கடற்படையில் பெற்ற அனுபவம் தன்னை ஓர் ஒழுங்குமுறையான மனிதராக மாற்ற உதவியதுடன் வாழ்க்கை குறிக்கோள்களை வகுத்து அவற்றை அடைய ஊக்கம் தந்ததாகக் கூறுகிறார் 19 வயது கடற்படை பயிற்சி அதிகாரி மஹேஷ்பாபு ப்ரனேஷ்.
"கடற்துறை என்பது சிங்கப்பூருக்கு உயிர் நாடியாக இருந்து வருகிறது. நமது இறையாண்மையைப் பாதுகாக்கவும் கடல்வழி மிரட்டல்களிலிருந்து தற்காக்கவும் நமக்கு உன்னதமாக விளங்கும் வர்த்தகத்தைக் கட்டிக்காக்கவும் நமது கடற்படை வலுவானதாக இருப்பது அவசியம்," என்றார் ப்ரனேஷ். மார்ச் 21ஆம் தேதி சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 204 பயிற்சி அதிகாரிகளில் இவரும் ஒருவர். சிங்கப்பூர் ஆயுதப் படையின் புதிய அதிகாரி என்ற பயணத்தில் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் அங்கீகரிக்கப்பட்டது.
உடலை வருத்தும் கடுமையான பயிற்சிகளுக்கிடையே சக கடற்படை வீரர்களுடன் பயிற்சிகளை மேற்கொண்டது மறக்கமுடியாத ஓர் அனுபவம் என்றார்.
"இரவு முழுக்க தூங்காமல் நீச்சலடிப்பது போன்ற பயிற்சிகள் எங்கள் உடல் பலத்தை மட்டும் அல்ல, மனபலத்தையும் சோதித்தன. சோர்வின் உச்சகட்டத்தை அடையும்போது முயற்சியைக் கைவிட்டுவிடலாம் என்று தோன்றும். ஆனால் நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவதால் எப்படியாவது இந்த ஒன்பது மாத கால பயிற்சிகளை முடித்துவிடலாம் என்ற ஊக்கம் ஏற்படும்," என்றார் ப்ரனேஷ்.
கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகளால் கடற்படை பயிற்சிகளில் மாற்றங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டன. சிறு சிறு குழுக்களில் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பலருடன் ஒன்றாக பயிற்சிகளை மேற்கொள்ளும் உணர்வு இல்லாவிட்டாலும் கற்றல் அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்தார் ப்ரனேஷ். சிங்கப்பூர் கடற்படை, ராயல் தாய்லாந்து கடற்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றை உள்ளடக்கிய முத்தரப்பு 'சிம்பேக்ஸ் 2020' (SIMBEX 2020), 'சிட்மேக்ஸ் 2020' (SITMEX 2020) கடற்படைப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள ப்ரனேஷ், 'சாங்கி தலைமை குவாட்ரண்டில்' படைப்பிரிவின் தளபதி பணியைத் தொடங்கவிருக்கிறார். கப்பல் போக்குவரத்து, கப்பல் பராமரிப்பு, அவசரகால சூழ்நிலை பயிற்சி ஆகிய கப்பல் பயிற்சிகள், கடற்படை வீரர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பயிற்சிகளாகும்.
"பயிற்சிகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் இறுதியில் அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்பவை எங்களது வாழ்க்கை முழுவதும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். சிங்கப்பூர் ஆயுதப்படையில் ஓர் அதிகாரியாக அனுபவம் பெற, தனிநபராகவும் அணி வீரராகவும் புதிய சவால்களையும் அனுபவங்களையும் தீவிரமாக நாடுகிறேன்," என்று கூறினார் அவர்.
செய்தி: இந்து இளங்கோவன்

