தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முற்றிலும் இணையத்தில் நடைபெறும் தமிழ் மொழி விழா 2020 நிகழ்ச்சிகள்

2 mins read
2a9c54e0-04a6-4e54-b500-a60a8e6e1bf5
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்மொழி விழாவில் இடம்பெற்ற சொற்போர் நிகழ்ச்சியின் அங்கம். படம்: தமிழ் முரசு -

சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினரை தமிழை நேசிக்கவும் தமிழில் பேசவும் ஊக்குவிக்கும் வருடாந்திர தமிழ்மொழி விழா, இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இந்த விழா, இவ்வாண்டு கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலால் ஒத்திவைக்கப் பட்டது.

வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் முற்றிலும் இணையத்தில் நடைபெறுகின்றன.

"அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையிலான நிகழ்ச்சிகள் இந்த மெய்நிகர் தமிழ்மொழி விழா 2020ல் உள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் பாதுகாப்பாகவும் சுகமாகவும் வீட்டில் இருந்தபடியே அந்த நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம்," என்று கூறினார் இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ள வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு சு.மனோகரன்.

சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஊக்குவிக்கும் முயற்சியில் கடந்த 2007ஆம் ஆண்டுமுதல் தமிழ்மொழி விழாவை சமூக அமைப்புகளுடன் இணைந்து வளர்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது.

புதிய முறையில் நிகழ்ச்சிகளை நடத்த பங்காளித்துவ அமைப்புகள் கடினமாக உழைத்துள்ளதாகக் கூறினார் திரு மனோகரன்.

இலக்கியம், பேச்சுப்போட்டி, கலைகள், கலாசாரம் என பலதரப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய மொத்தம் 25 இணைய நிகழ்ச்சிகளை 'ஸூம்', 'ஃபேஸ்புக்' போன்ற தளங்களின் மூலம் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

இவ்வாண்டின் மெய்நிகர் நிகழ்ச்சிகளைப் படைக்கும் முயற்சியில் ஆறு புதிய பங்காளித்துவ அமைப்புகள் கைகோர்த்துள்ளன.

'நூல் மோன்ஸ்டர்ஸ்' படைக்கும் 'நூலாபலூஸா' எனும் மின்னிலக்கக் கதைச் சொல்லும் நிகழ்ச்சி பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி நடத்தப்படுகிறது.

தமிழ்த் திரைப்படப் பாடல்களைக் கொண்டு திருக்குறளையும் அதன் விளக்கங்களையும் 'பிரம்மாஸ்தரா' எனும் புதிய பங்காளித்துவ அமைப்பு 'குரலும் குறளும்' நிகழ்ச்சி மூலம் இம்மாதம் 29ஆம் தேதி படைக்கிறது.

'நன்னெறி தங்கம்' எனும் கவிதை வாசிப்புடனான மேசை இசைப் படைப்பை 'கலாமஞ்சரி' அமைப்பு அடுத்த மாதம் 6ஆம் தேதி நடத்துகிறது.

உள்ளூர் தமிழ் கவிதைகளின் தங்களது கண்ணோட்டத்தை புகைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டுவரும் நோக்கில் புகைப்படப் போட்டியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

மேல் விவரங்கள் அறிய வளர்தமிழ் இயக்கத்தில் ஃபேஸ்புக் பக்கம் facebook.com/tamillanguagecouncilsinsingapore, இன்ஸ்டாகிராம் பக்கம் @TamilLangFestival அல்லது www.tamil.org.sg இணையப்பக்கத்தை நாடலாம்.