லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) இன்று பொங்கல் ஒளியூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தது.
வீட்டிலிருந்தவாறு லிஷா ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நிகழ்ச்சி நேரலையை (live broadcast) காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக 'லிஷா'வின் புதிய தலைவரும் பனானா லீஃப் அப்போலோ உணவக உரிமையாளருமான திரு சி.சங்கரநாதன் கூறினார்.
தமிழ் முரசிடம் பேசிய அவர், லிஷா முன்னின்று 21வது ஆண்டுகளாக பொங்கல் விழாவை நடத்தி வருவதாகக் கூறினார்.
பொங்கல் ஒளியூட்டு நிகழ்ச்சியின் அங்கமாக, பொங்கல் பானை ஒன்றில் பாலை ஊற்றினார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்.
மேலும் இவ்வாண்டு பொங்கல் திருநாள் நிகழ்ச்சிகள் இளையர்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திரு சங்கரநாதன் தெரிவித்தார்.
தமிழ் கலாசார மரபுகளை இளையர்களிடம் சென்று சேர்ப்பதும் விழாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றார் அவர்.
ஒளியூட்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான திரு எட்வின் டோங் கலந்துகொண்டார். கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சருமான எல்வின் டானும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார். பொங்கல் சிறப்பு கண்காட்சியையும் சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

