பொதுவாக பொங்கலுக்குத் தேவையான கரும்பு, மஞ்சள்கொத்து, இஞ்சிக்கொத்து, மா இலை, வாழை இலை, பூ, பொங்கல் பானை, காய்கறிகள், அரிசி என அனைத்தையும் தேடித் தேடி வாங்க வழக்கமாக லிட்டில் இந்தியாவில் கூட்டம் அலைமோதும்.
ஆனால் இவ்வாண்டு அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கொண்டாட்ட உணர்வோடு வந்த மக்களைக் காண முடிந்தது.
கிருமித்தொற்று கட்டுப்பாடு காரணமாக தேக்காவுக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டது.
மேலும், அண்மைய நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையும் லிட்டில் இந்தியா மக்கள் அதிகமாகக் கூடுவதில் சிரமத்தை எற்படுத்தியது. இருப்பினும் பொங்கலுக்கான பொருட்களை லிட்டில் இந்தியாவில் வாங்கியே தீருவது என்று வந்துசெல்வோரை நேற்று காணமுடிந்தது.
"வழக்கமாக பொங்கல் திரு நாளையொட்டி லிட்டில் இந்தியாவில் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். இவ்வாண்டு அதிகமாகக் கூட்டம் இல்லை. இருப்பினும் கிருமித்தொற்றிற்கு இடையே இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். கரும்பு விலை ஏற்றம் மட்டும் அதிர்ச்சியாக இருந்தது. கடந்த ஆண்டு $5க்கு விற்கப்பட்ட கரும்பு இப்போது $7க்கு விற்கப்படுகிறது. விலை ஏறினாலும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு கரும்பை வாங்கித்தானே ஆகவேண்டும்," என அவர்கள் கூறினர்.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை குறித்த காலத்திற்கு இறக்குமதி செய்வதில் இவ்வாண்டு பல சவால்களை எதிர்கொண்டனர்.
"விடாது மழை பெய்தாலும் எப்போதும் பொருட்கள் வாங்க வரும் உள்ளூர்வாசிகள் வந்துகொண்டேதான் இருக்கின்றனர். இந்த ஒரு வாரத்தில் இன்றுதான் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு வாரத்திற்குள் பொருட்கள் வந்து இறங்கிவிடும். இவ் வாண்டு இரு மாதங்களுக்கு முன்பே 'ஆர்டர்' செய்ய வேண்டிய நிலை இருந்தது," என்று தெரிவித்தார் கார்த்திகா கடை விற்பனை மேலாளர் திரு கோபுகுமார், 46.

