தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாகத் தமிழ் தொடரும் என அரசாங்கம் உறுதி

2 mins read
6ae186a2-cbba-4a2e-b159-5a1843ddac2d
(முதல் வரிசையில் வலமிருந்து) வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் சு மனோகரன், தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் சந்துரு, வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர் ராஜாராம், அமைச்சர் எஸ் ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், முரளிதரன் பிள்ளை, மீடியகார்ப் தலைமை நிர்வாக அதிகாரி தாம் லோக் கெங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். படம்: தமிழ் முரசு -

தமிழ்மொழி விழாவின் நிகழ்ச்சிகள் ஒவ்வோர் ஆண்டும் தரத்திலும் புத்தாக்கத்திலும் மேம்பட்டு வருவதாகக் கூறினார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன். இளையர்களின் ஈடுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறிய அமைச்சர், சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலத்திற்கு இது நல்ல அறிகுறி என்றார். பதின்மூன்றாவது முறையாக நடைபெறும் தமிழ்மொழி விழாவின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பேசினார்.

"தமிழ், சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று என்பதில் அரசாங்கத்துக்கு எப்போதும் உறுதியான கடப்பாடு உண்டு," என்று அமைச்சர் குறிப்பிட்டார். "அதைக் கொண்டுதான் பல்வேறு வழிகளிலும் எல்லா இடங்களிலும் வசதிகளை உண்டாக்குகிறோம். தாய்மொழிகள் தொடர்ந்து சிறந்து விளங்கும். அதுவே நம் அடையாளத்துக்கு நல்ல அடித்தளம்," என்றும் கூறினார் திரு ஈஸ்வரன்.

ஆடல், பாடல், கவிதை, தமிழ் இலக்கணங்களுக்கான விளக்கம், நகைச்சுவை என பல அம்சங்களையும் இணைத்து சுவாரசியமான வகையில் தமிழ்மொழி விழா நிகழ்ச்சி அமைந்தது.

சிங்கப்பூரிலுள்ள 43 தமிழ் சமூக அமைப்புகள் மொத்தம் 46 நிகழ்ச்சிகளை அடுத்த சில வாரங்களில் நடத்தவிருக்கின்றன. இவ்வாண்டு சமூக ஊடகங்களில் தமிழ்மொழி விழா குறித்த தகவல்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன என்று சுட்டிக் காட்டினார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர் ராஜாராம்.

சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து தமிழ்மொழி விழாவை ஏற்பாடு செய்யும் வளர்தமிழ் இயக்கத்தில் அதிக இளம் உறுப்பினர்கள் சேவையாற்றுகின்றனர் என்றும் அவர்களின் துடிப்பான முயற்சியையும் புத்தாக்கச் சிந்தனையையும் கொண்டு இளையர்களை தமிழ் மொழி விழா நிகழ்ச்சிகளுக்கு ஈர்க்க பல முயற்சிகள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

அனைத்து வயதினருக்கும் ஏற்ப நிறைய நிகழ்ச்சிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு ராஜாராம், அனுபவம் வாய்ந்த அமைப்புகள் இளையர்களை முன்னிறுத்தி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன என்றார். உதாரணத்துக்கு, தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்யும் தமிழ் சமூக சான்றோர்களைப் பற்றிய 'தமிழவேள் முப்பெரும் விழா' கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முழுவதும் இளையர்களே பேசுகின்றனர் என்று குறிப்பிட்டு அந்த முயற்சியை வரவேற்பதாகக் கூறினார் அவர்.

மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் தமிழ் ஆர்வம் வளர்வதோடு சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறினார் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயர்.

சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் என சுமார் 800 பேர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.

இவ்வாண்டின் தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சி மீடியகார்ப் வளாக எம்இஎஸ் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.