://www.kathaineram.com/ எனும் இணையத்தளம் மூலம் அந்தக் கதைகளைக் காணலாம்.
'கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்' அமைப்பின் நிறுவனரான 32 வயது ஜெகன்னாத் ராமானுஜம் உயிரோவிய (அனிமேஷன்) கலைஞராவார். அவரது 'தி ஹேண்ட்' உயிரோவியப் படம், 2014ஆம் ஆண்டு ஹாங்காங் அனைத்துலக கைபேசித் திரைப்படவிழாவில் வெண்கலப் பரிசைப் பெற்றதோடு 2013ல் சிங்கப்பூர் குறும்பட விழாவில் பரிசு பெற நியமனம் பெற்றது. இது போன்ற விழாக்களில் தமிழ் வழி கதைகளோ குறும்படங்களோ அதிகம் இல்லாததால், அவை வேண்டும் என்ற ஏக்கம் திரு ஜெகன்னாத்திடம் பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. தமிழ் மொழி விழா அவரது இவ்விருப்பத்தை நிறைவேற்ற ஒரு நல்ல தளத்தை அமைத்துத் தந்ததாக அவர் கூறினார்.
குழந்தைகளுக்கான உயிரோவியங்களை உருவாக்க என்ன காரணம் என்று கேட்டபோது, "கதை நேரம் மூலம் பகிர்ந்து ெகாள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்துவதே எங்கள் முயற்சி. இந்த யோசனை வந்ததன் காரணம் என் குழந்தைகள்தான். அவர்களிடம் இரவு நேரத்தில் கதைகள் படிக்கும்போது அவர்கள் நிறைய கேள்விகள் கேட்பார்கள். குழந்தைகள் எழுப்பும் இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க ஊடாடும் ஊடகம் உதவும் என்று நான் உணர்ந்தேன்," என்றார்.
"உதாரணத்திற்கு, கதையின் முடிவைச் சிறுவர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருகிறோம். கதைகளின் மூலம் குழந்தைகளை நன்றாக கதை சொல்லும் திறமை உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என்றார். தொழில்நுட்ப அம்சத்தில் குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுவதால், புத்தகங்கள் வாயிலாக மட்டுமே தமிழ் கற்றுக் கொடுப்பது முன்னுரிமையாக இருக்கக்கூடாது என்றார் திரு ஜெகன்னாத்.
"வளர்ந்துவரும் வெவ்வேறு தொழில்நுட்பங்களில் தமிழைக் கொண்டுவந்து அதன் மூலம் குழந்தைகளுக்கு அம்மொழியை எவ்வாறு கற்றுக்கொடுக்க முடியும் என்று நாம் சிந்திக்க வேண்டும். கைக்கணினி, கைத்தொலைபேசி போன்ற கருவிகளையும் தாண்டி மெய்நிகர் தொழில்நுட்பமும் உள்ளது. 'கதை நேரம்' போன்ற தளங்களை உருவாக்கினால், குழந்தைகள் தமிழ் வார்த்தைகளை வாசிப்பது மட்டுமல்லாது அவர்கள் அதைக் காட்சி வடிவமாகவும் கற்பனை செய்ய முடியும். இவ்வாறு செய்தால் அவர்கள் இயல்பாகவே தமிழ் மொழியில் ஆர்வம் காட்டுவார்கள். அதைக் கற்கும் ஆர்வமும் அதிகரிக்கும்," என்று பகிர்ந்துகொண்டார்.
தமிழ் மொழி மாதத்திற்காக இவ்வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய திரு ஜெகன்னாத், எதிர்காலத்தில் உயிரோவிய அம்சம் சார்ந்த பட்டறைகளை நடத்த விரும்புவதாக தெரிவித்தார். மேலும் கதை நேரத்தில் உள்ள நான்கு கதைகள் இன்னும் பல கதைகளுக்கு விதைகள் என்றும் கூறினார். பதின்ம வயதினர், பெரியவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கும் ஏற்ற கதைப்புத்தக கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

